மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்க்கிழமை இரவு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்கள், முகாம் அமைத்து போராடுவதை ஒடுக்க தேசிய காவலர் படையை அனுப்ப போவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தைகளின்போது அச்சுறுத்தியதாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஒரு மாணவர் தலைவர் அறிவிக்கையில், மே 4, 1970 கென்ட் பல்கலைக்கழக அரச படுகொலையின் முன்னோடி நிகழ்வை மேற்கோள் காட்டினார். அப்பொழுது நிக்சனின் வெள்ளை மாளிகை மற்றும் ஓஹியோ ஆளுனரால் அனுப்பப்பட்ட ஓஹியோ தேசிய காவல் படையானது, வியட்நாம் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த நான்கு மாணவர்களை படுகொலை செய்தது. அந்த சம்பவத்தில், ஒன்பது பேர் காயமடைந்தனர். “தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் தங்கள் சொந்த மாணவர்களுக்கு தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்களைக் கொலை செய்யவும் கூடும்” என்று மாணவர் தலைவர் குறிப்பிட்டார்.
செவ்வாய்கிழமை இரவு, கொலம்பியா பல்கலைக்கழக துணைவேந்தர் மினூச் (நெமாட்) ஷாபிக் மாணவர் மற்றும் ஆசிரிய அமைப்புக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். நள்ளிரவுக்குள் முகாம் அகற்றப்பட வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்து, மறைமுகமாக மற்றொரு ஒடுக்குமுறை அச்சுறுத்தலை விடுத்தார்.
முன்னாள் முன்னணி சர்வதேச நாணய நிதிய அதிகாரியின் தலைமையில் உள்ள கொலம்பியா நிர்வாகத்திடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், பாசிச குடியரசுக் கட்சியினரான ரொம் காட்டன் மற்றும் ஜோஷ் ஹாவ்லி ஆகியோரால் தூண்டிவிடப்பட்டதையும், ஜனாதிபதி ஜோ பைடெனால் போராட்டக்காரர்களை “யூத எதிர்ப்பாளர்கள்” என்று அவதூறு செய்ததையும் தொடர்ந்து வருகிறது. வெள்ளை மாளிகையானது, வளாகங்களிலும் அதற்கு அப்பாலும் பேச்சு சுதந்திரத்தின் மீது நடந்து வரும் ஒடுக்குமுறையை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்து வருகிறது என்பதையும் பைடென் தெளிவுபடுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு அரசு ஆத்திரமூட்டலில், ஜனவரி 6 இல் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்கு உரத்த குரல் கொடுத்த ஆதரவாளரான பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி சபாநாயகர் மைக் ஜோன்சன், “யூத மாணவர்களுடன்” பேச புதன்கிழமை கொலம்பியா வளாகத்திற்கு விஜயம் செய்யவிருப்பதாக அறிவித்தார். ஜோன்சன் முன்னதாக போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை “மூர்க்கத்தனமான மற்றும் அமெரிக்க-விரோத” மற்றும் “யூத-விரோத கும்பல்கள்” என்று அழைத்திருந்தார்.
கொலம்பியாவில் நடைபெற்ற ஒடுக்குமுறை தற்போது இனப்படுகொலை மற்றும் போரை எதிர்ப்பவர்களை இலக்கு வைத்து தீவிரமடைந்து வரும் அரசு ஒடுக்குமுறை நடவடிக்கையின் மையப் புள்ளியாக உள்ளது.
முன்னதாக செவ்வாய்கிழமை மாலை, ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் சூமரின் வீட்டிற்கு அருகில், புரூக்ளினின் கிராண்ட் ஆர்மி பிளாசாவில் போக்குவரத்தை நிறுத்துவதற்காக ஒன்றுகூடிய அமைதிக்கான யூத குரல் அமைப்பின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களை நியூயோர்க் போலிசார் (NYPD) பாரிய அளவில் கைது செய்தனர். “எல்லோரும் விடுதலை அடையும் வரை யாரும் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியாது. இஸ்ரேலுக்கான ஆயுத ஆதரவை நிறுத்த வேண்டும் என்று யூதர்களாகிய நாம் கூறுகிறோம்” என்று சதுக்கத்தின் மையத்தில் ஒரு பெரிய பேனரை அவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
திங்களன்று இரவு, நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்த நியூயோர்க் போலிசார், இனப்படுகொலையில் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் (NYU) உடந்தையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரினர். இதற்கு, கலகத் தடுப்பு உடைகளில் நியூயோர்க் போலிஸ் துறையின் சிறப்பு “மூலோபாய நடவடிக்கைக் குழு” பொலிசார் அணிதிரட்டப்பட்டிருந்தனர். அவர்கள் எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்களை தாக்கியும் மற்றும் குறைந்தபட்சம் மாணவர் பத்திரிகைகளின் ஒரு உறுப்பினருக்கு எதிராக மிளகுத்தூளை பயன்படுத்தினர்.
கொலம்பியாவைப் போலவே, நியூயோர்க் பல்கலைக்கழகமும் (NYU) ஒரு போலீஸ் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, கோல்ட் பிளாசா செங்குத்தான ஒட்டு பலகை தகடுகள் மற்றும் போலீஸ் தடுப்புகளால் தடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் அதிவலது குடியரசுக் கட்சியினரின் வழியை எதிரொலித்து, நியூயோர்க் பல்கலைக்கழக (NYU) துணைவேந்தர் லிண்டா ஜி. மில்ஸ், “வெறுப்பு,” “இடையூறு” மற்றும் “அச்சுறுத்தும் கோஷங்கள் மற்றும் பல யூத-விரோத சம்பவங்களால்” தனது சொந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இராணுவமயமாக்கப்பட்ட நியூயோர்க் போலிஸ் துறைக்கு (NYPD) அழைப்பு விடுப்பதை நியாயப்படுத்தினார்.
உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, அதாவது போருக்கு எதிரானவர்களை ‘யூத-எதிர்ப்புவாதிகள்’ என்று குணாம்சப்படுத்துவது ஒரு ஆதாரமற்ற கட்டுக்கதை மற்றும் யதார்த்தத்தை திரித்தல் ஆகும், இது ஓர்வெல்லியன் இரட்டைப் பேச்சை எதிரொலிக்கிறது. “இனப்படுகொலைக்கான எதிர்ப்பை யூத-எதிர்ப்புடன் தவறாக அடையாளம் காண்பது, ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் குற்றகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலக்கு வைப்பது காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை மட்டுமல்ல, அடிப்படையில், இளைஞர்கள் மத்தியிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பரந்த இயக்கம் தோன்றுவதை முன்கூட்டியே தடுப்பதும் வன்முறையாக ஒடுக்குவதற்கு தயாரிப்பு செய்வதுமே இதன் நோக்கமாகும்” என்று உலக சோசலிச வலைத்தளம் (WSWS) எழுதியது.
நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணளவாக 50 மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்களன்று கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன சார்பு முகாமின் பாகமாக இருந்த ஒன்பது மாணவர்கள் செவ்வாய்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு போலிஸ் கோட்டையாக மாற்றப்பட்டிருப்பதாகவும், வளாகத்தில் அனைத்து பிரதான போராட்டங்களையும் ஒழுங்கமைத்திருந்த ஹார்வார்ட் பாலஸ்தீனிய ஒற்றுமை குழு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சு சுதந்திரத்தின் மீதான இத்தகைய அப்பட்டமான தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில், ஒற்றுமை முகாம்கள், ஆக்கிரமிப்புக்கள், எதிர்ப்புக்கள் ஆகியவை கல்லூரி வளாகங்களிலும் தெருக்களிலும் நாடெங்கிலும் தொடர்ந்து வெளிப்படுகின்றன.
சர்வதேச அளவிலும் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எதிர்ப்புக்களை ஆதரித்து இத்தாலியில் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
திங்களன்று, நியூயோர்க் போலிசாரின் ஒடுக்குமுறைக்கு சற்று முன்பு, உலக சோசலிச வலைத் தளமானது நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் (NYU) எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியது. அரசியல் பயிலும் ஜெனிபர், உலக சோசலிச வலைத் தளத்திடம், “அவர்கள் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள். போலீஸ் படையை பயன்படுத்துவது எங்களுக்கு ஒருபோதும் உகந்ததல்ல. இனப்படுகொலைக்கு அரசாங்கம் உடந்தையாகவும் ஆதரவாகவும் இருப்பதே இதற்குக் காரணம். நாம் உத்தியோகபூர்வமாக ஒரு உலகப் போரில் இல்லை, ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது அதனுடன் சமமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மாணவர் இதுபற்றி விவரிக்கையில், “நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் (NYU) நாங்கள் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களுடன் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிற்கிறோம். அமெரிக்கா முழுவதும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நான் என் வாழ்க்கையில் இதற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், கொலம்பியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, இங்கே ஆர்ப்பாட்டத்திற்கு வர விரும்பினேன். இனப்படுகொலை அநீதியானது மற்றும் காஸாவின் நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உலகமே துக்கம் அனுஷ்டிக்கிறது. இதற்கு அமெரிக்காவும் உடந்தையாக இருக்கிறது.”
திங்கட்கிழமை இரவு போலிஸ் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை பிற்பகலில், பல நூறு நியூயோர்க் பல்கலைக்கழக (NYU) மாணவர்களும் ஆசிரியர்களும் வாஷிங்டன் சதுக்க பூங்காவில் இனப்படுகொலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்து நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இணைந்தனர்.
செவ்வாய்கிழமை பிற்பகல் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில், காஸா ஒற்றுமை முகாமில் பங்கேற்ற மாணவர்கள் காலையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 1,000 மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு அவசரமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்தனர்.
கொலம்பியாவில், “காஸா ஒற்றுமை முகாம்” கடந்த வார கைதுகளுக்குப் பின்னர் வளாகத்தில் மட்டுமே பரவியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலம்பியாவில் சர்வதேச விவகாரங்களுக்கான பட்டதாரி மாணவியான கத்தரின், செவ்வாயன்று முகாமில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) குழுவுடன் பேசினார்.
பாலஸ்தீனத்தை அல்லது எந்தவொரு விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களிலிருந்து, நமது மக்களை ஒடுக்கி ஓரங்கட்ட முயலும் இந்த சக்திகளுக்கு எதிராக, தனிமைப்படுத்த முயற்சிக்கும் எவரும் எங்கள் இயக்கத்தால் தோல்வியடைகிறார்கள். ஏனெனில், பாலஸ்தீனம் நமது திசைகாட்டியாக இருப்பதாலும், அது ஒரு விடுதலைப் போராட்டமாக இருப்பதாலும், அனைத்து மக்களினதும் விடுதலையை சாதிப்பதற்கு அது வெல்லப்பட வேண்டிய போராட்டமாக இருக்கிறது. மாறாக அது தனித்து நின்று போராடும் ஒரு போரட்டமல்ல. எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாள வர்க்க மக்களுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்த வளாகத்தில் நாம் பார்த்திராத விதத்தில் மாணவ தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கத் தொடங்குவதை நாங்கள் காண்கிறோம். ... எனவே, குறைந்தபட்சம் இங்கே கொலம்பியாவில் எனது மிகவும் நுண்ணிய சூழலில், பல்கலைக்கழகங்களிலிருந்து தொழிலாளர்களை நிறுத்தி வைக்கும் யோசனையில் நிறைய வேகம் உள்ளது என்று நான் நினைக்கிறேன், இங்குள்ள அனைத்து பணியிடங்களும் செயல்படுகின்றன. அதிகாரப் பகிர்வு, பொது மன்னிப்பு, இடப்பெயர்வை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்ற கோரிக்கைகளை நோக்கி நாம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது முற்றிலும் அவசியமான அதிகார நெம்புகோல்களில் ஒன்றாகும்.
பெயர் வெளியிட விரும்பாத கொலம்பியாவில் உள்ள மற்றொரு மாணவர், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பிடம் பின்வருமாறு கூறினார்:
பாலஸ்தீனப் பிரச்சினை என்று வரும்போது குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சியும் சில வழிகளில் உடந்தையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் பாலஸ்தீனத்திற்குச் சென்றபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனது நண்பர்களில் ஒருவர் (இது ட்டிரம்பின் முதல் தேர்தலுக்குப் பிறகு நான் திரும்பி வந்தபோது) நேர்மையாக, நாங்கள் ஒபாமாவை விட ட்ரம்பை விரும்புகிறோம் என்று கூறினார். நானும் அப்படித்தான் இருந்தேன், நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? அவர், குறைந்தபட்சம் ட்டிரம்ப், என் பேச்சுக்கு மன்னிக்கவும், f*** எங்கள் முகத்துக்கு நேராக எங்களை அவமதிக்கிறான். ஒபாமா நம் முதுகுக்குப் பின்னால் அதைச் செய்கிறான். ... பல ஆண்டுகளாக அவரது கருத்தைப் பற்றி நான் யோசித்தேன், இந்த கட்சிகள் செயல்படும் விதத்திற்கு இது மிகவும் அடையாளமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்த வருடம் நவம்பரில் நான் அமெரிக்காவில் இருந்தால், பைடெனுக்கு வாக்களிக்க மாட்டேன். கொலம்பியாவில் நாம் நேரடியாக கவனித்து வரும் போக்கு இது என்று நான் நம்புகிறேன். நமது தற்போதைய துணைவேந்தராக ஷாபிக் இல்லையென்றால், அது இன்னும் மோசமான ஒருவரால், இன்னும் அதிகமான சியோனிசவாதியால் இட்டு நிரப்பக் கூடும். “இரண்டு தீமைகளில் சிறியது” என்ற வாதமான பைடெனைப் பற்றி மக்கள் சொல்வதை நாம் கேட்கிறோம் என்று நான் நினைக்கிறேன். மக்கள் அதை விரும்புகிறார்கள். “இரண்டு தீமைகளில் சிறியது” என்ற வாதம் இனியும் ஏற்கத்தக்கதல்ல என்பதை மக்கள் உணர நீண்ட காலமாகிவிட்டது என்று நான் கூறுவேன். ஏனெனில், இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே நாம் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்ற உண்மையில், ஒருவித தர்க்கத்தை, ஒருவித ஏற்பை உணர இது நம்மை அனுமதிக்கிறது. வேறு வழியில்லை என்று நம்மை நாமே புரிந்து கொள்ளும் வரை, இரு-கட்சி அமைப்புமுறைக்கு வெளியே நாம் இருக்கத் தொடங்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
கொலம்பியா ஆசிரியர்களின் கணிசமான பகுதிகள் மாணவர்களைப் பாதுகாப்பதில் சக்திவாய்ந்த முறையில் அணிதிரண்டுள்ளன. திங்களன்று, 100 க்கும் அதிகமான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். மேலும் 100 க்கும் அதிகமான கொலம்பியா, பேர்னார்ட் மற்றும் ஆசிரியர் கல்லூரி பீடம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டது:
இந்த நிகழ்வுகளின் முன்னால், நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், வளாகத்தில், குறைந்தபட்சம் பொது இடங்களிலும் அமைதியான எதிர்ப்பில் ஈடுபடவும் முடியும். உங்கள் அரசியல் கருத்துக்களுக்காக அனுமதிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் நிச்சயமாக கவலைப்படக்கூடாது. நீங்கள் பயப்படக்கூடாது, ஏனென்றால் போலீசார் நுழைவாயில்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் எங்கள் வளாகத்திற்குள் நுழையத் தயாராக உள்ளனர்.
செவ்வாயன்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் 18 ஆசிரியர்கள், நியூயோர்க் போலிசாரின் கைதுகளைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்:
வளாகத்திற்குள் பொலிஸை வரவழைக்கும் முடிவு வளாகத்தில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முக்கியமான கோட்பாட்டை மீறுவதாகும். துணைவேந்தர் ஷாபிக் மற்றும் காங்கிரசில் உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அளித்த சாட்சியங்களுடன் இணைந்து, அவர்கள் கல்வித்துறை சுதந்திரத்தின் முக்கிய மதிப்புக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். பொலிஸ் நடவடிக்கை, கல்வித்துறை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை குறைக்க விரும்பும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள சக்திகளிடம் சரணடைவது போல் தெரிகிறது.
“இந்த இடைநீக்கங்கள் மற்றும் வெளியேற்றங்களை உடனடியாக திரும்பப் பெற” பல்கலைக்கழகத்திற்கு அழைப்புவிடுத்த அந்த ஆசிரிய பீடம், “சமூகவியல் துறையின் ஆசிரிய உறுப்பினர்களாக, இந்த மாணவர்களுக்கு எங்களது பாடத்திட்டங்களை நாங்கள் தொடர்ந்து திறந்து வைப்போம், அவர்களின் தேர்வுகள் மற்றும் தாள்களுக்கு நாங்கள் தரம் நிர்ணயிப்போம், மேலும் அவர்கள் நற்பெயரைப் பெறுவதற்காக எங்கள் பாடத்திட்டங்களில் அவர்களுக்கு இறுதி தரங்களை வழங்குவோம்” என்று அறிவித்தது.
செவ்வாயன்று, கொலம்பியாவில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் ஒரு அங்கத்தவரால் வெளியிடப்பட்ட ஒரு காணொளி அறிக்கை, சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை கீழ்கண்டவாறு வலியுறுத்தியது:
இனப்படுகொலைக்கு எதிரான இயக்கம் பகிரங்கமாக ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றாத மட்டத்திற்கு, அது தனிமைப்படுத்தப்பட்டு, அரசியல்ரீதியாக தடம்புரளச் செய்யப்பட்டு, அரச ஒடுக்குமுறைக்கு எளிதான இலக்காக ஆக்கப்பட முடியும்.
ஆகவே நாங்கள் மாணவர்களை வலியுறுத்துகிறோம்: சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புங்கள்! ஆசிரியர்கள், மருத்துவத்துறை, வாகனத்துறை, சரக்கு விநியோகம் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவோம்! ஜனநாயகக் கட்சியின் முதலாளித்துவ அரசியலுடன் முறித்துக் கொள்வோம்!
நாங்கள் தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம்: மாணவர்களின் பாதுகாப்பை முன்னெடுப்போம்! அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் உங்கள் ஒட்டுமொத்த வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதலாகும்.
இனப்படுகொலை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியுடனும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதுடனும் ஒன்றிணைப்பதையே இப்போது ஒவ்வொன்றும் சார்ந்துள்ளது.