World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: இலங்கை

The Socialist Equality Party in Sri Lanka replies to a supporter of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)

கடிதமும் பதிலும்:&ஸீதீsஜீ;

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கு பதிலளிக்கிறது

29 September 2000

Back to screen version

அன்புள்ள ஐயா,

முதலில் நான் என்னை இனங்காட்ட வேண்டும். நான் இலங்கையில் பிறந்தவன். சிங்கள- தமிழ் பெற்றோரை கொண்டவன். எவ்வாறெனினும் நான் என்னை ஒரு சிங்களவனாகவே கருதுகிறேன். ஏனெனில் தமிழ் மொழி அல்லது கலாச்சாரத்தில் எனக்கு வல்லமை கிடையாது.

இனி எனது கடிதத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். நான் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) இலங்கை தேர்தலில் போட்டியிட எடுத்த தீர்மானத்தை அக்கறையோடு வாசித்தேன். உங்களின் பல நிலைப்பாடுகளை நான் மதிக்கின்ற போதிலும் (தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான நிலைப்பாடு சம்பந்தமான ஒளிவுமறைவற்ற நிலைப்பாடு) தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உங்களது நிலைப்பாட்டில் பல முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் உள்ளதையிட்டு கவலை கொண்டுள்ளேன். நான் அதை முடிந்த மட்டும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.

அதை நான் விளக்க அனுமதியுங்கள்.

உங்களது சமீபத்திய கொள்கை விளக்க அறிக்கையில் நீங்கள் தமிழர் தாயகத்தில் இருந்து இலங்கைப் படைகள் நிபந்தனையின்றி வாபஸாக வேண்டும் என வாதிப்பதைக் கண்டேன். இந்த நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் இது நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றியை ஒப்புக் கொள்வதாக விளங்கும் என்பதை ஒத்துக்கொள்ளத் தயங்குவதாகத் தெரிகின்றது. (நீங்கள் ஏன் இதை ஒளித்து மறைக்க வேண்டும் என்பதை நான் அறியேன்)

அத்தகைய ஒரு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றியின் மூலம் விடுதலைப் புலிகளின் சொந்த நிபந்தனைகளுக்கு அமைவான (ஒரு தனியரசின் சாத்தியம் உட்பட) சமாதானம் ஏற்படும். ஏனெனில் படைகளின் நிபந்தனையற்ற வாபசானது தமிழ் பகுதிகளில் சிங்கள ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு ஆபத்தின்மையை குறித்து நிற்கும். ஆதலால் தமிழீழ விடுதலைப் புலிகள் சமரசத்துக்கு போகும் அவசியம் ஏற்படாது.

இதை நீங்கள் (என்னைப் போல்) ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?

உங்களது கொள்கை விளக்க அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு "குட்டி முதலாளித்துவ" இயக்கம் என்ற அடிப்படையில் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சிங்களப் படைகளை வாபஸ் பெற -தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெற்றி- ஆதரவளிப்பதுடன் இதை நீங்கள் எப்படி பொருத்துகிறீர்கள் என நான் தடுமாறுகின்றேன்.

ஒரு சாத்தியம் என் நினைவுக்கு வருகின்றது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றியை நீங்கள் நிஜமாக ஆதரிக்கின்றீர்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு ஆதரவளிப்பதை ஒத்துக்கொள்ள முடியாத சிங்கள பொது மக்களை உங்களில் இருந்து அன்னியப்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, நீங்கள் அக்குழுவை விமர்சனம் செய்யும் 'உபாய' சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மற்றொரு சாத்தியம் என்னவென்றால் ஒரு வெளிப்படையான புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை வகிப்பது இன்றைய தருணத்தில் நீங்கள் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள இலங்கையில் உடல் ரீதியில் ஆபத்தானது.

உங்களது நிலைப்பாடு 'உபாய' மானதாக இல்லாது போய் விடுதலைப் புலிகள் சம்பந்தமான உங்கள் விமர்சனங்கள் நிஜமானதாக இருக்குமிடத்தே எனக்கு பிரச்சினை எழுகின்றது. அந்த விடயத்தில் நான் உங்களிடம் முக்கிய விடயங்களை முன்வைத்தாக வேண்டும்.

எனது கருத்தின்படி அது சிங்கள இனவாதத்தின் ஒரு மெல்லிய வெளிப்பாடாக இடமுண்டு. இதற்கு பல இலங்கை இடதுசாரிக் கட்சிகள் நனவற்ற முறையில் பலியாகியுள்ளது தெரிகிறது.

இது தமிழரின் சுயநிர்ணயத்தை கோட்பாட்டளவில் ஆதரிக்கும் அதே வேளை நடைமுறையில் அதை எதிர்க்கும் பொறியாகும்.

இதை நான் விளக்குகின்றேன். தமிழ் மக்கள் இப்போது சிங்கள இராணுவத்தை கூட தமது தாயகத்தில் இருந்து வெளியேற்ற மிகத் தகமையுடைய அந்த இயக்கத்துக்கு (விடுதலைப் புலிகள்) எதிரான எந்த ஒரு எதிர்ப்பும் தமது முக்கியமானதும் உடனடியானதுமான தேவையாகியுள்ள சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலையை நோக்கி நடைபோடுவதை பலவீனப்படுத்துவதாக அமையும் என தீவிரமாக உணர்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உங்கள் விமர்சனங்கள் ஒரு காட்டுமிராண்டி வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பாகக் பார்ப்பதற்கு எதிரான அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு தடையாக தமிழர்களின் மனங்களில் தோன்றும் சாத்தியம் உள்ளது.

நீங்கள் "ஈழத்தை" அங்கீகரிக்கும் அதே சமயம், தமிழீழ விடுதலைப் புலிகளை அவமானம் செய்யும் திசையில் சித்தாந்த இயந்திரங்கள் செயற்படும் விதத்தில் எண்ணெய் வார்ப்பதும் அதன் மூலம் அவர்களின் போராட்டத்துக்கு குந்தகம் விளைவிப்பதும் (இதேயே நீங்கள் உண்மையில் உங்களது கொள்கை விளக்க அறிக்கையில் செய்துள்ளீர்கள்) தமிழ் மக்களிடத்தில் எதுவித வேறுபாட்டையும் ஏற்படுத்தாது.

வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகளை "குட்டி முதலாளித்துவம்" எனக் கண்டனம் செய்யும் உங்கள் முயற்சிகள் பல வருடங்களாக சிங்களவர்களால் நடாத்தப்படும் அரச வன்முறைக்கு இலக்காகியுள்ள மக்களுக்கு காலபொருத்தமற்றதும், பொருத்தமற்றதாகவும் தோன்றும். இந்த சக்திகளை முன்னர் ஒருபோதும் இல்லாத விதத்தில் பெருமளவில் எதிர்த்து நின்று போராட இறுதியாக ஒரு இராணுவ வல்லமையை அவர்கள் கட்டியெழுப்பிக் கொண்டுள்ளார்கள்.

இதை உணராமல் நீங்கள் சிங்கள இனவாதத்தின் பலமானதும், அசிங்கமானதுமான முக்கியத்துவத்துக்கு பங்களிப்புச் செய்கின்றீர்கள்.

நேர்மையாக சொன்னால் தமிழ் பகுதிகளில் இருந்து சிங்களப் படைகளை வாபஸ் பெறக் கோருவதன் மூலம் நீங்கள் ஏனைய இடதுசாரி கட்சிகளில் இருந்து வேறுபடுகின்றீர்கள். ஆனால் அத்தகைய ஒரு படை வாபசின் பூரண பெறுபேறுகளையும் ஜீரணித்துக்கொள்ள நீங்கள் தயாராக உள்ளதாக நான் எதிர்பார்க்க முடிகின்றது.

தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றியைத் தொடர்ந்து தமது நாட்டை (ஈழம்) ஜனநாயகமய போக்குக்கு இட்டுச் செல்லும் சிரமமான பணிக்கு உள்ளாக நேரிடும் என்பது உண்மை. பல்வேறு பிராந்தியங்களிலும் "இனச் சுத்திகரிப்புகளை" தவிர்க்கும் பொருட்டு சிங்கள சிறீலங்காவுடன் ஈழம் எத்தகைய உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அது தமிழ் தேசிய இனத்தின் தலைமை வெற்றியை நோக்கி வீறுநடை போடுவதை தடைசெய்யும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாது.

எனது கருத்தின்படி சரியானது தலைமையை விமர்சனம் செய்வதில் குறைந்த நேரத்தை செலவிடுவதும், தமது விடுதலைப் போராட்டத்துக்கு கூடிய நேரத்தை செலவிடுவதுமேயாகும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி (தொழிலாளர்கள், முதலாளிகள், பெளத்த பிக்குகள் உட்பட) சிங்களவர்களிடையே ஒரு யுத்த எதிர்ப்பு இயக்கத்தை தூண்டிவிடுவதேயாகும். அமெரிக்காவில் வியட்னாம் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் யுத்த நடவடிக்கைகளை வீழ்ச்சி காணச் செய்தது போல் தமிழ் விடுதலைப் போராட்டத்திலும் செய்ய முடியும்.

உண்மையில் இந்த அமெரிக்க உதாரணத்தில் இது எதிர்விளைவுகளைக் கொண்டுவந்திருக்கலாம். வர்க்க தகவமைவு என்னவாக இருப்பினும் கோஷிமின் தலைமையை களங்கப்படுத்துவது தவறானது. காட்டுமிராண்டி இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவதே உடனடித் தேவையாக இருந்தது.

அதுவும் கூட தமிழ் மக்களின் உடனடித் தேவையாக உள்ளது. அத்தோடு தமிழர்களின் போராட்டம் என்ன வடிவம் எடுக்க வேண்டும்? அதன் தலைவராக யார் விளங்க வேண்டும் என்பதை உத்தரவிடும் சிங்கள உணர்வுகளை தூண்டிவிடுவதை நாம் மதரீதியில் எதிர்த்து நிற்க வேண்டும்.

அதுவும் கூட நாம் எம்மை நம்பிக்கையுடன் விடுவித்துக் கொள்ள முயற்சிக்கும் சிங்கள இனவாதத்தின் ஒரு வெளிப்பாடாகும். நான் ஒரு பதிலை எதிர்பார்க்கின்றேன்.

பின்குறிப்பு- உங்கள் வலைத்தளத்தில் வெளிவரும் இலங்கை பற்றிய விபரங்கள் பெரிதும் ஆழ்ந்த அறிவு கொண்டதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் நான் எண்னுகின்றேன்.

SR.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் பதில்

அன்பின் SR,

முதலில் நான் தங்களின் மின் அஞ்சலுக்கு பதிலளிக்க தாமதித்ததற்காக வருந்துகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்நோக்கு, யுத்தம் தொடர்பான சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக நீங்கள் எழுப்பும் கேள்விகள் தீர்க்கமானவை; நாம் அவற்றுக்கு பதிலிறுக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கின்றோம்.

நீங்கள் குறிப்பிடும் அறிக்கையில் நாம் சுட்டிக்காட்டியுள்ளது போல் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கை ஆயுதப்படைகளை உடனடியாக வாபஸ் பெறும்படி கோருகின்றது. தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்ய நடாத்தப்படும் யுத்தத்துக்கு ஒரு ஆளோ அல்லது ஒரு ரூபாவோ வழங்கப்படக்கூடாது என நாம் வலியுறுத்துகின்றோம். சோ.ச.க.அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைப் (RCL) போலவே சகல வடிவிலான பாகுபாடுகளையும் எதிர்த்து, உறுதியாக பிரச்சாரம் செய்து வந்துள்ளதோடு முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டி சமுதாயத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுநிர்மாணம் செய்வதற்கு அனைத்து தொழிலாளர்களையும் இன, மத, மொழி வேறுபாடு இல்லாமல் ஐக்கியப்படுத்த வேண்டும் என்கிறது.

சோ.ச.க. ஆயுதப்படைகளை வாபஸ் பெறும்படி கோருகின்றது; ஆனால் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு அழைப்பு விடுக்கவில்லை; உண்மையில் அதை விமர்சனம் செய்கின்றது. இதுவே உங்களின் கருத்து வேறுபாடு. நீங்கள் சோ.ச.க.வின் நிலைப்பாட்டை சாத்தியமான "உபாய" காரணங்களின் அடிப்படையில் ஊகிக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் அந்த விமர்சனங்கள் நிஜமானதாக விளங்க வேண்டும் என்பதையிட்டே பெரிதும் அக்கறை காட்டுகின்றீர்கள். நீங்கள் இறுதியாக கூறுவதாவது: "எனது கருத்தின்படி அது சிங்கள இனவாதத்தின் ஒரு மெல்லிய வெளிப்பாடாக விளங்க இடமுண்டு. இதற்கு பல இலங்கை இடதுசாரிக் கட்சிகள் நனவற்ற முறையில் பலியாகியுள்ளது தெரிகிறது. தமிழரின் சுயநிர்ணயத்தை கோட்பாட்டளவில் ஆதரவளிக்கும் அதே சமயம் அதை நடைமுறையில் எதிர்ப்பது இந்த பொறிதான்".

உங்களின் கருத்துக்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எமது விமர்சனத்தில் எந்தவிதமான "உபாயமும்" கிடையாது என்பதை நான் ஊர்ஜிதம் செய்தாக வேண்டும். தாம் சொல்லும் உண்மைகள் உடனடியாக செல்வாக்குப் பெற்றாலும் சரி, பெறாது விட்டாலும் சரி தொழிலாளர் வர்க்கத்துக்கு உண்மையைக் கூறுவது மார்க்சிஸ்டுகளின் ஒரு அடிப்படை கொள்கையாகும். தொழிலாளர்களுக்கு கல்வியறிவூட்டுவதற்கான ஓரே வழி அதுவே. அரசியல் ரீதியில் ஒரு நனவான தொழிலாளர் வர்க்கம் இல்லாமல் சோசலிசம் சாத்தியமாகாது. எமது கட்சி ஆபத்துக்களைப் பற்றி நன்கு அறியும். நாம் சகல வழிகளிலான முன்னோடி விழிப்பு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கடந்த 32 வருட காலமாக எமது வேலைத்திட்டத்துக்காக முன்னெடுத்த திடம் வாய்ந்த பிரச்சாரத்தின் போது எமது அங்கத்தவர்கள் ஒரு கனத்த விலை கொடுக்க நேரிட்டது.

1980களில் ஜே.வி.பி.யின் சோவினிச (இனவெறி) கொள்கைகளை எதிர்த்ததன் காரணமாக மூன்று பு.க.க. அங்கத்தவர்கள் அவர்களால் கொலை செய்யப்பட்டனர். எமது அங்கத்தவர்கள்- தமிழர், சிங்களவர் இரு சாராரும்- யூ.என்.பி. பொதுஜன முன்னணி அரசாங்கப் படைகளின் கொள்கைகளை எதிர்த்ததன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 1998ல் சோ.ச.க. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னியில் கொடுமையான விதத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட எமது நான்கு தோழர்களை விடுதலை செய்ய ஒரு அனைத்துலக பிரச்சார இயக்கத்தை நடாத்தியது.

இந்த பிரச்சார இயக்கம் வெற்றிகரமாக நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையில் நாம் தேசிய சுயநிர்ணயம் பற்றிய விடயத்தை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்திருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தனியான முதலாளித்துவ ஈழம் அரசு கோரிக்கைக்கு நாம் கோட்பாட்டு ரீதியிலேயோ அல்லது நடைமுறை ரீதியிலோ ஆதரவளிக்கவில்லை என்பதை அந்த அறிக்கையில் பூரணமாக தெளிவுபடுத்தியிருந்தோம். இந்த அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தின் (World Socialist Web Site) முதல் பக்கத்தில் "சோசலிச சமத்துவக் கட்சியும் சிறீலங்கா-ஈழம் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டமும்" என்ற தலைப்பில் பிரசித்தி வாய்ந்த விதத்தில் வெளிவந்திருந்தது. இதை நீங்கள் இன்னமும் வாசிக்காது போனால் அதை கவனமாக வாசிக்குமாறு நான் விதந்துரைக்கின்றேன்.

நீங்கள் சோ.ச.க.வை "சிங்கள இனவாதத்தின் மெல்லிய வெளிப்பாடுகளில் ஒன்று" என குற்றம் சாட்டுகிறீர்கள். எவ்வாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிய எமது ஆய்வு இன அடிப்படையிலானது அல்ல; வர்க்க அடிப்படையிலானது. மேலும் "குட்டி முதலாளித்துவம்" என்ற பதத்தினை நாம் எமது அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது இலவசமாக வீசி எறிவதற்கு கையாள்வது இல்லை. ஆனால் அது அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கையின் ஒரு சுருக்க பண்பாக்கமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டம் தொழிலாளர் வர்க்கத்தையோ அல்லது ஒடுக்கப்படும் தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக தமது சொந்த முதலாளித்துவ குட்டி அரசை வேண்டி நிற்கும் தமிழ் மத்தியதர வர்க்கப் பகுதியினரின் நலன்களையே அது பிரதிநிதித்துவம் செய்கின்றது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் பிராந்தியத்தின் வேறு எங்கும் அனைத்துலக மூலதனத்தின் தரகு முதலாளிகளாக (comprador) தம்மை ஸ்தாபிதம் செய்து கொள்வதே அவர்களின் நோக்கமாகும்.

மார்க்சிச இயக்கம் முதலாளித்துவ தேசியவாத தலைவர்களை அவசியமான போது விமர்சனம் செய்யாது இருந்ததே கிடையாது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாகத்தில் இந்தியாவிலும் சீனாவிலும் தேசியவாத தலைவர்கள் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியில் நின்றதோடு வேறுபட்ட இனக்குழு, மதப் பின்னணிகளைக் கொண்ட பரந்த மக்களை ஐக்கியப்படுத்தவும் செய்தனர். அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பும், சில வேளைகளில் சோசலிச வாய்வீச்சுகளும் தொழிலாளர் வர்க்கத்தினதும், விவசாயிகளதும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை சுரண்டிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது எனவும் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதாக அவை விளங்கின எனவும் நாம் எப்போதும் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இந்த இயக்கம் அவர்களது வசதிவாய்ப்புக்கள் நிறைந்த நிலைமைகளுக்கு அச்சுறுத்தலாகும் போது அவர்கள் அதற்கு எதிராக -சில தருணங்களில் காட்டுமிராண்டித்தனமாகவும்- திரும்பினர்.

எவ்வாறெனினும் கடந்த இரண்டு தசாப்தங்களில் பூகோளரீதியில் அணிதிரட்டப்பட்ட மூலதனத்தின் எழுச்சியானது, இந்திய காங்கிரஸ் கட்சி போன்றவை அடிப்படையாகக் கொண்டிருந்த தேசிய பொருளாதார ஒழுங்கமைப்பு வேலைத்திட்டங்களை அடித்தளம் இல்லாது செய்தது. குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் இருந்தும் குளிர் யுத்தத்தின் முடிவில் இருந்தும் இந்தச் சகல இயக்கங்களும் -ஆபிரிக்காவில் ஏ.என்.சீ. (African National Congress) தொடக்கம் மத்திய கிழக்கில் பீ.எல்.ஓ. (Palestine Liberation Organization) வரை -தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு நடிப்புக்களை வேகமாக கைநழுவவிட்டுவிட்டு தமது சொந்த அரசுகளை உருவாக்கும் உடன்படிக்கைகளை செய்து கொள்வதில் ஈடுபட்டனர். அத்தோடு ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களுக்கு தமது "சொந்த" தொழிலாளர் வர்க்கத்தின் மலிவு உழைப்பை வழங்கவும் தயாராகினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு விதிவிலக்கானது அல்ல. இதன் தலைமை தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச வார்த்தை ஜாலங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்தது. 1997-1998ல் ஆசிய பொருளாதார நெருக்கடி, வெடிக்கும் வரையாவது இது 'ஆசியன் புலிகளை' (Asian Tigers) ஒரு சுதந்திர ஈழத்தின் மாதிரியாக வெளிவெளியாக காட்டி வந்தது. மேலும் தமிழ் மக்கள் மீதான தனது பிடியை இறுக்கமாக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அநாகரீகமான இனவாத, வகுப்புவாத, பிரச்சாரங்களில் குதித்தனர். ஆளும் வர்க்கத்தின் அட்டூழியங்களுக்காக இவர்கள் சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் குற்றம் சாட்டினர். இந்தப் பிற்போக்குத் தர்க்கத்தின் பெறுபேறாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள வெகுஜனங்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் எதிரான கண்மூடித்தனமான பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

எமது அறிக்கையில் நாம் பல கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு விடுதலைப் புலிகளை சவால் செய்தோம்: "வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்து ஒரு இரண்டாவது முதலாளித்துவ அரசை இலங்கையில் அமைப்பது சிறீலங்காவிலும் ஈழத்திலும் தமிழர்களும் சிங்களவர்களும் சகவாழ்வு நடாத்தும் பிரச்சினைகளுக்கு ஒரு நிஜமான ஜனநாயக தீர்வுக்கான அடிப்படையை வழங்க முடியுமா? தமிழ் ஈழத்தை சிருஷ்டிப்பது எப்படி அதன் பிரஜைகளில் பெரும்பான்மையானவராக விளங்கும் தமிழ் தொழிலாளர்களும் விவசாயிகளும் முகம் கொடுக்கும் பயங்கரமான சமூகப் பிரச்சினைகளில் இருந்து மீட்சி பெறுவதற்கான அடிப்படையை வழங்கும்? தொழிலாளர் சம்பளம் அதிகரிக்கப்படுமா? உலக வர்த்தக சந்தையில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு அதிகரித்த விலை கிடைக்குமா? வெகுஜனங்களின் சமூக, கலாச்சார மட்டம் உயர்த்தப்படுமா?...

"இந்தக் கேள்விகளை எழுப்புவது எந்தவிதத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் சுயதியாகத்தை நிராகரிப்பது ஆகிவிடாது. எமது நோக்கம் அரசியல் வேலைத்திட்டங்களதும் வர்க்க உறவுகளதும் தர்க்கத்தை சுட்டிக் காட்டுவதேயாகும். மொத்தத்தில் தமிழ் மக்களின் பேரில் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள், அதனது வேலைத்திட்டம், வரலாறு, வர்க்க சேர்க்கை காரணமாக தமிழ் முதலாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் ஆயுதமாகும். அது ஏகாதிபத்தியத்துக்கு கீழ்ப்படிந்ததன் மூலம் அதனுடன் தொடர்புபட்டது".

ஆச்சரியத்துக்கு இடமற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை இதற்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. அது தனது சொந்த அரசை இன்னமும் ஸ்தாபிதம் செய்யாது போனாலும் அந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் தொழிலாளர்களும் விவசாயிகளும் அந்த அரசு எந்த இலட்சணத்தைக் கொண்டிருக்கும் என்பதை அனுபவித்துக் கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் சாதாரண உழைக்கும் மக்கள் மீது சுமைகளைக் கட்டியடிக்கும் அதே வேளை, உள்ளூர் செல்வந்த வர்த்தகர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்படுகின்றது. வன்னியில் எமது தோழர்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டமையானது தமிழீழ விடுதலைப் புலிகள் தனது சகல அரசியல் எதிர்ப்பாளர்களையும் எந்த இலட்சணத்தில் கையாள்கின்றது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். விடுதலைப் புலிகளின் கொள்கைகளை விமர்சிக்கும் சாதாரண தொழிலாளர்கள், கிராமவாசிகளதும் நிலைமையும் இதுவே.

இந்த உண்மைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்ற நொண்டிச் சாட்டைக் கூறி தள்ளுபடி செய்துவிட முடியாது. கொழும்பு அரசாங்கமும் இராணுவமும் தன்னிச்சையான அடக்குமுறைகளுக்கும், ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதற்கும் இதற்குச் சமமான காரணத்தையே காட்டுகின்றது. நெருக்கடி நிலைமையின் போது -யுத்தம் போன்ற தருணங்களில்- ஒரு வேலைத்திட்டத்தின் வர்க்க அடிப்படை அல்லது ஆட்சி பரீட்சைக்கு உள்ளாகிறது; மிகவும் தெளிவாக அம்பலப்படுத்தப்படுகிறது. இது செல்வந்தர்களான ஒரு சிலரின் பேரிலானதா அல்லது பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பேரிலானதா என்பது அம்பலப்படுத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தனது பிடியை கொண்டிருக்க அதிகரித்த அளவிலான ஒடுக்குமுறை விதிமுறைகளில் ஈடுபடுவதானது சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக ஆழம் கண்டு வரும் அதிருப்தியை எடுத்துக் காட்டுகின்றது.

நீங்கள் வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறக் கோரும் எமது அழைப்பை பெரிதும் வழக்காறான முறையில் அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். எமது கொள்கை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தனியான முதலாளித்துவ அரசை ஸ்தாபிதம் செய்வதற்கு துணைபோவதை நோக்கமாகக் கொண்டது அல்ல. ஆனால் மாறாக யுத்தத்துக்கும் இதை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக -சிங்கள, தமிழ் -தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் சுயாதீனமானதும், ஓன்றிணைந்ததுமான இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வேலைத் திட்டத்தின் ஒரு பாகம் மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சியும்- அதற்கு முன்னர் புரட்சிக் கம்யூனிஸ்டுக் கழகமும்- யுத்தத்துக்கு எதிராகவும் அரசாங்கத்தாலும் ஆயுதப் படைகளாலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராகவும் ஆக்ரோசமாக எதிர்ப்புத் தெரிவிக்க தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூற்றுக்கணக்கானவர்கள் "விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக" பெயர் சூட்டப்பட்டு, தடுத்து வைக்கப்படுதல், காணாமல்போதல், சித்திரவதைகள், தமிழ் கிராமவாசிகள் மீதான குண்டுவீச்சுக்கள், தமிழ் மீனவர்கள் கொலை என்பன அந்த அட்டூழியங்களில் சிலவாகும்.

நாம் இன, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளை காக்கவும் சிங்கள சோவினிச கட்சிகளையும், பெளத்த பிக்குகளையும் மற்றும் யுத்த வெறியர்களை எதிர்க்கவும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்யப் போராடுகின்றோம். அத்தகைய ஒரு இயக்கமானது யுத்தத்தை நிதியீட்டம் செய்யப் பயன்படுத்தப்படும் வரிகளுக்கும் மற்றும் பொருளாதாரச் சுமைகளுக்கும் உடனடியாக முடிவுகட்டவும் இராணுவத்தின் பீரங்கிக் குண்டுகளாக சேவை செய்யப் பயன்படும் கட்டாய சேவை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க உடனடியாகக் கோரும் ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்யும். அந்த விதத்தில் தொழிலாளர் வர்க்கம் யுத்தத்தின் பளுவை சுமக்கத் தள்ளப்பட்ட நகர்ப்புற, கிராமப் புற ஏழைகளை- தமிழர் சிங்களவர்- தன்பக்கம் வெற்றி கொள்ள முடியும்.

எமது அறிக்கையில் நாம் சுட்டிக்காட்டியுள்ளது போல்: "யுத்தத்துக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் எதிராக தெற்கில் உள்ள வெகுஜனங்களை அணிதிரட்டப் போராடும் போது சோ.ச.க. தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு, கிழக்கில் அதனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு யுத்தத்துக்கு எதிரான ஒரு தொழிலாளர் வர்க்க தலைமையிலான வெகுஜன இயக்கத்தை சுரண்டிக் கொள்ளும் என்ற வாதத்தினால் எதுவிதத்திலும் தைரியம் இழந்துவிடாது. ஒடுக்கப்படும் சிங்கள, தமிழ் வெகுஜனங்களின் ஐக்கியத்தை பிற்போக்கு சிறீலங்கா அரசின் பிராந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதன் மூலம் எட்டிவிட முடியாது.

"தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டின் பெறுபேறாக யுத்தம் முடிவுக்கு கொணரப்பட வேண்டுமானால் தீவின் வர்க்க சக்தி தீவிரமாக மாற்றம் கண்டாக வேண்டும். உடனடி இராணுவ பெறுபேறுகள் என்னவாக இருந்தாலும் யுத்தத்துக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிகரமான அணிதிரள்வானது சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு அளப்பரிய பெரும் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தவும் தொழிலாளர் வர்க்கத்தினதும் குட்டி முதலாளித்துவ வெகுஜனங்களதும் நகர்ப்புற, கிராமப்புற சிங்கள, தமிழ் மக்களதும் கூட்டை உருவாக்கவும் வேண்டும். யுத்தத்துக்கு ஒரு முடிவுகட்டும்படி நெருக்குவதன் மூலம் தொழிலாள வர்க்கம் தமிழ் வெகுஜனங்களின் விடுதலையின் நிஜ கையாளாகவும் ஒரு மாற்றீட்டு சமூக ஆட்சியின் தலைவனாகவும் துணிந்து இறங்க முடியும்.

"கொழும்பில் ஒரு தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியமானது ஈழத்தினுள் வர்க்க முரண்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு அதை அப்பட்டமாக்கியும் விடும். இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதனது பிரிவினைவாத வேலைத்திட்டத்தையும் அம்பலப்படுத்துவதற்கு பெருமளவு துணைபோகின்றது. தமிழ் தொழிலாளர்கள் தெற்கில் உள்ள தமது வர்க்க சகோதரர்களின் நடவடிக்கையை சிறீலங்கா- ஈழம் சோசலிச ஐக்கிய அரசுகளின் ஸ்தாபிதத்தின் மூலம் அவர்களது ஜனநாயக, வர்க்க அபிலாசைகளை அடைவதற்கான கதவுகளைத் திறக்கும் நடவடிக்கையாக காண்பர். தமிழ் முதலாளி வர்க்கம் அதிகாரத்துக்கும் சொத்துக்குமான தமது சிங்கள போட்டியாளர்களின் அச்சத்தை பகிர்ந்துகொள்ளும். முரண்பாடுகள் பற்றிய எதுவிதமான அச்சமும் இல்லாமல் நாம் அத்தகைய ஒரு நிலைமைகளின் கீழ் வடக்கு, கிழக்கில் ஒரு தமிழ் அரசின் சிருஷ்டியானது ஏகாதிபத்திய ஆதரவையும், சிங்கள முதலாளி வர்க்கத்தின் பெரும் பகுதியினரையும் வெற்றி கொண்ட பிற்போக்கு அணிதிரள்வின் உச்சக்கட்டமாக மாறும்".

மார்க்சிசத்தின் அடிப்படை முன்நோக்கினை நிராகரிப்பவர்கள் -ஆட்சியைக் கைப்பற்ற தொழிலாளர் வர்க்கத்தினை சுயாதீனமாக அணிதிரட்டுவது, சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை புனர்நிர்மாணம் செய்வது- தமிழ், சிங்கள தொழிலாளர் வர்க்கத்தையும், ஒடுக்கப்படும் மக்களையும் ஐக்கியப்படுத்தும் எமது வேலைத்திட்டத்தையும் ஒரு சாத்தியம் இல்லாத கற்பனையாக கணிப்பர். ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் இன்று இல்லாததற்கான காரணம் இலங்கையிலும், அனைத்துலகிலும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் தலைமையுடன் தொடர்புபட்ட ஆழமான வரலாற்றுப் பிரச்சினைகளுடன் பிணைந்து கொண்டுள்ளது.

1940களிலும் 1950களிலும் இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறானது உண்மையில் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் முடியும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அந்தக் காலப்பகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியும் அதற்கு முன்னர் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியும் (BLPI) தனது அணியில் பெரிதும் பலமும் தைரியமும் மிக்க மாரக்சிச புரட்சியாளர்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் தொழிலாளர் வர்க்கத்திடையேயும் ஒடுக்கப்படும் வெகுஜனங்களிடையேயும் -தமிழ் சிங்களவர் இரு சாராரும்- ஒரு பலத்த ஆதரவை பெற்றிருந்தனர்.

1948ல் சுதந்திரத்தின் பின்னர் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி குடியுரிமை சட்டம் அமுல் செய்யப்படுவதை எதிர்த்தது. இச்சட்டம் இலட்சக்கணக்கான தோட்டத்துறை தமிழ் பேசும் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்தது. 1953ல் பொருளாதாரச் சுமைகள் திணிக்கப்படுவதை எதிர்த்து சமசமாஜக் கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. அத்தோடு யூ.என்.பி. அரசாங்கத்தையும் அடிபணியச் செய்தது. இதன் காரணமாக அமைச்சரவை அதனது அவசரக் கூட்டத்தை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற பிரித்தானிய யுத்தக் கப்பலில் நடாத்த நேரிட்டதோடு அரசாங்கம் அதன் கொள்கையை இரத்துச் செய்யவும் நேரிட்டது.

இந்த ஹர்த்தால் முழு அரசியல் அமைப்பையும் ஆட்டிப் படைத்தது. இதன் பின்னர் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் தாம் கிராமப்புற ஏழைகளிடையே ஒரு அடிப்படையை ஏற்படுத்தியுள்ளதாக கூறி பிரித்தானிய எதிர்ப்பு வாயடிப்புகளுடனும் சிங்கள சோவினிசத்துடனும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றனர். லங்கா சமசமாஜக் கட்சி சி.ல.சு.க.வின் சிங்களம் மட்டும் சட்டத்தை 1950பதுகளில் எதிர்த்த போதிலும் அதைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பாராளுமன்ற வேலைத்திட்டத்துக்கும் தேசியவாதத்துக்கும் சி.ல.சு.க.வின் இனவாதத்துக்கும் படிப்படியாக அடிபணிந்து போயிற்று. ல.ச.ச.க.வின் அரசியல் பின்னடிப்பு 1964ல் அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சி.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்துள் நுழைந்து கொண்டதன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியது.

ல.ச.ச.க.வின் நாற்றமெடுப்பு ஆழமான அரசியல் விளைவுகளை கொண்டிருந்தது. ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை கைவிட்டதன் மூலம் ல.ச.ச.க. தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் வெகுஜனங்களையும் இனவாத அரசியலுக்கு ஒரு மாற்றீடு இல்லாத நிலையை சிருஷ்டித்தது. அத்தோடு இனவாத அடிப்படையிலான அமைப்புக்களின்- தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குட்டி முதலாளித்துவ அமைப்புகளதும் தெற்கில் ஜே.வி.பி. போன்ற சிங்கள சோவினிச அமைப்புகளதும்- எழுச்சிக்கும் நேரடியாக பங்களிப்புச் செய்தது.

லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு, மைக்கேல் பப்லோ, ஏர்ணஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாதப் போக்கு நான்காம் அகிலத்தினுள் தலையெடுத்ததுடன் பிணைந்துள்ளது. பப்லோவாதிகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுதிகள் அவை அந்தந்த நாடுகளில் இருந்து கொண்டுள்ள தேசிய அரசியல் சூழ்நிலைகளுக்கு இயைந்து போகவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1953ல் பப்லோ, மண்டேலுடனான பிளவைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பாகமாக இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு மார்க்சிச தலைமையை உருவாக்க 1968ல் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

நீங்கள் உங்களின் மின் அஞ்சலில் "தமது தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவத்தை விரட்டியடிக்க பெரிதும் இலாயக்கான (LTTE) இயக்கத்துக்கு எதிரான எந்த ஒரு எதிர்ப்பும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற முன்நோக்கி நடை போடும் பயணத்தை- அவர்களின் பெரிதும் முக்கியமானதும் உடனடியானதுமான அவசியத்தை பலவீனப்படுத்தும் என்பதை இன்று உணர்ந்து கொண்டுள்ளார்கள்" என கூறுகின்றீர்கள்.

முதலாவதாக நாம் "பெரும்பான்மையான தமிழர்கள்" தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டுள்ளார்கள் அல்லது பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக தனியான ஈழத்தை காண்கிறார்கள் என்ற கருத்துடன் இணங்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் நெருங்கிய ஆதரவாளர்களிடையே கூட அதனது முன்நோக்கு சம்பந்தமாகவும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அது உள்ளூர் வாசிகளை கையாளும் முறை பற்றியும் அத்தோடு பெரும் வல்லரசுகளுடன் அது ஒட்டி உறவாடுவது தொடர்பாகவும் முரண்பாடு வளர்ச்சி கண்டு வருவதை எமது அனுபவ வாயிலாக நாம் காண்கின்றோம்.

ஆனால் மிகவும் அடிப்படையிலான அம்சம் ஒன்று இருந்து கொண்டுள்ளது. எத்தனை தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றார்கள் அல்லது முரண்படுகிறார்கள் என்பதை பொருட்படுத்தாது சோ.ச.க. விடுதலைப் புலிகளின் முன்நோக்கு ஒரு அரசியல் பொறிக்கிடங்காகும் என தொடர்ந்து எச்சரிக்கை செய்கின்றது. சோசலிச அனைத்துலகத்துக்கான தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமே யுத்தத்துக்கு ஒரே முற்போக்கான தீர்வை வழங்கும் என்பதை தமிழ் தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அது தரப்பினருக்கு புரியவைக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த ஒரு எதிர்ப்பும் தமிழர்களின் "உடனடியானதும் முக்கியமானதுமான அவசியங்களுக்கு" குழிபறிக்கும் என்ற உங்களது வாதம் பல சந்தர்ப்பவாதிகள் தலைமுறை தலைமுறையாக மார்க்சிசத்துக்கு எதிராக தொடுத்த தாக்குதலை எதிரொலிக்கிறது. எந்த ஒரு விமர்சனமும் "போராட்டத்தை பலவீனமாக்குகின்றது" அத்தோடு "இயக்கத்தை சிதறிப் போகச் செய்கின்றது." இவை எல்லாம் ஒரு கேள்வியை எழுப்புகின்றது: உண்மையில் தமிழ் மக்களின் நிஜமான அவசியம் என்ன? தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களை எங்கு இட்டுச் செல்லுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கில் உள்ள அரசியல் ஆபத்துகளைப் பற்றி தொழிலாளர் வர்க்கத்தை எச்சரிக்கை செய்யும் பொறுப்பையும் உரிமையையும் கொண்டுள்ளது.

கடந்த நூற்றாண்டின் வரலாறு நீங்கள் சிபார்சு செய்யும் சந்தர்ப்பவாத பாதையில் பயணம் செய்ததால் உருவான விளைவுகளின் உதாரணங்களால் நிறைந்து போயுள்ளது. நான் அதில் இரண்டை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். இலங்கையின் சமீபகால வரலாற்றில் இருந்து ஒன்று. அடுத்தது நீங்கள் பொறுக்கி எடுத்துள்ள வியட்னாமில் இருந்து மற்றொன்று.

1994ல் சந்திரிகா குமாரதுங்க தனது பொதுஜன முன்னணியுடன்- சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய ஒரு கூட்டரசாங்கம்- ஆட்சிக்கு வந்தார். அவர் யுத்தத்துக்கு முடிவு கட்டவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முன்னைய யூ.என்.பி. அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை நீக்கவும் வாக்குறுதியளித்தார். அவரை நவசமசமாஜக் கட்சி உட்பட்ட சகல இடதுசாரி, தீவிரவாதக் கட்சிகளும் அத்தோடு தமிழ் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ கட்சிகளும் ஆதரித்தன. இப்போது குமாரதுங்கவை வன்மையாகச் சாடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர் தெரிவு செய்யப்பட்டதை யூ.என்.பி.க்கு எதிரான ஒரு முற்போக்கு பதிலீடு எனவும் ஆதரித்தது. அத்தோடு 1995ல் அவரின் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அடிப்படையில் அவருடன் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே குமாரதுங்க முற்போக்கான முறையில் யுத்தத்துக்கு முடிவுகட்டவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அல்லது ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்யவும் இலாயக்கற்றவர் என எச்சரிக்கை செய்தது. நீங்கள் சொல்வது போல் "சோ.ச.க. இயக்கத்தை பிளவுபடுத்துகின்றது" என்பன போன்ற பல்வேறு "இடதுசாரி" களின் விமர்சனங்களுக்கும் நாம் இலக்காகினோம். "குமாரதுங்க பூரணமானவராக இல்லாது போனாலும் அவர் தெரிவுசெய்யப்பட்டது ஒரு படி முன்னேற்றமானது"; "அவர் குறைந்த பட்சம் இன்றைய அவசியங்களுக்கு வழி தேடுவார். யுத்தத்துக்கு முடிவு கட்டுவார்" என்றெல்லாம் அவர்கள் வாதிட்டனர். இதை நாகரீகமாகச் சொன்னால்: நாம் இதுபோன்ற வாதங்களை இதற்கு முன்னரும் கேட்டுள்ளோம்.

ஆறு வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. நாம் சரி என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்பது சாத்தியம். ஆனால் மிகவும் முக்கியமான பிரச்சினை இதுவாகும்: ஆனால் குமாரதுங்கவை ஒரு "முற்போக்குவாதி" ஆகவும் ஒரு "ஜனநாயகவாதியாகவும்" சாயம் தீட்டியவர்களின் -விடுதலைப் புலிகள் உட்பட- புறநிலை ரீதியிலான அரசியல் பாத்திரம் என்ன? இவர்களின் ஆதரவு இல்லாமல் குமாரதுங்க ஆட்சிக்கு வரவோ அல்லது அவர் நடாத்தி முடித்தவற்றை அமுல் செய்யவோ- உக்கிரமான யுத்தம் உட்பட- முடிந்திராது. தொழிலாளர்களின் கண்களில் மண் அள்ளி வீசியதன் மூலம் -தமிழ், சிங்கள, தொழிலாளர்கள் இருசாராரதும்- இக்கட்சிகள் எந்த ஒரு வர்க்க மதிப்பீட்டுக்கும் முட்டுக்கட்டை போட்டதோடு அவர்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள், கஷ்டங்களுக்கு தீர்வுகாணப்படுவதையும் தடுத்தன.

வியட்னாம் தொடர்பாகவும் இதே பிரச்சினைகளே தலை நீட்டுகின்றன. வியட்னாமில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கோசிமிங்கின் ஸ்டாலினிச தலைமை ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நடாத்திய உறவுகளை வன்மையாகக் கண்டனம் செய்தது. இதற்கு ஸ்டாலினிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கிச தலைவர்கள் தமது உயிரை அர்ப்பணம் செய்தனர். 1975ல் தேசிய விடுதலை முன்னணி (NLF) அமெரிக்க துருப்புக்களை வாபஸ்பெறச் செய்தும் அது விட்டுச் சென்ற கைக்கூலி ஆட்சியாளர்களை தோற்கடித்தும் இறுதியாக வெற்றிவாகை சூடியது. இதற்கு காரணம் கோசிமின் தலைமையும் மாஸ்கோ, பீகிங்கில் இருந்த அதன் கையாட்களும் அல்ல. இவர்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வியட்னாமிய மக்களின் இழப்புக்களுக்கு ஏகாதிபத்தியத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்.

"என்னதான் அதனது வர்க்க தகவமைவாக இருப்பினும் கோசிமின் தலைமையை களங்கப்படுத்துவது எதிர்விளைவும் தவறானதும்" என நீங்கள் கூறிக்கொள்கின்றீர்கள். இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெறுவதே உடனடித் தேவையாக இருந்தது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகளின் வர்க்கத் தகவமைவானது அமெரிக்காவைத் தோற்கடித்து வெற்றிகண்டதன் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதை நிர்ணயம் செய்தது. வியட்கொங்கின் வெற்றியின் பின்னர் கடந்து சென்றுள்ள 25 வருட காலத்தின் அரசியலதும், "தனிநாட்டில் சோசலிசம்" என்ற ஸ்ராலினிச முன்நோக்கினதும் ஐந்தொகை என்ன? இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து கொண்டுள்ளதை விட படுமோசமான சுரண்டல் நிலைமைகளுக்கு தொழிலாளர்களையும் வறிய விவசாயிகளையும் பலியிடுவதன் மூலம் 1975ல் வியட்னாமில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள் மீண்டும் தமது வங்கி மீதிகளை கொழுக்க வைக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பதிலின் போது நான் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இலங்கையில் தலைவிரித்தாடும் சோகமயமான நிகழ்வுகள் 20ம் நூற்றாண்டின் சிக்கலானதும், தீர்வு காணப்படாததுமான பிரச்சினைகளுடன் எங்ஙனம் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட முயன்றுள்ளேன். உலகம் பூராவும் மனித இனம் முகம் கொடுத்துள்ள பிரத்தியட்சமான அடக்க முடியாத நெருக்கடியையிட்டு அக்கறை காட்டுவோர் இந்தப் பிரச்சினைகளின் வரலாற்று வேர்களை ஆழமாக நோக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்த விடயங்களைப் பற்றிய எந்த ஒரு நேர்மையான ஆய்வும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் தொழிலாளர் வர்க்கத்தில் ஸ்ராலினிசத்துக்கும் தேசியவாத அரசியலுக்கும் எதிராக தொடுக்கப்பட்ட நீண்டதும் சிரமமானதுமான போராட்டத்தை விரிவாக ஆய்வு செய்யும் அவசியத்தை எதிர்கொள்கிறது.

 

 

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved