World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:கணனி தொழில்நுட்பம்

Internet privacy threatened following terrorist attacks on US

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலான தாக்குதல்களைத் தொடர்ந்து இணையத்தின் அந்தரங்கத் தன்மைக்கு அச்சுறுத்தல்

By Mike Ingram
24 September 2001

Back to screen version

ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு மேலான பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இணையப் பயன்படுத்துனரின் அந்தரங்கத் தன்மைக்கான அனைத்து பாதுகாப்புக்களையும் அகற்றப் போகின்றன.

செப்டம்பர் குண்டு வெடிப்பு நடந்து இரு நாட்களுள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் செனட் சபை "2001ம் ஆண்டு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சட்டத்தை" ஒருமனதாக அங்கீகரித்தது. இந்தச் சட்டம் அரசாங்கத்தின் வர்த்தக, நீதி மற்றும் அரசுத்துறைகளுக்கான வருடாந்த செலவீனங்களுக்கான நிதியூட்டும் மசோதாவின் இறுதியில் இணைக்கப்பட்டிருந்தது. இது குறிப்பிட்ட சூழ்நிலைமைகளின் கீழ் 48 மணி நேர காலப்பகுதிகளுக்கு நீதிபதிகளின் அங்கீகாரம் இன்றி வழக்குத் தொடுப்பவர்களுக்கு கவனக் கண்காணிப்பு அதிகாரம் வழங்க வழி வகுக்கின்றது.

உட்டா (Utah) வைச் சேர்ந்த குடியரசுக்கட்சி ஆளான ஒறின் ஹட்ச் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி ஆளான டயானா ஃபென்ஸ்ரீனாலும் இது முன்மொழியப்பட்டது. இவ்விரு ஒத்திசைவான நடவடிக்கை, எந்த ஒரு ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அல்லது எந்த ஒரு அமெரிக்க மாநிலத்தின் அமைச்சரவையின் சட்டத்துறை உறுப்பினர் மத்திய புலனாய்வுத் துறையின் (FBI யின்) சர்ச்சைக்குரிய "காணிவோ" ("Carnivore") மின் அஞ்சல் கண்காணிப்பு அமைப்பைப் பொறுத்து கட்டளையிட முடியும் என வரையறுக்கின்றது. இது காணிவோரை மற்றும் இணைய கண்கானிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த எல்லைக் குட்படுத்தல்களை பயனற்றவை ஆக்கி உள்ளது. "ஐக்கிய அரசுகளின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு உடனடி அச்சுறுத்தல், பொது மக்களின் சுகாதாரத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல், அல்லது பாதுகாக்கப்பட்ட கணினியின் வாய்மைக்கு அல்லது எளிதில் கிடைக்கக் கூடிய தன்மைக்குத் தாக்குதல் என்பன உட்பட்ட சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் கட்டளை தேவை இல்லை.

எழுத்து வடிவில் உள்ளனவற்றைப் பிறர் அறியாது ஆக்கும் தொழில் நுட்பம் (Encription technology) தடை செய்யப்பட வேண்டும் அல்லது அரசாங்க ஆட்சி வட்டாரங்களுக்குச் செய்திகளை மறை மொழியில் இருந்து விடுவிப்பதற்கான ஏதுகளை வழங்க வேண்டும் என்று மீண்டும் அழைப்புகள் விடப்பட்டு வரும் நிலையில், மேலும் சட்டங்கள் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இரு மிகப்பெரிய இணைய சேவை தயாரிப்பாளர்களாகிய அமெரிக்கா ஒன் லைன் மற்றும் ஏர்த் லிங் (America Online (AOL) and Earthlink) ஆகியவை செப்டம்பர்11 குண்டு வெடிப்புகளைச் செய்தவர்களைக் கண்டு பிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படைகளுடன் ஒத்துழைத்து வருகின்றன. 50 லட்சம் சந்தாதாரர்களையும் மற்றும் தொலைபேசியைச் சுழற்றி தொடர்பு கொள்ளும் 8,800 முனைகளையும் ஐக்கிய அமெரிக்காவில் பரவலாகக் கொண்டுள்ள ஏர்த் லிங்கிற்கு, தாக்குதல் நடந்த நாள் அன்று நீதிமன்ற ஆணைப்பத்திரம் கொடுக்கப்பட்டது. அதன் பேச்சாளர் டொன் கிரீன்பீல்ட் தனது கம்பெனி, "ஏற்பட்ட பெரும் இடரின் நிலைமையின் கீழ் மத்திய புலனாய்வுத் துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றது" என்றார். "அது ஒரு திட்டவட்டமான கோரிக்கை. அவர்கள் ஒற்றுக் கேட்கும் சாதனங்ளைப் பொருத்தப் போவதில்லை" என்றார் அவர்.

அதற்கு நீதிமன்ற ஆணைப்பத்திரம் கொடுக்கப்பட்டதை அடுத்து அரசாங்க அதிகாரிகளுடன் அது ஒத்துழைத்து வருவதாகவும் காணிவோரைப் பொருத்திக் கொள்ளும்படி அது கோரப்படவில்லை என்றும் AOL கூறியுள்ளது. அதன் பேச்சாளரான நிக்கொலாஸ் கிரஹாம் கூறுகையில் AOL காணிவோ போன்ற அமைப்பொன்றை செயற்படுத்தாது என்றார். "நாம் நமது கருவித் தொகுதிகளுக்குள் நுழைய அல்லது நமது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த விடுவதில்லை. சட்டத்தை அமுல்படுத்தத் தேவைப்படும் தகவல்களை அளிக்க நமக்கு ஒரு வழி உண்டு, அதை நாமே செய்கின்றோம்" என்று கிரஹாம் கூறினார். AOL இன் உறுப்பினர்கள் எண்ணிக்கை அண்மையில் 310 லட்சம் கணக்குகளையும் தாண்டி உள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் இதில் 70 லட்சம் கணக்குகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய சட்டம் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள இணைய பயன்படுத்தாளர்களைப் பற்றிய பிரமாண்டமான அளவு தகவல்களைப் பெற பாதுகாப்புச் சேவைகளுக்கு வழிவகை செய்துள்ளது. சில இணைய சேவை வழங்குனர்கள் இணையத்திற்கு வருகைகள் பற்றிய கோப்புக்களை அழித்துவிட வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளனர். இவை அனுப்பப்பட்ட பின்னர் அஞ்சல்களைப் பற்றிய விவரங்கள், விஜயம் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் Yahoo and Google போன்ற பிரபல்யமான தேடல் கருவிகளில் பதியப்படும் சொற்றொகுதிகளை இணையத்தில் இருக்கும்பொழுதே பதிவு செய்து கொள்ளுகின்றன. சில இணைய சேவை வழங்குநர்கள் ஒரு மின்அஞ்சலை பின்நோக்கி ஒரு குறிப்பிட்ட பயன்படுத்துனருக்குப் பின் தேடிச் சென்று அவருடைய இணையக் கணக்கின் தகவல்களைப் பெற முடியும். இந்தத் தகவல்கள் மூலம் இணையப் பயன்படுத்துனர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் கடன் அட்டைகளின் விபரங்களைப் பெற முடியும்.

இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers) வழக்கமாக பிரம்மாண்டமான தகவல்களை வைத்திருத்தலுக்கு எதிர் விளைவாக, அநாமதேய முறையில் இணையத்தில் மேய மற்றும் மின் அஞ்சல் செய்ய வகை செய்ய உருவமைக்கப்பட்ட பல வலைத்தள சேவைகள் தோன்றியுள்ளன. அப்படியான சேவைகளுள் ஒன்றுதான் மக்னஸ்நெட் (MagusNet). அது தனது பயன்படுத்துநர்களை, அவர்களின் வேண்டுகோள்களை தொடராக அநேக வலைப்பரிமாறிகளினூடாக (Web Server) வழி நடத்தி எடுத்துச் சென்று விஜயம் செய்ய வேண்டிய வலைத்தளங்களில் கொண்டு போய் விடுகின்றது. மக்னஸ்நெட்டைப் பயன்படுத்துபவர்கள் Yahoo அல்லது Hotmail போன்ற இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மின் அஞ்சல் சேவைகளுக்கு விஜயம் செய்து செய்திகளை அனுப்ப முடியும். இப்படி அனுப்பப்படும் செய்திகள் அவற்றை அனுப்பியவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

மக்னஸ்நெட்டை ஆரம்பித்த ஜோன் பிரான்சுவாஸ், தான் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் சாத்தியக் கூறுகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாக, செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலை அடுத்து உடனடியாக அச்சேவையை மூடினார். அவர் ஃபொஸ்டன் குளோப் பத்திரிகைக்கு பேசுகையில், "நான் எதிர்பார்க்கும் ஆரம்ப எதிர்வினை என்னவென்றால் அநாமதேய சேவை வழங்குநர்களுக்கு எதிரான ஒரு பின் தாக்கத்தையே ஆகும்" என்றார்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் செனட் சபையின் குறுகிய வட்டத்தினுள் கூட, புதிய சட்டத்தின் செயற்பரப்பு வேறு வழியின் அச்சத்தை ஊட்டியது. வியாழக்கிழமை செனட் சபையில் நடந்த விவாதத்தின் பொழுது, நீதிக்குழுவின் தலைவர் செனட்டர் பற்றிக் லேசி (ஜனநாயகக் கட்சி), இச்சட்டம் பயங்கரவாதத்தை வெறுமனே தடுப்பதையும் கடந்து, வெகுதூரம் செல்கின்றது. அது அமெரிக்கர்களின் வாழ்க்கை அந்தரங்கத்தை அபாயத்திற்குள்ளாக்குகின்றது என்றார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சட்டத்தைப் பற்றி, செனட் சபையில் விவாதம் நடத்த ஆரம்பிப்பதற்கு ஆக 30 நிமிடங்களுக்கு முன்னரே அவரால் வாசிக்க முடிந்தது என்று சுட்டிக் காட்டினார்." நமது குடி மக்களின் மின்னிழைத் தொடர்புகளை ஒற்றுக் கேட்க புதிய சட்ட ஆற்றல்களைப் பெற முன்னேற செனட்சபை விரும்புகின்றது போலும். அவர்கள் மக்களின் கணினிகளுக்குள் உட்புக புதிய ஆற்றல்களைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் போலும். இவை நம்மை மேலும் பாதுகாப்பு உள்ளவர்களாக உணரவைக்கக்க கூடும்; அப்படியும் இருக்க முடியும். பயங்கரவாதிகள் செய்தது நமது பாதுகாப்பைச் சிறிது குறைத்திருக்கக் கூடும். இந்த நாட்டில் அவர்கள் பெரிய சகோதரரை (அரச கண்காணிப்பை) அதிகரித்திருக்கக் கூடும்."

இச்சட்டத்தைப் பிரேரித்தவர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜொன்கைல், பல வருடங்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநரான லூயிஸ் பிரீச் கோரிவந்தவற்றை இது வழங்குவதாக அமையும் என்றார். "இவை போன்றவற்றைத்தான் சட்டத்தைச் செயற்படுத்துபவர்கள் கோரி வந்துள்ளார்கள். நாம் இப்பொழுது துன்புற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இந்தச் சேர்க்கை சார்பு ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது."

இப்பொழுது முன்வைக்கப்படும் செயல் முறைகள் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் ஏற்பட்ட துயர் நிறைந்த சம்பவங்களைத் தந்திருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இதற்குப் பதிலாக, இச்சட்ட மசோதா நிலவும் திகில் சூழலைப் பயன்படுத்தி, ஐக்கிய அமெரிக்கக் குடிமக்களுக்கு அரசியல் சட்டம் மூலம் உத்தரவாதம் செய்யப்பட்டனவற்றை கீழறுக்க, ஏன் அகற்றக்கூட நீண்டகாலமாக இருந்து வந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முனைகின்றது.

கிளின்டன் நிர்வாகம் மறைமொழி (Encryption) தொழில் நுட்பத்தைச் சட்ட விரோதமாக்க அல்லது கடுமையாக மட்டுப்படுத்த பலமுயற்சிகளை ஏற்கனவே செய்திருந்தது. மிகவும் பரவலாக அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்டுவரும் பொது திறவுகோல் மறைமொழி மென்பொருளான பிரிட்டி குட் பிரைவேசியை (Pretty Good Privacy [PGP] ) ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இருந்து ஏற்றுமதி செய்ய வருடக் கணக்கில் தடை செய்யப்பட்டிருந்தது. அதை ஆக்கியோரான பிலிப் சிம்மமான் மத்திய புலனாய்வுத் துறையின் நீடித்த விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார். ஏனென்றால் அவர் அந்த மென்பொருளில், அரசாங்க பாதுகாப்புச் சேவைகள் மறைமொழியாக்கம் செய்யப்பட்ட அஞ்சலை அடையக் கூடியதாகப் பின்கதவொன்றை அந்த மென்பொருளில் உட்சேர்க்க மறுத்து வந்தார்.

இணையத்தின் மூலம் வணிகம் செய்தல் வருகை தந்ததுடன், மறைமொழி ஆக்கம் செய்வதை (Encryption) ஒருதலைப்பட்சமாக ஐக்கிய அமெரிக்க அரசுகள் எதிர்க்க முடியவில்லை. அதேபோல பூகோள ரீதியாக அரசாங்கக் கண்கானிப்பிற்காக பின்கதவைக் கொண்ட மறைமொழியாக்க மென்பொருள்களின் மீதான தடையைக் கோரும் கோரிக்கைகளை மையப்படுத்திய முயற்சிகளும் அதன் பின்னர் முடியாமற் போயின.

அதே நேரத்தில் கிளின்டன் நிர்வாகம் "கிளிப்பர் நுண்துகள்" (Clipper Chip) என்றழைக்கப்படும் மறைமொழியாக்கம் செய்யும் சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. இது தகவல்களைத் தாறுமாறாக ஒழுங்கற்ற முறையாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் இடையிட்டுப் பெற்றுக் கொண்ட கிளிப்பர் மறைமொழியாக்கம் செய்யப்பட்ட தொடர்புகொள்ளல்களை மறைமொழியில் இருந்து விடுவிக்க வகை செய்கின்றது. குடி மக்களின் சுதந்திரங்களுக்கு மேல் இதனால் ஏற்படக்கூடிய விளைபயன்களைப் பற்றி பகிரங்க எதிர்ப்பு வெடித்ததை அடுத்து, நிர்வாகம் உற்பத்தியாளர்களை கிளிப்பரின் ஆற்றல் கொண்ட சாதனங்களை உற்பத்தி செய்ய உடன்படவைக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டது.

புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்தின் மேலான யுத்தத்தின் கட்டாயத்தின் காரணமாக ஏற்பட்ட அசாதாரணமான நடவடிக்கைகள் என்பதிலும் பார்க்க, மிக அண்மையில் நிறைவேறிய சட்டமானது, தலைமையில் உள்ள நாடுகள் சுதந்திரமாகக் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யும் மேடையாக இணையம் இருப்பதை வெட்டிக் குறைக்க ஒன்றுபட்டுத் தொடுத்த முயற்சியின் உச்சக் கட்டம்தான் இச்சட்டமாகும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் இணையத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்குக் கூறப்பட்ட நியாயப்படுத்தல், பூகோளமயத்திற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களை, ஏற்பாடுகளை சியாட்டிலிலும் ஜெனோவாவிலும் ஒழுங்கமைப்பதில் இணையம் வகித்த பங்காக இருந்தது.

இந்த வருடம் மே மாதத்தில் சிலிகொம். கொம் என்ற தொழில் நுட்ப வலைதளம் "அந்தரங்கத்தை அவதூறு செய்யும் சூழ்ச்சித் தகவல் சட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன" என்ற தலைப்பின் கீழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஐரோப்பாவின், தகவல்களின் அந்தரங்கத்தைக் காக்கும் சட்டங்களுக்கு எதிராக பிரான்சின், ஜேர்மனியின் மற்றும் பிரிட்டனின் அரசாங்கங்களின் ஒன்றிணைந்த தாக்குதல் சம்பந்தமான ஸ்டேட் வாட்ச் (Statewatch) குழு பெற்றிருந்த பத்திரங்கள் பக்கம் கவனத்தைச் செலுத்தும்படி இக்கட்டுரை கூறியது.

தொலைபேசி, மின் அஞ்சல், தொலை படி (Fax) மற்றும் இணையத் தொடர்பு கொள்ளல்களின் தகவல்களை ஏழாண்டுகள் வரை பேணி வைக்க அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சபை அதன் ஆதரவை அளிப்பதை இப்பத்திரங்கள் வெளிப்படுத்துகின்றன. இதன்மூலம் சட்டத்தைப் பயன்படுத்தும் முகவாண்மை அமைப்புக்களுக்கு குற்ற நடவடிக்கைகளைத் தேடித் தூண்டில் போட்டு எடுக்க ஆற்றலை வழங்குகின்றன" என்று அக்கட்டுரை கூறுகின்றது.

"இணைய சேவை வழங்குநர்கள் இணையம் மூலம் செல்லும் தகவல்களை அழித்து அவற்றை அநாமதேயமாக்க வேண்டிய பொறுப்பு 'பாரிய அளவில்' குற்றவியல் புலன் விசாரணைகளுக்குத் "தடைகளை" ஏற்படுத்துகின்றன என்று முன்வைக்கப்பட்டுள்ள பத்திரத்தின் வரைவு கூறுகின்றது. அது ஐரோப்பிய ஆணையத்தை, சட்டத்தைச் செயற்படுத்தும் முகவாண்மை அமைப்புகள் தகவல்களை அடைய "உடனடி நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று அழைப்பை விடுக்கின்றது என்று சிலிக்கொம்.கொம் மேலும் கூறுகின்றது.

இக்கட்டுரையின்படி இந்தத் திட்டம், 1995-ம் ஆண்டில் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையுடன் அட்லாண்டிக் பெருங்கடல் கடந்த இடைமறித்துப் பெறும் உடன்பாட்டின் (Trans-Atlantic interception agreement) காலத்தில் இருந்து உள்ளது. "1998-ல் என் ஃவோபோல் சட்டத்தில் (Enfopol legislation) இணையத்தையும் உள்ளடக்கிக்கொள்ள எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. இது தனிப்பட்ட ஒவ்வொரு நாட்டையும் பிரிட்டனின் "புலனாய்வு அதிகாரங்களை வரையறுக்கும் சட்டம் (Regulation of Investigatory Powers -RIP-) போன்ற அதன் சொந்த இடைமறிப்புச் சட்டங்களை உருவாக்க வழி வகுத்து விட்டது."

இணையத்தில் ஒற்றுப் பார்க்க உலகிலேயே மிகவும் முன்னேறிய ஆற்றல்கள் சிலவற்றை பிரிட்டனுக்கு, புலனாய்வு அதிகாரங்களை வரையறுக்கும் சட்டம் வழங்கியுள்ளது. இச்சட்டத்தின்படி இணைய சேவை வழங்குநர்கள் "கறுப்புப் பெட்டி" என்று அழைக்கப்படும் சாதனத்தைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது. இது கம்பெனியின் வழங்கிகளில் (Servers) ஓம்பப்பட்ட (Hosted) மின் அஞ்சல்களின் செய்திகளைப் பார்க்கும் உரிமையைப் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்குகின்றது. இந்தக் கறுப்புப் பெட்டி நூற்றுக்கண்க்கான கோடி பவுண்டுகளில் கட்டப்பட்ட புதிய அரசாங்கத் தொழில் நுட்ப மையத்திற்குப் பாதுகாப்பான வழிப்பாதைகள் மூலம் தகவல்களை மாற்றி அனுப்பமுடியும்.

புலனாய்வு அதிகாரங்களை வரையறுக்கும் சட்டம், இடைமறிக்கப்பட்ட மின்-அஞ்சல் உரிமையாளர்களிடமிருந்து மறைமொழியில் உள்ள செய்திகளை வாசிக்க வேண்டிய மென்பொருள் திறவுகோலை மற்றும் அடையாளச் சொல்லைத் (PassWord) தம்மிடம் கொடுக்கும்படி கட்டளையிட பொலீசிற்கு அதிகாரம் வழங்குகின்றது. அப்படிச் செய்ய மறுக்கும் பட்சத்தில் அது இரு வருடங்கள் அளவு சிறைத் தண்டனையில் முடியக்கூடும். அப்படியான கோரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர் என்று மூன்றாவது நபருக்குக் கூறுவது ஐந்து வருட சிறைத் தண்டனையைப் பெற்றுத்தரும்.

கடந்த வாரம் பிரிட்டிஷ் இணைய சேவை வழங்குநர்களை, அவர்களது வாடிக்கையாளர்களின் தொடர்புத் தகவல்கள் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்குத் தேவைப்படலாம் என்பதினால் அவற்றைப் பேணி வைத்திருக்கும்படி தேசிய உயர் தொழில் நுட்பக் குற்றவியல் பகுதி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வேண்டுகோள் செப்டம்பர் 11-ம் தேதிக்குப் பின்னர் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மின் அஞ்சல்களின் நாள்விவரக் குறிப்புக்களை மட்டும் குறிப்பிடுகின்றது. அத்தோடு இக் கோரிக்கை சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இணைய சேவை வழங்குநர்கள் இவற்றைக் கொடுக்க மறுப்பாளர்களாயின், புலனாய்வு அதிகாரங்களை வரையறுக்கும் சட்டம் வழங்கும் அதிகாரங்கள் அப்பொழுது செயலுக்குக் கொண்டு வரப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி எந்த ஒரு மின் அஞ்சலின் உள்ளடக்கங்களையும் பார்க்க விடும்படி கோரமுடியும்.

குடிமக்களின் சுதந்திரங்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளச் செய்ய அவர்களைப் பதப்படுத்துவதில் பரந்துபட்ட ஊடகமும் ஒரு தீர்க்கமான பங்கை வகித்து வருகின்றது. அட்டாவதானமாக இருக்க வேண்டும் என்று அழைப்புவிடும் அதே நேரத்தில், அவர்கள் கடும் முனைப்பான நடவடிக்கைகள் தேவை என்ற பிரகடனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்கின்றார்கள். அவர்கள் தனிநபர்களின் அந்தரங்க உரிமைகள் பேணப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர்களையும் முழு ஜனத்திரளையும் பார்த்து, யுத்த காலத்தில் சிறிதளவு சுதந்திரம் தியாகம் செய்யப்பட வேண்டும் என்ற அக்கறை ஒரு பக்கத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசுகின்றார்கள்.

இதை வெட்கமின்றி பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை கருத்துத் தெரிவிக்கையில், "கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றைய இக்கால இயக்கங்கள் உள்ளன... பொது வாழ்வின் முன்னணியில் உள்ள மனித உரிமைகளின் வழக்குரைஞர்களின் பின்வாங்கல் ஒன்று. யுத்த மனநிலையில் உள்ள அமெரிக்கா, அதன் எதிரிகளின் சுதந்திரங்களுக்கு அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றி அன்பாதரவான அக்கறையுடன் எந்தவித உறவும் வைத்திருக்க முடியாது. மற்றையது நண்பர்களுக்கு மற்றும் சேவைகளுக்கு உடனடி மின்தொடர்பு கொள்ளும் சாதாரண அமெரிக்கர்களின் சுதந்திரத்துடன் தலையீடு செய்யப்படுவது. இதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இணையத்தில்தான் பயங்கரவாதத்த தாக்குதல் ஒருமுகப் படுத்தப்பட்டது என்று வலியுறுத்திய அந்தப் பத்திரிகை தொடருகையில், "பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அதன் உறுதிபூணலை ஈடேற்றுவதில் முனைப்பாக வாஷிங்டன் இருக்குமாயின், அது மறைமொழியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) செய்திகளை இணைய சேவை வழங்குநர்கள் அனுப்ப அனுமதிப்பதைத் தடுக்க வேண்டும்.... அப்படி ஏற்று நடக்க மறுக்கும் எந்த ஒரு இணைய சேவை வழங்குநர்களினதும் சேவையை மூடிவிட வேண்டும்" என்றது.

ஆளும் வர்க்கத்தினுள், இணையத்தைப் பயன்படுத்துவதற்கு சார்பு ரீதியாகக் கட்டுப்பாடுகள் இல்லாது இருப்பது பற்றி ஆளும் வர்க்கத்தினுள் புரையோடிப் போய் இருக்கும் முற்று முழுதான குரோதத்தை பத்திரிகை வெளிப்படுத்துகையில்: "அன்னிய பிரதேசங்களில் இதை ஏற்றுச் செயற்படாத இணைய சேவை வழங்குநர்கள் தமது கட்டிடங்கள், தேடி அழிக்கும் ஏவுகணைகளால் அழிக்கப்படும் என்பதை எதிர்பார்க்க வேண்டும். அமெரிக்கர்களைக் கொல்லுவதில் இணையமும் சிக்கி உள்ளது என்றதன் பின், அதன் உன்னதமான நாட்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்று கருத வேண்டும்." எனக் கூறுகின்றது


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved