World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா:பிரித்தானியா

Britain: Labour government bans 21 organisations under new anti-terror laws

பிரித்தானியா: தொழிற் கட்சி அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 21 அமைப்புகளுக்கு தடை

By Mike Ingram
3 March 2001

Back to screen version

பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் ஐக் ஸ்ரோ (Jack Straw) பெப்பிரவரி 19ம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடை செய்யவுள்ள உலகம் பூராவும் உள்ள 21 குழுக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இவற்றில் 16 அமைப்புகள் மத்திய கிழக்கு, துருக்கி, காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளாகும். முஸ்லீம் இயக்கங்களை இலக்கு வைத்துச் செய்யப்பட்டது என்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய உள்நாட்டு அமைச்சர் கிளார்க் வெஸ்ட் மினிஸ்டர் பத்திரிகையாளர் மாகாநாட்டில் பின்வருமாறு தெரிவித்தார்: "இந்த நாட்டின் வாழ்க்கைக்கு முஸ்லீம் சமுதாயம் செய்யும் பங்களிப்பை நாம் பெரிதும் மதிக்கின்றோம். மறுபுறத்தில் அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை தனிமைப்படுத்தவும் தாக்கவும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் நாம் கொண்டுள்ள அமைப்புக்களை பெயர் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

நாம் முஸ்லீம் அமைப்புகளை கூடவோ அல்லது குறையவோ பயங்கரவாத அமைப்புகள் என முன்கூட்டி அனுமானிக்க முடியாது. முஸ்லீம் சமூகத்தினுள் உள்ளோர் இது முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு தாக்குதல் என வாதிடுவோர் இருப்பதை நான் அறிவேன். அது நாம் இன்று வெளியிடும் தீர்மானங்களை முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்வாதால் ஏற்படுவதாகும்."

முஸ்லீம் குழுக்களை தடை செய்வதைப் பற்றியே பெருமளவிலான செய்திகள் வெளிவந்துள்ளன. அமைச்சரால் பெரிதும் சிடுமூஞ்சித்தனமான விதத்தில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு அறிக்கையைப் பற்றி எதுவித கவனமும் செலுத்தப்படவில்லை. பிரித்தானியாவுடன் நேச உறவுகள் கொண்டுள்ள இந்தியா, துருக்கி, அல்லது சவூதி அரேபியா முதலிய நாடுகள் தடை செய்வதற்கு எந்த குழுக்களை தெரிந்து எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக எதுவிதமான செல்வாக்கையும் செலுத்தவில்லை என கிளார்க் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் சில நாடுகள் அவை தடை செய்ய வேண்டும் எனக் கருதும் அமைப்புகள் தொடர்பாக "கருத்துக்களை முன்வைத்ததை" ஒப்புக் கொண்டார். ஆனால் "அதைத் தவிர அவை வேறொன்றையும் செய்யவில்லை" என அவர் வலியுறுத்தினார்.

மேலும் கிளாக் இந்தப் பட்டியல் "வெளிநாட்டுக் கொள்கை நோக்கங்களின் பேரில் உந்தப்பட்டு" தயார் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலை புறநிலை ரீதியாக செய்யும் எந்த ஒரு ஆய்வும் இந்த கடைசி வாதம் ஒரு அர்த்தமற்றது என்பதை நிரூபிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள அமைப்புகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை மத்திய கிழக்கைச் சேர்ந்த அமைப்புகள். ஒசாமா பின் லேடனின் (Osama bin Laden) தலைமையிலான அல் குவாடா இதில் முக்கியமானது. இந்த அமைப்பு 1998ல் நைரோபியிலும் தர்சலாமிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடாத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் பிரதிபலனாக அமெரிக்கா பிரித்தானியாவின் ஆதரவுடன் சூடானிலும் ஆப்கானிஸ்தானிலும் குண்டுத் தாக்குதல்களை நடாத்தியது. 1998ம் ஆண்டின் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த அமைப்பின் ஒரு அங்கத்தவர் அமெரிக்க அரசாங்கத்தின் நாடு கடத்தல் கோரிக்கையை எதிர்த்து போராடி வருகின்றார்.

இந்தப் பட்டியலில் ஒரு சுதந்திர குர்திஷ் அரசை ஸ்தாபிதம் செய்வதை இலக்காகக் கொண்டதும் துருக்கிக்கு எதிராக ஒரு கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுமான குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும் (PKK) உள்ளது. பீ.கே.கே. தலைவரான அப்துல்லா ஒகலன் (Abdullah Ocalan) கென்யாவில் 1999ல் மடக்கிப் பிடிக்கப்பட்டு துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு பொய் வழக்கு விசாரணையில் அவரைத் தூக்கிலிட்டு கொல்லும்படி தீர்ப்பளித்தது. 1999 ஆகஸ்டில் லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான அறிக்கைகள் பிரித்தானிய எஸ்.ஏ.எஸ். (SAS) உடனும் பிரித்தானிய உளவுச் சேவையுடனும் நெருக்கமான உறவுகள் கொண்ட கைக் கூலிகள் ஒகலனின் கொலையை நாடாத்த முன்வந்துள்ளதாக தெரிவித்தது. இந்த டைம்ஸ் அறிக்கையின்படி Aims Ltd இந்தக் கொலையை நடாத்தி முடிக்க துருக்கி அரசிடம் 5.75 மில்லியன் டாலர் கட்டணத்தை வழங்கும்படி கேட்டதாகக் கூறியது. ஒகலனை சமரசம் செய்வதற்கு சிறந்த வழி என்ன என 1995ல் அங்காரா கேட்டதன் பின்னரே இது இடம்பெற்றது.

இந்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் ஐரோப்பிய குழுக்கள் இரண்டு மட்டுமே உள்ளன. பாஸ்க் பிரிவினைவாத ETA இயக்கமும் கிறீக் நவம்பர் 17 புரட்சிகர அமைப்புமே இவை. ஏதன்சில் இருந்த பிரித்தானிய இராணுவ பிரிகேடியர் ஸ்ரீபன் சோண்டர்ஸ் கடந்த யூனில் கொலை செய்யப்பட்டதற்கு இவை பொறுப்பு எனச் சொல்லப்படுகின்றது. அத்தோடு இரண்டு சீக்கிய குழுக்களும் மூன்று காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களும் நான்கு பாலஸ்தீனிய அமைப்புகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

புதிய சட்டம் ஜனநாயக உரிமைகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தாக்குதல்களை கணிசமான முறையில் ஆழமாக்குவதை குறிக்கின்றது. அத்தோடு முதல் தடவையாக வெளிநாட்டில் சொத்துக்களுக்கு எதிராக இடம் பெற்ற நடவடிக்கைகளை அல்லது "தூண்டுதல்களை" உள்ளடக்கும் முறையில் பயங்கரவாதம் பற்றிய வியாக்கியானம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இவை முன்னர் "குற்றவியல் சேதங்கள்" பற்றிய குற்றச்சாட்டுக்களின் கீழேயே வகைப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த சட்டத்தின் வார்த்தைப் பிரயோகம் அரசியல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சட்டத்தின் முதலாவது சரத்து பயங்கரவாதத்தை "ஒரு அரசியல், மத ரீதியான அல்லது சித்தாந்த காரணங்களுக்காக பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் எனக் குறிப்பிடுகின்றது. இது தனியாளுக்கு அல்லது சொத்துக்கு எதிரான பாரதூரமான வன்முறையை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. எந்த ஒரு ஆளினது உயிருக்கு ஆச்சுறுத்தல் விடுப்பது பொதுஜனங்களின் அல்லது பொதுஜனங்களின் ஒரு பகுதியினரின் செளகரியத்துக்கு அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பது." என்பதாகும்.

இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சகல குழுக்களும் பொதுவாக "அரசியல், மத அல்லது சித்தாந்த" காரணங்களுக்காக வக்காலத்து வாங்குவதேயாகும். இவை பிரித்தானிய அரசாங்கமும் அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் பிரமுகர்கள் கும்பல்களதும் நலன்களுக்கு எதிராக கணிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) இப்பட்டியலில் சேர்த்துக் கொண்டமை இதனை நன்கு தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளது. "தமிழ் புலிகள்" இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு தமிழ் அரசினை அமைக்கப் போராடி வருகின்றனர். அங்கு அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு கசப்பான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீப மாத காலங்களில் பிரித்தானிய ஆதரவுடன் கூடிய ஒரு தீர்வை ஏற்படுத்துவது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானியா விடுதலைப் புலிகளை தடை செய்யும் என பயமுறுத்தி வந்துள்ளது. லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய தலைமை அலுவலகத்தை இழுத்து மூடவும் அதனது நிதியுதவிகளுக்கான முக்கிய தளமாக உள்ள அதை வெட்டிவிடவும் அச்சுறுத்தி வந்தது.

இந்தப் பட்டியல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு அது விவாதிக்கப்பட்டு பொதுச் சபை, பிரபுக்கள் சபை இரண்டினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது தொடர்ந்தும் வளர்ச்சி காண முடியாது.

கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் எனப்படுவது பிரித்தானிய ஏகாதிபத்தியம் அயர்லாந்தில் அதனது பிற்போக்கு இலக்குகளை கடைப்பிடிக்கும் அம்சங்களையே முக்கியமாக உள்ளடக்கிக் கொண்டு இருந்தது. இந்தப் புதிய சட்டம், பூகோளம் பூராவும் பிரித்தானிய வெளிநாட்டுக் கொள்கையின் நடு மையமாக விளங்கும். மேலும் உள்நாட்டு அரசியல் தொடர்பாகவும் இச்சட்டம் அரசாங்கத்துக்கு முன்னொரு போதும் இல்லாத அளவிலான அதிகாரங்களை வழங்குகின்றது. இச்சட்டத்தை நேரடி நடவடிக்கையில் இறங்கக் கோரும் எவருக்கும் எதிராகப் பயன்படுத்தலாம். அத்தோடு இச்சட்டம் அத்தியாவசிய சேவைகளில் உள்ள தொழிலாளர் வேலை நிறுத்தங்களையும் தடை செய்கிறது.

இச்சட்டம் பிரித்தானியாவில் உள்ள சிவில் உரிமைகள் அமைப்புகளால் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிரித்தானிய சட்டங்களுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய மனித உரிமைகள் சரத்துக்களையும் இது மீறுகின்றது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved