World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Against the boycott of Israeli academics

இஸ்ரேலிய கல்விமான்களை புறக்கணிப்பதற்கு எதிராக

Statement by the World Socialist Web Site
12 July 2002

Back to screen version

உலக சோசலிச வலைத் தளமானது இஸ்ரேலிய கல்விமான்களைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் அனைத்துலக பிரச்சாரத்தினை முற்றாகக் கண்டிக்கிறது.

பிரித்தானிய திறந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டெபென் ரோஸினால் (Steven Rose) முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட கல்விமான்கள் மீதான புறக்கணிப்பானது, இதுவரை சுமார் 700 கல்விமான்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது பார்வையளவில் காசா கரையோரப்பகுதியிலும், மேற்குக்கரை பகுதியிலும் உள்ள பாலஸ்தீனப் பிரதேசங்களை மீளக் கைப்பற்றும் இஸ்ரேலியர்களின் முயற்சிக்கு எதிர்ப்பளிப்பதாக தெரிந்தாலும், நன்கு உற்றுக் நோக்கினால் அது புத்திஜீவிகள் தொழிலாளர்கள், இளைஞர்களிடையே அரசியல் குழப்பத்திற்கான விதையை ஊன்றி விடச் செயலாற்றுவதைக் காணலாம்.

இதற்கு ஆதரவு பெற உயர்மட்டில் செயலாற்றுவதைத் தவிர இதில் அடங்கியுள்ள அரசியல் ஆபத்துபற்றிய விளக்கம் எதுவுமே இங்கு அடக்கப்படவில்லை. இம்மாதம் மன்செஸ்டர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவன (Manchester Institute of Science and Technology) பேராசிரியரும் வெளியீட்டாளருமான Professor Mona Baker மொழித்துறை பத்திரிகைகளுக்கு பங்களிப்பவர்களும், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு கலைப்படிப்புக்கு பொறுப்பானவர்களுமான டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Prof. Gideon Toury இனையும், பார்-இலான் (Bar-Ilan) பல்கலைக் கழகத்தை சேர்ந்த Dr. Miriam Schlesinger இனையும் தனது சஞ்சிகையில் பங்களிப்பதிலிருந்தும் விலக்கியுள்ளார்.

பேக்கர் தனது தீர்வானது "தனிப்பட்டதல்ல அரசியல் ரீதியானது" என்பதை தெளிவுபடுத்துவதில் ஆழ்ந்த கவனமெடுத்துள்ளார். எவ்வாறாயினும் இவ்விருவரும் இஸ்ரேலியப் பிரஜைகள் என்ற காரணத்தால் மட்டும் பதவியில் இருந்து தூக்கிவீசப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை இங்குள்ளது. கலாநிதி Schlesinger இஸ்ரேலுக்கான சர்வதேச மன்னிப்பு சபையின் தலைவர் பதவியிலிருந்து இப்போது சமாதானம் (Peace Now group) என்ற குழுவின் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதுடன், மேற்குகரையின் பாலஸ்தீன நகரங்களில் பண்ட வழங்கல்களை விநியோகிப்பதை இஸ்ரேலியப்படை தடுத்துள்ளதை எதிர்த்துள்ளார். ஆனால் அவர்கள் முற்போக்கான அரசியல் நோக்கத்தினை கொண்டிருக்காதிருப்பினும்கூட ஒருவரும் தமது இனம் அல்லது மதம் அல்லது தேசியம் என்பதன் பேரால் தண்டிக்கப்படும் அச்சத்துக்கு உட்படுத்தப்படலாகாது.

இஸ்ரேலில் சியோனிச எதிர்ப்பு பார்வையாளரை உருவாக்க இத்தகைய வழிமுறைகள் பெரிதும் உதவலாம் என்பதையிட்டு எவரொருவரும் பலத்த விவாதத்தில் ஈடுபடமாட்டார். இது உண்மையில் மாறானது. இஸ்ரேல் அரசின் குற்றங்களுக்கும் மற்றும் அவ்வரசுடனும் யூத கல்விமான்களின் அமைப்பினை முரட்டுத்தனமாக ஒப்பிடுவதன் மூலம், இந்த கல்விமான்கள் மீதான புறக்கணிப்பானது சியோனிச தத்துவவாதிகளின் கைகளை பலப்படுத்துகின்றது. இதன் நடவடிக்கைகள் சாதாரண இஸ்ரேலிய பிரஜைகளை சியோனிச மீள் எழுச்சி முயற்சிக்கு இலக்காக்கி, முழு உலகுமே யூத மக்களுக்கு எதிர்ப்பாகவுள்ளது என்றும், இஸ்ரேலிய அரசு மட்டுமே அவர்களுக்கு ஒரே ஒரு பாதுகாப்பானதாக உள்ளது என்ற ஆழ்ந்த பிற்போக்குத்தனமான ஐயுறவுமிக்க கருத்தினை உருவாக்குகின்றது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பை எதிர்க்க கல்விமான்கள் எடுக்க வேண்டிய சரியான செயல்முறை இத்தகைய புறக்கணிப்பிற்கு முற்றிலும் நேர்மாறானதாகும். அது தமது இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய நாட்டு சகபாடிகளுடன் அதிகம் நெருக்கமான தொடர்பு கொண்டு தேசிய பிரிவுகளுக்கு ஊக்கமளிக்காத, அப்பிரிவினைகளை இல்லாதொழிக்கக் கூடிய முக்கிய விடயங்கள் குறித்த ஆழமான கலந்துரையாடலுக்காக ஊக்கமளித்தலாகும். இவையே கல்விமான்களால் எடுக்கப்படவேண்டிய செயல்முறையாகும். இதற்கு மேலதிகமாக பாலஸ்தீனிய அராபிய வரலாற்றின் முக்கிய ஆய்வுகள் உள்ளடக்கிய ஓர் விஞ்ஞானபூர்வமான விளக்கத்துக்கான சில குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இஸ்ரேலிய கல்விமான்களால் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய செயல்கள் பற்றியவை பலமாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவேண்டும். சியோனிச அரசினை நோக்கித்தள்ளும் சிந்தனாரீதியான தணிக்கை செய்வதாக இவ்விவாதம் கட்டுப்படாது, சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிப்பதாக இருக்கவேண்டும்.

கல்விமான்களின் புறக்கணிப்பானது ஓர் சீரழிந்த வெளிப்பாட்டை காட்டுகின்றது. அது இஸ்ரேலிய மக்களை ஆளும் தட்டினது கொள்கைகளில் இருந்து உடைத்து, ஒரு சுதந்திரமான வழியை காட்டாததுடன், அரசியல் விரக்தியினால் மிகவும் பலவீனமான இலக்கை நோக்கி தள்ளும் ஒரு முற்றான மிதவாதப் போக்காகும். ஷரோன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எந்தவொரு பொறுப்பையுமே கொண்டிராத அவற்றை சிலவேளை அதனை எதிர்ப்பவருமாயுள்ள தனிப்பட்ட இஸ்ரேலிய நபர்களுக்கு இலக்கு வைப்பதானது அநியாயமானதும் அரசியல் ஆபத்தானதுமான செயலாகும். அத்தகைய செயல்களுக்கு ஆதரவாயுள்ளவர்களைப் பார்த்து நாம் இவ்வாறு கேட்போம்: மிகவும் கவனமாக இப்போது வெளிக்காட்டப்படும் சமிக்ஞைகளை கவனியுங்கள். ஐரோப்பாவில் இப்போது பாலஸ்தீனியருக்கு ஆதரவுகாட்டும் சட்டபூர்வ நடவடிக்கையாகும் என்று கருதி அராபிய இளைஞரால் நடத்தப்படும் யூதர்களுக்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களையும், அவர்களது வழிபாட்டுதலங்கள் மீதானதும் மற்றும் சுடலைகள் மீதானதுமான தாக்குதல்களையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். இத்தகைய பிற்போக்கான செயல்களை சிறியளவு நியாயப்படுத்தலை வழங்குவதற்கு எதுவும் செய்யத்தேவையில்லை.

இரு கல்விமான்களுக்கு எதிரான நடவடிக்கையானது, வெறுமனே ஒரு தனிப்பட்டவர்களின் நடத்தை பற்றிய கேள்வியாக வைப்பதுடன், ஐரோப்பிய யூதர்களுக்கு துன்பகர விளைவுகளை விளைவித்ததற்கு மூலகாரணமாக இருந்த அரசியல் போக்கின் ஆதிக்கத்தை விளங்கிக்கொள்வதற்கும், அதற்கு எதிரான பூரண போராட்டத்தையும் எவ்விதத்திலும் விளங்கிக்கொள்ளாததையும் காட்டுகின்றது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுதபாணி காவல்படையான இஸ்ரேலிய அரசின் செயலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டம் ஒன்றுக்கு தேவையானது என்ன என்பதை விளங்கிக்கொள்வதில் ஆர்வமில்லாததையும் இது காட்டுகின்றது.

இது சம்பந்தமாக ஒருவர், இக்கூட்டுக் குற்றம் இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமா சுமத்தப்பட வேண்டும்? என்று கேட்கலாம். அமெரிக்காவின் பிரித்தானிய ஏகாதிபத்தியங்கள் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இஸ்ரேலிலும் பார்க்க மோசமான முறையில் கொடூர குற்றமிழைத்துள்ளமைக்கு வரலாற்றுப் பதிவுண்டு. அவர்கள் தற்போது ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஓயாத குண்டுமாரி நடத்திக்கொண்டிருப்பதுடன், மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு எதிராக மீண்டும் ஒரு தடவை போர் செய்யும் தயாரிப்புகளையும் மேற்கொண்டுள்ளனர். இதற்கும் மேலாக, அரசியல் சிந்தனையுள்ள எல்லோருமே ஷரோனின் யுத்தப் பேரிகைக்குப் பின்னர் புஷ் நிர்வாகமும் பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கமும் காணப்படுகின்றது என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளனர். ஆகவே ஏன் பிரித்தானிய அமெரிக்க கல்விமான்களையும் புறக்கணிக்குமாறு கோரவில்லை. இத்தகைய கேள்வியை எழுப்புவதானது இரு இஸ்ரேலியக் கல்விமான்களுக்கும் எதிராக எடுத்த ஜனநாயக ரீதியிலான செயலின் பண்பை நன்கு விளக்குவதற்கு உதவும். இத்தகைய ஒரு புறக்கணிப்பு கோரப்பட்டிருப்பின் தவறாக தமது கையொப்பங்களை தற்போதைய மனுவில் இட்டவர்கள் எந்தவித பதிலளித்திருப்பர்? என்பதைப் பற்றி ஒருவர் நினைத்துப் பார்க்கவேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமானது பாலஸ்தீனியரை கொடுமைப்படுத்துவதற்கு இஸ்ரேலிய மக்கள் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என்பதற்குதவும் சகல முயற்சிகளையும் நிராகரிக்கின்றது. தேசியரீதியாக குற்றம்சாட்டும் அத்தகைய குற்றச்சாட்டுகளும் அத்தகைய உத்திகளில் இருந்து எழும் வினாக்களும் ஒவ்வொரு அம்சத்திலும் படு பிற்போக்கானதேயாகும்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளைப் போலவே இஸ்ரேலும் மிகவும் ஆழமான சமூக வர்க்க மோதல்களால் பிளவுண்டுள்ளது. இவை யாவும் ஏற்கனவே சியோனிய அமைப்புக்கெதிரானதும் மற்றும் அதனது யுத்தக் குற்றங்களுக்கும் எதிரான மனோபாவங்களால் தனது அரசியல் வெளிப்பாட்டை காட்டியுள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் பாரிய வடிவத்தை எடுக்கும். இதனை நிராகரிப்பது, சியோனிசத்திற்கு எதிரான அரசியல் மாற்றீடு ஒன்றிற்கு யூத தொழிலாள, கல்விமான்களை நம்பச்செய்யும் தேவையை மறுப்பது, இந்த புறக்கணிப்பின் ஆதரவாளர் பக்கம் சாருவதாக அமையும்.

புறக்கணிப்பிற்கு வக்காலத்து வாங்குவோர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இனவாத எதிர்ப்பு இயக்கத்தை தமது வரலாற்று முன்னோடியாக எடுத்துக் காட்டுகின்றனர். இது ஓர் பதிலை வேண்டி நிற்கிறது. தென்னாபிரிக்காவில் முதலிட மறுப்பதும் பகிரங்க மேடையில் ஒன்றாயிருப்பதை வரவேற்பதில் மறுப்பு தெரிவிப்பதும் இனவாதத்துக்கு எதிர்ப்பளிக்கும் அரசியல் ரீதியான சட்ட ரீதியானதாயினும் இஸ்ரேலிய கல்விமான்களை கருங்காலிகளாகக் காட்டி வெளியேற்றுவதற்கும் அதற்குமிடையிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுண்டு. மறுபுறத்தில் ஒரு பிரித்தானிய கல்விமான் இஸ்ரேலியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்ற அழைக்கப்படுகையில், தமது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் மறுப்பாராயின் அது முற்றிலும் வேறான விடயமே. இதனூடாக நாம் அவர்களை இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை பகிரங்கமாக தாக்கும் பதிலீட்டான ஒன்றாக இதனை சிந்திக்குமாறு கேட்கலாம்.

பாலஸ்தீனியர்களைத் துண்புறுத்தும் தற்போதைய நிலைமைக்கு மறுப்பாக எதிர்ப்பை திரட்ட எடுக்கும் சரியாக சிந்தித்தெடுக்கும் முயற்சிகளுக்கு நாம் திடமான ஒத்துழைப்பு வழங்குவோம். ஷரோன் அரசாங்கத்தை தனிமைப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளான, இராணுவ தளபாடங்களின் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை தடைப்படுத்தும் செயல்களுக்கு கோரிக்கை விடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்குக்கரையிலும், காசா கரையோரப்பகுதியிலும் குற்றம் செய்யபவர்களுக்கு எதிராகவும் மற்றும் புஷ் நிர்வாகம் மற்றும் பிளேயர் அரசாங்கத்திற்கெதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டமாக விளங்கிக்கொள்ளவேண்டும்.

உலக சோசலிச வலைத் தளம் சியோனிசத்துக்கு எதிராக கொள்கை ரீதியான எதிர்ப்பை கொண்டுள்ளது. ஆனால் நாம் அது போலவே வர்க்கப் போராட்ட முறைகளினூடான சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தில் அடித்தளமாக காலூன்றியும் உள்ளோம். நாம் இஸ்ரேலிய தொழிலாளர், புத்திஜீவிகளை தவறான அரசியல் முன்னோக்கு மற்றும் சித்தாந்தம் என்பவற்றை நிராகரிக்க வேண்டுமென நம்பசெய்ய முனைகின்றோம். அதாவது யூத மக்களுக்கு ஒரு பாதுகாப்பான செழிப்பான எதிர்காலம் ஏரியல் ஷரோனால் வக்காலத்து வாக்கப்படும் இராணுவ கொள்கைகளில் அல்ல, மாறாக அராபியர்களும் யூதர்களும் சமமானவர்களாக ஒருமித்தவராகவுள்ள சமுதாயத்தின் உருவாக்கத்தினூடாக, அதாவது ஒரு மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளில் மட்டுமே தங்கியுள்ளது என அவர்களுக்கு உணர்த்த வேண்டும். சியோனிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இவ் வழிமுறைகளே அனுமதிக்கப்படக் கூடியனவாயுள்ளதுடன், அவையே தமது பொது எதிரிக்கு எதிராக யூத, அராபிய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கும் சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் அணிதிரட்டலுக்கும் வழியமைத்துக்கொடுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved