World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

UN report on Jenin: A whitewash of Israeli war crimes

ஜெனின் பற்றிய ஐ.நா அறிக்கை: இஸ்ரேலிய போர்க் குற்றங்கள் பற்றிய கண்துடைப்பு

By Chris Marsden
8 August 2002

Back to screen version

இஸ்ரேலிய அரசாங்கத்தாலும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களாலும், பாலஸ்தீனியர்களால் பிழையாக குற்றம்சாட்டப்பட்ட அவதூறு மறுதலிக்கப்பட்டிருக்கிறது என்று பறைசாற்றும் எண்ணற்ற சுயதிருப்திப்படுத்தும் மற்றும் அதேவேளை வெற்றி எக்களிப்பு மிக்க அறிக்கைகளின் வெளியிடலைக் கடந்த வாரங்கள் கண்டிருக்கின்றன. இந்த பெருமை அடித்துக் கொள்வதற்கான சம்பவம் ஜெனினில் உள்ள பாலஸ்தீனிய அகதிமுகாமில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் படுகொலை செய்யப்படவில்லை என்று உறுதிப்படுத்துவதாகக் கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாக இருந்தது.

எவ்வாறாயினும் தவறானதும் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் கீழே பார்த்தால், அவ்வறிக்கையானது பல்வேறு அரசாங்க அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் விசாரணைகளை வெறுமனே திரும்பக் கூறுகின்றது. ஐ.நா சபையின் அறிக்கை தன்னிலையாய் மிகக் குறைவாகவே கணக்கிடுகிறது என்பது தெளிவாகும். அரசியல் ரீதியாக அது ஆரியல் ஷரோன் அரசாங்கத்துக்கு சாதகமாக பெரிதும் சாய்ந்திருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, ஆகக்குறைந்தது இதனைப் பொருத்தவரை குற்றம் இழைக்கப்பட்டுள்ள திகைக்க வைக்கும் போர்க்குற்றங்கள் சாத்தியமானது என்பதாகும்.

ஐ.நாடுகள் சபையின்அறிக்கையானது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் வகைதொகையற்று குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்த நிர்ப்பந்திக்கப் படுகிறது. ''இஸ்ரேலிய பாதுகாப்புப் படை விலக்கிக் கொண்ட வேளை மற்றும் ஏப்ரல் 18 அன்று ஊரடங்குச்சட்டத்தை தளர்த்திய காலத்தில், குறைந்த பட்சம் 52 பாலஸ்தீனியர்கள் , அதில் அரைவாசிப்பேர் குடிமக்களாக இருக்கின்றனர், மற்றும் 23 இஸ்ரேலிய படைவீரர்கள் இறந்தனர்" என அது குறிப்பிடுகின்றது.

"இறந்துபோன பாலஸ்தீனியர்களுள் எத்தனை குடிமக்கள் இருந்தனர் என்பதைத் துல்லியமாகத் தீர்மானித்தல் சாத்தியமற்றது" என அது முடித்தது.

மேற்கோள் காட்டப்பட்ட புள்ளி விவரங்கள் மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (HRW) மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை போன்ற குழுக்களின் கண்டறிதல்களுடன் ஒத்துப்போகின்றன. அவை தங்களது குழுக்களை அந்நிகழ்வு பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனுப்பின. ஐ.நாடுகள் சபையோ இந்த கண்டறிதல்களைத் திரும்பக் கூறுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை, ஏனென்றால் அவர்களின் விசாரணைகள் இஸ்ரேலால் தடுக்கப்பட்டன. அறிக்கை ஆத்திரமூட்டுவதால் இஸ்ரேல் ஒத்துழைக்க மறுத்தது. ஆகையால் ஐ.நாடுகளின் அறிக்கை அது " இருக்கின்ற வளங்கள் மற்றும் தகவல்கள் மீது முற்றிலும் நம்பி சார்ந்திருக்கிறது" என்று ஒப்புக்கொள்கின்றது.

ஏதாவது இருக்குமாயின், ஐ.நா அறிக்கையானது பொது அரங்கில் ஏற்கெனவே உள்ள பகுதி அளவான அறிக்கைககளை விட தகவல்களின்படியும் மற்றும் ஆதாரப்பூர்வமானது ஆகிய இரண்டு வகையிலும் பலவீனமானதாக இருக்கின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேச பொது மன்னிப்புச் சபை இரண்டும் குடிமக்கள் மீதான இஸ்ரேலிய கொடுமைகளின் உதாரணங்களை ஐ.நாடுகள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் பெயரில் மற்றும் பாதுகாப்புச்சபையால் அதிகாரத்துடன் வழங்கப்பட்ட அறிக்கையைக் காட்டிலும் அதிகமான அளவில் மேற்கோள்காட்டின.

மேலும் இந்த அமைப்புகள் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை அவை ஜெனிவா விதிமுறைகளை மீறியதாக இருந்தன என்று கூறுவதற்கு தயாரித்திருந்தன. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் பீட்டர் பெளக்கார்ட்(Peter Bouckaert) " நாங்கள் (ஐ.நா) அறிக்கையுடன் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம் ஏனென்றால் அது ஜெனினில் என்ன நடந்தது என்பதற்கு எந்தவிதமான தகவல்களையும் உள்ளபடியாக உறுதிப்படுத்தவில்லை. இப்பத்திரமானது "இஸ்ரேலைத் தப்ப வைக்கும் விதத்தில் பலமாக மாற்றப்பட்டிருக்கிறது" எனவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஜெனினில் " போர்க் குற்றங்களை" செய்திருப்பதுடன், "மற்றும் அங்கு குடிமக்கள் மீதான திட்டமிட்ட படுகொலைகள் இருந்தன." என அவர் மேலும் குறிப்பிட்டார்

இஸ்ரேலின் அச்சுறுத்தல்களின் முன்னர் ஐ.நாடுகளின் சரணாகதிக்கும் கோழைத்தனத்திற்கும் பெரும்பாலும் நன்றி கூற வேண்டும், உண்மையில், ஜெனினில் எத்தனைபேர் இறந்தனர் என்பதை ஒருவரும் திட்டவட்டமாக அறியார். அவ்வறிக்கை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஜெனின் மற்றும் அகதி முகாமிற்குள் நூழைந்தபொழுது, ஏப்ரல் 3 இலிருந்து 18 ஆம் தேதி வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும், இஸ்ரேலின் ஊரடங்குச் சட்டத்தால் பகிரங்கமாய் அறிவதை மறுக்கப்பட்டிருந்து என்பதை ஏற்றுக்கொள்கின்றது.

படுகொலைகள் பற்றிய பீதிகள் முழுவதும் முறைமை வாய்ந்ததாக இருந்தன, இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் ரொன் கிட்ரே(Ron Kitrey), ஜெனினில் மட்டும் இறந்தோர் எண்ணிக்கையை 200க்கும் 300க்கும் இடையில் என எடுத்துரைத்தார். மற்றும் அப்புள்ளிவிவரத்தில் இறந்தோரும் காயமடைந்தோரும் உள்ளடங்குவர் என்று பின்னர்தான் அறிவித்தார். நேரில் பார்த்த பாலஸ்தீனிய சாட்சிகள் கூட கும்பல் கும்பலாக புதைக்கப்பட்டதை மற்றும் சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டதைக் குறிப்பிட்டனர்.

ஊரடங்குச்சட்டம் உத்தியோகரீதியாக விலக்கப்பட்ட பின்னரும் கூட, முக்கியமான பலநாட்களுக்கு இஸ்ரேலானது ஐ.நாடுகள் மற்றும் ஏனையோரை என்ன நடந்தது என்று விசாரணை செய்வதிலிருந்து தடுத்தது. கோபி அன்னான் மற்றும் ஷரோன் அலுவலகங்கள் ஜெனினோடு தொடர்புகொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது பிரயோசனமில்லாது போனது மற்றும் அன்னான் இறுதியில் அந்தக் குழுவை மேமாதம் 3ஆம் திகதி கலைத்தார்.

விசாரணையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கடினமாய் முயற்சித்துப் பெற்ற அந்தத் திறமைகள் ஐ.நாடுகள் குழுவிற்க்கும் இருந்திருக்கும். இந்த மட்டுப்பாடுகளை எடுத்துக் கொண்டாலும் கூட ஐ.நாடுகள் அமைப்பானது இஸ்ரேலிய அட்டூழியங்கள் பற்றிய, இருக்கின்ற அனைத்து விவரங்களையும் பெறவில்லை. எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் இண்டிபெண்டென்ட்(Independent) செய்தித்தாள் , ஐ.நாடுகள் அறிக்கை வாழங்கப்பட்ட பின்னர் அடுத்த நாள் " சண்டைக்குப் பின்னர் உடனே ஜெனினுக்குள்ளே இண்டிபென்டென்ட் -ஆல் நடத்தப்பட்ட விசாரணை அட்டூழியங்கள் பற்றிய பெரிய அளவிலான உறுதிப்படுத்தும் விவரங்களை வெளிக்கொண்டு வந்தது'' என எழுதியது.

"மே 3 அன்று இண்டிபென்டென்ட்டில் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்ட பலரின் விவரங்களில், காயம்பட்ட ஒரு மனிதனுக்கு உதவ முயற்சிக்கையில் இதயத்தின் ஊடாக சுட்டுத் துளைக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய செவிலியர் (nurse) , பட்வா ஜம்மா என்பவர் பற்றி மட்டுமே ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பெண் முழு சீருடையில் இருந்தார் மற்றும் தெளிவாகக் காணப்படக் கூடியவராய் இருநதார்.

"பதினான்கு வயது நிரம்பிய பாரிஸ் ஜெபென் என்பவர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது கடைக்குச்சென்ற பொழுது அவர் இஸ்ரேலிய டாங்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

அபாப் தேசுக்கி என்ற பெண்ணைப் பற்றியும் குறிப்பிடவில்லை, இஸ்ரேலிய படைவீரர்களுக்காக தனது வீட்டுக் கதவைத் திறக்க முயற்சிக்கையில், அவர்கள் அதனைத் தகர்த்த பொழுது அவர் கொல்லப்பட்டார். கேமல் சுகாயர் பற்றியும் குறிப்பிட்ப்படவில்லை. இவர் சாலையில் தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து செல்ல முயற்சிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்."

இண்டிபென்டென்ட் இஸ்ரேலிய இராணுவத்தின் "500 மீட்டர்கள் நீளம் 400 மீட்டர்கள் அகலம் கொண்ட பரப்பு என அளவிடப்படும் பகுதியில் அமைந்த வீட்டுப் பகுதிகளை முற்றிலும் இடித்துத் தள்ளியது" பற்றி விவரம் கூறப்படவில்லை என்று குற்றம் சாட்டியது." இஸ்ரேலிய படைவீரர்களால் பாலஸ்தீனியர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர் "என்று அதன் சாட்சியம் மனித உரிமை கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை இரண்டாலும் கண்டு பிடிக்கப்பட்டது". அதன் முடிவுரையில், "ஐ.நாடுகள் அறிக்கையானது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தாக்குதல் கொடுக்கப்படாதவாறு கவனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது வேண்டுமென்றே முடிவுகளுக்கு வராதிருந்தது, ஆனால் பல்வேறு தகவல் வட்டாரங்களில் இருந்து சாட்சியத்தை மட்டும் தொகுத்தது." என அது முற்ற முழுதான நியாயப்படுத்தலுடன் குறிப்பிட்டது.

ஜெனினில் என்ன நடந்தது என்று நேர்மையாக அணுகுவதற்குப் பதிலாக, மற்றும் விசாரணையைத் தடுப்பதற்கான இஸ்ரேலின் முயற்சிகளின் முழு பாதிப்புக்களை விவரிப்பதற்குப் பதிலாக, , " ஒரு மூத்த பாலஸ்தீனிய நிர்வாகி ", ஏப்ரல் மத்தியில் 500 பேர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறியதாக அறிக்கை மேற்கோள் காட்டியது. கவனத்திற்குரிய முக்கிய புள்ளியாக அவர்கள் செய்த இந்தப் புள்ளிவிவரம், "வெளிப்பட்ட சாட்சியத்தின் வெளிச்சத்தில் மெய்ப்பிக்கப்படாதிருந்து வருகிறது"

அறிக்கையின் இந்த வரி சியோனிச ஆதரவு செய்தி ஊடகத்தால் பற்றிக்கொள்ளப்பட்டது. ஐ.நாடுகளின் குறிப்பினை அடுத்து, அவர்கள் 500 பேர்களைக் காட்டிலும் 50 பேர்தான் கொல்லப்பட்டனர், அப்படியாயின் அங்கு படுகொலை இருந்திருக்கவில்லை என்பதே என்று கூறினர்.

உண்மையில் 500 என்ற புள்ளிவிவரம் ஜெனின் தொடர்பான குறிப்பில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. பாலஸ்தீனிய நிர்வாகப் பேச்சாளர் சாயெம் எரக்காத், ஏப்ரல்10 அன்று CNN தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், இஸ்ரேல் பாதுகாப்புக் கேடய நடவடிக்கையை (Operation Defensive Shield) மேற்கொண்டதன் பின்னர் மேற்குக்கரை முழுவதும் பாலஸ்தீனியருக்கு நடந்த சேதங்கள் பற்றிக் குறிக்கையில் மட்டும் அவ்வாறு குறிப்பிட்டார். ஆனால் 500 பேர் கொல்லப்பட்டனர் என்ற இக்கூற்றை மறுதலித்தல் ஒரு திசைதிருப்பும் முயற்சியாகும். அது ஜெனினில் இஸ்ரேலால் இழைக்கப்பட்ட உண்மையான போர்க்குற்றங்களையும், மற்றும் மிகப் பொதுவாக பாதுகாப்புக் கேடய நடவடிக்கையின்போது மேற்குக்கரை முழுவதும் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் கவனத்தைத் திசைதிருப்ப சேவை செய்கிறது.

"இரண்டு பக்கமும் பிழையுள்ளது" என்ற நிலைப்பாட்டைக் கருதும் ஐ.நாடுகளின் சிறந்த முயற்சிகள் இருப்பினும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை பற்றிய அறிக்கையின் விளக்கங்கள் மேற்குக்கரையில் படுகொலையைத் தவிர வேறு எதுவாகவும் அழைக்கப்பட முடியாததாகும் என்று தெளிவாக்குகிறது.

குடிமக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் பரந்த அளவிலான நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்தது மற்றும் வன்முறையில் ஈடுபட்டது ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படவும் நூற்றுக் கணக்கானோர் இறக்கவும் வழிவகுத்தது. "பாலஸ்தீனிய பகுதி A -ல் மார்ச் 1லிருந்து மே 2002 வரைக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப்படை ஆக்கிரமிப்பு செய்தபொழுது மற்றும் அதை அடுத்து உடனடியாக மொத்தம் 497 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்" என்று அறிக்கை குறித்தது. இந்தப் புள்ளிவிவரம் அந்த நேரம் எரக்காத்தால் செய்யப்பட்ட கணிப்புடன் மாறுபட்டதாக இல்லை. இதற்கும் மேலாக, "பாலஸ்தீனிய சுகாதார நிர்வாகம் மற்றும் பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் ஆகியன, சராசரியாக 1,447 பேர் காயப்பட்டனர் அத்துடன் சுமார் 538 பேர்கள் (அதேகால கட்டத்தில்) வெடி பொருட்களால் காயம்பட்டவர்கள் என அறிவித்தன."

இந்த அசாதாரணமான புள்ளி விவரங்கள் பாலஸ்தீனியர்களின் சேதம் பற்றிய ஆரம்ப மதிப்பீடுகளை விட அதிகமானதாகும், அதை நியாயப்படுத்தும் விதத்தில் பாலஸ்தீனியர்களின் சமமான குற்றங்கள் என்று கூறப்படுவதை மேற்கோள் காட்ட கடும் முயற்சி எடுக்கின்ற அதேவேளை, இவை இஸ்ரேலுக்கு சாத்தியமான அளவு கடிந்துரைகளாக வழங்கப்படும் அறிக்கையாக பாதி மறைக்கப்பட்டு இருக்கின்றன.

ஜெனினில் என்ன இடம்பெற்றது என்ற புதிய தகவல்களை அறிக்கை கொண்டிருக்கவில்லை என்று அது ஒப்புக்கொள்கிறது என்பதை எடுத்துக் கொண்டால், ஏன் ஐக்கிய நாடுகள் அதனை வழங்கியது?

"அந்த அமைப்பானது ஏகாதிபத்திய கொள்கையின் ஒத்திசைந்து போகும் கருவி என்பதற்கும் கொஞ்சம் அதிகம் என்பதற்கு நமக்கு ஆதாரம் வேண்டுமெனில், ஜெனினில் இஸ்ரேலிய போர்க்குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஐ.நாடுகள் குழுவை திருப்பி அழைப்பதற்கான அன்னானின் முடிவு, ஒரு ஆதாரம் ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவின் கட்டளையின் பேரில் உள்ள ஐ.நாடுகளின் விருப்பத்தை அது காட்டுகிறது. ஜெனின் விசாரணையை கைவிடுவதற்கான முடிவைப் பொறுத்தவரை கோபி அன்னான் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் மே 1 அன்று நடவடிக்கைக்கு முன்மொழிந்தற்கு சிலநாட்கள் முன்னர் அம்முடிவு வாஷிங்டனில் எடுக்கப்பட்டது" என்று மே3 அன்று உலக சோசலிச வலைதளம் எழுதியது.

ஜெனின் மீதான அன்னானின் அறிக்கை வாஷிங்டனின் கைரேகைத் தடத்தால்கூட கறை படிந்து இருக்கிறது.

அமெரிக்காவானது வரும் வாரங்களில் ஈராக்கிற்கெதிரான போரைத் தொடுக்க விருப்பம் கொண்டுள்ளது. அது சியோனிச அரசினைப் பாதுகாக்கும் மற்றும் பாலஸ்தீனியர் மீதான ஷரோனின் இரத்தம்தோய்ந்த ஒடுக்குமுறையின் முழுவிருப்புடைய ஆதரவாளர் போலவும் அவ்வாறு செய்யும். ஆகையால் அன்னானின் அறிக்கை, ஷரோன் அரசாங்கத்தின் குற்றங்களை அதனால் முடிகின்ற அளவுக்கு கண்துடைப்பு வேலை செய்வதுடன், பாலஸ்தீனியர்களே அவர்களின் ஒடுக்குமுறைக்கு ஒருகுறிப்பிட்டளவில் காரணமாக இருக்கின்றதாகவும் பூச்சுவேலை செய்கிறது.

ஆனால் அன்னான் வெற்றிகரமாக செய்ய முடிந்தது எல்லாம் தன்காலையே வாரி விட்டுக் கொண்டதுதான். பெயர் குறிப்பிடப்படாத ஐ.நாடுகள் சபை பேச்சாளர் ஒருவர், அன்னான் மனக்கிளர்ச்சியைத் தூண்டுகிற மற்றும் சர்ச்சைக்குரிய "படுகொலை" என்ற வார்த்தையை வேண்டு மென்றே பயன்படுத்தாததுடன், பதிலாக எந்தளவிற்கும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாத அளவு, உள்ளதை உள்ளபடியே முன்வைத்தார் என்று வலியுறுத்தியதன் மூலம், ஐக்கிய நாடுகளின் அறிக்கை இஸ்ரேலை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது என்ற செய்தி ஊடகக் கூற்றுக்களில் இருந்து அவரது அமைப்பை பாதுகாக்க முயற்சித்தார். அத்தகைய கூற்றுக்கள் எல்லாம் அரபு மக்களிடம் கொடிகட்டிப்பறந்த ஐக்கிய நாடுகள் சபையின் புகழை மீட்டமைக்கும் முயற்சி மட்டும்தான். அந்த அறிக்கை வழங்கப்பட்ட பிறகு அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஐக்கிய நாடுகள் சபையை இறந்த உடல் என்பதைக் குறியீடால் காட்டும் சவப்பெட்டியை சுமந்து கொண்டு ஊர்வலம் சென்றனர்.

கசப்பான அனுபவம் ஊடாக உலகின் பத்துலட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், ஐக்கிய நாடுகள் சபையானது அமெரிக்காவின் மற்றும் அதன் இஸ்ரேலிய கூட்டாளியினது கையாளாக செயல்படுகிறது என்பதை அறிவர். மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ அபிலாஷைகளுக்கு ஒரு எதிரிடையாக ஐக்கிய நாடுகள் சபையை முன்வைக்கும் அரபு ஆட்சியாளர்கள், மேற்கத்திய சமூக ஜனநாயக மற்றும் தாராண்மைவாத அரசியலாளர்களினதும் மழுப்பல்களையும் மற்றும் பாசாங்குகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved