இலங்கை தேர்தல்: பொன்சேகாவுக்கு ஆதரவாக இழிந்த கூட்டணியில் ஜே.வி.பி

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் 2010 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) அப்பட்டமாக அம்பலத்துகிறது. உழைக்கும் மக்களைப் பாதுகாப்பது பற்றியும் எப்போதாவது 'சோசலிசம்' பற்றியும் பேசும் இந்த சிங்கள ஜனரஞ்சகவாதக் கட்சி, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதில் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடன் இணைந்துள்ளது.

முன்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பொதுக் கூட்டமொன்றில் வெள்ளை ஆடையுடன் பொமக்களை கும்பிடுகிறார்

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு எதிர்க்கட்சிகளின் 'பொது வேட்பாளராக' பொன்சேகா நிற்கிறார். 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த, புலிகளுக்கு எதிரான மூன்று வருட அழிவுகரமான இனவாத யுத்தத்திற்கு, ஜனாதிபதியாக இராஜபக்ஷவும் நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக பொன்சேகாவும் பொறுப்பாளிகள் ஆவர்.

ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.க. இரண்டும் இராஜபக்ஷவின் போலியான 'பயங்கரவாதத்தின் மீதான போரை' ஆதரித்ததுடன் வாழ்க்கைத் தரம் மற்றும் வேலைகள் மீதான அவரது கொடூரமான தாக்குதல்களை எதிர்க்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில், இரண்டு கட்சிகளும் அரசாங்கத்திற்கு மாற்று எதையும் முன்வைக்காததோடு மோசமாக தோல்வியடைந்தன. விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை என்ற ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரத்தை மட்டுப்படுத்த முயலும் இராஜபக்ஷவை எதிர்ப்பதற்கான வழிமுறையாக, அவர்கள் 'வெற்றிபெற்ற ஜெனரலுக்கு' ஆதரவளிக்கின்றனர்.

இராஜபக்ஷவின் ஆட்சிக்கு ஜே.வி.பி. நேரடிப் பொறுப்பை ஏற்கிறது. 2005ல், அது ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இராஜபக்ஷவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இராஜபக்ஷவின் வேலைத்திட்டமான 'மஹிந்தவின் தொலைநோக்கு' பெரும்பாலும் ஜே.வி.பி.யால் வரையப்பட்டது. அது புலிகளுடனான அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தின் சமாதானப் பேச்சுக்களுக்கு விரோதமாக இருந்ததுடன் 2002 போர்நிறுத்தத்தை மீள வரையுமாறு அழைப்பு விடுத்தது. அந்த நேரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ் எச்சரித்தபடி, அது ஒரு போர் வேலைத்திட்டம் ஆகும்.

இராஜபக்ஷ குறுகிய வெற்றி பெற்ற பின்னர், ஜே.வி.பி. எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், முக்கிய வாக்கெடுப்புகளில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. 2006 ஜூலையில் இராஜபக்ஷ உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்கிய பின்னர், ஜே.வி.பி., அத்தியாவசிய சேவைகள் மற்றும் மானியங்களுக்கான பொதுச் செலவினங்களில் ஆழமான வெட்டுக்களுக்கு வழிவகுத்த, அவரது பெரும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதன் தொழிற்சங்கங்கள் மூலம், ஜே.வி.பி. போர் முயற்சியை அச்சுறுத்தும் எந்தவொரு தொழில்துறை போராட்ட நடவடிக்கையையும் நசுக்க உதவியது. போருக்கும் மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குக்கும் வெகுஜன எதிர்ப்பு வளர்ந்ததால், 2008ல் ஜே.வி.பி. பிளவுபட்டதுடன், அதன் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, வெளிப்படையாக அரசாங்கத்தில் இணைந்தனர்.

ஜே.வி.பி.யின் சீர்குலைவு இந்த ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் தெளிவாகத் தெரிந்தது. அதன் ஆசன எண்ணிக்கை மத்திய மாகாணத்தில் 12 இலிருந்து பூஜ்ஜியமாகவும், வடமேல் மாகாணத்தில் 6 இலிருந்து 1 ஆகவும், மேல் மாகாணத்தில் 23 லிருந்து 3 ஆகவும், தென் மாகாணத்தில் 14 இலிருந்து 3 ஆகவும் சரிந்தது. 1960களில் வறிய சிங்கள கிராமப்புற இளைஞர்களின் கெரில்லா இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, தென்பகுதி ஜே.வி.பி. ஆதரவு தளமாக இருந்ததால், தெற்கில் ஏற்பட்ட இழப்பு விசேடமாக குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தலில், ஜே.வி.பி. ஜனநாயகத்தின் பாதுகாவலராக காட்டிக் கொள்வதுடன், இராஜபக்ஷ ஆட்சியை 'குடும்ப குட்டித்தனம் மற்றும் சர்வாதிகாரம்' என்று சாடுகிறது. கடந்த மாதம் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, “இலங்கையில் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அவர் [ஜெனரல் பொன்சேகா] இணங்கியுள்ளார். இரண்டாவதாக, ஜனநாயகத்தை மீட்டெடுத்து பலப்படுத்தவும், நல்லாட்சியை கொண்டு வரவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்,” எனத் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்திற்கு இராணுவச் சுவையை அளித்த ஜே.வி.பி., போரில் வெற்றி பெற்ற பின்னர், தீவில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான 'இரண்டாவது நடவடிக்கையில்' பொன்சேகா ஈடுபட்டுள்ளார் என்று அறிவிக்கிறது.

ஜே.வி.பி.யும் பொன்சேகாவும் 'ஜனநாயகவாதிகளாக' காட்டிக்கொள்வது அபத்தமானது. இராஜபக்ஷவுடன் சேர்ந்து, பொன்சேகா போரையும் அதனுடன் தொடர்புடைய -பொதுமக்களை இராணுவம் படுகொலை செய்தமை, புலிகளின் தோல்விக்குப் பின்னர் இலட்சக் கணக்கான தமிழ் பொதுமக்களை சட்டவிரோதமாக சிறை முகாம்களில் அடைத்தமை போன்ற அனைத்து குற்றங்களையும்- முன்னெடுத்தார். ஜே.வி.பி. இப்போது சர்வாதிகார முறைகளை பின்பற்றுவதற்காக இராஜபக்ஷவையும் அவரது கும்பலையும் கண்டிக்கின்ற போதிலும், அது பாதுகாப்புப் படைகளின் உடந்தையுடன் செயல்படும் கொலைப் படைகளால் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் காணாமல் ஆக்கப்பட்டதையும் பகிரங்கமாக பாதுகாத்தது.

பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பொன்சேகா முடிவுக்கு கொண்டு வருவார் என்ற ஜே.வி.பி.யின் கூற்றுக்கள் ஒரு மோசடியாகும். ஜனாதிபதி வேட்பாளர்கள், எதிர்க்கட்சியாக இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பதும், வெற்றி பெற்ற உடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதும் வாடிக்கையாகும். விதிவிலக்காக இல்லாமல், இராணுவத்தைத் தவிர, குறிப்பிடத்தக்க சொந்த ஆதரவு தளம் ஏதும் இல்லாத பொன்சேகா, தனது முன்னோடிகளை விட பரந்துபட்ட ஜனாதிபதி அதிகாரங்களை இன்னும் அதிகமாக நம்பியிருப்பார்.

ஜனவரி 26 வாக்கெடுப்பில் இராஜபக்ஷவோ அல்லது பொன்சேகாவோ வெற்றி பெற்றாலும், அடுத்த அரசாங்கம் பொதுச் செலவுகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது பாரிய தாக்குதலைத் தொடுக்கும். இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகள் விரைவாக பரவலான விரோதத்தை உருவாக்கும் என்பதை முழுமையாக அறிந்திருந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இந்த 'இரண்டாவது நடவடிக்கையை' முன்னெடுப்பதில், எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு 26 வருடகால யுத்தத்தில் கட்டமைக்கப்பட்ட பொலிஸ்-அரச நடவடிக்கைகளை பயன்படுத்துவதில் இராஜபக்ஷவைப் போலவே பொன்சேகாவும் இரக்கமற்றவராக இருப்பார்.

அதிக ஜனநாயகம் மற்றும் வாழ்க்கைத் தர மேம்பட்டை ஏற்படுத்துவதாக வாக்காளர்களுக்கு உறுதியளிக்கும் அதே வேளை, 'சட்டம் ஒழுங்கை' அமல்படுத்தும், ஊழலை ஒடுக்கும் மற்றும் 'ஒழுக்கமுள்ள சமுதாயத்தை' நிறுவும் ஒரு பொனபார்ட்டிச நபராக பொன்சேகா தன்னை ஆளும் உயரடுக்கிற்கு முன்வைக்கிறார். ஜே.வி.பி. தலைவர் அமரசிங்க தனது நேர்காணலில், பொன்சேகாவை இதே வார்த்தைகளில் பாராட்டினார்: 'ஜெனரல் ஒரு வங்குரோத்து அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு வஞ்சகர் அல்ல, அவர் ஊழல் இல்லாதவர்,” என்றார்.

ஜே.வி.பி., இராஜபக்ஷ தனது “மஹிந்த தொலைநோக்கு திட்டத்தை” உருவாக்குவதற்கு உதவியதைப் போலவே, ஐ.தே.க. உடன் இணைந்து பொன்சேகாவுக்கு உதவுவதற்காக பொய்யான வாக்குறுதிகளின் வேலைத்திட்டத்தை வகுப்பதில் ஈடுபட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, விவசாயிகள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள், அதே போல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான 'நிவாரணம்', கொடூரமான அவசரகாலச் சட்டத்தில் மாற்றங்கள் மற்றும் தமிழ் பொது மக்களின் மீள் குடியேற்றம் உட்பட, அடுத்த அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் 'பொது குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கு' இரு எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

இந்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாது. ஜே.வி.பி.க்கும் ஐ.தே.க.க்கும் இடையே தொடர்ந்து வரும் கூர்மையான வேறுபாடுகள், அவர்களின் 'பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம்' ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கானது அல்ல என்பதில் தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் திட்டத்தின் படி, அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி அரசாங்கத்தை அமைக்கும் - மற்றையது எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதிலும், தீர்க்கமான வாக்கெடுப்புகளில் அரசாங்கத்தை ஆதரிக்கும். இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் பொன்சேகா பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலேயே தங்கியிருக்கின்றன. ஆனால் ஒரு கொண்டாடப்படும் பிரமுகராக இருக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று ஜெனரல் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் தூணாக ஜே.வி.பி மாறுவது ஒரு நீண்ட செயல்முறையாகும். ஒரு கெரில்லா அமைப்பாக, ஜே.வி.பி. 1971 இல் ஒரு தோல்வியுற்ற எழுச்சியை ஆரம்பித்தது, இது அடுத்தடுத்த அரசாங்க அடக்குமுறையில் சுமார் 20,000 கிராமப்புற இளைஞர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. 'மார்க்சிஸ' சொற்றொடர்களை பேசும் அதே வேளை, ஜே.வி.பி. எப்போதும், 1983 இல் உள்நாட்டுப் போர் வெடித்த பின்னர் உச்சத்தில் வெளிப்பட்ட சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கியதற்காக 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாகக் கண்டனம் செய்த ஜே.வி.பி., உடன்படிக்கைக்கு எதிரான அதன் 'தேசபக்தி' பிரச்சாரத்தில் சேர மறுத்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகள் கொன்றனர். அரசாங்கத்திற்குள் கொண்டுவரும் யோசனைகளை கையாண்ட பின்னர், ஜே.வி.பி உடனான அதன் மறைமுக கூட்டணியை ஐ.தே.க. முடித்துக் கொண்டு, இராணுவத்தை கட்டவிழ்த்து, 60,000 சிங்கள இளைஞர்களை படுகொலை செய்தது.

ஜே.வி.பி. 1994இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அதிகாரத்தை வென்ற பின்னர், அரசியல் நீரோட்டத்தில் நுழைந்தது. ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க. மீது அதிகரித்து வந்த அரசியல் அதிருப்தியின் மத்தியில், ஆளும் உயரடுக்கின் அரசியல் பாதுகாப்பு வழியாக ஜே.வி.பி. ஒரு முக்கிய பங்கை ஆற்றியது. 2004ல், ஜே.வி.பி. குமாரதுங்கவின் கூட்டணியில் இணைந்து முதல் முறையாக அரசாங்கத்தில் அங்கம் வகித்தது. இரண்டு ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளுக்கு எதிராக ஜே.வி.பி.க்கு வாக்களித்தவர்கள், ஜே.வி.பி. அமைச்சர்களும் அரசாங்கத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்ற முடிவுக்கு வந்ததால், இதன் விளைவாக விரைவாக ஆதரவை இழந்தது.

ஜே.வி.பி. தலைதூக்கவே இல்லை. தனது ஆதரவை இழப்பது மிகவும் வெளிப்படையானது என்று பயந்து, அது 2005 தேர்தலில் தனது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக இராஜபக்ஷவை ஆதரித்தது. ஜே.வி.பி.யின் பேரினவாத வேலைத்திட்டத்தை இராஜபக்ஷ திறம்பட கையகப்படுத்திய பின்னர், கட்சி தொடர்ந்து சீரழிந்து, இராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைவதா இல்லையா என்ற முற்றிலும் தந்திரோபாய பிரச்சினைகளால் பலவீனமாகி, 2008 பிளவுக்கு வழிவகுத்தது. அண்மையில் அதன் தேசிய மகளிர் அமைப்பாளர் பிரியங்கிகா கொத்தலாவல இராஜினாமா செய்து அரசாங்கத்தில் இணைந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி தேவையான முடிவுகளை எடுக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஜே.வி.பி.யின் பரிணாமம் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் அரசியல் திவால்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக உழைக்கும் மக்கள், சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமான ஒரு அரசியல் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதன் மூலமும், போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமும் மட்டுமே தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Loading