மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு செய்யவியலாது உள்ளது. ஆனால் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்ற உண்மையானது ஜனநாயகக் கட்சி மீதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசவாத அரசியலுக்கு எந்தவொரு முற்போக்கான மாற்றீடும் முன்வைக்கவியலாத அதன் இலாயக்கற்றத்தன்மை மீதும் ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாகும்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடெனுக்கோ அல்லது குடியரசுக் கட்சி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கோ ஜனாதிபதி தேர்வுக்கு குழுவில் சிறிய வித்தியாசத்திலேயே வெற்றி சாத்தியமாகக்கூடும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் தேர்தலில் ஒரு முக்கிய அம்சமாக ஆகியுள்ள தபால் வாக்குகள் எண்ணுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, இவ்வார இறுதி வரையில் விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவின் முடிவுகள் தெரியாமல் போகலாம்.
புளோரிடா, ஜோர்ஜியா, டெக்சாஸ் மற்றும் ஓஹியோவை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார், 2016 அவருக்குக் கிடைத்த எல்லா மாநிலங்களிலும், வட கரோலினாவிலும் அவர் சிறிய வித்தியாசத்தில் உள்ளார். ஆனால் நியூ ஹாம்ப்ஷைர் மற்றும் மின்னிசொடாவில் ஜெயிப்பதற்கான முயற்சிகளில் அவர் தோல்வியடைந்தார், அங்கெல்லாம் 2016 இல் அவர் குறைந்த வித்தியாசத்தில் வாக்குகள் பெற்றிருந்தார், அடுத்து நெவாடாவிலும் அவருக்கான வாக்குகள் சற்று குறையலாமென தெரிந்தது.
ஜனாதிபதி தேர்வுக் குழுவில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அவரின் முதல் வெற்றியை விட சிறிய வித்தியாசத்தில் மீண்டும் தேர்வான இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதியாக ஆவார். முதலில் பராக் ஒபாமா இவ்வாறு ஜெயித்துள்ளார்.
பைடென் வெற்றியைக் கைப்பற்றினாலும் கூட, அது, உலகளாவிய கொரொனா வைரஸ் தொற்றுநோயில் 235,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பதற்கும், பெரு மந்தநிலைமைக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கும், பாசிசவாத சக்திகளை அணித்திரட்டுவதற்கான பகிரங்க முயற்சிகளுக்கும், வாஷிங்டனில் எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக போட்டியிடுகையில் எதிர்பார்க்கக்கூடிய பெருவாரியான வெற்றி போன்ற எதுவுமாக அது இருக்காது.
புதன்கிழமை அதிகாலை, ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப், வாக்குகள் முழுவதையும் எண்ணுவதைச் சவால்விடுப்பதற்கான அவரின் திட்டங்களைத் தெளிவுபடுத்தினார். “எங்களைப் பொறுத்த வரையில், நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று வெள்ளை மாளிகையில் ஓர் உரையில் கூறிய ட்ரம்ப், “நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். எல்லா வாக்குகளையும் எண்ணுவதை நாங்கள் நிறுத்த விரும்புகிறோம்,” என்றார்.
தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளிலேயே முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதை தேர்தலுக்கு முந்தைய நாட்களில், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அடித்தளமும் இல்லை. ட்ரம்ப், தனது வெற்றியை அறிவிக்கும் பதவியில் இல்லாத நிலையில், அவரின் அரசியல் சூழ்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்பின் சூழ்ச்சிகளுக்கும் பாசிசவாத வன்முறையை அவர் தூண்டியதற்கும் மக்கள் எதிர்ப்பை ஒடுக்க ஜனநாயகக் கட்சியினர் அவர்களால் ஆன அனைத்தையும் செய்தனர். மிச்சிகனில் கிரெட்சென் விட்மர் மற்றும் வேர்ஜினியாவில் ரால்ஃப் நோர்தம் போன்ற ஜனநாயகக் கட்சி ஆளுநர்களுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள் திருப்பி விடப்பட்டிருந்த போதும் கூட, ஜனநாயகக் கட்சியினர் வேண்டுமென்றே ட்ரம்பின் வன்முறை அச்சுறுத்தல்களைக் கண்டு கொள்ளவில்லை.
2016 இல் ட்ரம்புக்கு வாக்களித்த புறநகரின் மற்றும் சிற்றூர்களின் தொழிலாளர்களிடையே எந்தவொரு குறிப்பிடத்தக்க பிரிவையும் ஜனநாயகக் கட்சியால் வெல்ல முடியவில்லை. அவர்கள் இனம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் செல்வ செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்திற்கு முறையிட்டு, அடையாள அரசியலின் அடிப்படையில் ஒரு பிரச்சாரம் செய்வதை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்ததுடன், அதேவேளையில் இந்த தொற்றுநோய் ஏற்படுத்திய சமூக நெருக்கடியைக் கையாள அவர்கள் ஒருபோதும் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை.
வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், 1932 இல், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் கீழ் ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க உழைக்கு மக்களுக்கான ஒரு "புதிய உடன்படிக்கை" க்கு வாக்குறுதி அளித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்திருந்தது.
ஆனால் தொழிலாளர்கள் வர்க்க நலன்களுக்கு ஒரு முறையீடு செய்யும் கொள்கையையோ அல்லது சமூக சீர்திருத்தத்திற்கான எந்தவொரு கொள்கையையும் நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டிருந்த ஜனநாயகக் கட்சியினர், நிதியியல் சந்தைகளின் செயல்பாடுகளுடன் பிணைந்த உயர்மட்ட நடுத்தர வர்க்க சமூக அடித்தளத்தை வளர்த்தெடுப்பதற்குச் சாதகமாக இருந்து, இனம் மற்றும் பாலினம் அடிப்படையில் தனிச்சலுகைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான முறையீடுகளைப் பயன்படுத்தினர்.
ட்ரம்பின் முதல் பதவி காலம் நெடுகிலும் அவருக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பு வெளியுறவுக் கொள்கை மீதே ஒருமுனைப்பட்டிருந்தது, அதில் அவர்கள் ரஷ்யாவை நோக்கி இன்னும் அதிக ஆக்ரோஷமான கொள்கையைக் கோரிய அதேவேளையில், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தினுள் ஆதரவை அணித்திரட்ட முயன்று வந்தனர். அவர்கள் வேண்டுமென்றே ட்ரம்பின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு பரந்த சமூக எதிர்ப்பையும் திசை திருப்பவும் ஒடுக்கவும் முயன்றுள்ளனர்.
2016 இல் கிளிண்டனுடன் நடந்ததைப் போலவே, இப்போது 2020 இலும், ஜனநாயகக் கட்சி நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக தொழில்துறை மூடல்களால் பாதிக்கப்பட்ட அப்பலாச்சியா மற்றும் மத்தியமேற்கு நகரங்கள் மற்றும் சிற்றூர்கள் போன்ற பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்ட பகுதிகளில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் சமூக நெருக்கடியைக் கையாள எந்தவொரு வேலைத்திட்டமும் வழங்க இலாயக்கற்று இருப்பதை நிரூபித்துள்ளது.
சான்றாக ஓஹியோவில், ட்ரம்பால் மஹோனிங் மற்றும் ட்ரம்ப்புல் உள்ளாட்சிகளை ஜெயிக்க முடிந்தது, யங்ஸ்டவுன் மற்றும் வாரென் நகரங்களும் அதில் உள்ளடங்கும், இங்கே முதலில் எஃகு தொழில்துறையால் வீணடிக்கப்பட்டு, 1970 களில் ஆலைகள் மூடத் தொடங்கியதில் இருந்து, மிகச் சமீபத்தில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெனரல் மோட்டார்ஸ் கடந்தாண்டு அதன் மிகப் பெரிய லார்ட்ஸ்டவுன் ஆலையை மூடி உள்ளது.
இதை எழுதிக் கொண்டிருக்கையில், மிச்சிகனில் ஜென்னிஸ்சி உள்ளாட்சியிலும் கூட ட்ரம்ப் முன்னணி வகிக்கிறார், அங்கே ஃப்ளிண்ட் நகரம் கொடூரமாக ஈய நச்சு ஆபத்தால் பாதிக்கப்பட்டது, சாகினவ் உள்ளாட்சி மற்றும் பே உள்ளாட்சியும் கூட. ஒரு சமயம் இந்த மூன்று உள்ளாட்சிகளிலும் ஜிஎம் ஆலைகள் பெருகி இருந்தன, இப்போதும் பெரும்பாலும் அவை மூடப்பட்டு விட்டன. டெட்ராய்ட் புறநகரில் வாகனத்துறை உற்பத்தியின் மையமான மாகொம்ப் உள்ளாட்சியையும் ட்ரம்ப் கைப்பற்றினார்.
காங்கிரஸ் சபை தேர்தல்களில் வாக்குகளின் முடிவுகளும் ஜனாதிபதிக்கான வாக்குகளைப் போலவே நிச்சயமின்றி உள்ளன. செனட்டில் பெரும்பான்மை பெறுவதற்கு அவசியமான நான்கில் மூன்று பங்கு ஆசனங்களை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவார்களா என்பது தெளிவின்றி உள்ளது.
தற்போது பதவியிலிருக்கும் அலபாமாவின் டௌக் ஜோன் ஆசனத்தை இழந்துள்ள ஜனநாயகக் கட்சியினர், அதேவேளையில் கொலராடோ மற்றும் அரிசோனாவில் குடியரசு கட்சியினர் வசமிருந்த செனட் ஆசனங்களைக் கைப்பற்றினர், ஆனால் மைன், வடக்கு கரோலினா மற்றும் மொன்டானாவில் செனட் ஆசனங்களுக்கான போட்டி முடிவுகள் நிச்சயமின்றி உள்ளன. தெற்கு கரோலினா, ஜோர்ஜியா, மிசிசிப்பி, கன்சாஸ், லோவா, டெக்சாஸ் மற்றும் கென்டக்கியில் நன்கு நிதியாதாரம் பெற்ற ஜனநாயகக் கட்சி போட்டி வேட்பாளர்களுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் ஆசனங்களைக் கைப்பற்றினர்.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி அதன் பெரும்பான்மையைத் தக்க வைத்தது என்றாலும் தெற்கு புளோரிடாவில் மூர்க்கமாக கம்யூனிச-விரோத பிரச்சாரங்களுடன் போட்டியிட்ட கியூப-அமெரிக்க குடியரசுக் கட்சியினரால் முதல் பதவிகால காங்கிரஸ்சபை பெண் உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு ஆசனங்கள் உட்பட பல தோல்விகளை அடைந்துள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்ட மாவட்ட மறுவரையறையைத் தொடர்ந்து வடக்கு கரோலினாவில் ஜனநாயகக் கட்சியினர் இரண்டு ஆசனங்களைப் பெற்றனர்.
இவ்விதத்தில், ஓராண்டு காலம் இடைவிடாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், வெள்ளை மாளிகையில் ட்ரம்பு, செனட் பெரும்பான்மை அணி தலைவராக மிட்ச் மெக்கொன்னல், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக நான்சி பெலொசி என இவர்களுடன் 2021 இலும் வாஷிங்டனின் அரசியல் உள்ளமைவு தொடர்வது முற்றிலும் சாத்தியமாக உள்ளது. அமெரிக்காவில் அரசியல் கட்டமைப்புகள் முற்றிலும் மக்கள் அழுத்தத்திற்கு வெளியே உள்ளன என்பதும், 1930 களின் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய ஆழ்ந்த சமூக நெருக்கடிக்கு விடையிறுப்பதற்கு தகைமையற்று உள்ளன என்பதை மட்டுமே இது எடுத்துக்காட்டுகிறது.
ஜனாதிபதி தேர்தல்களின் முடிவு நிச்சயமற்று இருக்கின்ற அதேவேளையில், தேர்தலின் ஒட்டுமொத்த போக்கும் சோசலிச சமத்துவக் கட்சி முன்னோக்கின் சரியான தன்மையை எடுத்துக்காட்டி உள்ளது, அது அதன் சொந்த பிரச்சாரத்தில் தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் பிரச்சாரத்திற்கு அடிபணிய செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் நிராகரித்தது.
வரவிருக்கும் நாட்களில் நிலைமை எவ்விதமாக அபிவிருத்தி அடைந்தாலும், வர்க்க போராட்டம் அபிவிருத்தி அடையும், அபிவிருத்தி அடைய வேண்டும். தொழிலாள வர்க்கம், இவ்விரு கட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையையும் எதிர்ப்பதில் ஒரு சோசலிச வேலைத்திட்டம் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.