World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

A Socialist platform for the 2001 Sri Lankan election

2001 இலங்கைத் தேர்தலுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்

Statement by the Socialist Equality Party (Sri Lanka)
23 November 2001

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி, பொதுஜன முன்னணியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் மற்றும் அவர்களின் கூட்டணிப் பங்காளிகளதும் கொள்கைகளின் பெறுபேறுகளாக சாதாரணத் தொழிலாளர்களின் முன் இருந்து கொண்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக பொருளாதார அழிவிற்கு ஒரு சோசலிச தீர்வொன்றை அபிவிருத்தி செய்வதற்காக 24 வேட்பாளர்களுடன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.

இந்த தேர்தலானது ஒரு மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலைமையின் கீழ் இடம்பெறுகின்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான யுத்தம் ஒரு அப்பட்டமான காலனித்துவத்தின் புதிய காலகட்டத்தின் குமுறல் நிலையை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்கா "பயங்கரவாதம் மீதான யுத்தம்" என்ற பம்மாத்தின் கீழ் கஸ்பியன் குடாவின் பாரிய எண்ணெய், எரிவாயு வளங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்வாங்கிப் போகாமல் இருப்பதற்காக பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உட்பட்ட பெரும் வல்லரசுகளும் வளங்களுக்கும், சந்தைகளுக்கும் மற்றும் இலாபத்துக்குமான புதிய போராட்டத்தின் வீரர்களாக தம்மை ஸ்தாபிதம் செய்துகொள்ளும் நோக்கில் தமது துருப்புக்களை நிறுத்தியுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் அரசியல் தொடர்பு சாதனமான உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site) அமெரிக்கா தமது பூகோள ஆதிக்கத்தை பராமரித்துக்கொள்ளும் முயற்சியில் தொடுத்துள்ள யுத்தத்தை சந்தேகத்துக்கு இடமின்றி எதிர்க்கின்றன. கடந்த பத்து வருடங்களுள் மூன்று யுத்தங்கள் தொடுக்கப்பட்டுள்ளன. முதலில் ஈராக்குக்கு எதிராகவும் பின்னர் யூகோஸ்லாவியாவுக்கு எதிராகவும் இப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை ஐ.நா. நிர்வாகத்தின் கீழான பிராந்தியமாக மாற்றுவதற்கான தயாரிப்புகளும் கூட இடம்பெறும் அதே வேளை புதிய இலக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. அமெரிக்க இராணுவத்தினதும் ஆளும் கும்பல்களினதும் ஒரு பகுதியினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் ஈராக் என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். உப ஜனாதிபதி டிக் சென்னி "பயங்கரவாதம் மீதான யுத்தத்தில்" 50 க்கும் மேற்பட்ட அரசுகள் தமது நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கக் கூடும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

19ம் நூற்றாண்டில் மேலாதிக்க சக்திகள் வெள்ளையர்களின் சுமைகளை அகற்றுவதன் பேரிலும் நாகரீகத்தையும் ஒழுங்கையும் "உலகின் பின்தங்கிய மக்களுக்கு" கொண்டு செல்வதாகக் கூறி தமது ஆட்சியைத் திணித்தனர். 1917ல் ரஷ்யப் புரட்சியின் எழுச்சியுடனும் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் தோற்றத்துடனும் அவர்கள் வரையறுக்கப்பட்ட சுதந்திரங்களை வழங்க தள்ளப்பட்டனர். தமது முன்னைய காலனிகளில் இருந்த தமது சகாக்களுக்கு அரசியல் அதிகாரங்களை கையளிக்கத் தள்ளப்பட்டனர். ஒரு காலப்பகுதியில் கெடுபிடி யுத்த அரசியலின் போது பல்வேறு முதலாளித்துவ தேசியவாதிகள் ஒரு புறத்தில் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் மறுபுறத்தில் சோவியத் யூனியனுக்கும் இடையே ஈடாடிக்கொண்டிருக்க முடிந்தது. இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலான சுதந்திரத்தை வழங்கியது. ஆனால் 1991ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் உலகின் பெரும்பகுதி முதலாளித்துவ சுரண்டலுக்காக திறந்துவிடப்பட்டது. அதிலிருந்து 19ம் நூற்றாண்டினதும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியினதும் காலனித்துவத்துவத்தின் உந்து சக்தியாக விளங்கிய மூலப் பொருட்களுக்கும், மூல வளங்களுக்குமான பூகோளரீதியான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தம், இந்திய உபகண்டம் பூராவும் ஒரு தொகை கணிசமான அரசியல் மாற்றங்களுக்கான ஒரு பிரளயமாக உருவாகியுள்ளது. முஷாரப்பின் பாகிஸ்தானிய அரசாங்கம் இந்தியாவுடனான தற்போதைய மோதுதல்களில் இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவுடன் அணிதிரண்டுள்ளது. இந்திய முதலாளித்துவவாதிகள் தம் பங்கிற்கு காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதன் அடிப்படையில் அமெரிக்காவுடன் இணைந்துகொண்டுள்ளதோடு அமெரிக்காவின் அபிலாசைகள் இன்னுமொரு முக்கியத் திருப்பத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. இது "பயங்கரவாதம் மீதான யுத்தத்தை" கடைப்பிடிக்கும் பெயரில், சிறப்பாக காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவை பாகிஸ்தானுக்கு எதிராக தூண்டுவதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக விளங்குகின்றது. இந்த வகையில் துணைக்கண்டத்தில் உள்ள மக்கள் இரண்டு அணுவாயுத சக்திகளுக்கிடையிலான மோதுதல்களின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அத்தோடு இலங்கையிலும் சகல உத்தியோக பூர்வமான அரசியல் அமைப்புகளும் அமெரிக்காவின் பின்னால் அணிதிரண்டுள்ளன. குமாரதுங்க இலங்கை விமானநிலையங்களிலும் துறைமுகங்களிலும் சகல வசதிகளையும் உதவிகளையும் வழங்கிய வேளையில் தனது அரசாங்கம் "பயங்கரவாதத்துக்கு எதிராக உலகை ஐக்கியப்படுத்தும் ஜனாதிபதி புஷ்சினதும் பிரதமர் பிளேயரினதும் முயற்சிகளுக்கு, தமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க விரைவாக செயற்படுவதாக" பெருமைப்பட்டுக்கொண்டார். இதைப்பற்றி பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் இல்லை: ஆலோசனை பெறவுமில்லை.

இலங்கையின் பழைய முதலாளித்துவக் கட்சியான யூ.என்.பி. அதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஏகாதிபத்திய சார்பு கொள்கையைக் கடைப்பிடித்து வந்துள்ளதோடு யுத்தத்துக்கு பொதுஜன முன்னணி அரசாங்கம் வழங்கும் ஆதரவை முழுமையாக ஆதரித்தது. பொதுஜன முன்னணியின் தேர்தல் பங்காளியான ஜே.வி.பி. யுத்தத்தின் பின்னால் அணிதிரளுவதற்காக தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்களை ஒதுக்கித் தள்ளியது. அதே போல் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) "பயங்கரவாத இயக்க சக்தியை பலவீனப்படுத்துவதற்கான திட்டங்களில் அனைத்துலக சமூகத்தினுள் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை முழுமையாக அங்கீகரித்துள்ளது."

லங்கா சமசமாஜக் கட்சி, 60 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ட்ரொட்ஸ்கிச ஸ்தாபகர்களின் தீர்மானங்களில் காலூன்றி நின்று இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது. அன்று பிரித்தானியர்கள் "நாசிசத்துக்கு எதிராக ஜனநாயகத்துக்கான யுத்தம்" எனும் போர்வையில் யுத்தம் தொடுத்த போது, அவர்கள் தமது ஜேர்மனிய போட்டியாளனுக்கு எதிராக காலனித்துவ சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என லங்கா சமசமாஜக் கட்சி தெளிவாக விளக்கியது. இன்று லங்கா சமசமாஜக் கட்சியின் முழு சீரழிவானது மத்திய ஆசியாவினுள் ஒரு புதிய காலனித்துவ ஊடுருவலுக்கான அதனது முழு ஆதரவின் மூலம் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது ஏன்?

டிசம்பர் 5ம் திகதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது "பயங்கரவாதம் மீதான யுத்தத்தின்" ஒரு நேரடிப் பெறுபேறாகும். பெரு வர்த்தகர்கள் சமூகத்தின் சக்திவாய்ந்த பகுதியினர், தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு தள்ளுவதற்கும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான 18 வருடகால யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான வழியை நிர்ணயம் செய்வதற்குமான பாதை திறந்துள்ளது என கருதுகின்றனர்.

ஆனால் பேரினவாத ஜே.வி.பியுடன் பொதுஜன முன்னணியினர் அணிதிரண்டு கொண்டுள்ளமை அத்தகைய ஒரு தீர்வுக்குத் தடையாக விளங்கும் அதே அளவிற்குப் பழை பாராளுமன்ற அமைப்பின் கீழான அரசியல் தீர்விற்கு இடம் கிடையாது என அவர்களுக்கு தெளிவாகி உள்ளது. ஆகையால் கடந்த தேர்தலில் இருந்து ஒரு வருடம் கழிவதற்குள் அரசாங்கம் வீழ்ச்சி காண்பதை உத்தரவாதம் செய்வதற்கு வர்த்தகர்கள் பெருமளவு அரசியல், நிதி வளங்களையும் அதற்காகப் பயன்படுத்தினர்.

யுத்தத்துக்கு ஒரு முடிவைக் காண்பதற்கு இலங்கையின் ஆளும் வட்டாரங்கள் பல்லாயிரக் கணக்கான சிங்களத் தமிழ் குடும்பங்களின் துயரங்களால் உந்தப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக 1983ல் யுத்தம் வெடித்தபோது அவர்கள் யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒரு சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ச்சி கண்ட சமயத்தில் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு இதையொரு உபயோகமான சாதனமாகக் கண்டனர். ஆனால் இன்றைய உள்நாட்டு யுத்தம் அவர்களின் அவசியங்களுடன் மோதிக்கொள்கிறது. அவர்களின் முக்கிய அக்கறைக்குரிய விடயமாக இருப்பது உள்நாட்டு யுத்தம் மதிப்பு வாய்ந்த மூல வளங்களை பொருளாதார மறுசீரமைப்பிலிருந்து திசை திருப்புவதோடு ட்ரான்ஸ் நஷனல் கூட்டுத்தாபனங்களின் ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு மூலமாக இலங்கையை மாற்றும் அவர்களின் முயற்சிகளுடனும் இது மோதிக்கொள்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி (அத்தோடு இதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்டுக் கழகமும்) 1983ல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதை ஈவிரக்கமின்றி எதிர்த்த ஒரே ஒரு அரசியல் கட்சியாக விளங்கியதோடு யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்களுக்கும் எதிராக தமிழ் சிங்கள வெகுஜனங்களின் ஐக்கியத்துக்காக போராடியது. இந்த யுத்தத்தை உத்தியோகபூர்வமான அரசியல் ஸ்தாபனங்களின் ஒரு முற்போக்கு அடிப்படையின் ஊடாக முடிவுக்கு கொண்டு வந்து விடமுடியாது. தொழிலாளர் வர்க்கம் சிங்கள பேரினவாதிகளின் நச்சுத்தனமான சுலோகங்களை நிராகரிக்க வேண்டும். அது இளைஞர்களையும் பெண்களையும் பீரங்கிக் குண்டுகளாக மாற்றவும் தொழிலாளர் வர்க்கத்தின் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயாதீனமான வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதையும் தடுப்பதற்காக செயற்பட்டதாகும். நாம் வடக்குக் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வாபஸ் பெறும்படி கோருகின்றோம். ஏற்கனவே 80,000 உயிர்களைப் பலிகொண்டதும் பல்லாயிரக்கணக்கானோரை சதாகாலமும் முடமாக்கியதும் இலட்சக் கணக்கானோரை தமது வதிவிடங்களில் இருந்து ஓட்டிக் கலைத்ததுமான இந்தப் பிற்போக்கு யுத்தத்துக்கு ஒரு ஆளையோ அல்லது ஒரு ரூபாவையோ வழங்கக் கூடாது என வேண்டுகிறோம்.

இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை மேல்மட்டமாக நோட்டம் விடும் ஒரு பார்வையாளருக்கு பாத்திரங்களில் ஏதோ சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தோன்றலாம். 1994ம் ஆண்டில் பொதுஜன முன்னணி சமாதானத்தின் கட்சியாகக் கூறிக் கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தது. அச்சமயத்தில் யூ.என்.பி. இதை பயங்கரவாதிகளுக்கு வழிவிட்டுக் கொடுப்பதாகவும் ஐக்கிய இலங்கை அரசை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் கண்டனம் செய்தது. எவ்வாறெனினும் நவசமசமாஜக் கட்சி போன்ற அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு முரண்பட்ட விதத்தில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுஜன முன்னணி ஒரு முற்போக்கு மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்யவில்லை எனவும் அதை ஆட்சிக்கு தெரிவு செய்வதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை முன்வைக்கவோ அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடையவோ முடியாது எனவும் வலியுறுத்தியது. இப்பொழுது யூ.என்.பி. பெரு வர்த்தக அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு அக்கறை காட்டும் விதத்திலும் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் விதத்திலும் தமிழ் முஸ்லிம் இனவாதக் கட்சிகளுடன் ஒரு கூட்டினை அமைத்துள்ளது.

இனவாதிகளுடனும் பாசிச ஜே.வி.பி.யுடனும் அணிதிரண்டுள்ள பொதுஜன முன்னணி, யூ.என்.பி. விடுதலைப் புலிகளின் ஒரு தனித்தமிழ் நாடு கோரிக்கைக்கு இனக்கம் தெரிவித்துள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் விடுதலைப் புலி தலைவரை நாட்டின் ஜனாதிபதியாக்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியது. அதே சமயம் குமாரதுங்க தாம் ஐக்கிய அரசை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக உள்ளதாக வலியுறுத்தி வருகின்றார்.

இறுதி ஆய்வுகளில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்களும் பதில் குற்றச்சாட்டுக்களும் ஒரு புறத்தில் பூகோள மூலதனத்தின் முரண்பட்ட நலன்களையும் மறுபுறத்தில் இலங்கை அரசின் அரசியல் அடிப்படையையும் எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளது. பூகோள மூலதனம் மலிவு உழைப்பையும் முதலீட்டு வலயங்களையும் ஒரு உறுதியானதும் கீழ்ப்படிவான அரசாங்கத்தையும் வாய்ப்புகளையும் தேடி அலைகின்றது. இக்கோரிக்கைகள் வடக்கு கிழக்கிலான தொடர்ச்சியான யுத்தத்தினால் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் 18 வருடகால யுத்தமானது ஒரு சக்தி வாய்ந்த சுயநலன்கள் கொண்ட பகுதியினரை உருவாக்கி விட்டுள்ளது. இதில் இராணுவ உயர்தரப்பினர், யுத்தத்தால் இலாப மூட்டை கட்டுவோர், வலதுசாரி சிங்கள பேரினவாத குழுக்கள், பெளத்த பிக்குகள் உட்பட்ட ஒரு பகுதியினரை சிருஷ்டித்து விட்டுள்ளது. இவர்கள் சகலரும் யுத்தம் தொடர்வதையே விரும்புகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இனவாதத்தின் தொடர்ச்சியான பிரார்த்தனையானது பரந்த மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் இட்டு நிரப்புவதற்கான எந்தவொரு கொள்கையையும் கொண்ட எந்த ஒரு கட்சியும் இல்லாத நிலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இனவாரிச் சீட்டை எடுத்து விளையாடும் போது பொதுஜனங்களை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை பராமரிக்கவும் அவர்கள் கையாளுகின்றனர்.

1994ம் ஆண்டில் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு பொதுஜன முன்னணி பிரச்சாரம் செய்ததைக் காட்டிலும் இன்று யூ.என்.பி. அதைவிட ஒரு முற்போக்கு பதிலீடு ஆகிவிடாது. பொதுஜன முன்னணி தனது பிரச்சாரத்தில் மிகவும் உக்கிரமான முறையில் பேரினவாதத்தை தூண்டிவிடும் அதே சமயம் யூ.என்.பி.யும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது ஆட்சி "ஒழுக்கத்தை ஊர்ஜிதம் செய்யும் எனவும்" "சட்டத்தினையும் ஒழுங்கையும்" கடைப்பிடிக்கும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இது அவரது பண்டகசாலையில் இருந்து கொண்டுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் கெட்ட குறிகளில் ஒன்றாகும்.

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொணர்வதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டம்

யுத்தத்தை முடிவுக்குக் கொணர்வதற்கான அதனது வேலைத்திட்டத்தை முன்வைக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு மேலாதிக்கம் கொண்ட அடிப்படைக் கொள்கையினால் வழிநடாத்தப்படுகின்றது: தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் முதலாளித்துவ அரசில் இருந்தும் தனது சுயாதீனத்துக்காகப் போராடும் அவசியம் இருந்து கொண்டுள்ளது. இந்த வழியில் மட்டுமே பல தசாப்த கால இனவாதத்தினதும் பேரினவாதத்தினதும் கசப்பான வழிப் பேற்றுக்களில் இருந்து தலையடுக்க முடியும்.

யுத்தத்துக்கான சகல நிதியீட்டங்களுக்கும் உடனடியாக முடிவு கட்டும்படியும் வடக்கு-கிழக்கில் இருந்து சகல ஸ்ரீலங்கா துருப்புக்களையும் வாபஸ் பெறும்படியும் கோரும் போது சோசலிச சமத்துவக் கட்சி ஒற்றையாட்சி அரசினை ஆயுத பலத்தினால் பராமரிப்பதை எதிர்க்கின்றது. அத்தகைய ஒரு கொள்கையானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதல் மட்டுமன்றி கடந்த 18 ஆண்டுகளும் தெளிவான விதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது போல் இராணுவ வாதத்தின் மேலாதிக்கத்துக்கும் நாடு பூராவும் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதையும் நோக்கி இட்டுச் செல்கின்றது.

ஒற்றையாட்சி அரச முறையை பலாத்காரம் கொண்டு பராமரிப்பதை எதிர்க்கையில் சோ.ச.க. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒரு தனியான முதலாளித்துவ குட்டி அரசுக்கான கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை. இக்கோரிக்கை தமிழ் வெகுஜனங்களின் நலன்களைப் பற்றி அல்லாது ஏனைய தேசிய இயக்கங்களில் உள்ள அதனது சகாக்களைப் போலவே தமிழ் முதலாளி வர்க்கத்தின் நலன்களையே தெளிவாகப் பேசுகின்றது. அது தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுவதற்காக பூகோள மூலதனத்துடனான அதனது சொந்த உறவுகளை ஸ்தாபிதம் செய்து கொள்ளத் துடிக்கின்றது. ஒரு தனிநாடு ஸ்தாபிதம் செய்யப்பட்டு விட்டதாக வைத்துக்கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஈழம் அரசாங்கத்தின் தலைவர்கள் "சுதந்திரத்தின்" மறுநாள் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்தியங்களுள் மலிவு உழைப்பின் அனுகூலங்களை வலியுறுத்தி அனைத்துலக மூலதனச் சந்தைகளுக்கு முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்குவர்.

அவ்வாறே சோ.ச.க. யுத்தத்தை முடிவுக்குக் கொணர்வதற்கான ஒரு அடிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரப் பகிர்வு பொதிகளையும் எதிர்க்கின்றது. அதிகாரப் பகிர்வு என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடைவதற்கான வழியாகிவிடாது. மாறாக இது தீவின் தொழிலாளர் வர்க்கத்தைக் கூட்டாக சுரண்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆளும் தட்டினர் இடையேயான ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடேயாகும்.

அதிகாரப் பகிர்வு என்னதான் வடிவம் எடுத்தாலும் அது இனவாதத்தையும் பேரினவாதத்தையும் தாண்டிச் சென்றுவிடப் போவதில்லை. மாறாக அது அவற்றை ஸ்தாபன ரீதியாக்கிவிடும். இலங்கை தீவை பிராந்தியங்களாகக் கூறுபோடுவதானது இனவாத அடிப்படையில் அரண் செய்யப்பட்ட பிளவுகளை மட்டுமே ஏற்படுத்துவதோடு பிராந்தியங்களுக்கு இடையே மூலவளங்களுக்கான போராட்டங்களையும் ஆரம்பித்து வைக்கும். அத்தோடு சிறுபான்மை சனத்தொகையினருக்கு எதிராக- அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் சரி- பிராந்தியத்தினுள் இனக்குழு சுத்திகரிப்பை ஊக்குவிக்கும்.

சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசுக்காக அத்திவாரம் இடப்பட்ட நாளில் இருந்து ஆளும் வர்க்கம் தனது ஆட்சியை பராமரிப்பதற்கான சாதனமாக இனவாதத்தையும் பேரினவாதத்தையும் தூண்டியது 1948ல் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்ததோடு 1956ல் சிங்களம் மட்டும் சட்டத்தையும் 1972ல் பெளத்த மதத்தை அரச மதமாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தையும் 1983ல் வடக்கு-கிழக்கில் யுத்தத்தையும் தொடுத்தது.

இந்த இழிவான வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கையில் அரசியலமைப்பு மாற்றங்கள் வெகுஜனங்களின் முதுகில் ஏறிக் கொண்டிருந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் கும்பலினாலேயே தீர்மானம் செய்யப்பட்டது. யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொணர்வதற்கான திட்டத்தின் ஒரு பாகமாக எந்த ஒரு அதிகாரப் பகிர்வு பொதியையும் அமுல் செய்வதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் ஒரு உடன்படிக்கை செய்வதும் இதில் இருந்து வேறுபட்டது அல்ல.

அத்தகைய சூழ்ச்சிகளுக்குப் பதிலாக சோ.ச.க. ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதையும் ஜனநாயக உரிமைகளின் காலவதியான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதையும் இலக்காகக் கொண்ட ஒரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையை கூட்ட வேண்டும் என வாதிடுகின்றது. அத்தகைய ஒரு சபையானது சாதாரண உழைக்கும் மக்களுக்காக உழைக்கும் மக்களினால் பகிரங்கமாகவும் ஜனநாயக ரீதியிலும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு நிஜமான ஜனநாயகத்தை திருச்சபையில் (Church) இருந்தும் அரசில் இருந்தும் பிரிக்காமல் ஸ்தாபிதம் செய்வது முடியாத காரியம். இது பெளத்தம் அரச மத அந்தஸ்த்தில் இருப்பதற்கு முடிவு கட்டுவதையும் மத அமைப்புக்களுக்கு வழங்கும் சகலவிதமான அரச மானியங்களையும் இரத்துச் செய்வதையும் கருதுகிறது. இது பல்லாயிரக் கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளை மறுத்த குடியுரிமைச் சட்டம் உட்பட்ட சகல விதமான அடக்குமுறையானதும் பாரபட்சமானதுமான சட்டங்களை இரத்துச் செய்வதைக் குறிக்கின்றது. அத்தோடு இது பொதுஜன பாதுகாப்புச் சட்டம், அவசரகாலச் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றனவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும்.

சோ.ச.க. தனது சோசலிச முன்நோக்கின் ஒரு மிக முக்கியமான ஜனநாயக அங்கமாக ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்டும் கோரிக்கையை முன்வைக்கின்றது. 50 வருடத்துக்கும் மேலான சுதந்திரம் எனப்படுவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஆய்வின் -நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் உள்ளடங்கி இருந்தது- உண்மையை நிரூபித்துள்ளது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிதம் செய்வதும் மட்டுமே ஒரு நிஜமான ஜனநாயகத்தை ஸ்தாபிதம் செய்ய உதவும் என்றது. ஆதலால் சோ.ச.க. இந்தியத் துணைக் கண்டம் பூராவும் அத்தோடு அனைத்துலகிலும் ஒரு சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிதம் செய்யும் போராட்டத்தின் ஒரு ஒன்றிணைந்த பாகமாக ஒரு ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிதம் செய்ய போராடுகின்றது.

ஆழம் கண்டுவரும் பொருளாதார, சமூக நெருக்கடி

இந்தத் தேர்தல் ஏகாதிபத்திய யுத்தமும் பூகோளரீதியான பொருளாதாரப் பின்னடைவும் இடம்பெற்றுள்ள ஒரு நிலைமையின் கீழ் இடம்பெறுகின்றது. இவை இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஏற்கனவே பாரிய தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளன. முக்கிய வெளிநாட்டு அந்நிய செலாவணி உழைப்பாளியாக விளங்கிய ஆடைகளுக்கான ஏற்றுமதிச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுவிட்டன. உற்பத்தி இயலளபில் 50 சதவீதமாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை யுத்தச் செலவீனங்களிலான பெரும் அதிகரிப்பினால் மோசம் கண்டுள்ளது. இது வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடான 50 பில்லியன் ரூபாய்களில் இருந்து 85 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. வடக்கில் ஆயுதப் படைகள் கண்ட பின்னடைவுகள் காரணமாக புதிய ஆயுதங்களின் கொள்வனவினால் இது ஏற்பட்டது.

வெளிநாட்டு செலாவணி கையிருப்புகள் என்றுமில்லாத கீழ் மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் 0.4 வீதமாக வீழ்ச்சி கண்டது. இது மூன்று தசாப்தங்களில் குறைந்த ஒன்றாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச நாணயநிதியம் வரவு செலவு திட்டப் பற்றாக்குறைகளை வெட்டும்படியும் அரசாங்கத் திணைக்களங்களையும் சமூக சேவை வேலைத்திட்டங்களையும் மறுசீரமைப்புச் செய்யும்படியும் ரூபாவை மேலும் மதிப்பிறக்கம் செய்யும்படியும் வேண்டியுள்ளது. இவை தொழிலாளர்கள் கிராமப்புற ஏழைகள் மீது மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமையின் சுமைகளை கட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.

1980களில் யூ.என்.பி. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு, பொதுஜன முன்னணி அரசாங்கத்தால் தொடரப்பட்ட வாழ்க்கைத்தரத்தினை வெட்டுகின்ற நடவடிக்கை முன்னணியில் நின்றுகொண்டுள்ளது. அடிப்படை வர்த்தகப் பண்டங்களின் விலைகள், அடிப்படைச் சேவைகளின் கட்டணங்களுடன் சேர்ந்து அதிகரித்துள்ளது. சமூக நலன்புரிச் சேவை நடவடிக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. சிறப்பாக குறைந்த சம்பளம் பெறுபவர்களின் மெய் ஊதியங்கள் கடந்த தசாப்தம் பூராவும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளன.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கட்டளையிட்ட மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் பெரும் அரசுடமைக் கூட்டுத்தாபனங்களில் பல்லாயிரக் கணக்கானோர் வேலைகளை இழந்தனர். சேவை இழப்பு நஷ்டஈடாக செலுத்தப்பட்ட அற்ப தொகையானது ஒரு சில மாதங்களுக்கான வாழ்க்கைச் செலவுகளுக்கே ஈடுகொடுக்கக் கூடியதாகவிருந்தது. முன்னைய ஊழியர்கள் படுமோசமான வறுமையினுள் தள்ளப்பட்டனர்.

இன்னும் பல இடம்பெறவுள்ளன. அரச வங்கிகளிலும் மத்திய வங்கியிலும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலும் மின்சாரசபையிலும் துறைமுகங்களிலும் தொழில்களை வெட்டித்தள்ளுவதற்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றை அமுல் செய்யவே முயற்சிக்கும். இந்த நடவடிக்கைகளின் அளவினைத் துறைமுகங்களில் கண்டு கொள்ளலாம். அவற்றில் தற்சமயம் 19500 தொழிலாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 14500 பேர் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளனர். இந்தத் தொழில் இழப்புக்கள் இன்றைய தலைமுறைக்கான அதிகரித்த வேலையின்மையை மட்டும் குறித்து நிற்கவில்லை. ஆனால் 20-24 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் 34 வீதமாக இருந்து கொண்டுள்ள ஒரு நிலையில் இளைஞர்களுக்கு எதிர்காலம் மறுக்கப்பட்டுள்ளது.

வறுமை அதிகரித்த வண்ணமுள்ளது. குடும்பங்களில் 40 வீதத்தினர் சமுர்த்தி திட்டத்தின் கீழ் அற்ப மாத அலவன்சான ரூபா 1200 உடன் வாழ்க்கையை ஓட்டத் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பீ.பீ.சி.க்கு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நாட்டின் முழு சிறுவர்களின் சனத்தொகையின் 40 சத வீதத்தினர் போசாக்கின்மையால் வாடுவதை ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுச் சனத் தொகையினதும் சார்பில் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் ஊடாக வென்றெடுத்த நலன்புரிச் சேவைகளில் இடம்பெற்றுள்ள பெருமளவிலான வெட்டுக்கள் கிராமப்புற மக்களை பெரிதும் பாதித்துள்ளன. அவ்வாறே இலவசக் கல்வியையும் இலவச சுகாதார சேவையையும் மறுசீரமைப்பதானது நூற்றுக்கணக்கான கிராமப்புறப் பாடசாலைகளையும் டசின் கணக்கான ஆஸ்பத்திரிகளையும் இழுத்து மூடச் செய்துள்ளது. அதிகரித்தளவிலான போக்குவரத்துச் செலவீனங்கள் ஏழைச்சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதைத் தடுத்துள்ளதுடன் நோயாளிகள் சிகிச்சை பெறுவதையும் முடியாத காரியம் ஆக்கியுள்ளது.

கல்வியும் சுகாதாரமும் தனியார்மயமாக்கப்பட்டமை இந்தச் சேவைகளை பலரின் சக்திக்கு அப்பாற்பட்டவை ஆக்கியுள்ளது. இன்று ஒரு டாக்டரிடம் ஆலோசனை பெறுவதற்கான ஆரம்பச் செலவீனம் ஒரு தொழிலாளியின் இரண்டுநாட் சம்பளத்தை எட்டியுள்ளது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இலவச மருந்துகள் விநியோகம் அடியோடு நின்றுபோயுள்ளது. மருந்துச் சரக்கு உற்பத்திகளின் விலைகள் ஆகாயத்தை தொடுமளவிற்கு உயர்ந்துள்ளன.

அரசி, மரக்கறி, வாழைப்பழ உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள சிறிய விவசாயிகள் உரம், விவசாய இரசாயனப் பொருட்கள், விதை பொருட்கள் மீதான உறமானியங்கள் ஒழிக்கப்பட்டதன் காரணமாக வளர்ச்சி கண்டுவரும் கடன் சுமையிலிருந்து மீள வழியின்றித் தவிக்கின்றனர். இதன் பெறுபேறாக அதிகரித்த எண்ணிக்கையிலான விவசாயிகள் ஜீவனோபாயத்திற்கான வழியின்றித் தவிக்கின்றனர். தமது குழும்பங்களைப் பராமரிப்பதற்கு அவர்களுக்கு மாற்று வருமான வழிகள் இல்லாதுள்ளது.

இவை யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்களும் கடைப்பிடித்த திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நேரடி விளைவுகளாகும். இருப்பினும் இந்த வேலைத்திட்டங்கள் வாழ்க்கைத் தரங்களைக் கடுமையாக வெட்டித் தள்ளிய போதும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. 1994ல் 44,312 பேர் கலந்துகொண்ட 89 வேலைநிறுத்தங்கள் 2000ம் ஆண்டில் 16780 தொழிலாளர்கள் கலந்து கொண்ட 24 வேலைநிறுத்தங்களாக வீழ்ச்சி கண்டது. இதற்கான காரணம் பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது தேவைகளை இட்டு நிரப்பிவிட்டது என நம்புவதனால் அல்ல. இது தொழிற்சங்க தலைமைகளின் சகல தரப்பினர்களதும் -லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி- கோப்பரேட்வாத வேலைத் திட்டத்தில் தங்கியுள்ளது. இவை தொழிலாளர் கோரிக்கைகளை நசுக்குவதற்கு பொறுப்பானவை.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் அமுல் செய்யப்பட்ட சுதந்திர சந்தை வேலைத்திட்டம் சமூக சமத்துவமின்மையை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தேசிய வருமானத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு சனத்தொகையில் 20 சதவீதமான செல்வந்தர்களிடம் செல்கின்றது. அதேசமயம் வறியவர்களான 20 வீதத்தினர் எந்த விதத்திலும் ஒரு ஒழுங்கான வருமானம் இல்லாதுள்ளனர். வெகுஜனங்கள் முகம் கொடுக்கும் பரிதாபமான நிலைமைகளில் ஒன்று தீவுபூராவும் தற்கொலை எண்ணிக்கையிலான துரித அதிகரிப்பாகும். உலகம் பூராவும் சராசரித் தற்கொலை வீதம் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 10-25க்கு இடைப்பட்டதாக இருக்கையில் இலங்கையில் இது அதிர்ச்சி தரும்விதத்தில் ஒரு லட்சத்திற்கு 55க்கும் கூடியதாக உள்ளது. 1950ம் ஆண்டுகளுக்கும் 1960ம் ஆண்டுகளுக்குமிடையே 6472 தற்கொலைகள் இடம்பெற்றதாக அறிக்கை செய்யப்பட்டது. 1990க்கும் 2000 ஆண்டுகளுக்கும் இடையே இது சுமார் 12 மடங்காக அதிகரித்தது -72,064. இந்த துன்பகரமான நிலைமையானது எந்தவொரு பதிலீட்டு அரசியல் முன்னோக்கும் அற்ற ஒரு நிலையில் உருவாகும் தடுமாற்றத்தினதும் ஆழமான அவநம்பிக்கையினதும் ஒரு நேரடி விளைவாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் கொள்கைளையும் ஆதரியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி பொது மக்கள் முன்னுள்ள சகல அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகள் தொடர்பாக உண்மையான ஆய்வுகளையும் ஒரு நிலையான பதிலீட்டையும் முன்வைப்பதில் ஒரு நீண்டதும் கறைபடியாததுமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சோ.ச.க. முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைள் தொடர்பாக மட்டுமல்லாமல், போலி இடதுசாரிகள், குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பற்றியும் விடுத்த எச்சரிக்கைகள் தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் அபிவிருத்தி கண்டுவரும் வர்க்கப் போராட்டங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

சோ.ச.க. பெருமளவில் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களதும் சொந்த சுயாதீன அபிலாசைகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான அவர்களின் சகல பெரும் போராட்டங்களிலும் சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படைக் கொள்கைளில் நின்று பங்குகொண்டுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையாக 1968ல் எமது முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துடன் ஆரம்பமாகிய எமது வரலாறும் போராட்டமும் 33 வருடங்களுக்கும் மேலாக நீண்டதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவனவற்றுக்காக நின்றுவருகின்றது:

*தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியம்

இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு அனைத்துலக வர்க்கத்தின் ஒரு பகுதியினர். கிராமப்புற வெகுஜனங்கள், நகர்ப்புற ஏழைகளுடன் சேர்ந்து அவர்கள் ஒரே விதமான பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியும் வேலையின்மையும் சகல தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் பாதிக்கின்றது. உலகம் பூராவும் தொழிலாளர்கள் ஒரே வர்க்க எதிரியையே -பூகோள ரீதியில் அணிதிரண்ட மூலதனம்- எதிர் கொள்கின்றனர். அது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரை மறு பகுதியினருக்கு எதிராக மோதத் தள்ளுவதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் இலாபத்தை அதிகரிக்கவும் இடைவிடாத யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. வாழ்க்கைத் தரத்துக்கு எதிரான இந்த முடிவற்ற தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த அனைத்துலக மூலோபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தமது சகாக்களுக்கு அளவற்ற ஆதரவை வழங்குவதோடு தமது சொந்தப் போராட்டங்களுக்கு வர்க்க சகோதரர்களதும் சகோதரிகளதும் ஆதரவை தேட வேண்டும். சகல தொழிலாளர்களதும் ஐக்கியத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு அவசியமான முன்நிபந்தனை, சகல வடிவிலான இனவாதம், சோவினிசம், தேசியவாதங்களை நிராகரிப்பதாகும். தொழிலாளர் வர்க்கம் இன, மொழி, மத அல்லது இனக்குழுக்களை பொருட்படுத்தாது சகல தொழிலாளர்களதும் பொருளாதார, ஜனநாயக உரிமைகளை வெற்றி கொள்ள ஓயாது போராட வேண்டும்.

*தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம்

தொழிலாளர் வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் சகல பிரதிநிதிகளிடம் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்தாக வேண்டும். இது தனது வர்க்க நலன்களுக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே இதனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளையும் சிறிய விவசாயிகளையும் சிறிய வியாபாரிகளையும் தன்பக்கம் அணிதிரட்டவும், சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை மீள நிர்மாணம் செய்யும் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலமே சமுதாயத்தை ஒரு சோசலிச வழியில் புனர்நிர்மாணம் செய்ய முடியும்.

*அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான ஊதியம் கொண்ட தொழில்

முதலாளித்துவம் வேலையின்மை கொள்ளை நோய்க்கு முடிவுகட்ட இலாயக்கற்றதாகிவிட்டது. தனியார் கம்பனிகளின் தொடர்ச்சியான மறு சீரமைப்புகள் காரணமாக பழைய தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து தூக்கிவீசப்பட்டு வருகின்றார்கள். இவற்றுடன் அரசுடமை நிறுவனங்களின் தனியார்மயமாக்கமும் கூட்டுத்தாபனமயமாக்கலும் சேர்ந்து கொண்டுள்ளது. இளம் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் பெரிதும் அரிதாகவே உள்ளன. 15-24 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வேலையற்றவர்களாக உள்ளனர். இதன் பெறுபேறாக இவர்களில் பலர் ஆயுதப் படைகளில் சேர்ந்து உயிரிழக்க நேரிட்டுள்ளது; அல்லது முடமாகிப் போக நேரிட்டுள்ளது.

சோ.ச.க. சம்பளத்தில் வெட்டு இல்லாத விதத்தில் வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாகக் குறைப்பதன் மூலம் தொழில்வாய்ப்பை விஸ்தரிக்க பிரேரிக்கின்றது. நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் ஒரு பொது வேலைத் திட்டத்தை வழங்கும் விதத்தில் கோடிக்கணக்கான ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அவசரமாகத் தேவைப்படும் அரசாங்க வீடமைப்பு திட்டங்கள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பெருந்தெருக்கள், நீர்ப்பாசனத் திட்டங்களை -குறிப்பாக யுத்தத்தால் சீரழிந்து போன நாட்டின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்க வேண்டும்.

நாம் சகல வடிவிலான சிறுவர் உழைப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் இளைஞர்களையும், பெண்களையும் இரவு வேலை முறைக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கோருகின்றோம். அவர்களின் வேலை இயலளபை அதிகரிக்கும் பொருட்டு சகல இளைஞர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய தொழில் சார்ந்த பயிற்சிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் வேலைத் திட்டங்களில் வழங்கப்பட வேண்டும். அத்தோடு அவை கலாச்சார, விளையாட்டு வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் வழங்கப்படுவதோடு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். இலவசமானதும் நல்ல கருவிகளையும் ஆளணிகளையும் கொண்ட குழந்தை பராமரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

*உயர்ந்த தரமானதும் இலவசமானதுமான அரசாங்க கல்வி

வரவு செலவுத் திட்டத்தில் செலவுகளை வெட்டிக் குறைக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கட்டளைகளை இட்டு நிரப்பவும் இராணுவ செலவீனங்களை அதிகரிக்கவும் வர்த்தக நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வரி விடுமுறைகளை வழங்கவும் பொதுஜன முன்னணி அரசாங்கம் அரசாங்க கல்வி, சுகாதாரம், நலன்புரி சேவை திட்டங்களை தியாகம் செய்துள்ளது. ஏற்கனவே பலநூறு பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதோடு இலவசக் கல்வி பெறும் வயதை 14 ஆகக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டம் நிறைவேற்றப்படுமிடத்து இன்னும் பல பாடசாலைகள் மூடப்படும். விமர்சன ரீதியான சிந்தனை முறையை உருவாக்குவதற்கு பதிலாக பாடவிதானங்களும், பாடசாலை நூல்களும் இளம் பிள்ளைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை ஊட்டும் விதத்திலும் சிங்கள சோவினிசத்தின் பிற்போக்கு நம்பிக்கைகளை திணிக்கும் வகையிலும் மீள வரையப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் தமது திறமைகளையும் சிருஷ்டி திறனையும் முழுமையாக அபிவிருத்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சோ.ச.க. அரசாங்க கல்வியை சகல துறையிலும் பரந்த அளவில் இலவசமாக வழங்கும்படி கோருகின்றது. அக்கல்வி உயர் தரம் கொண்டதாகவும் பல்கலைக் கழகம் வரையிலும் இலவசமாகவும் கிடைக்க வேண்டும். இன்றுள்ள பாடசாலைகளும் கல்வி நிலையங்களும் விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் கணனி வசதிகளையும் நவீன "ஓடியோ-விசுவல்" கல்வி முறை (Audio-visual system) தொழில் நுட்பம் கொண்டதாகவும் விளங்க வேண்டும்.

*இலவசமானதும் முதல் தரமானதுமான சுகாதார பணிகளும் நலன்புரி சேவை வேலைத்திட்டமும்

வைத்திய விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் மக்கள் பெரிதும் தடை செய்யக் கூடிய நோய்களுக்கு தொடர்ந்தும் பலியாகுவது ஒரு அவமானமாகும். சுகாதார வேலைத்திட்டங்களில் அரசாங்கத்தின் வெட்டுகள் காரணமாக மலேரியா, வாந்திபேதி, கூவக்கட்டு (mumps) போன்ற நோய்கள் நாடு பூராவும் அதிகரித்துள்ளன. ஒரு டாக்டரின் மருந்துச் சிட்டைக்காக 300 ரூபா செலவாகிறது. பல தொழிலாளர்கள் மருந்துகளை வாங்க இலாயக்கற்றவர்களாக உள்ளனர். ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு இருதய சத்திர சிகிச்சைக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஆனால் ரூபா.300.000 வை செலுத்தக் கூடியவர்கள் இதனை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சோ.ச.க. நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் பயிற்சி பெற்ற ஆளணி கொண்டதுமான அரசாங்க ஆஸ்பத்திரிகளையும் சிகிச்சை நிலையங்களையும் அபிவிருத்தி செய்யக் கோருகின்றது. அதன் மூலம் சகலருக்கும் உயர்தரமான சுகாதார சிகிச்சைகள் கிடைக்க வேண்டும். மகளிருக்கு கருக்கலைப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.

1970 72ல் 5.4 மில்லியனாக இருந்த வறியவர்களின் எண்ணிக்கை 1996 97ல் 8.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்க உதவித் திட்டங்கள் தொடர்ச்சியாக வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. தற்கொலை வீதம் ஒரு நாளைக்கு 22 ஆக உள்ளது. இது உலகிலேயே மிகவும் உயர்ந்ததாகும். சோ.ச.க. முதியவர்கள், வேலையற்றவர்கள், நோயாளர்கள், அங்கவீனர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை வழங்கும் பொருட்டு ஓய்வூதியம், வாழ்க்கைப்படிகளுடன் கூடிய ஒரு நலன்புரி சேவை திட்டத்தை விரிவுபடுத்தும்படி கோருகின்றது. அவசியமானவர்களுக்கு உரிய முறையில் கருவிகளும் சாதனங்களும் பொருத்தப்பட்ட முதியோர் இல்லங்கள், மகப்பேற்று நிலையங்களின் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

*சகல குடும்பங்களுக்கும் கண்ணியமான வீட்டுவசதி

பல குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரங்குறைவான வீடுகளில் வசித்து வருகின்றன. வீட்டு வாடகைகள் மக்களில் பெரும்பான்மையானவர்களின் கைக்கு எட்டாதளவுக்கு உயர்ந்துள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் 51 வீதமான சனத் தொகையினர் சேரி வீடுகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் பெரும் வர்த்தகர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு இந்த ஏழை மக்களை சேரிகளில் இருந்து கலைக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கான அவர்களின் தீர்வு அதுவே.

சோ.ச.க. சகல குடும்பங்களுக்கும் அவசியமான சகல வசதிகளையும் கொண்ட தாக்கிப் பிடிக்கக் கூடிய அரசாங்க வீடமைப்புகளை அமைக்கும்படி அழைப்பு விடுக்கின்றது. வாடகைக் கட்டுப்பாட்டு முறை அமுல் செய்யப்படுவதோடு முறைகேடான நிலச்சுவாந்தார்கள் இலாபம் சம்பாதிப்பதைத் தடுக்கவும் வேண்டும். காலியான வீடுகளும் மாடி வீடுகளும் ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான வாடகையில் வழங்கப்பட வேண்டும்.

சிறிய விவசாயிகளின் வாழ்க்கைச் சுமைகளை போக்கு

காணிகளுக்கான அவசியம் நாடுபூராவும் பெரிதும் சிக்கலான பிரச்சினையாக தோன்றியுள்ளது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்களின்படி பெரும்பான்மையான விவசாயிகள் -72 வீதத்தினர்- 1.6 ஹெக்டருக்கும் குறைவான காணிகளையே கொண்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 7 வீதத்தினர் எதுவித காணியும் இல்லாதவர்கள்.

நிலமற்ற சிங்கள ஏழைகள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் சுரண்டிக்கொண்டுள்ளன. இவை வடக்கில் வன்னியிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இடங்களில் வேண்டும் என்றே அவர்களை குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்துகின்றனர். இக் கொள்கை இனவாதப் பதட்ட நிலைமையை உக்கிரமாக்கியுள்ளது. அனைத்து இடங்களில் உள்ள விவசாயிகளும் உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது உற்பத்தி பண்டங்களின் விலைகள் பெருமளவு வீழ்ச்சி காண்பதன் காரணமாக "கத்தரிக்கோல் நெருக்கடிக்குள்" அகப்பட்டுப் போயுள்ளனர்.

சோ.ச.க. இனக்குழுவை கணக்கில் கொள்ளாமல் சகல காணியற்ற விவசாயிகளுக்கும் அரச காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது. வங்கிக் கடன்கள் விவசாய உபகரணங்கள், உரம், இரசாயன திரவியங்கள் ஆகியன சகல ஏழை விவசாயிகளுக்கும் இலகுவான கடன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். கமத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைக்கிடுவது எப்படி

பெரு வர்த்தக நிறுவனங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் இந்த மிதமான யோசனைகள் "யதார்த்தமற்றவை" எனவும் இவற்றை அமுல் செய்யப் பணம் கிடையாது எனவும் கூறலாம். ஆனால் இந்த அத்தியாவசியமான அவசியங்கள் இல்லாமல் சாதாரண பொதுமக்களில் பெரும்பான்மையினர் உயிர் வாழ்வர் என எதிர்பார்ப்பது முற்றிலும் யதார்த்தமற்றதாகும். இவற்றை வழங்குவதற்கான வளங்கள் இருந்து கொண்டுள்ளன. ஆனால் அவை தற்சமயம் ஒரு சில செல்வந்தர்களதும் ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும் கைகளில் சிக்குண்டு போய்க் கிடக்கின்றன.

தனது வேலைத் திட்டத்தை அமுல் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக சோசலிச சமத்துவக் கட்சி யுத்தத்தின் பேரிலான சகல செலவீனங்களையும் நிறுத்தும்படி கோருகின்றது. 18 வருடகால யுத்தத்தின் பொருளாதாரச் செலவீனமானது பழமைவாத ரீதியிலான மதிப்பீட்டின்படி 2.2 ட்ரில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நவீன ஆஸ்பத்திரிகளையும் பாடசாலைகளையும் கட்டவும் கருவிகள் சாதனங்களைப் பொருத்தவும் பல இலட்சக் கணக்கான மக்களுக்கு பெரிதும் அவசியமாகப்படும் பொது வீடமைப்புத் திட்டங்களை அமைக்கவும், மின்சாரம், வடிகாலமைப்புக்களை ஏற்படுத்தவும் சுத்தமான நீரை விநியோகிக்கவும் முடிந்திருக்கும்.

ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கமானது தனியார் செல்வத்தின் கோட்டைகளுக்குள் ஆழமாக ஊடறுத்துச் செல்ல வேண்டியுள்ளது. முழுப் பொருளாதாரமும் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட வேண்டும். ஒரு அற்ப சிறுபான்மையினரின் இலாபங்கள் அல்லாது பெரும்பான்மையினரின் தேவைகளையும் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சமூக முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறெனினும் தனியொரு தேசிய அரசின் எல்லைகளுக்குள் சமூக சோசலிச புனர்நிர்மாணம் சாத்தியமானது அல்ல. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அதிகாரத்துவ ஆட்சிகள் வீழ்ச்சி கண்டமை "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற ஸ்டாலினிச முன்நோக்கின் பிற்போக்கையும் கற்பனை தன்மையையும் நிரூபித்துள்ளது.

இலங்கையில் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் இந்தியத் துணைக் கண்டத்தினதும், உலகம் பூராவும் உள்ளதுமான ஒரு பலம்வாய்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பாகமாக இல்லாது போனால் அது விரைவாக சிதறுண்டு போகும். எனவேதான் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிளைகளான அதனது ஏனைய தோழமைக் கட்சிகளும் எமது அனைத்துலக அரசியல் ஊடகமான உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site) அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்துடன் சோசலிச நனவை புனருத்தாரணம் செய்வதையே தனது அடிப்படையான அரசியல் பணியாகக் கொள்கின்றது. எதிரே வரும் சமூகக் குமுறல்களுக்கு தயார் செய்ய அது பெரிதும் அவசியமாகியுள்ளது.

தமது தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களும், சமூக ஜனநாயக, ஸ்ராலினிச கட்சிகளும் கணிசமான அளவு குழப்பத்தையும் தகவமைவின்மையையும் ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர்களின் பெரிதும் அடிப்படையான உரிமைகளுக்காகப் போராடுவதையும் கூட அவர்கள் புறக்கணித்தனர். சோசலிச இயக்கத்தை மீள நிர்மாணிப்பது என்பது வெறுமனே இன்றுள்ள அதிகாரத்துவத்தை பெரிதும் போர்க்குணம் கொண்ட தலைவர்களால் பதிலீடு செய்யும் ஒரு விடயமாகி விடாது. இது 20ம் நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களில் இருந்து -எல்லாவற்றுக்கும் மேலாக சோவியத் யூனியனின் எழுச்சி, தேக்கம், வீழ்ச்சி பற்றி- அவசியமான படிப்பினைகளைப் பெறுவதை அவசியமாக்கியுள்ளது. தொழிலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்களிடையே ஒரு நிஜமான சோசலிச கலாச்சாரத்தை நனவான முறையில் மீளக் கட்டியெழுப்புவதை அவசியமாக்கியுள்ளது.

எமது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீட்டை உருவாக்க ஆதரவளிக்கும்படி தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள், தொழில்சார் மக்கள், சிறிய விவசாயிகள், வேலையற்றோரை நாம் வேண்டுகின்றோம். எமது வேலைத் திட்டத்துடனும் முன்நோக்குடனும் உடன்பாடு கொண்டவர்களை எமது தேர்தல் பிரச்சார இயக்கத்தில் பங்குகொள்ளும் படியும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை கட்டியெழுப்புமாறும் வேண்டுகின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved