மோடி வாஷிங்டனுக்கு விஜயம் செய்கையில், இந்தியா-சீனா இடையேயான எல்லை மோதல் நாலாவது ஆண்டை எட்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிப்ரவரி 10, 2021 புதன்கிழமையன்று, இந்தியா-சீனா எல்லையில் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள டாங்கிகள். [AP Photo/India Army via AP]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நான்கு நாள் விஜயம் வாஷிங்டனால் ஒரு 'அரசு' விஜயம் என்று கூறப்படுகிறது, குஜராத்தில் 2002 இல் முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டி, அதை நடத்துவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்ததில் அவர் வகித்த பாத்திரத்தின் காரணமாக நீண்ட காலமாக அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட மோடிக்கு இப்போது அரிய மரியாதை வழங்கப்படும். 

அதாவது காங்கிரஸின் கூட்டு அமர்வில் அவர் உரையாற்றுவார் என்பது அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ நிறுவனம் இந்திய-அமெரிக்க 'பூகோள மூலோபாய கூட்டாண்மைக்கு'வழங்கும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சர்ச்சைக்குரிய 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள இமயமலை எல்லை தொடர்பாக இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே பதட்டமான எல்லை மோதல் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் மோடியின் விஜயம் அமைந்துள்ளது.

சீனாவிற்கு எதிரான அதன் அனைத்துத் தரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்கு இந்தியாவை இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சர்ச்சையைத் தூண்டுவதற்கு வாஷிங்டன் இந்தக்காலம் முழுவதும் பாடுபட்டள்ளது. மோடி அரசாங்கம், இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலும் ஒருமித்த ஆதரவுடன், பெய்ஜிங்கிற்கு எதிராக மக்கள் விரோதத்தை தூண்டிவிடவும், அமெரிக்காவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் பரந்த விரிவாக்கத்தை நியாயப்படுத்தவும் எல்லை மோதலை பயன்படுத்தியது மற்றும் இவ்வாறாகவே அதன் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாடன் அதன் உறவும் இருக்கிறது.

படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டம் உட்பட உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளுக்கு இடையே கடந்த மூன்று வருடங்களாக 18 சுற்றுகள் விரிவாக்கப் பேச்சுக்கள் நடந்த போதிலும், இரு தரப்பும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை உலகின் சில வாழ முடியாத தரிசு நிலப்பகுதியில் எதிர் எதிரே முன்னோக்கி நிறுத்தியுள்ளன. 

எல்லை மோதல் இரண்டு நாடுகளுக்குமே அச்சம் தருகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் மற்றும் வாஷிங்டனின் பெருகிய ஈடுபாடு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அமெரிக்கா உளவுத்துறை வழங்கிய 'நிகழ்நேர' உதவியுடன் கடந்த டிசம்பரில் சீனத் துருப்பு ஊடுருவலை முறியடித்ததாக இந்தியா பெருமையாகக் கூறியுள்ளது.

தற்போதைய மோதல் மே 2020 இல் தொடங்கியது, மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) மற்றும் இந்திய துருப்புக்கள் மேற்கு இமயமலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின் மற்றும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் இடையே உள்ள நிச்சயமான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இடம் தொடர்பாக பல இடங்களில் மோதிக்கொண்டன. அடுத்த மாதம், 1962 சீன-இந்திய எல்லைப் போருக்குப் பிறகு ஆசியாவின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இடையே மிகத் தீவிரமான மோதலாக அது சுழன்றது. கட்டம் கட்டமாக மோதலை தவிர்க்கும் நடவடிக்கையாக கருதப்பட்டதை செயல்படுத்தும் போது, இந்திய மற்றும் சீன படையினர் 2020 ஜூன் 15 இரவு, கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குறுகிய மேட்டில் பல மணி நேரம் பாறைகள் மற்றும் தடிகளுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். எதிரெதிர் மோதலில் குறைந்த பட்சம் 20 இந்திய மற்றும் 4 சீன படையினர் கொல்லப்பட்டனர்.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, பல ஆயிரம் இந்தியத் துருப்புக்கள் அருகிலுள்ள பல கல்வான் பள்ளத்தாக்கு மலையுச்சிகளை ஒரு ஆபத்தான இரவுநேர சூழ்ச்சியின் மூலம் எதிர்ப்பின்றி கைப்பற்றினர், இதை பின்னர் இந்திய அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர், அதாவது இந்த நடவடிக்கை சீன துருப்புக்களுடன் நேரடி மோதலுக்கும் முழு அளவிலான போருக்கும் கூட வழிவகுத்திருக்க கூடும் என்றனர். அதன்பிறகு, செப்டம்பர் 2020 இல், 1975க்குப் பிறகு முதன்முறையாக LAC யில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், சர்ச்சைக்குரிய எல்லையானது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வேகமாக இராணுவ உள்கட்டமைப்பு-கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்ததன் காரணமாக பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரண்கள், விமான ஓடுபாதைகள், சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் இரயில் இணைப்புகள் துருப்புக்கள் மற்றும் பொருட்களை விரைவாக நகர்த்துவதற்காக தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மற்றும் புதிய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக மற்றும் இந்தியாவின் அணுசக்தி முக்கோண விரிவாக்கம் டிரயட் ஆகியவற்றுக்காக கடந்த பட்ஜெட்டில் ராணுவ செலவினத்தை 13 சதவீதம் அதிகரித்து 5.94 டிரில்லியன் ரூபாயாக ($72.6 பில்லியன்) உயர்த்தியது.

அதிகரித்த இராணுவ – மூலாயாய ஒத்துழைப்பு பைடனுடன் மோடி நடத்தவிருக்கும் பேச்சுக்களின் மையமாக இருக்கும், அதே போல் சீனாவிற்கு போட்டியாக பூகோளரீதியான உற்பத்தி-சங்கிலி மையமாக இந்தியாவை வளர்ப்பதற்கு தடையாக இருப்பதாக வாஷிங்டன் மற்றும் வால் ஸ்ட்ரீட் கருதுவதை அகற்றுவதும் இருக்கும்.

மோடியின் வருகைக்கு தயாராக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் இந்த மாதம் புது தில்லிக்கு தனித்தனியாக விஜயம் செய்தனர்.

வாஷிங்டன் நீண்ட காலமாக இந்தியாவிற்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க பாடுபட்டு வருகிறது, அது அமெரிக்க ஆயுதத் தொழில் துறைக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் இந்தியாவை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க செய்யும் இரட்டை நோக்கத்தை கொண்டதாகும். ரஷ்யா மீது அமெரிக்க-நேட்டோ தூண்டிய போர் வெடித்தவுடன், வாஷிங்டன் புது டெல்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நீண்டகால மூலோபாய உறவுகளை குறைத்து இறுதியில் துண்டிப்பதற்கான குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. 

அமெரிக்க ஆயுதக் கொள்வனவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான தனது தயார்நிலையைக் காட்டும் ஆர்வத்துடன், இந்திய அரசாங்கம் கடந்த வாரம் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான செலவில் 31 அமெரிக்கத் தயாரிப்பான MQ-9B ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது.

நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், சீனாவின் 'எழுச்சியை' எதிர்ப்பதற்கும் முறியடிப்பதற்கும் அதன் திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக இந்தியாவுடன் ஒரு இராணுவ-மூலோபாய கூட்டணியை பின்பற்றி வருகிறது. ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவடையும் செல்வாக்கினால் வாஷிங்டன் மேலும் குழப்பமடைந்து, கிளர்ச்சியடைந்தது, அது பெய்ஜிங்கை அதன் முக்கிய மூலோபாய எதிரியாக பகிரங்கமாக அடையாளப்படுத்துவதற்கு வழிவகுத்தது, இது மேலும் பொறுப்பற்றதாக வளர்ந்துள்ளது.

2017ல் டோக்லாம் பீடபூமியில் (சீனா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் பிரதேசம்) சீன மற்றும் இந்திய துருப்புக்கள் பத்து வாரங்கள் நேருக்கு நேர் மோதியபோது எடுத்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாக, வாஷிங்டன் தற்போதைய இந்திய- சீன மோதல் குறித்து ஆரம்பத்திலேயே நடுநிலைமையைக் கைவிட்டுள்ளது. இந்திய எல்லை மோதலில். அது சீனாவை 'ஆக்கிரமிப்பாளன்' என்று முத்திரை குத்துவதுடன், தென் சீனக் கடலில் சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே அது தூண்டிவிட்டு வரும் மோதல்களுடன், நடந்து கொண்டிருக்கும் இமாலய எல்லைப் பிரச்சனையை இணைத்துள்ளது.

சீனாவின் இராணுவ ஊடுருவலை முறியடிக்கும் வகையில் 'செயல்படக்கூடிய' நிகழ்நேர செயற்கைக்கோள் நுண்ணறிவை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் சில வாரங்களுக்கு முன்பு, இந்திய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டருக்கும் குறைவான இடத்தில் மலைப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மீதான இந்திய 'மின்னல் தாக்குதல்களுக்கு' அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியதுடன், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் அரசியலமைப்பு சதியை ஆதரித்துள்ளது, இது இந்தியாவின் தனி முஸ்லீம் பெரும்பான்மை மற்றும் சட்டப்பூர்வமான அரை தன்னாட்சி மாநிலத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றியது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்துடன் 'பூகோள ரீதியான மூலோபாய கூட்டு' உடன்படிக்கை குறித்து குறைந்தபட்சம் 2006ல் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்திய முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை அதன் வெளியுறவுக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயத்தின் அடித்தளமாக மாற்றியது..

எவ்வாறாயினும், 2014 இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தின் கீழ் மற்றும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா அதன் ஒருங்கிணைப்பை வியத்தகு முறையில் துரிதப்படுத்தியுள்ளது, மேலும் வாஷிங்டனின் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு உண்மையான முன்னிலை அரசாக மாற்றியுள்ளது. 

எல்லை மோதல் ஒரு சாக்குப்போக்காக செயல்பட்டாலும், இந்த வளர்ச்சியானது கோவிட்-19 பெரும்தொற்றுநோயால் தூண்டப்பட்ட அபாரமான சமூக-பொருளாதார நெருக்கடி மற்றும் எல்லா இடங்களிலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட அழிவுகரமான உயிர்களை விட இலாபத்தை முன்னிலைப்படுத்தி பதிலிறுத்தது மற்றும் அதை தொடர்ந்து உக்கிரமடைந்த பூகோளரீதியான புவிசார் அரசியல் மோதலினாலும் உந்தப்பட்டது.

மே 2020 இல் அறிவிக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் கோவிட் “பொருளாதார மீட்பு” திட்டம், ”சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை தழுவி, பெரும்தொற்றுநோயைத் தணிக்கும் நடவடிக்கைகளுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்து, மையத்தில் உள்ள இரண்டு கொள்கைகளை இரட்டிப்பாக்கியது. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவ வர்க்க மூலோபாயமாக இருந்தது இது தான்: முதலீட்டாளர் சார்பு 'சீர்திருத்தம்' மற்றும் வாஷிங்டனுடன் மேம்பட்ட உறவுகள், அக்டோபர் 2020 இல் வெளிநாட்டு இராணுவங்களுடனான கூட்டு நடவடிக்கைகளுக்கான 'அடிப்படை' என பென்டகன் கருதும் மூன்று ஒப்பந்தங்களில் புது தில்லி கையெழுத்திட்டது; அமெரிக்க-இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா நாற்கர இராணுவ கூட்டணியை விரிவுபடுத்தும் முடிவை பைடன் வரவேற்றார். வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சி ஒரு நாற்கர நிகழ்வாக மாற்றப்பட்டது; மற்றும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு தளவாட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, மறுபரிசீலனை மற்றும் பழுதுபார்ப்பதற்காக ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் திட்டங்களில் இந்தியா மையமாக உள்ளது. அதன் அளவு மற்றும் இருப்பிடம் இந்தியப் பெருங்கடலில் கப்பல் வழி பாதையை கட்டுப்படுத்தும் திறனை அளிக்கிறது, அதே நேரத்தில் திபெத்தில் சீனாவின் 'மென்மையான அடிவயிற்றை' அச்சுறுத்துகிறது. அதன் அணுஆயுத இராணுவம் உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான செயல் பணியிலுள்ள துருப்புக்களைக் கொண்டுள்ளது மற்றும் விரைவாக ஆழ்கடல் கடற்படையை உருவாக்கி வருகிறது.

மலாக்கா ஜலசந்தியின் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சீனா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளுக்கு அருகில் மூலோபாய மதிப்புடையவையாக இருக்கின்றன

இந்த தீவுகள் மலாக்கா ஜலசந்தி வழியிலுள்ள போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளன, இது சீனாவுடன் ஏற்படும் மோதலில் முக்கிய பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளை துண்டிக்க பயன்படும் ஒரு முக்கியமான 'மூச்சு திணறடிக்க செய்யும் புள்ளியாக” இருக்கிறது. 

அமெரிக்காவுடன் இந்தியாவின் அதிகரித்த மூலோபாய உறவுகளில் ஒரு முக்கிய அம்சம் பொருளாதாரம் ஆகும். பிஜேபி அரசாங்கம் இந்தியாவின் 'உலகை குலுக்கும் வளர்ச்சி' பற்றி பெருமை பேசினாலும், அதன் உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை- உதாரணமாக சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரயில் பேரழிவில் எடுத்துக்காட்டப்பட்டது போல் பாழடைந்து போயுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பெரும்பாலான அளவீடுகளில் நாடு இன்னும் வறுமையில் தான் உள்ளது.

இந்திய முதலாளித்துவம் அதன் செல்வத்தை பெருக்கவும், பெரும் வல்லரசாகும் அதன் அபிலாசைகளை நிறைவேற்றவும், சீனாவில் இருந்து மேற்கத்திய நிறுவனங்கள் புவிசார் அரசியல்-உந்துதலின் காரணமாக செய்து வரும் பின்வாங்கலைப் பயன்படுத்தி இந்தியாவை ஒரு போட்டி உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றுவதற்கான ஆற்றொணா நிலையில் உள்ளது. அதே சமயத்தில் அப்படி செய்யாவிட்டால் பரந்த வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து சூறாவளி போன்ற கோபத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறது.

அதன் தொற்றுநோய் 'மீட்பு' மூலோபாயத்தில், மோடி அரசாங்கம் இந்தியா ஒரு பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக மாறும் லட்சியத்தை அறிவித்தது. இந்தியாவின் தன்னாட்சி ஆயுத உற்பத்தி திறனை மேம்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறது, ஆனால் அமெரிக்க ஆயுத உற்பத்தி துணை ஒப்பந்ததாரராக இந்தியாவின் பங்கை கணிசமாக விரிவுபடுத்துவதன் மூலமாகவும் இந்த இலக்கை அடைய விரும்புகிறது. 

அமெரிக்காவுடனான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில், இந்தியாவின் முக்கிய மூலோபாய எதிரியாக பாகிஸ்தானை விட சீனாவை முத்திரை குத்துவதில், மோடி அரசாங்கம், இந்திய அரசியல் ஸ்தாபனம் மற்றும் முதலாளித்துவ உயரடுக்கின் குதுகலமான ஆதரவைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பார்களாயின் அது சீனா குறித்து 'மிகவும் மென்மையாக' உள்ளது என்பதற்காகத்தான்.

உக்ரேன் போரில் மாஸ்கோவை 'ஆக்கிரமிப்பாளன்” என்று முத்திரை குத்தி ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க-நேட்டோ அழுத்தத்தை மோடி அரசாங்கம் இதுவரையில் மூலோபாய மற்றும் பொருளாதார காரணங்களுக்காக எதிர்த்து வந்துள்ளது. ஆனால் இது இந்திய ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் நலன்களைப் பாதுகாப்பதுடன் முழுமையாக சம்பந்தப்பட்டுள்ளது. 

அது சீனாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலில் வாஷிங்டனுக்கு முக்கிய ஆதரவை வழங்கியுள்ளது, மேலும் வாஷிங்டனை அதன் உக்ரேன் போர் குறித்த நிலைப்பாட்டை சமாதானப்படுத்துவதற்கு அது சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான பிரச்சாரத்தில் இன்னும் முழுமையாக தன்னை ஒருங்கிணைத்து, பைடென் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு இன்னும் இடமளிக்கிறது. 'ஒரு-சீனா' என்ற கொள்கையை பெயரளவில் மட்டுமே பராமரித்து மற்றைய எல்லாவற்றிலும் அமெரிக்கா நிராகரிப்பதன் மூலம், அந்த பிரச்சாரம் ஒரு புதிய தீவிரத்தை அடையும் சமயத்தில் இந்தியா அவ்வாறு செய்கிறது, மேலும் வாஷிங்டன் உக்ரேன் குறித்து அதன் பொறுப்பற்ற மற்றும் விடாப்பிடியான மோதலை அதிகரிப்பதன் மூலம் அதன் கொள்ளை இலாபத்தை சூறையாடுவதற்கான மூலோபாய நோக்கங்களைப் பின்தொடர்வதில் அணுசக்தி மற்றும் உலகப் போர் ஆபத்தை பணயம் வைக்க தயாராக இருக்கிறது.

இந்தியாவின் மோதல் நிலைப்பாடு, அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு வருகிறது, ஒப்பீட்டளவில் சிறிய உள்ளூர் தன்மை கொண்ட சீன-இந்திய எல்லை மோதலை பிரமாண்டமான வெடிப்புத்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றி வருகிறது, இது உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்தியத்தின் உந்துதலின் மத்தியில் இலாபங்கள், வளங்கள் மற்றும் மூலோபாய நன்மைக்காக பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான வெறித்தனமான போராட்டத்தில் இருந்து எழுகிறது. 

இந்தியா மற்றும் சீனாவின் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் இளைஞர்கள் அத்தகைய மோதலில் இருந்து நன்மை அடைவதற்கு ஏதும் இல்லை. அவர்கள் ஒன்றாக சேர்ந்து போரை நோக்கிய பொறுப்பற்ற முடுக்கத்தை நிறுத்தவும், பிற்போக்கு தேசியவாதத்தை எதிர்க்கவும், சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் மற்றும் அனைத்து போட்டி முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் உயரடுக்குகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டி எழுப்புவது அவசியமாகும். 

Loading