World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : பாகிஸ்தான்

Pakistani leader faces an uncertain future as protests continue

தொடரும் ர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் தலைவர் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு முகம் கொடுக்கின்றார்

By Vilani Peiris
16 October 2001

Back to screen version

அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல், அயல்நாடான ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தும் குண்டுத் தாக்குதல்களுக்கு இராணுவ ஜுண்டாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நேற்று பாகிஸ்தானுக்கு பறந்தார். பேர்வஸ் முஷாரப் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்க குண்டுவீச்சுக்களுக்கு எதிராக பிரதான நகரங்களில் தினமும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் அதே வேளை ஆட்சியிலிருந்து விலகுமாறு கோரும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் எதிர்ப்புக்கு முகம்கொடுத்துள்ளதோடு நூலிழையில் தொங்கிக் கொண்டுள்ளது.

பவல் விஜயம் செய்த அதே தினம் இஸ்லாமியக் குழுக்கள் தேசிய ரீதியிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. பெருந்தொகையான ஆப்கானிஸ்தானிய மக்களை அகதிகளாகக் கொண்ட எல்லைப்புற நகரமான குயூட்டாவில் கடைகள் சந்தைகள் யாவும் அடைக்கப்பட்டிருந்தன. லாஹூரிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததோடு அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான முஷராப்பின் ஆதரவை நிறுத்துமாறு கோரி 4000 ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். ஷாபாஸ் விமானத் தளத்திற்கு அருகில் உள்ள தென்பகுதி நகரமான ஜகோபாபாத்தின் வியாபாரப் பகுதிகளும் மூடப்பட்டிருந்தன.

முதல் நாள் ஜகோபாபாத்தில், அமெரிக்க இராணுவம் விமானத் தளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக விமான நிலையத்துக்குள் நுளைய முயன்ற பல்லாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வன்முறைகளும் மோதல்களும் இடம்பெற்றிருந்தன. கூட்டத்தினர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் ஜமய்ட் உலேமா-இ-இஸ்லாம் (Jamiat Ulema-i-Islam-JUI) மற்றும் ஜமய்ட்-இ-இஸ்லாமி (Jamaat-i-Islami-JI) இயக்கங்களின் உள்ளூர் அலுவலகங்களில் பாய்ந்து விழுந்த பொலிசார், நான்கு தலைவர்கள் உட்பட மேலும் 200 காரியாளர்களை தடுப்புக் காவலில் வைத்தனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற பலத்த பொலிஸ் தாக்குதல்களின் பெறுபேறாக குறைந்த பட்சம் நால்வர் கொல்லப்பட்ட போதிலும் பாகிஸ்தான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. எதிர்ப்பை சமாளிப்பதற்காக மூன்று இஸ்லாமிய குழுக்களின் தலைவர்களையும் வீட்டு காவலில் வைக்குமாறு ஜுன்டா உத்தரவிட்டது. அக்டோபர் 7ம் திகதி பேஷவார் பிரதேச மதத் தலைவரான மெளலானா சமய் உல் ஹக் மற்றும் ஒரு சுன்ணி முஸ்லிம் குழுவான சிப் ஈ சாபாவின் (Sipeh e Sahaba) தலைவரான மெளலானா அஸாம் டரிகி ஆகியோரைத் தடுத்து வைத்ததை அடுத்து ஜமய்ட் உல்மா-ஈ-இஸ்லாம் (Jamait Ulema-i-Islam) தலைவர் பசுல் அர் ரஹமானும் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் மற்றுமோர் ஜே.யூ.ஐ தலைவரான மவுலானா அட்டா உர் ரஹ்மான், அமெரிக்காவை குற்றம் சாட்டியதோடு முஷாரப் அரசாங்கத்துக்கு எதிராக இராணுவம் உள்ளிட்ட ஒரு "தேசிய கிளர்ச்சிக்கு" அழைப்பு விடுத்தார். "பாகிஸ்தான் இராணுவத்துக்கு மக்களே சம்பளம் கொடுக்கின்றார்கள். ஆகவே அவர்கள் அமெரிக்க பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக திரும்பவேண்டும்" என அவர் கூறினார்.

இவை அனைத்தும் முஷாரப் அரசாங்கம் முன் உள்ள அரசியல் குழப்ப நிலையை சுட்டிக் காட்டுகின்றது. வாஷிங்டன் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கா மீதான தாக்குதலைத் தொடர்ந்து முஷாரப் ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு முன்னர் வழங்கி வந்த ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு நெருக்கியது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பலம் வாய்ந்த உளவு சேவையான உள்ளக உளவு சேவை (Inter Service Intelligence-ISI) தலிபானுடனும் அதேபோல் இப்போது அரசாங்க விரோத மற்றும் அமெரிக்க விரோத ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யும் ஜே.யூ.ஐ. உட்பட ஏனைய இஸ்லாமிய குழுக்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த அதே வேளை தற்போது ஜே.யூ.ஐ.யும் ஏனைய இஸ்லாமிய குழுக்களும் அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்கின்றன.

கடந்த வாரம் முஷாரப், இராணுவத்துக்குள் தமக்குள்ள ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பிரதான ஜெனரல்களான ஐ.எஸ்.எஸ். தலைவர் முகமட் அகமதையும் உப தலைவர் முகாபர் உஸ்மானியையும் பதவி விலகுமாறு நெருக்கினார். லாஹூர் இராணுவ கமாண்டரான மற்றொரு பிரதம தலைவர் முகமத் அசீர் பதவி விலக்கப்பட்டு வேறொரு பதவிக்கு மாற்றப்பட்டார். இந்த மூவரும் தலிபான் ஆதரவாளர்கள் என சொல்லப்படுகிறது. 1999 அக்டோபரில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வெளியேற்றுவதில் முஷாரப்பின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

முஷாரப் அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் தொடருமாயின் இந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்குமென அஞ்சுகிறார். "பயங்கரவாதத்துக்கு எதிரான புஷ்சின் யுத்தத்துக்கு முண்டு கொடுக்கும் அதே சமயம் இராணுவ நடவடிக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென இடைவிடாது கோருகிறார். அமெரிக்கா தனது இலக்கை அடைவதற்கான சிறந்த வழி தலிபான் தலைவர் முல்லா ஒமாரை கொல்வதே என பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டதாக நேற்று சீ.பி.எஸ்.சும் இன்று யூ.எஸ்.ஏ.யும் தெரிவித்தன. முஷாரப் இதை பகிரங்கமாக மறுத்துள்ளார். ஏனெனில் இந்த முயற்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் எண்ணெய் வார்க்கும் என அவர் நன்கறிவார்.

பவலின் விஜயம் முஷாரப் அரசாங்கத்தை மேலும் அழுத்தத்துக்குள் தள்ளும். பிரித்தானிய "டைம்ஸ்" பத்திரிகை, ஐ.எஸ்.ஐ தலிபான் பற்றியும் அதேபோல் பின் லேடனையும் அவரது அல்குவாடா இயக்கத்தைப் பற்றியும் விபரமான செய்திகளை வழங்க தவறியதையிட்டு அமெரிக்க இராணுவமும் ரகசிய புலனாய்வு பிரிவுகளின் தலைவர்களும் பெரிதும் விரக்தியுற்றுள்ளதாக அறிவித்தது. மேலதிக உளவு நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் கோரிக்கையானது இராணுவ ஆட்சிக்குள் பிளவுகளை மாத்திரமே ஆழமாக்கும்.

பவலுக்கு காபுலில் அமெரிக்கா நிறுவவுள்ள அரசாங்கத்தின் மாதிரியைப் பற்றி கலந்துரையாடுவது அவசியமாகியுள்ளதாக தொடர்பு சாதனங்கள் தெரிவிக்கின்றன. முஷாரப் அமெரிக்க, பிரித்தானிய, இராணுவப் பிரச்சாரங்களோடு கூட்டாக செயற்படும் எதிர்க் கட்சியான வடக்கு கூட்டணியுடன் அணிதிரள்வதற்கு எதிராக அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் பகிரங்கமாக எச்சரிக்கை செய்தார். பாகிஸ்தான் ஏழு ஆண்டுகளாக ரஷ்யா, ஈரான், போன்ற நாடுகளாலும் இஸ்லாமாபாத்தின் பரம எதிரியான இந்தியாவாலும் ஆதரிக்கப்பட்டு வந்த வடக்குக் கூட்டணிக்கு எதிராக தலிபானை ஆதரித்து வந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத ஜெனரல் ஒருவர் கார்டியன் பத்திரிகையுடன் பேசுகையில், பாகிஸ்தான் தலைவர் வடக்குக் கூட்டணி அரசாங்கம் ஒன்றுக்கான எந்த ஒரு திட்டத்தையும் ஏற்றுக் கொண்டால் அது "ஜெனரல் முஷாரப்புக்கு கிடைத்துவரும் எந்த வகையிலான ஆதரவையும் சிதைத்து விடும்" எனக் குறிப்பிட்டார்.

பவலும் முஷராப்பும் கலந்துரையாடவுள்ள மற்றுமொரு விடயமான "காஷமீர் பிரச்சினையும்" கூட குமுறல் நிலையில் இருந்து கொண்டுள்ளது. புஷ் இந்தப் போட்டிக்குரிய பிரதேசம் மீதான இராணுவ முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கொன்டலிசா ரைஸ், தாமும், புஷ்சும் பவலும் "காஷ்மீரிலான கிளர்ச்சிகளை தவிர்த்துக் கொள்வதன்" முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்திய, பாகிஸ்தானிய தலைவர்களை தொடர்பு கொண்டதாக அறிவித்தார். "இதை தினிக்க ஒரு தொகை இராஜதந்திர கட்டமைப்பு இருந்து கொண்டுள்ளதாக" அவர் தெரிவித்தார்.

ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தணியச்செய்யும் வாஷிங்டனின் அனைத்து முயற்சிகளுக்கும் பதிலாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கக் குண்டுத் தாக்குதல் காஷமீரினுள்ளும், இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலும் பதட்ட நிலையை அதிகரிக்கச் செய்துள்ளது. முஷாரப் இந்தப் பிரச்சினைக்குரிய பிராந்தியம் தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு உதவுமாறு அமெரிக்காவுக்கு அழைப்புவிடுத்த அதே வேளை இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளில் இருந்து விலகிக் கொண்ட இந்தியா, காஷ்மீர் அரசுகள் தொடர்பான பிரச்சினை ஒரு அனைத்துலகப் பிரச்சினை அல்ல என தனது பாரம்பரிய வலியுறுத்தல்களைத் தொடர்ந்தது.

புதுடில்லி வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான நெருங்கிய உறவு இந்தியாவுக்கு எதிராக செயற்படும் எனவும் எண்ணியது. இந்தியா காஷ்மீரில் தமது நலன்களைப் பாதுகாக்கும் என்பதை சுட்டிக் காட்டும் வகையில், பவல் இஸ்லாமாபாத்தில் இறங்கிய அதே தினம், இந்திய இராணுவம் பாகிஸ்தான் நிலைகள் மீது சரமாரியானத் தாக்குதல்களைத் தொடுத்தது. பாகிஸ்தான் அறிக்கைகளின்படி இந்தியத் துருப்புக்களின் 40 நிமிட மோட்டார் மற்றும் ஏவுகனைத் தாக்குதல்களால் குறைந்தபட்சம் ஒரு பெண் கொல்லப்பட்டதோடு மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். புதுடில்லி இந்த இராணுவ நடவடிக்கை இந்தியக் கட்டுப்பாட்டிலான ஜம்மு-காஷ்மீரினுள் காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்கள் நடத்திய தக்குதல்களோடு தொடர்புபட்டது எனக் குறிப்பிட்டது.

பவலின் விஜயம், நிலைமையை தனிப்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்புகள் இந்தியத் துணைக்கண்டத்தை ஒரு குமுறல் நிலைக்குள் இட்டுச் சென்றுள்ளதை கோடிட்டுக் காட்டுவதற்கே துணைபோயுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved