நவீன நாணயக் கோட்பாடும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும்: பகுதி 2

ஸ்ரெபானி கெல்ரனின் பற்றாக்குறை கட்டுக்கதை: நவீன நாணயக் கோட்பாடும் மக்கள் பொருளாதாரத்தின் தோற்றமும்

இது, நவீன நாணய கோட்பாடும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும் கட்டுரையின் இரண்டாம் பாகம். மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வரலாற்று ரீதியாக, தங்கம், நாணயப் பொருளாக வெளிப்பட்டது. கடந்த நூற்றாண்டு மற்றும் அதற்கு பின்னரும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் அன்றாட செயல்பாட்டில் தங்கத்தை மாற்றீடு செய்வதற்காக ஃபியட் பணம் வந்துள்ளது. அதாவது அதன் உள்ளடக்கத்தில் ஒரு பெறுமதியுமற்ற பணம் ஒரு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அதன் நிதி மற்றும் கடன் அமைப்பு, குறிப்பாக 1971 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டாலருக்கான தங்க ஆதரவை நீக்கியதைத் தொடர்ந்து. இந்த நிலைமைகளின் கீழ், பணம் என்பது ஒரு உடன்பாடு மட்டுமே என்ற கருத்தாக்கம் உருவாகி அதன் பொருளாதாய அடித்தளத்திலிருந்து தப்பித்துள்ளது.

இது நவீன நாணயக் கோட்பாட்டின் (MMT) அடிப்படையாக இருப்பதுடன் மற்றும் சமூகத் தேவையின் திருப்திக்கு ஏற்ப முதலாளித்துவத்தை எப்படியாவது செயல்படச் செய்யலாம் என்ற அதன் பிரமைகளை ஊக்குவிக்கிறது. கெல்டன் எழுதுகிறார், "தங்க மாற்றினை தரமாக கொண்ட உலகில் எங்களைக் கட்டுப்படுத்திய தடைகளிலிருந்து விடுபட்டு, அமெரிக்கா இப்போது தனது வரவு-செலவுத் திட்டத்தை ஒரு குடும்பத்தினதை போல அல்லாது, ஆனால் அதன் மக்களின் உண்மையான சேவையில் செயல்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்கிறது." [The Deficit Myth: Modern Monetary Theory and the Birth of the People's Economy, p. 37]

ஒரு நாணயத்தை வெளியிடும் அரசாங்கம் “அதன் சொந்த கணக்கில் படி விற்பனைக்கு எதை வேண்டுமானாலும் வாங்க முடியும்”, “Uncle Sam’s [அமெரிக்காவின்] பைகள் ஒருபோதும் காலியாக இல்லை” என்று “உண்மையை அறிய நாங்கள் தகுதியானவர்கள்” என்று அவர் வலியுறுத்துகிறார்.[p. 256]

ஸ்ரெபானி கெல்ரன்

முன்னாள் பெடரல் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பானை அவர் தனக்கு ஆதரவிற்காகப் பார்க்கிறார். 2005 ல் அவர் அளித்த காங்கிரஸின் சாட்சியத்தை மேற்கோள் காட்டி, "மத்திய அரசு விரும்பும் அளவுக்கு பணத்தை உருவாக்குவதையும், அதை யாரோ ஒருவருக்கு கொடுப்பதையும் தடுக்க எதுவும் இல்லை" என்று அவர் கூறினார். [p. 182]

பெடரல் எவ்வித கட்டுப்பாடுமின்றி பாரிய தொகை பணத்தை அச்சடிக்கு முடியும் என்பது உண்மைதான். ஆனால் இந்த பணம் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பை அது உருவாக்க முடியாது. இந்த பணத்தில் எவ்வளவு பொருட்களை வாங்க பயன்படுத்தவேண்டும் என்பதையும் இது தீர்மானிக்க முடியாது. மேலும், காகிதப் பணத்தை வினியோகிப்பதால், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதும் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையையும் உந்து சக்தியையும் உருவாக்குவதுமான மேலதிக உபரி மதிப்பை அது விரிவாக்க முடியாது.

அதாவது, மதிப்பு உருவாகும் திட்டத்திலிருந்து பணத்தைப் பிரிப்பதில், நவீன நாணயக் கோட்பாடு வெறுமனே முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ள சமூக உறவுகளை ஒதுக்கி வைக்கிறது. பணத்தை வரம்பற்ற அளவில் உருவாக்க முடியும். ஆனால், இறுதி ஆய்வில், தங்கம் அல்லது காகித பணம் வடிவில் இருந்தாலும், அது மதிப்பின் பொருள்சார் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.

சமீபத்திய நிகழ்வுகள் இதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. COVID-19 தொற்றுநோய் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதிலிருந்து அமெரிக்க பெரடலால் பணம் பாரிய விரிவாக்கம் செய்யப்பட்டதால் டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில் டாலர் உலக நாணயமாக எவ்வளவு காலம் தொடர்ந்து செயல்பட முடியும் என்ற கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை சாதனை அளவை எட்டியுள்ளது.

மார்ச் நெருக்கடியின் உச்சத்தில் உள்ள நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் இந்த பிரச்சினையை பற்றி கவனம் செலுத்திய பொருளாதார வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ், அமெரிக்க பொருளாதாரம் பலவீனமாக இருந்தபோதிலும், டாலர் இன்னும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செலுத்துவதற்கான வழிமுறையாகவும், பெறுமதியை உள்ளடக்கி வைத்திருக்கும் இருப்பாகவும் இருந்தது என்று குறிப்பிட்டார். அவரது வாதம் அடிப்படையில் சுற்றிவரும் ஒன்றாகும்: டாலர் பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஏனெனில் அது பெறுமதியை உள்ளடக்கி இருப்பதால் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது மற்றும் அது பெறுமதியை உள்ளடக்கி இருப்பதால் அது பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இது எவ்வளவு காலம் தொடரக்கூடும், தற்போதைய நெருக்கடி உடனடியாக டாலர் மற்றும் அனைத்து பெறுமதியற்ற நாணயங்களின் நம்பிக்கையின் நெருக்கடிக்கு இட்டுச்செல்கின்றதா மற்றும் தங்கத்தை நோக்கி திரும்புகிறதா என்பதை கூறமுடியாது. ஆனால் முடிவில்லாத அளவு பணத்தையும் கடனையும் உருவாக்குவதற்கும் உள்ளார்ந்த வரம்புகள் உள்ளன .. முதலாளித்துவ உற்பத்தி, அதன் கடன் அமைப்பின் வளர்ச்சியுடன், "செல்வத்திற்கு ஒரு பொருள்சார் மற்றும் கற்பனைத் தடையாக இருக்கின்ற இந்த உலோகத் தடையை சமாளிக்க தொடர்ந்து போராடுகிறது. அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் இதற்காக அதன் தலையை உடைத்துக்கொள்கிறது." விலைமதிப்பற்ற உலோக வடிவில் உள்ள பணம், கடன் அமைப்பில் இருந்து "ஒருபோதும் விடுபட முடியாது" அதன் அடித்தளமாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.[Marx, Capital Volume III, p. 708, p. 741]

கெய்ன்ஸ் தங்கத்தை ஒரு "காட்டுமிராண்டித்தனமான நினைவுச் சின்னம்" என்று நிராகரித்திருக்கலாம், ஆனால் மத்திய வங்கிகள் அதை தொடர்ந்து வைத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜேர்மன் Bundesbank தங்கத்தை "அவசரகால இருப்பு வகை" என்று விவரித்து, இது நாணயங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும் போது நெருக்கடி சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படலாம் " என்கிறது. மேலும் இங்கிலாந்து வங்கி இதை "மதிப்பை பாதுகாத்து வைத்திருக்கும் சாதனமாகவும், பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் மற்றும் பரிமாற்றத்திற்கான ஊடகமாகவும்" விவரிக்கிறது.

நவீன நாணயக் கோட்பாட்டின் பகுப்பாய்வு ஒரு பாகுபாடற்றது என்றும் அதன் விளக்க சக்தி “நமது நாணய அமைப்பு உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரிக்கிறது” என்றும் கெல்டன் கூறுகிறார். இது தவறானது, ஏனெனில் இது முதலாளித்துவ பொருளாதாரம் அடிப்படையாகக் கொண்ட சமூக மற்றும் வர்க்க உறவுகளான உற்பத்தி சாதனங்களின் மீதான தனிச்சொத்துடமை, சந்தைக்கான பொருட்கள் உற்பத்தி, உழைப்புசக்தியை ஒரு பொருளாக மாற்றுவது மற்றும் இந்த சமூக உறவுகளின் அடிப்படையில் மூலதனக் குவிப்புக்கான ஆதாரமான உபரி மதிப்பைப் கறந்தெடுப்பது போன்றவற்றை கவனத்திற்கு எடுக்கவில்லை.

நவீன நாணயக் கோட்பாட்டின் பணக் கோட்பாட்டின் மையத்தில் இருக்கும் இந்த பிரிப்பு, இன்றைய சில முக்கிய சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் மற்றும் அவற்றைத் தீர்க்க நவீன நாணயக் கோட்பாடு முன்வைத்த திட்டங்களுக்கு கெல்டன் திரும்பும்போது இன்னும் தெளிவாகிறது.

அதன் முக்கிய கொள்கை பரிந்துரைகளில் ஒன்று மத்திய அரசால் வேலைகளை வழங்குவதாகும். இது ஒரு மணி நேரத்திற்கு 15 டாலர் செலுத்தி வேலை விரும்பும் அனைவருக்கும் உத்தரவாத வேலைவாய்ப்பைக் கொண்டிருக்கும். இது பொருளாதார வீழ்ச்சிக் காலங்களில் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்த செயல்படும். ஒரு பொருளாதார உயர்வு நடக்கும்போது, தொழிலாளர்கள் தனியார் துறைக்குத் திரும்பும்போது கூட்டாட்சி வேலைவாய்ப்பு குறைந்துவிடும்.

வேலையின்மை ஏன் இருக்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை என்பதை கூறத்தேவையில்லை. மற்றும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பின் தொடர்ச்சியான மற்றும் ஆழமான நெருக்கடிகளை பற்றியும் குறிப்பிட தேவையில்லை. ஆனால் அதிகமான பணத்தை உருவாக்க கணினி பொத்தானை அழுத்துவதன் மூலம் மத்திய வங்கியால் நிதியளிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் இருந்தாலும் நெருக்கடிகளை குறைந்தபட்சம் சரிசெய்ய முடியும் என்று நவீன நாணயக் கோட்பாடு முன்மொழிகிறது.

நவீன நாணயக் கோட்பாட்டு பகுப்பாய்வு என்பது பொருளாதாரத்தின் செயல்பாடு என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதன் மூலம் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அதே நேரத்தில் மக்களுக்கு, ஊதிய முறை மூலம், அவற்றை வாங்குவதற்கும், தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் வளங்களை வழங்குவதாகும்.

இது முற்றிலும் கற்பனையான ஒரு கணிப்பீடாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தின் உந்துசக்தி வாழ்க்கைக்கான வழிமுறைகளை வழங்குவதல்ல. தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து கூடுதல் அல்லது உபரி மதிப்பைப் கறந்தெடுப்பதன் மூலம் மதிப்பை விரிவாக்குவதே இதன் அடிப்படையாகும்.

இறுதிப் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த உபரி மதிப்பிற்கான மூலம், தொழில்துறை இலாபம், வாடகை, வட்டி செலுத்துதல் மற்றும் நிதி சொத்துக்களுக்கான வருவாய் ஆகியவற்றிகும் கூலியை வழங்குதல் மூலம் மூலதனத்தால் வாங்கப்பட்ட பொருட்களின் உழைப்பு சக்தியின் மதிப்புக்கு இடையிலான வேறுபாடாகும். அதாவது வேலை நாளின் போது தொழிலாளி உருவாக்கிய மதிப்பாகும்.

பொருளாதாரத்தின் சில துரதிர்ஷ்டவசமான செயலிழப்புகளிலிருந்து வேலையின்மை எழுவதில்லை. ஆனால் உபரி மதிப்பைக் திரட்டும் நிகழ்ச்சிப்போக்கினுள் ஒருங்கிணைந்த ஒன்றாகும். மூலதனத்தின் ஒவ்வொரு பகுதியும் அதன் உற்பத்தி செலவுகளை குறைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்திலிருந்து கறந்தெடுக்கப்பட்ட மொத்த உபரி மதிப்பில் அதற்கு பொருத்தமான பங்கைப் பெறுவதற்கான ஒரு நிலையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதைச் செய்வதற்கான முக்கிய வழிகளில் ஒன்று, மார்க்ஸ் தொழிலாளர்களின் "சேமப்படை" (reserve army) என்று அழைக்கும் வேலையற்றோரை உருவாக்குவதன் மூலம் ஊதியங்களைக் குறைப்பதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார விரிவாக்கத்தின் சிறந்த காலங்களில் இந்த போக்கு தொடர்ச்சியாக நிகழ்கின்றது. இத்தகைய விரிவாக்கத்தின் நிலைமைகளின் கீழ் ஊதியங்கள் உயரும்போது, தொழிலாளர் சக்தியைக் குறைப்பதற்கும், இலாபங்களை அதிகரிப்பதற்காக எஞ்சியிருப்பவர்களின் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான போட்டிப் போராட்டத்தால் மூலதனத்தின் ஒவ்வொரு பகுதியும் உந்தப்படுகிறது.

ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்கள் பெடரலாலும், பிற மத்திய வங்கிகளினாலும் செயல்படுத்தப்படுகின்றன. அவை ஊதியங்கள் மீதான கீழ்நோக்கிய அழுத்தத்தைத் தக்கவைக்க பொருளாதார உற்பத்தியை அடக்குவதற்காக வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. 1980களின் முற்பகுதியில், அமெரிக்க பொருளாதாரத்தின் "மறுசீரமைப்பு" என்று அழைக்கப்படுவது போல் வோல்கரின் தலைமையில் பெடரலால் மேற்கொள்ளப்பட்டது. அவர் தொழில்துறையின் முழு பிரிவுகளையும் மூடுவதற்கும் பாரிய வேலையின்மையை உருவாக்குவதற்கும் வட்டி விகிதங்களை அதிகபட்சமாக உயர்த்தினார்.

வேலையின்மை என்பது சில துரதிர்ஷ்டவசமான அல்லது தற்செயலான அம்சம் அல்ல. ஆனால் உழைப்பு சக்தியின் பண்டமாக்கலின் அடிப்படையில் ஒரு சமூக-பொருளாதார அமைப்புடன் ஒருங்கிணைந்ததாகும். புருடோனியர்கள் மற்றும் அவர்களின் "புழக்கத்தின் தந்திரங்களுக்கு" எதிராக மார்க்ஸ் குறிப்பிட்டார்: "ஒரு வகை கூலி உழைப்பு மற்றொருவரின் துஷ்பிரயோகத்தை திருத்தக்கூடும், ஆனால் கூலி உழைப்பின் எந்தவொரு வடிவமும் கூலி உழைப்பின் துஷ்பிரயோகத்தை திருத்தமுடியாது." [Grundrisse, p.123]

அதே பிரச்சினை முதலாளித்துவ பொருளாதாரத்தின் சமூக உறவுகளை நவீன நாணயக் கோட்பாடு கடந்து செல்வது சுகாதார பராமரிப்பு மற்றும் பிற முக்கிய சமூக சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குவதை கெல்டன் கருதும் போது எழுகிறது.

Medicare நீடித்திருக்க கூடியது அல்ல என்ற தொடர்ச்சியான கூற்றுகளை எதிர்கொண்டு, அவர் எழுதுகிறார்: “இந்த வாதங்கள் அனைத்தும் தவறாக வழிநடத்தப்படுகின்றன. ஏனெனில் அவை அனைத்தும் பற்றாக்குறை கட்டுக்கதையில் அடித்தளமாக உள்ளன. எங்களிடம் சுகாதார வழங்குநர்கள் மற்றும் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இருக்கும் வரை, Medicareஎன்பது நமது நாட்டின் உண்மையான உற்பத்தி வளங்கள் என்ற பார்வையில் மட்டுமே நீடித்திருக்கும்.” [p. 173]

Medicare தக்கவைத்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், பல ஏனைய சமூக சேவைகளுடனும் அதை விரிவுபடுத்துவதற்கும் எல்லா வளங்களும் உள்ளன என்பது முற்றிலும் உண்மை. ஆனால் அவ்வாறான சேவைகளை அகற்றுவது கொள்கை வகுப்பாளர்கள் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்டுக்கதைகளின் தவறான வழிகாட்டுதலின் விளைவாக இல்லை.

இது உபரி மதிப்பைக் குவிப்பதை அடித்தமாக கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பிலிருந்து எழுகிறது. அரசு வழங்கும் சமூக சேவைகள் உபரி மதிப்பை உற்பத்தி செய்யாது. மாறாக, அவை மூலதனத்தால் கையகப்படுத்துவதற்கு கிடைக்கும் உபரி மதிப்பின் மொத்த அளவிலிருந்து குறைப்பாகும். இதனால்தான் இலாபக் குவிப்பை அச்சுறுத்தும் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் சமூக சேவைகளைக் குறைப்பதற்கான உந்துதலுடன் சேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், கெல்டனின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்கள் புறநிலை சமூக மற்றும் பொருளாதார உறவுகளில் வேரூன்றியவை அல்ல. ஆனால் காலாவதியான சிந்தனை வடிவங்களிலிருந்து எழுகின்றன, அதாவது அரசாங்கம் அதன் வரவு-செலவுத் திட்டத்தை சமப்படுத்த வேண்டும் என்கின்றார்.

ஒரு மத போதகரின் முறையில், நவீன நாணயக் கோட்பாடு பின்வருமாறு அறிவிக்கிறது: “நான் தான் ஞானமும் வெளிச்சமும். உங்கள் பழைய சிந்தனை வழிகளைக் கைவிடுங்கள், சமூகம் சொர்க்கத்திற்கு இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு சிறந்த இடத்திற்கு முன்னேற முடியும்”.

கெல்டன் "பற்றாக்குறை கட்டுக்கதை" என்று அழைப்பதற்கான எடுத்துக்காட்டுகளை முன்வைக்கிறார், அவற்றில் சில 2015 ஆம் ஆண்டில் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார குழுவில் பங்கேற்றதிலிருந்து பெறப்பட்டது. ஆனால், அவர் கூறுவது போல, நவீன நாணயக் கோட்பாடு என்பது பணவியல் அமைப்பு உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விளக்கமாகும் என்றால், நவீன நாணயக் கோட்பாடு வழங்கும் உள்ளறிவின் முன்னால் புராணக்கதைகள் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம்? ஒரு கட்டுக்கதை தொடர்ந்தால், அதற்கு புறநிலை சமூக வேர்கள் இருக்க வேண்டும். இது திட்டவட்டமான வர்க்க சக்திகளுக்கு சேவை செய்ய வேண்டும். மதம் நிலைத்திருப்பதற்கான தன்மையை விளக்கிக் காட்டுவதை போல் அறியாமை காரணமாக காட்டமுடியாது.

இந்த விடயத்தை ஆராயலாம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புறநிலை விளக்கத்தை வழங்கினால் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார மற்றும் பிற சேவைகள் மீதான தாக்குதல்களுக்கான காரணத்தையும் அறிந்துகொள்ளலாம்.

சமூக சேவை செலவினங்களைக் குறைக்க வேண்டும், இத்தகைய செலவினங்கள் வோல் ஸ்ட்ரீட்டின் இலாபங்களை பராமரிக்கவும் அதிகரிக்கவும் தேவைப்படும் உழைக்கும் மக்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பிலிருந்து குறைவதால் அதற்கு நிதியளிக்க “பணம் இல்லை” என்று அவர்கள் காங்கிரஸிடம் சொன்னால் என்ன நடக்கும்?

முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய செயற்பாடுகளிலிருந்து பெறப்பட்ட அத்தகைய விஞ்ஞான விளக்கம், அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்களின் நிலைமைகளின் கீழ் முன்வைக்கப்பட்டால், அது முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிச உணர்வின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு அரசியல் நெருக்கடியைத் தூண்டிவிடும்.

கெல்டனை விட முதலாளித்துவ பொருளாதாரத்தின் உண்மையான செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் பிரதிநிதிகள் அறிந்திருக்கிறார்கள் என்று நாங்கள் எந்த வகையிலும் பரிந்துரைக்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தைப் போலவே, அதன் வரவு-செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்துவதற்காக செலவினங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் கோருவது முதலாளித்துவத்தின் வர்க்க கட்டமைப்பில் வேரூன்றிய ஒரு திட்டவட்டமான அரசியல் பாத்திரத்தை வகிக்கிறது. இதுதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு அவர்கள் வழங்கும் சேவைகளுக்கான கருத்தியல் முகமூடியாகும்.

இயங்கும் அடிப்படை புறநிலை நிகழ்ச்சிப்போக்கிலிருந்து கவனத்தை திசை திருப்புவதன் மூலமும், அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கருத்தாக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் இந்த குழப்பமான அமைப்பில் நவீன நாணயக் கோட்பாடு தனது பங்கை வகிக்கிறது.

சமுதாயத்தின் இழப்பில் ஒரு நிதி தன்னலக்குழுவின் கைகளில் ஏராளமான செல்வங்களைக் குவிப்பதற்கு உதவும் முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கு, கொள்கை வகுப்பாளர்களுக்கு அது வழங்கும் விளக்கத்தினை பார்க்க இயலுமானதாக செய்தால் மட்டுமே மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அற்புதமாக மாற்ற முடியும் என்ற முன்னோக்கை இது முன்னேற்றுகிறது.

கெல்டனின் விளக்கத்தில், நவீன நாணயக் கோட்பாடு அமெரிக்காவிற்குள் இருக்கும் வர்க்க மோதல்களையும் முரண்பாடுகளையும் அழிக்க முடிவது மட்டுமல்லாது, பெருகிய முறையில் அதன் உலகளாவிய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவ வழிமுறைகளுக்கு திரும்பும் மற்றும் மற்றொரு உலகப் போரைத் தூண்ட அச்சுறுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு கொள்ளையடிக்கும் சக்தியாக இருப்பதிலிருந்து உலக மக்களின் பயனாளியாக மாற்ற முடியும் என்கிறது.

அவர் எழுதுவதை கவனிப்பது அவசியம், "அமெரிக்க உள்நாட்டுத் துறை முழு வேலைவாய்ப்பை அடைவதற்கு தேவையான அனைத்து டாலர்களையும் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்க முடியும். மேலும் இது உலகின் பிற பகுதிகளுக்குத் தேவையான அனைத்து டாலர்களையும் வழங்குவதன் மூலம், அவற்றின் இருப்புக்களை வளர்த்துக் கொள்ளவும் வர்த்தக ஓட்டத்தை பாதுகாக்கவும் முடியும். தனது சொந்த குறுகிய நலன்களுக்காக தங்க இருப்புக்களை அணிதிரட்டுவதற்கு அதன் நாணய மேலாதிக்க நிலையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வட்டி விகிதங்களை குறைவாகவும், உலக பொருளாதார அமைதியை முன்னெடுப்பதை ஸ்திரமானதாகவும் வைத்திருக்க ஒரு உலகளாவிய பசுமை புதிய ஒப்பந்தத்திற்கான [Green New Deal] வளங்களைத் திரட்டுவதற்கான முயற்சியை அமெரிக்கா வழிநடத்தலாம். [p. 151]

மேலும் கெல்டனால் முன்வைக்கப்படும் நவீன நாணயக் கோட்பாட்டினால் சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இது புதிய மொந்தைகளில் மிகவும் பழைய கள்ளாகும். இது முதலாளித்துவ நெருக்கடியின் முந்தைய காலகட்டங்களில் உழைக்கும் மக்களை கையில் இருக்கும் உண்மையான பணிகளிலிருந்து திசைதிருப்ப முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளின் நவீனகால பதிப்பாகும். அமெரிக்க உறுப்பினரின் ஜனநாயக சோசலிச கட்சியினதும் மற்றும் காங்கிரஸின் அதன் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற போலி-இடது பிரிவுகளால் இது கைப்பற்றப்பட்டதில் ஆச்சரியமில்லை. அவர் நவீன நாணயக் கோட்பாடு "உரையாடலின் ஒரு பெரிய பகுதியாக" இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

முன்னோக்கி செல்வதற்கான பாதை "புழக்கத்தின் தந்திரங்கள்" வழியாக முதலாளித்துவ அமைப்பின் சில சீர்திருத்தங்களின் தவறான முன்னோக்கு அல்ல. ஆனால் மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய பாரிய உற்பத்தி சக்திகளை பயன்படுத்தும் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான பாதையை திறப்பதற்காக அதனை தொழிலாள வர்க்கத்தால் தூக்கிவீசுவதற்காக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாகும்.

Loading