மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சனிக்கிழமை, மியான்மாரில், மாண்டலே நகரில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை சிப்பாய்கள் கொன்றதற்கு பதிலிறுப்பாக, இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நேற்று வெடித்ததிலிருந்து, இந்த முக்கியமான கேள்வி எழுகிறது: ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் அரசியல் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்?
பிப்ரவரி 1 இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகள், வங்கி, போக்குவரத்து மற்றும் சிவில் சேவை உட்பட பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை முடக்கி வரும் தேசிய சிவில் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்துள்ளன.
நேற்று, நாட்டின் இரண்டு மிகப்பெரிய நகரங்களான யாங்கோன் மற்றும் மாண்டலேயிலும், மேலும் தலைநகர் நைபிடாவிலும் மற்றும் பல சிறிய நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும், நூற்றுக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான பேர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். CNN செய்தியின் படி, இதில் தென்கிழக்கில் டாவி (Dawei), ஷான் (Shan) மாநிலத்தின் டவுங்கி (Taunggyi), அயேயார்வாடி (Ayeyarwady) மாநிலத்தின் பாத்தின் (Pathein), கச்சின் (Kachin) மாநிலத்தின் மைட்கினா (Myitkyina), மற்றும் சின் மாநிலத்தின் நாட்டின் மிக வறிய பகுதிகளில் ஒன்றிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அடங்கும்.
ஊடகங்களின் கடுமையான தணிக்கை நடவடிக்கைகளால், வேலைநிறுத்தங்களின் முழு வீச்சை அறிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கடைகளும் வணிகங்களும் மூடப்பட்டிருந்ததாக பல்வேறு ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. நியூ யோர்க் டைம்ஸின் கருத்துப்படி, “திங்கட்கிழமை பொது வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், பல்பொருள் அங்காடி காசாளர்கள், தொலைத் தொடர்பு பணியாளர்கள் மற்றும் எண்ணெய் கப்பல் ஊழியர்கள் என அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்றிருந்தது. மேலும், Pizza விநியோகிப்பவர்கள், KFC ஊழியர்கள் மற்றும் bubble tea ஊழியர்களும் கூட வேலைநிறுத்தங்களில் இணைந்து கொண்டனர்.
கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கி சுடும் படையினர் உட்பட, வீதிகளில் காணப்பட்ட கடும் இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னத்தை தொழிலாளர்கள் எதிர்த்தனர். இராணுவ ஆட்சிக்குழு தனது கடுமையான சட்டங்களின் கீழ் நூற்றுக்கணக்கானவர்களை தடுத்து வைத்துள்ளதுடன், வன்முறைக்கு எதிர்ப்பாளர்களை குறை கூற முயன்றது.
எவ்வாறாயினும், சனிக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பெரியளவில் ஆயுதமேந்தியிருந்ததுடன், மாண்டலேயில் கப்பல்கட்டும் தொழிலாளர்களையும் மற்றும் அண்டை தொழிலாள வர்க்கப் பகுதியைச் சேர்ந்த அவர்களது ஆதரவாளர்களையும் நேரடியாக தாக்கினர். பொலிஸும் படையினரும் அப்போது புறப்படவிருந்த கப்பலில் தொழிலாளர்களை ஏற்றுவதற்கு கட்டாயப்படுத்த முயற்சித்தனர். இத்தாக்குதலில் 16 வயது இளைஞர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
முந்தைய வாரம் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது தலையில் சுடப்பட்ட மியா த்வே த்வே கினே என்ற இளம் பெண் வெள்ளிக்கிழமை இறந்து போனதன் பின்னர், நைபிடாவில் ஞாயிறன்று நடந்த அவரது இறுதிச் சடங்கில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆங் சான் சூ கியையும் மற்றும் அவரது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (NLD) கட்சியின் ஏனைய உறுப்பினர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதே எதிர்ப்பு இயக்கத்தின் கோரிக்கையாகும், இவர்கள் கடந்த நவம்பர் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதன் பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதி அரசாங்கத்தை அமைக்கவிருந்தவர்களாவர்.
எவ்வாறாயினும், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் என்பது மிகப் பரந்த அரசியல் சிக்கல்களுடன் பிணைந்தவையே. தேர்தலும், NLD தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களும் சூ கி மற்றும் இராணுவத்திற்கு இடையிலான அழுகிப்போன சமரசத்தின் விளைவுகளாக இருந்தன, இராணுவம் கடந்த தசாப்தம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் மேற்பார்வையின் கீழுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிரான அதன் “ஆசியாவிற்கான முன்னிலை,” திட்டத்தின் ஒரு பாகமாக மியான்மாரின் இராணுவ சர்வாதிகாரத்தை பெய்ஜிங்கிலிருந்து விலக்குவதில் உறுதியாக இருந்தது. முடங்கிய பொருளாதாரத் தடைகளையும், இராஜதந்திர ரீதியிலான தனிமைப்படுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வரும் ஆர்வத்துடன் இராணுவ ஆட்சிக்குழு 2010 இல் சூ கியை விடுவித்து, அரசியலமைப்பின் கீழ் தேர்தலையும் நடத்தியது, இது பிப்ரவரி 1 அன்று இராணுவம் பயன்படுத்திய அதிகாரங்களில் முக்கிய பிடிகளை தன் வசம் வைத்துக் கொள்வதை உறுதிசெய்ததன் பின்னரே தேர்தலை நடத்தியது.
மேற்கில் “ஜனநாயகத்தின் அடையாளமாக” நீண்டகாலமாக புகழப்பட்ட சூ கி, இந்த அரசியல் கேலிக்கூத்துக்கு தனது ஒப்புதலை அளித்தார், மேலும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், மிகுந்த தேவையுள்ள சர்வதேச முதலீட்டிற்கும் அழுத்தம் கொடுப்பதில் “வளர்ந்து வரும் ஜனநாயகம்” என்றழைக்கப்படக்கூடிய இந்நாட்டின் சர்வதேச தூதுவராகவும் இவர் செயல்படுகிறார். பர்மிய தேசியவாதத்தில் மூழ்கிப்போன, சூ கியும் மற்றும் NLD யும் முஸ்லீம் ரோஹிங்கியா சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும், நூறாயிரக்கணக்கான மக்களை தப்பியோடச் செய்த இராணுவத்தின் அட்டூழியங்களையும் பாதுகாத்தனர்.
ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு சூ கி மற்றும் NLD ஐ தொழிலாள வர்க்கம் நம்ப முடியாது. இவர்கள் மியான்மார் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், இப்பிரிவின் அரசியல் அபிலாஷைகளும் பொருளாதார நலன்களும் பொருளாதாரத்தின் கணிசமான பிரிவுகளை கட்டுப்படுத்தும் இராணுவத்தால் காலிலிட்டு நசுக்கப்படுகின்றன. இராணுவத்தின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரவோ அல்லது குறைந்தபட்சம் குறைக்கவோ NLD விரும்பினாலும், முதலாளித்துவ ஆட்சியின் மிகுந்த அடிப்படையை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தின் தளபதிகளைப் போல இதுவும் அச்சமடைகிறது.
நேற்றைய வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் தேதியை குறிப்பிடுவதாக “ஐந்து இரண்டுகள்” அல்லது 22222 வேலைநிறுத்தம் என்று குறிப்பிடப்படவிருப்பதாக பங்கேற்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. என்றாலும் இது, வீதிகளில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்று பதிலிறுத்த இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிரான வேலைநிறுத்த இயக்கத்தின் உயர் அடையாளமாகவுள்ள, 1988 ஆம் ஆண்டின் பாரிய எழுச்சியை, குறிப்பாக ஆகஸ்ட் 8, 1988 ஆம் தேதிய அல்லது 8888 வேலைநிறுத்தத்தை நினைவுகூருவதாகவே உள்ளது.
இன்று ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்கள் ஒரு முக்கியமான அரசியல் படிப்பினையை கற்றுக்கொள்வது அவசியம். 1988 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தோற்கடித்தது இராணுவத்தின் துப்பாக்கிகள் அல்ல, மாறாக சூ கி மற்றும் NLD இன் கோழைத்தனமும் துரோகமும் தான்.
ஆகஸ்ட் 8, 1988 இல் நடந்த கொலைகள், பொதுமக்களின் கோபத்தினதும் எதிர்ப்பினதும் கட்டுக்கடங்காத வெளிப்பாட்டை தூண்டியிருந்தன. பரவலான வேலை நிறுத்தங்களுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன. யாங்கோனில், முழு சுற்றுப்புறங்களும் எதிர்ப்பு குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும், கிராமப்புறங்களில் விவசாயிகளும் தங்களது கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 12 அன்று, ஆட்சிக்குழு தலைவர் விளக்கம் எதுவும் அளிக்காமல் இராஜினாமா செய்தார். அவரது பிரதியீடு இராணுவச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் பல கட்சி ஆட்சி முறைக்கான வாக்கெடுப்பை வழங்குவது கொண்டு சமரசம் செய்ய முயன்றது. இந்த ஆற்றொணா சூழ்ச்சிகளுக்கு முகம் கொடுத்ததால், தேசிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், ஆட்சிக்குழுவை சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த பாரிய எதிர்ப்பு இயக்கத்திற்கு இடைத்தடையாக செயல்பட சூ கி நுழைந்தார். ஆகஸ்ட் 26 அன்று, அரை மில்லியன் பேருக்கு முன்நின்று பேசுகையில், “ஏற்கனவே நடந்ததை மறக்க முயற்சிக்க வேண்டும்” என்றும் “இராணுவத்தின் மீதான பற்றை இழக்க வேண்டாம்” என்றும் மக்களை வலியுறுத்தினார்.
சூ கி யின் தலையீடு, இராணுவ ஆட்சிக்குழுவுக்கு தீவிரமாக தேவைப்பட்ட மூச்சுவிடும் வாய்ப்பை வழங்கியது. இராணுவ ஆட்சிக்குழுவின் தேர்தல் வாக்குறுதியிலும், மற்றும் செப்டம்பர் 18 ஆம் தேதிய இராணுவ ஒடுக்குமுறை வரையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதுடன், அவர்கள் “பொறுமையாக” இருக்கவும் அழைப்பு விடுத்தார். அதற்கு மாறாக, இராணுவம் இராணுவச் சட்டத்தை அறிவித்து, ஆர்ப்பாட்டங்களை நசுக்க துருப்புக்களுக்கு உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டனர், அல்லது தப்பியோடினர்.
1990 இல் நடத்தப்பட்ட தேர்தல்களில் NLD பெரும்பான்மை வெற்றி பெற்று, தனது ஆட்சியை உறுதிப்படுத்தவிருந்த நிலையில், இராணுவம் தேர்தல் முடிவுகளை நிராகரித்து சூ கி ஐயும் NLD இன் ஏனைய தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தது.
சூ கி மற்றும் NLD இன் நடவடிக்கைகள் ஒரு தவறோ அல்லது பாதை விலகலோ அல்ல. மாறாக, லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கியபடி, பர்மா போன்ற தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சி கண்ட நாடுகளில் முதலாளித்துவம் என்பது, உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளையும், சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயல்பாகவே திறமையற்றுள்ளது.
கடந்த நூற்றாண்டின் துயரமான வரலாற்று அனுபவங்கள், முதலாளித்துவ ஆட்சியை கீழறுக்க அச்சுறுத்தும் ஒரு பாரிய இயக்கத்தை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டதை நிரூபித்துள்ளன, இதனால் மிகுந்த இரக்கமில்லாத முறைகள் கொண்டு ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நசுக்குவதற்கு முதலாளித்துவ வர்க்கம் ஒன்றுபடும். ஜனநாயக உரிமைகளுக்கான நிலையான போராட்டத்தை முன்னெடுக்க திறைமையுள்ள ஒரே சமூக சக்தியாக, பெரும்பான்மையினர் வலியுறுத்தும் தேவைகளை நிறைவேற்ற சமுதாயத்தை மீளவடிவமைப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ள தொழிலாள வர்க்கம் தான் உள்ளது, அதாவது சோசலிச வழிகளுடன் இணைந்து.
1988 ஆம் ஆண்டை போல, மியான்மாரின் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களது சொந்த சுயாதீனமான அமைப்புக்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச அளவிலான தங்களது சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டும். பூகோள அளவில் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி, உலகெங்கிலுமாக வர்க்க போராட்ட எழுச்சிக்கு எரியூட்டுவது தெளிவாகியுள்ளது, உதாரணமாக, அண்டை நாடான தாய்லாந்தில் இராணுவ ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
யாங்கோனில் நேற்று, சில எதிர்ப்பாளர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஒன்றுகூடி, “மியான்மாருக்கு உதவுங்கள்” என்று குறிப்பிட்டிருந்த பதாகைகளை அசைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மியான்மாரில் அல்லது வேறு எங்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சிறிதும் அக்கறை கொண்டிராது. மியான்மாரில் “மனித உரிமைகளை” பாதுகாக்க வாஷிங்டன் விடுக்கும் பாசாங்குத்தனமான அழைப்புக்கள், பெய்ஜிங்குடனான அந்நாட்டின் புதுப்பிக்கப்பட்ட உறவுகளை எதிர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. மியான்மாருக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் மன்றாடுவதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் ஆதரவு கோரி முறையிட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்த புரட்சிகர முன்னோக்கிற்காக போராடும் ஒரு அரசியல் கட்சியை தொழிலாள வர்க்கம் கட்டமைக்க வேண்டும். இதன் பொருள், சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அனைத்து மூலோபாய அனுபவங்களையும் உள்ளடக்கியதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை கட்டியெழுப்புவதாகும். இந்த முக்கியமான அரசியல் விவகாரங்களைப் பற்றி விவாதிக்க எங்களை தொடர்பு கொள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.