World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Bush "peace initiative" prepares ground for wider war against Arab masses
புஷ்ஷின் ''சமாதான முன்னெடுப்பு'' அரபு மக்களுக்கு எதிரான பரந்த யுத்தத்திற்கு அடித்தளமிடுகின்றது
By Barry Grey
6 April 2002

Back to screen version

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இன் ''சமாதான முன்னெடுப்பு'' என அழைக்கப்படுவது மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்காவின் அடிப்படை கொள்கைகளில் எவ்வித மாற்றத்தையும் பிரதிபலிக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை அவரது றோஸ் தோட்டத்தில் (Rose Garden) எதிர்வரும் வாரத்தில் அரபு பிரதேசங்களுக்கு வெளிநாட்டு அமைச்சரான கொலின் பெளலின் விஜயத்தை அறிவித்த தனது உரையில் இஸ்ரேலிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திலும் நடக்கும் இரத்த ஓட்டத்திற்கு பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவரான யாசீர் அரபாத்தை பொறுப்பாக்கி காட்டினார்.

இஸ்ரேலிய டாங்கிகளாலும், துப்பாக்கி கப்பல்களாலும், படையினராலும் பாலஸ்தீன நகரங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளபோதிலும், மற்றும் இஸ்ரேலிய படைகள் அரபாத்தின் றமல்லா நகரத்திலுள்ள தலைமையகத்தை தொடர்ந்தும் முற்றுகையிட்டுள்ள நிலைமையினுள்ளும் ''அவர் (அரபாத்) உள்ள நிலைமை கூடியளவு அவராலேயே உருவாக்கப்பட்டதாகும்'' என புஷ் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனியர்களை 40 வருடங்களாக ஒடுக்கும் இஸ்ரேலிய பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதமும், நிதியுதவியும் வழங்கியும் வரும் ஒரு அரசாங்கத்தின் தலைவர் ''தான் தலைமை தாங்குவதாக குறிப்பிடும் மக்களின் நம்பிக்கைகளை காட்டிக்கொடுத்துவிட்டதாக'' அரபாத்தை குற்றம்சாட்டுகின்றார்.

புஷ் இன் நிர்வாகம் மத்திய கிழக்கின் நெருக்கடியில் முக்கியமாக மூன்று காரணங்களுக்காக தலையிட்டுள்ளது:

முதலாவதாக, இ்ஸ்ரேலிய அரசாங்கத்திற்கான கால அவகாசத்தை வழங்குவதும், பாலஸ்தீன அதிகாரத்தின் மீதும், பாலஸ்தீன மக்கள் மீதானதுமான அதிகரித்துவரும் அதன் தாக்குதல்களுக்கு ஒரு அரசால் முகமூடியை வழங்குவது.

இரண்டாவதாக, புஷ்ஷின் முன்னாள் கைவிடுதல் நிலைப்பாட்டால் உருவாகிய அரசியல் வெற்றிடத்தால், இப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் ஐரோப்பாவின் ஆதிக்கத்தை கவனிப்பதாகும். புஷ் உரைநிகழ்த்திய அதேநாள் முக்கிய ஐரோப்பிய தூதுவரான ஸ்பெயின் நாட்டின் வெளிநாட்டு அமைச்சரான Josep Piqué உம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைதலைவரான Javier Solana உம் தாம் அரபாத்தை சந்திக்க ஆரியல் ஷரோன் மறுத்ததை தொடர்ந்து இஸ்ரேலுக்கான தமது விஜயத்தை குறைத்துக்கொண்டனர்.

மூன்றாவதாக, எதிர்வரப்போகும் ஈராக் மீதான யுத்தத்தில் ஆகக்குறைந்தது ஒரு மெளனமான ஆதரவை கருத்திற்கொண்டு முக்கியமாக எகிப்து, ஜோர்டான் உட்பட தம்மில் தங்கியுள்ள அராபிய அரசாங்கங்கள் மீதான மக்கள் அழுத்தத்தை குறைப்பது. ரோஸ் தோட்டத்தில் மத்திய கிழக்கின் சமாதானம் தொடர்பான புஷ்ஷின் உரையின் கேடுகெட்ட தன்மை ஈராக் மீதான யுத்த ஆரவாரத்தாலும், ஈரான், சிரியா மீதான பயமுறுத்தல்களாலும் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

புஷ்ஷின் உரை தெளிவாக எடுத்துக்காட்டியதுபோல், இறுதியான கொள்கைத் தீர்மானங்கள் இஸ்ரேலில் அல்லாது வாஷிங்டனிலேயே எடுக்கப்படுகின்றன. இஸ்ரேல் தனது படைகளை வாபஸ்வாங்கவேண்டும் என்ற புஷ்ஷின் கட்டளை, நடைமுறைப்படுத்தப்படும் ஏனெனில் இறுதியில் இஸ்ரேலிய அரசாங்கமானது தனது உயிர்வாழ்க்கைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் முற்றுமுழுதாக தங்கியுள்ள ஒரு அரசாகும்.

பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறும், அவரது இராணுவத்தை பின்வாங்குமாறும் ஷரோனை கேட்டுக்கொண்டுள்ளபோதிலும், புஷ் கடந்த வாரங்களாக இஸ்ரேலால் நடாத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்துக்கொண்டு ''பயங்கரவாதத்திலிருந்து தன்னை பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரிப்பதாக'' குறிப்பிட்டார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் இராணுவ நடவடிக்கையை ''ஒரு தற்காலிக நடவடிக்கை'' என குறிப்பிட்டதுடன், மேலதிக மற்றும் நீடித்த ''தற்காலிக நடவடிக்கை'' எதிர்காலத்திலும் நியாயப்படுத்தவேண்டியிருக்கலாம் என குறிப்பிட்டார்.

புஷ் இஸ்ரேலிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி வேண்டுமென்றே அழைப்புவிடாததுடன், இராணுவத்தை பின்வாங்குவதற்கான காலக்கேட்டையும் விதிக்கவில்லை. இதன் மூலம் கொலின் பெளல் எதிர்வரும் வாரத்தில் எப்போதாவது விஜயம் செய்யும்வரை இஸ்ரேலிய தாக்குதலை தொடர்வதற்கும், அதிகரிப்பதற்கும் ஷரோனுக்கு பச்சைவிளக்கு காட்டியுள்ளார்.

இதுதான் இஸ்ரேலிய அரசாங்கம் செய்வது. கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தினுள் தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதுடன் மேற்குகரையில் உள்ள 20,000 மக்களை கொண்ட டூபாஸ் நகரத்தினுள் டாங்கிகளை அனுப்பியுள்ளது. நாளாந்தம் மரணமாகும் பாலஸ்தீனியர்களின் தொகை வெள்ளிக்கிழமை 20 ஆகியது.

இஸ்ரேலின் அரசியல் கொலை கொள்கையில், இறுதி இலக்காக ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவின் மேற்குகரையின் வடபிரிவு தலைவரான Qeis Odwan உம் மற்றும் 5 ஹமாஸ் இயக்க இராணுவத்தினரும் டூபாஸ் நகரத்தில் அவர்களின் மறைவிடத்தினுள் இஸ்ரேலிய படைகள் புகுந்ததையிட்டு கொல்லப்பட்டனர். அப்பிரதேசத்திற்கான அல் அக்ஸா இராணுவப் பிரிவின் தலைவரான Nasser Awais உம் நாபுலுஸ் இல் கொல்லப்பட்டார்.

ஷரோனின் அரசாங்கமானது இப்படியான நடவடிக்கைகளை செய்வதற்கான காரணம் அவநம்பிக்கையற்ற, ஆத்திரமூட்டப்பட்ட பாலஸ்தீன இளைஞர்களை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுத்த தூண்டுவதை கணக்கில் கொண்டாகும். யுத்தநிறுத்தம் ஒன்றை உருவாக்குவதற்கும், அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்போதும், முன்னர் ஒவ்வொருமுறையும் நிகழ்ந்ததுபோல் ஷரோனின் பதில் பாலஸ்தீனியர்களின் உணர்ச்சியை கிளறிவிடுதலும், பதில்தாக்குதல்களை ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கின்றது. இதன் மூலம் அவற்றை இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கான முன்நிபந்தனையாக பயன்படுத்துகின்றார்.

இவ் அபிவிருத்திகள் புஷ்ஷின் தலையீடானது பாலஸ்தீனியர்களுக்கான ஒரு பொறி என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரான அந்தோனி ஸின்னிக்கும் (Anthony Zinni) யாசிர் அரபாத்திற்கும் இடையில் முற்றுகைக்கு உள்ளாகப்பட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற 90நிமிட பேச்சுவார்த்தை உறுதிப்படுத்துகின்றது. அந்தோனி ஸின்னி, அரபாத்திற்கு எச்சரிக்கைகளையும், மாற்று நிபந்தனைகளையும் முன்வைத்ததாகவும், இக்கலந்துரையாடலில் பாலஸ்தீனிய பேச்சுவார்த்தையாளர் ஒருவர் அதனை ''பிரச்சனைக்குரியது'' என குறிப்பிட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இச்சமாதானப் பேச்சுவார்த்தையினதும், கலந்துரையாடல்களினதும் பின்னணியில் அமெரிக்கா, அரபாத்துடனான உறவுகளை துண்டித்து வெளிநாட்டிற்கு அனுப்பவோ அல்லது கொலைசெய்யவோ அடித்தளங்களை இடுவது நம்பக்கூடியதாகவுள்ளது.

New York Times பத்திரிகையில் James Bennet வெள்ளிக்கிழமை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ''பெளலின் முயற்சிகள் இன்னுமொரு அலை பாலஸ்தீனிய தற்கொலைத் தாக்குதலால் வரவேற்கப்படுமானால், ஷரோன் தான் விரும்பியபடி அரபாத்துடன் அணுகுவதற்கு சுதந்திரமாக அனுமதிக்கப்படலாம்''.

ஷரோனின் உள் அரசியல் சுத்துமாத்துக்கள் புதிய, மிகவும் மோசமான ஒரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும், அரபாத்திற்கு எதிரான தீர்க்ககரமான நடவடிக்கை எடுப்பதற்கான வகையிலேயே தோற்றமளிக்கின்றது. ஷரோன் பாலஸ்தீனியர்களுக்கு எந்தவொரு பிரதேசத்தையும் வழங்குவதை எதிர்க்கும் அதிதீவிர வலதுசாரி கட்சியான தேசிய மத கட்சியை தன்னுடைய கூட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார். தொழிற்கட்சியின் தலைவரும் அமைச்சருமான Ephraim Sneh, New York Times பத்திரிகைக்கு ''இப்படியான முயற்சி ஷரோன் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை விரும்பாமல் ஒரு அதி வலதுசாரி அரசாங்கத்தையே விரும்புவதாக அர்த்தப்படும்'' எனவும் ''ஷரோனின் கூட்டரசாங்கத்திலுள்ள தொழிற்கட்சியினர் அரபாத்தை வெளியேற்றும் பிரதமரின் திட்டத்தை எதிர்த்ததாக'' தெரிவித்தார்.

இறுதியான புஷ்ஷின் தலையீடானது நீண்டகாலமாக அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ''சமாதான'' முன்னெடுப்புகளின் ஒரு தெளிவான வடிவத்தை கொண்டுள்ளது: அதாவது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் இராணுவத்தை நெருக்குவதுடன், அதனது பொலிஸ் ஒடுக்குமுறையை அதிகரிப்பதுடன், பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பிற்கு காரணமான முக்கிய தலைவர்களை கொலைசெய்வதுமாகும். இம்மோசமான பலம் அரபாத்தை தனிமைப்படுத்துவதுடன், அவரை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இல்லாதொழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பின்னர் அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் புதிய, பிரச்சனையான மாற்றீட்டை முன்வைப்பதன் மூலம் அவரால் நடைமுறைப்படுத்த முடியாத மேலதிகமாக அரசியல் விட்டுக்கொடுப்புக்களையும், சலுகைகளையும் ஏற்றுக்கொள்ளவும், மக்களை நிராயுதபாணியாக்கவும் அவரை நிர்ப்பந்திக்கவிரும்புகின்றனர்.

இதுதான் பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பு வெடிக்கும்போது அரபாத்தையும், பாலஸ்தீனிய அதிகாரத்தை குற்றம்சாட்டவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது இதேவேளை இஸ்ரேலுக்கு சுதந்திரமாக கையாளும் தன்மையை வழங்குகின்றது.

பெளலின் முயற்சிகளோ அல்லது பாலஸ்தீனிய பிரதிநிதிகளுடன் அவர் நாடாத்தவிருக்கும் எந்தவித பேச்சுவார்த்தைகளோ பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக உரிமைக்கான அல்லது தேசிய உரிமைகளுக்கான போராட்டத்திற்கோ பங்களிக்கப்போவதில்லை. புஷ் நிர்வாகத்தின் அடித்தளமான நிலைப்பாடு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதாகவும், பாலஸ்தீனிய மக்களின் விருப்புகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கின்றது.

அமெரிக்கா ஆகக்கூடியது, இராணுவமயப் படுத்தப்பட்டதும், ஒருவிதமான சுதந்திரமற்றது, தன்னை பாதுகாப்பதற்கு அருகதையற்றுதுமான ஒரு பாலஸ்தீன குடியிருப்பான அரசு (ghetto-state) ஒன்றை ஏற்றுக்கொள்ளும். இதுதான் வியாழக்கிழமை புஷ் தனது உரையில் குறிப்பிட்ட ''பயங்கரவாதத்திற்கு புகலிடம் வழங்காத பாலஸ்தீன அரசாகும்''.

பலபத்தாண்டுகளான போராட்டமும், ஒடுக்குமுறையும், யுத்தமும் எடுத்துக்காட்டுவது என்னவெனில், முற்றுமுழுதான சியோனிச அரசின் கட்டமைப்பும் நிராகரிக்கப்படும் வரையில் அரபு மக்களுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் மத்தியகிழக்கில் ஒரு சமாதானமோ அல்லது சமூக முன்னேற்றமோ ஏற்படப்போவதில்லை. இது மறுபக்கத்தில் முழு முதலாளித்துவ அரசு அமைப்பு முறையையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதை வேண்டிநிற்கின்றது. இம்முதலாளித்துவ அரசு அமைப்பானது வரலாற்று ரீதியாக மேற்கு ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதுடன், இயற்கையாகவே அரபுமக்களின் சமூக அபிலாசைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரான கொடுங்கோலான அரபு அரசாங்கங்களின் ஆட்சிக்கான அடித்தளத்தை பாதுகாத்தலையும் நோக்கமாக கொண்டதாகும்.

உண்மையான சமாதானம் பேச்சுவார்த்தைகளால் பெற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில், பாலஸ்தீனிய, இஸ்ரேல் அரசுகளுக்கு இடையிலான நிலமும், உறவுகளுக்கும் இடையிலான கேள்விக்கு அப்பால் அடிப்படையாக உள்ளவை சமூக, அரசியல் பிரச்சனைகளாகும். சமாதானமும், சமூக முன்னேற்றமும் அராபிய, இஸ்ரேலிய உழைக்கும் மக்கள் ஒரு மத்தியகிழக்கு ஜனநாயக, சோசலிச குடியரசை உருவாக்குவதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தினாலேயே அடையமுடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved