World Socialist Web Site www.wsws.org


Tensions rise at Franco-British and Franco-German summits

பிராங்கோ-பிரிட்டிஷ் மற்றும் பிராங்கோ-ஜேர்மன் மாநாடுகளில் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Francis Dubois
7 March 2016

Back to screen version

அமியானில் மார்ச் 3 இல் நடந்த பிராங்கோ-பிரிட்டிஷ் மாநாடு மற்றும் பாரீஸில் மார்ச் 4 இல் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இடையிலான சந்திப்பு ஆகிய இரண்டுமே பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஆழ்ந்த பதட்டங்களை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

ஹோலாண்ட் மற்றும் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் இடையே, அவர்களது வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிமார்களுடன் சேர்ந்து நடந்த "34 வது பிராங்கோ-பிரிட்டிஷ் சந்திப்பு", பரந்த திட்டமிட்ட மற்றும் விளைவுகளைக் கொண்டிருந்தது. அது, முதலாம் உலக போரின் போது ஜேர்மனிக்கு எதிரான மரணகதியிலான தாக்குதல்களில் ஒன்றான ஸொம் போரின் (Battle of the Somme) நினைவுநாளுடன் தொடர்புபடுத்தப்பட்டது மற்றும் பிராங்கோ-பிரிட்டிஷ் "தியாகங்கள்" வலியுறுத்தப்பட்டன.

அந்த நிகழ்வுகளில் ஜேர்மன் அரசாங்கத்தின் எந்த பிரதிநிதியும் கலந்து கொள்ளாததும் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் ஜேர்மன் இழப்புகளைக் குறித்து எதுவும் சுட்டிக்காட்டப்படாமல் விடப்பட்டதும் திகைப்பூட்டுவதாகும். அப்போரில் பிராங்கோ-பிரிட்டிஷ் படைகள் இழந்த அதேயளவுக்கு ஒரு அரை-மில்லியன் பேரை ஜேர்மனும் இழந்திருந்தது. அமியான் அருங்காட்சியகத்தின் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஹோலாண்ட் கூறுகையில், “நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கும் சுதந்திரம் பெறுவதற்கும் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடு நிறைய விலை கொடுத்ததை, நிறைய தியாகங்கள் செய்ததை நான் குறிப்பிட விரும்புகிறேன். மீண்டுமொருமுறை, உயிர்தியாகம் செய்தவர்களின் நினைவாக நான் வீரவணக்கம் செலுத்துகிறேன்,” என்றார்.

அந்த மாநாடு பிரதானமாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையே இராணுவ உறவுகளை மீளபலப்படுத்துவதன் மீது மையமிட்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக அவ்விரு நாடுகளின் அதிகாரிகள் இராணுவ கூட்டு-ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்த துறையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுத்தனர்.

கூட்டறிக்கை பின்வருமாறு அறிவித்தது, “பிரான்ஸூம் பிரிட்டனும், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு முக்கிய உத்திரவாதம் அளிப்பவர்கள் என்பதுடன் ஐரோப்பிய இராணுவத்தின் பிரதான முதலீட்டாளர்களாக உள்ளனர். எமது மூலோபாய இராணுவ பங்காண்மை உலகெங்கிலும் எமது பொதுவான நோக்கங்களை அடைய எங்களை அனுமதிப்பதில் இன்றியமையாததாகும்.”

இராணுவ கூட்டு ஒத்துழைப்பு மீதான குறிப்பிட்ட நடவடிக்கைகளை உட்கொண்டிருந்த “பாதுகாப்பு மற்றும் இராணுவம்" மீதான ஒருங்கிணைந்த பிரகடனம், ஒரு "முன்னுதாரணமற்ற நோக்கத்திற்கு" அழைப்பு விடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான 2010 லான்காஸ்டர் சபை உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை மீளவலியுறுத்தியது. “ஏற்கனவே பலமாக உள்ள இருதரப்பு இராணுவ உறவுகள், ஆழமாக்கப்பட்டுள்ளன. … இந்த விடயத்தில் நாங்கள் 2016 இல் எங்களின் உறவுகளை ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்த தீர்க்கமாக உள்ளோம்,” என்று அந்த பிரகடனம் அறிவித்தது.

இராணுவ டிரோன் அபிவிருத்தி செய்யும் 2 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான திட்டம் உட்பட பொதுவான ஆயுத அமைப்புமுறையின் அபிவிருத்தியை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கைகளில் உள்ளடங்கும். அடுத்த மாதம் பிரிட்டனில் அதன் முதல் செயல்பாடுகளை தொடங்க இருக்கும் 7,000 பேர் கொண்ட ஒரு கூட்டு சாகசப்படையை உருவாக்குவது மற்றொரு திட்டமாகும்.

“நாங்கள் முன்னொருபோதும் இல்லாத மட்டத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படும் திறனைப் பெற்றுள்ளோம். பிரான்ஸூம் பிரிட்டனும் இப்போதிருந்து இரண்டு நாடுகளிது துரித எதிர்நடவடிக்கை படைகளின் முதல் ஆயத்தப்படுத்தலை திட்டமிட மற்றும் செயல்படுத்த பரிசீலிக்கலாம்,” என்று அந்த அறிக்கை அறிவித்தது. அவ்விரு நாடுகளது அணுஆயுத படைகளின் சுதந்திரமான மற்றும் பொதுவான பாத்திரத்தையும் வலியுறுத்தியதுடன், அந்த அறிக்கை குறிப்பிடுகையில், “அணுஆயுத தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து அவரவர்களுக்கு உரிய இராணுவ மூலோபாயம் சம்பந்தப்பட்டது என்பதில் அவை தனித்துவமான மற்றும் இன்றியமையாத பாத்திரம் வகிப்பதைப் பிரான்ஸூம் பிரிட்டனும் மீண்டும் வலியுறுத்துகின்றன.”

அணுசக்தி விடயத்தில், அவ்விரு நாடுகளும் பிரிட்டனின் மேற்கு கடற்கரை பகுதியின் ஹின்க்லி முனையில் (Hinckley Point) இரண்டு அணு உலைகளைக் கட்டமைக்க இருப்பதாக அறிவித்தன.

பாரீஸ் மற்றும் பேர்லினுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு இடையே இந்த பிராங்கோ-பிரிட்டிஷ் நல்லிணக்கம் ஏற்படுகிறது. இவை கடந்த மாதம் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பகிரங்கமாக வெளி வந்தன, அங்கே பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் பகிரங்கமாக மேர்க்கெலின் அகதி கொள்கையைத் தாக்கினார்.

நேட்டோவின் 2011 லிபிய போரில் ஜேர்மனி இணைய மறுத்திருந்த நிலையில், அதற்குப் பின்னரில் இருந்து பேர்லினின் வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கை தீவிரமாக மாறியிருந்தது. 2014 இன் தொடக்கத்தில், அதன் தலைவர்கள் ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையை மற்றும் "இராணுவ கட்டுப்பாடுகள்" முடிவுக்கு வருவதை அறிவித்தனர். அப்போதிருந்து, அவர்கள் வல்லரசு புவிசார் அரசியலுக்கு திரும்புதல் மற்றும் மீள்ஆயுதமயமாக்கல் கொள்கைக்கு திரும்புவதைத் தொடங்கி உள்ளனர், இது ஜேர்மனியின் ஐரோப்பிய போட்டியாளர்களிடையே பரந்த அச்சங்களை தூண்டி உள்ளது. ஆபிரிக்கா மற்றும் சிரியா உட்பட, எண்ணற்ற மோதல்களில் ஜேர்மனி அதிகரித்தளவில் முக்கிய பாத்திரம் வகித்து வருவதுடன் நேட்டோவிற்குள்ளும் அதிகரித்தளவில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் பீதியுற்றிருப்பதுடன், ஒரு பொதுவான கூட்டணிக்கான அவசியத்தை உணர்கின்றனர். இதைத்தான் அப்பிராந்திய பத்திரிகையான Courrier Picard, அமியான் மாநாட்டுக்குப் பின்னர், ஜேர்மனிக்கு எதிரான முதலாம் உலக போர் சகாப்த பிராங்கோ-பிரிட்டிஷ் கூட்டணியைக் குறிக்கும் வகையில், “ஸொம் பகுதியில் இருந்து நாடுகளுக்கு இடையிலான நட்புறவு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது.

இருப்பினும் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான அடிப்படை போட்டித்தன்மை நிலவுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் மீது கேமரூன் ஒரு வெகுஜன வாக்கெடுப்பை முன்மொழிந்து, அதில் இருக்க வேண்டுமென்றால் பிரிட்டனுக்கு விட்டுக்கொடுப்புகளைக் கோரியபோது, அவர் பகிரங்கமான பாரீஸின் எதிர் பிரதிபலிப்புகளை தூண்டிவிட்டார். வெளியுறவுத்துறை விவகார மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் "ஐரோப்பாவை விருப்ப பட்டியலாக" ஆக்க விரும்புவதற்காக அவரைக் குற்றஞ்சாட்டினார். அந்த கூட்டத்திற்கு முன்னதாக பொருளாதார மந்திரி இமானுவேல் மாக்ரோன் ஆத்திரமூட்டும் வகையில் அறிவிக்கையில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், அவர் இப்போது இலண்டனில் அமைந்துள்ள மற்றும் பொதுவான ஐரோப்பிய சந்தையை அணுக விரும்புகின்ற நிதியியல் நிறுவனங்களுக்கு "சிவப்பு கம்பளம் விரிக்க" இருப்பதாக தெரிவித்தார்.

பாரீஸில் மேர்க்கெல் மற்றும் ஹோலாண்ட் க்கு இடையிலான மார்ச் 4 சந்திப்பு, அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான கவலை நிறைந்த நிலையை எடுத்துக்காட்டியது. அகதிகள் உள்நுழைய முடியாதவாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை மூடுவது, துருக்கியைக் கொண்டு அகதிகளைச் சிறைப்படுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே அகதிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிரந்தர வரம்பு நிர்ணய முறை ஆகிய அவரது அகதிகள் கொள்கைக்குப் பிரான்ஸின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மேர்க்கெல் பாரீஸிற்குப் பயணித்தார்.

முனீச்சில் வால்ஸின் கருத்துக்களையே எதிரொலித்து, பிரான்ஸில் 30,000 அகதிகளை வரவேற்க பிரான்ஸ் முன்னரே ஒப்புக் கொண்டிருந்ததைத் திரும்ப கூறியதோடு, ஹோலாண்ட் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்டார். அவர் ஏகியன் கடலில் அகதிகளைத் திரும்பி அனுப்ப மற்றும் கண்காணிக்க ஜேர்மன் தலைமையிலான நேட்டோ நடவடிக்கைக்கு ஒரு போர் கப்பலை வழங்க மட்டுமே முன்மொழிந்தார்.

அந்த கூட்டத்திற்குப் பின்னர், ஜேர்மன் நாளிதழ் Sueddeutsche Zeitung எழுதியது, “துருக்கியில் இருந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கான மேர்க்கெலின் நீண்டகால திட்டத்திற்கு ஹோலாண்ட் ஆதரவளிப்பார் என ஜேர்மன் நம்பியது, ஆனால், அது வீணாய் போய்விட்டது,” அதேவேளையில் Wirtschaftnachrichten அறிவித்தது, “சான்சிலர் மேர்க்கெல் அவரது அகதிகள் கொள்கை மீது ஒரு தொடர்ச்சியான தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டியவராக இருக்கிறார்,” என்றது.

பாரீஸ் மற்றும் பேர்லினுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களால் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் நீண்டகாலமாக மோசமடைந்து வருவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். “அகதிகள் குறித்த அந்த சந்திப்புக்கு முன்னர், ஆழ்ந்த உடன்பாடின்மைகள் நிலவின என்ற உண்மையை எதுவும் மறைக்க முடியாது,” என்று Zeit online எழுதியது. முனீச் மாநாட்டுக்குப் பின்னர், பிராங்கோ-ஜேர்மன் உறவுகளில் வழமைக்கான ஒரு சாயலைப் பேணும் முயற்சியில், “மேர்க்கெலுடன் பேசுவதற்கு வால்ஸ் சரியான நபர் கிடையாது,” என்று ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது.

“ஆனால் பிரான்ஸ் எங்கே நிற்கிறது? அகதிகள் நெருக்கடி ஐரோப்பாவின் உயிர்பிழைப்பையே அச்சுறுத்தும் ஒரு பேராபத்தாக திரும்பி உள்ள நிலையில், ஜேர்மனியின் முன்னணி அரசியல் பங்காளியாக அதன் குரலைக் கேட்கச் செய்ய அது ஏன் பொறுப்பேற்க மாட்டேன் என்கிறது?” என்று அந்த கூட்டத்தின் தோல்விக்கு Le Monde பிரதிபலிப்பு காட்டியது.

முதலாளித்துவத்தின் எண்ணற்ற அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே பெரும் பதட்டங்களை உருவாக்கி வருகின்றன என்பதும், இது ஐரோப்பாவிற்கு உள்ளேயே கூட அவற்றிற்கு இடையே இராணுவ மோதல்களின் நாட்களை மீண்டும் கொண்டு வருகிறது என்பதும் இப்போது தெளிவாகி உள்ளது. ஏற்கனவே 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை ஓர் உலக சக்தியாக மாறுவதற்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற முயற்சிக்க இட்டு சென்ற தீர்க்கவியலாத முரண்பாடுகளுக்கு ஜேர்மனி எதிர்வினையாற்றுகின்ற வேளையில், பிரான்ஸூம் பிரிட்டனும் மீண்டும் அதன் பொருளாதார மேலாதிக்கத்திற்கு எதிராக மற்றும் அதிகரித்தளவில் இராணுவரீதியில் அவற்றின் சக்திவாய்ந்த போட்டியாளருக்கு எதிராக தங்களைத்தாங்களே கூட்டு சேர்த்துக் கொள்ள தொடங்கி உள்ளன.