World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

White House demands weapons inspectors abduct Iraqi scientists

ஈராக் விஞ்ஞானிகளை கடத்துமாறு ஆயுத ஆய்வாளர்களை அமெரிக்கா கோருகின்றது.

By Bill Vann and Barry Grey
7 December 2002

Back to screen version

புஷ் நிர்வாகம், ஈராக் விஞ்ஞானிகளை அந்நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வந்து, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு ஐ.நா - ஆயுத ஆய்வாளர்களுக்கு நிர்பந்தங்களை கொடுத்துக்கொண்டு வருகின்றது. இப்படிப்பட்ட சாக்குப்போக்குகளை உருவாக்கி, அமெரிக்கா, ஈராக்குடன் போர் புரிவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பது, சர்வதேச சட்டத்தின் அடிப்படை அம்சங்களையே மீறும் செயலாகும், ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் முரணான நடவடிக்கையாகும். வாஷிங்டனில் நிலவுகின்ற போர் வெறி சூழ்நிலையை அம்பலப்படுத்துகின்ற வகையில் அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

ஈராக் விஞ்ஞானிகள் அவர்களது குடும்பத்தினருடன் தேவைப்பட்டால், அவரது விருப்பத்திற்கு விரோதமாகவே கடத்தப்பட்டு "சாட்சிகள் பாதுகாப்பு" - திட்டத்தின் கீழ் வைக்கப்படுவர் என்று அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ஐ.நா - வாஷிங்டனின் விருப்பப்படி ஈராக் சிவிலியன்களை கிரிமினல்களாக நடத்தும்.

இத்தகைய திட்டம் மாஃபியா கும்பல்கள் செயலைப்போன்றது. இத்தகைய நடவடிக்கையில் இறங்குவதன் மூலம் அமெரிக்கா துப்பாக்கி முனையில் எத்தகைய "ஜனநாயகத்தை" நிலைநாட்ட விரும்புகிறது என்பது, அம்பலத்திற்கு வரும். ஈராக்கை பிடிப்பதற்கு படை எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இத்தகைய "ஜனநாயக" முறையை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.

நியூயோர்க்கில் டிசம்பர்-2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி புஷ்ஷின் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொன்டோலிசா ரைஸ் (Condoleezza Rice), ஐ.நா. தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிக்ஸ் (Hans Blix) விஞ்ஞானிகளை கடத்தும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துமாறு, தூண்டினார். "ஐ.நா. ஆய்வாளர் குழுவினர், விஞ்ஞானிகளை தெரிவு செய்து ஈராக்கை விட்டு வெளியேறுமாறு சிலவேளைகளில் அவர்களது அனுமதியின்றியும் வெளியேறுமாறு கோரவேண்டும் என்று சில அமெரிக்க அதிகாரிகள் விரும்புவதாக," நியூயோர்க் டைம்ஸ் வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருந்தது. "திரு. பிளிக்ஸ், ஐ.நா. எவரையும் அவரது விருப்பத்திற்கு விரோதமாக கடத்தி வரமுடியாது, என்று கூறிவருவதாக செய்தி வெளியிடப்பட்டது".

வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புச் செயலர் ஆரி பிளைஷர் (Ari Fleischer), வெள்ளிக்கிழமையன்று இது சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதிலளிக்காது தவிர்த்தார். ஈராக் விஞ்ஞானிகளை கடத்தி வரவேண்டுமென்று அமெரிக்கா கருதுகிறதா? என்பது கேள்வி, "எல்லா விஞ்ஞானிகள் தொடர்பாகவும் நான் பேச முடியாது, யாராவது சிலர் நாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் அது மிக எளிதான விவகாரம்தான்" - என பதிலளித்தார். இப்படி பிடி கொடுக்காமல் பதிலளிப்பது, முக்கிய கேள்வியில் அடங்கியுள்ள உண்மையை மறுக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.

தனது பக்கத்தில், ஐ.நா. தலைமை ஆயுத ஆய்வாளர் பிளிக்ஸ் அமெரிக்காவின் ஆலோசனையை மிக ஆவேசமாக தள்ளுபடி செய்ததோடு, "எவரையும் நாங்கள் கடத்தமாட்டோம். ஐ.நா. ஆள் கடத்தும் ஏஜென்சியை நடத்தவில்லை" என அவர் ஆவேசமாக வெள்ளியன்று பதிலளித்தார்.

ஒரு மனிதன் கையாளுகின்ற நடவடிக்கை மூலம் அவனை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற முதுமொழியில் அதிக உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. புஷ் நிர்வாகத்தை ஒரு அரசியல் மோசடிக்கும்பல் என வரையறுப்பது வெறும் புனைபெயரல்ல. அச்சுறுத்தல்கள் மூலமும் மற்றும் தேர்தலில் மோசடி மூலமும் புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது. அத்துடன் அதன் கொள்ளையடிக்கும் நோக்கத்தை நிறைவேற்றுக்கொள்வதற்காக படுகொலைகள், சட்ட விரோத சிறைவைப்பு, ஆள் கடத்தல் உள்ளடங்கலான கிரிமினல் முறைகளை கையாள தயாராக உள்ளது.

இறுதியாக அமெரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் ஈராக்கில் அமெரிக்க ஆயுத ஆய்வாளர்கள் வாரம் முழுவதும் சோதனைகள் நடத்திய பின்னர் வந்திருக்கின்றது. போரினால் சிதைந்து கிடக்கும் ஈராக்கும் ஈராக் நாடு "பொது மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள்" எதையும் தயாரிக்கவில்லை என்று, ஐ.நா. ஆய்வாளர்கள், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை மறுத்த பின்னர் அமெரிக்கா புதிய ஆலோசனையில் இறங்கியிருக்கின்றது. வாஷிங்டனின் போருக்கான சாக்குபோக்குக்களை ஆயுத ஆய்வாளர்கள் தொடர்ந்து மறுத்துக்கொண்டே வரும்போது, அவர்களது முக்கியத்துவத்தை புறக்கணித்துவிட்டு, ஈராக் மீது படையெடுப்பதற்கு வேறு வகையான சமாதானங்களை சாக்குப்போக்குக்களை அமெரிக்க தேட ஆரம்பிக்கின்றது.

அமெரிக்கர்கள் கடத்தி வந்த ஈராக் விஞ்ஞானிகளிடம் பெறப்பட்டதாக கூறப்படும், தகவல்களை சரியான தகவல்கள் எனக் கூற அமெரிக்க நிர்வாகம் முயலுமானால், அது புஷ் நிர்வாகம் எந்த அளவிற்கு சர்வதேச சட்டத்தையும், உலக மக்கள் கருத்துக்களையும், அவமரியாதை செய்கிறது என்பதை காட்டுகின்ற அளவுகோலாகும். அத்தகைய, "சான்றுகள்" எதையாவது அமெரிக்கா தாக்கல் செய்யும்போது, அந்த சான்றுகள் பெறப்பட்டதற்கான, சூழ்நிலைகளை கருதி பார்க்கவேண்டும். சூழ்நிலைகளே, களங்கம் நிறைந்தவை லஞ்சம் கொடுப்பது, மனோத்தத்துவ அடிப்படையில் அச்சுறுத்துவது சித்ரவதை செய்வது அல்லது இந்த மூன்றையும் இணைத்தே செயல்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்போது, இத்தகைய நடவடிக்கைகள் மக்களையே அவதூறு செய்பவை என்று கருதுவதற்கு இடமிருக்கின்றது. இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வாஷிங்டனின் சர்வதேச எதிரிகள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதனுடைய கசப்பான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வழக்கம்போல், அமெரிக்க அரசு தனது கிரிமினல் நோக்கங்களுக்கு மிகுந்த மரியாதையான விளக்கத்தை தருகின்றது. சதாம் ஹூசேன், பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து ஈராக் விஞ்ஞானிகளை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தினால், உந்தப்பட்டு, அமெரிக்க அரசு இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. ஈராக்கிலிருந்து வெளியேறி வருகின்ற விஞ்ஞானிகளுக்கு கிரீன் கார்டுகள், வீடுகள் மற்றும் பண வசதி செய்து தர அமெரிக்கா தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈராக், ஆயுதங்களை குவித்து வருகிறது என்பதற்கு புஷ் நிர்வாகத்திற்கு "ஆதாரம்" தரவேண்டும் என்பதுதான், ஈராக் விஞ்ஞானிகளின் கடமையாகும். கடத்தி வரப்படும் ஈராக் விஞ்ஞானிகள் அமெரிக்க நிர்வாகத்தோடு ஒத்துழைக்க மறுப்பார்களானால், அவர்கள் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது "சட்ட விரோதமாக போர் புரிபவர்கள்" என முத்திரை குத்தப்படுவார்கள், அல்லது ஈராக் சர்வாதிகாரியிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சதாம் ஹூசேனின் இரகசிய போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.

அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஈராக் விஞ்ஞானிகளை கடத்திக்கொண்டு வருவது போருக்கான இன்னொரு சாக்குப்போக்கை உருவாக்கும். அதுமட்டுமல்ல, ஈராக்கின் தொழில்நுட்ப அடிப்படைகளை சிதைந்துவிடும். மேலும் பத்து ஆண்டுகளாக பொருளாதார தடைகள் மற்றும் போரினால் சிதைந்துவிட்ட பொருளாதாரம் மேலும், மோசம் அடையும்.

ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் நடவடிக்கைகள் மும்முரமாக ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும்போதே, ஈராக் விஞ்ஞானிகளை கடத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் ஆர்வம் வளர்ந்தது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்டும் மற்றவர்களும், ஆயுத தயாரிப்பு தொழிற்கூடங்கள் என்று ஈராக்கில் சுட்டிக்காட்டிய, இடங்களில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை, நிரூபிக்கும் எந்தவித ஆதாரத்தையும் காண முடியவில்லை.

ஐ.நா. ஆய்வாளர்களுக்கு "முழு ஒத்துழைப்பு" தருவதாக அமெரிக்கா பகிரங்கமாக உறுதிமொழி அளித்துக்கொண்டு இருந்தாலும், ஆயுதங்கள் தொடர்பான சோதனை முடிவுகள் எதுவாக இருந்தாலும், ஈராக்குடன் போருக்குச் செல்லும் தனது முடிவை, மாற்றிக் கொள்ள போவதில்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஆயுத ஆய்வாளர்களை மிரட்டுவதற்கு, புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் ஆயுத ஆய்வாளர்களிடையே வெறுப்பை உருவாக்கி உள்ளது.

"எங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக நீங்கள் கூறுகிறீர்கள், எங்களை அங்கே அனுப்பியது (ஈராக்கிற்கு) சர்வதேச சமுதாயமும், ஐ.நா. அமைப்பும் நாங்கள் அமெரிக்க அரசிற்காக பணியாற்றவில்லை, பிரிட்டீஷ் அரசிற்காக பணியாற்றவில்லை" என இரசாயன ராக்கெட் தொடர்பான ஆய்வுக்குழு தலைவர் டெமட்ரியஸ் பெரிகோஸ் (Demetrius Perricos) குறிப்பிட்டார். ஏற்கனவே, ஈராக்கில் இருப்பதாக அமெரிக்கா கூறிய எந்த ஆதாரத்தையும் (புலனாய்வு தகவலையும்) வாஷிங்டன் ஆய்வாளர்களுக்கு தரவில்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

இந்த வார ஆரம்பத்தில் இராணுவ தலைமையத்தில் புஷ் உரையாற்றும்போது, பல அபத்தமான கருத்துக்களை கூறியிருக்கிறார். ஐ.நா. ஆய்வாளர்கள் செயல்பாட்டை அலட்சியமாக மதிப்பிட்டிருக்கிறார். ஆய்வாளர்கள் ஈராக்கிடம் எந்தவிதமான, பயங்கர ஆயுதமும் இல்லை என்று சான்று அளித்தாலும் ஐ.நா. தீர்மானங்களை ஏற்றுக்கொண்டதாக அது ஆகாது, அமெரிக்க படையெடுப்பிலிருந்து ஈராக்கை காப்பாற்றுவதற்கு ஐ.நா. ஆய்வாளர்களது அறிக்கை எந்த வகையிலும் உதவுவதாக அமையாது என்று புஷ் கூறியுள்ளார்.

"ஒரு பரவலான பெரிய நாட்டில் பயங்கரமான ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடிக்கும் ஆற்றலோ, அல்லது கடமையோ, ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களுக்கு இல்லை. தன்னிச்சையாக, வருகின்ற சான்றுகளை மற்றும் ஆயுத குறைப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதான் ஆய்வாளர்களது கடமையாகும். ஏற்கனவே, ஐ.நா. கட்டளையிட்டுள்ளபடி முழுமையான சான்றுகளை தரவேண்டியது சதாம் ஹூசேனின் பொறுப்பு" - இவ்வாறு புஷ் கூறியுள்ளார்.

இப்படி இரட்டை வேடம் போடுகின்ற முறையிலான பேச்சில் மிகவும் ஆபத்தான ஒரு பொருள் புதைந்து கிடக்கின்றது. ஈராக்கின் ஆயுதங்கள் தயாரிப்பு திட்டம் தொடர்பாக புஷ் நிர்வாகம் திரட்டியுள்ள தகவல்கள்தான், அமெரிக்கா கருத்தில் எடுத்துக்கொள்ளும் முக்கிய அம்சம் என அமெரிக்க நிர்வாகம் கூறியுள்ளது. இந்தத் தகவல் புலனாய்வு தகவல், அமெரிக்க அரசிற்கு மட்டுமே தெரியும். ஈராக் அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை அமெரிக்க அரசிற்கு மட்டுமே தெரிந்த தகவல்களை அளவுகோலாக கொண்டுதான் மதிப்பீடு செய்யப்படும். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அறிக்கைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஈராக் விஞ்ஞானி ஒருவரிடம் அமெரிக்க அதிகாரிகள் திரட்டிய, குற்றம் சாட்டும் ஆதாரம் கூடுதல் "சான்றாக" எடுத்துக்கொள்ளப்படும்.

இத்தகைய இரட்டைப்போக்கு ஆயுத ஆய்வாளர்களது அறிக்கையையும், ஈராக் சனிக்கிழமையன்று தாக்கல் செய்யும். இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான அறிக்கையையும் ஒதுக்கித்தள்ளுவதாக அமைந்திருக்கின்றது. ஈராக்கின் அறிக்கை எதுவாக இருந்தாலும், அதை புறக்கணித்துவிட்டு, ஐ.நா. தீர்மானங்களை ஈராக் மீறிவிட்டது என காரணம் காட்டி நடவடிக்கையில் இறங்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது. அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே வாஷிங்டன் செயல்படும் என கூறிவிட்டு, ஐ.நா.விற்கு ஒத்துழைப்பு தருவதாக அமெரிக்கா கூறுவது இரட்டை வேடப் போக்கையே காட்டுகின்றது.

ஐ.நா. தடை விதித்துள்ள ஆயுதங்கள் உற்பத்தி திட்டங்கள் தன்னிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டு அமெரிக்க நிர்வாகத்திற்கு வியப்பளிக்கின்ற வகையில் ஈராக் அறிக்கை வெளியிடுமானால், அந்த நேரத்திலும், அமெரிக்கா, ஐ.நா. தீர்மானத்தை ஈராக் மீறிவிட்டதாக கூறி நடவடிக்கையில் இறங்கும். எப்படியும், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டுமென்ற அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கையே இது காட்டுகின்றது. ஈராக் என்ன நடவடிக்கையில் இறங்கினாலும், அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்றியே தீரும்.

இதையேதான், அந்த வாரத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை பத்திரிகைத் தொடர்பு அதிகாரி பிளைஷர் குறிப்பிட்டார். "சதாம் ஹூசேன், மக்களைக் கொல்லும் ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டால், அவர் ஐ.நா. தீர்மானங்களை மீறுகிறார். மீண்டும் உலகை ஏமாற்றிவிட்டார் என்று கூறுவோம். அதே நேரத்தில் எதுவும் இல்லையென சொல்வாரானால், அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பொய் சொல்கிறார் என நிலைநாட்டுவோம்" என்பதாக அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்க செய்தி ஊடகங்கள், ஆயுதங்கள் சோதனைகள் தொடர்பான அமெரிக்க அதிபரின் இரட்டை வேடப்போக்கை கடமை தவறாது எதிரொலித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை அன்று நியூயோர்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில் கீழ்கண்டவாறு கூறியிருக்கின்றது. "கலிபோர்னியா போன்ற பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ஈராக் போன்ற நாட்டில், 100 அல்லது அதற்கு சற்று அதிகமான ஆயுத நிபுணர்கள் மக்களை கொன்று குவிக்கும், ஆயுதங்களை கண்டுபிடிக்க எந்தவிதமான வழியும் இல்லை" -ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென, அறிவுரை கூறிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் தற்போது ஐ.நா. ஆய்வாளர்கள் நடவடிக்கையே பயனற்றது என்று புறக்கணித்துவிட்டனர்.

அதேபோன்று டைம்ஸ் பத்திரிகையும், தகவல் அறிந்த ஈராக்கியரின் ஒத்துழைப்பை பெறுகின்ற அமெரிக்க நிர்வாகத்தின் விருப்பத்தை எதிரொலித்தது. டிசம்பர் முதல் தேதி டைம்ஸ் வார இதழின் வெளியுறவுக் கொள்கை விமர்சனக் கட்டுரையாளர், தோமஸ் பிரிட்மன், ஈராக் விஞ்ஞானிகளை பிடித்து அவர்களிடம் அந்நாட்டின் ஆயுதங்கள் தயாரிப்பு திட்டத்திற்கான ஆதாரத்தை திரட்ட வேண்டும் என எழுதியிருக்கிறார். இதை உலக சோசலிச வலைத் தளம், டைம்ஸ் இன் பிரிட்மன் பென்டகனின் பணியை நிறைவேற்றுகின்றார் என தலைப்பிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை வாரியத்தலைவர் ரிச்சார்ட் பேர்ள் அண்மையில் ஆற்றிய உரையை மீண்டும் எதிரொலிக்கின்ற வகையில் பிரிட்மன் கட்டுரை எழுதியிருக்கிறார். அண்மையில் ரிச்சார்ட் பேர்ள் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றினார். அவர் ஈராக்கிற்கு எதிரான போரை முழுமையாக ஆதரிப்பவர்.

ஈராக்கின் பிரகடனத்தை ஆராய்வதற்கு பல வாரங்கள் ஆகும். மேலும், சோதனைகள் நடத்துவதற்கு ஓராண்டு ஆகலாம் என ஐ.நா. அதிகாரிகள் கோடிட்டு காட்டினர். அவ்வளவு காலம் காத்திருக்க புஷ் நிர்வாகத்திற்கு பொறுமையில்லை. இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே முடிக்கிவிடப்பட்டு விட்டன. ஈராக்கை தாக்கக்கூடிய தொலைவில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். நான்கு விமானந்தாங்கி கப்பல்கள் போர் வீரர்களுடன் பாரசீக வளைகுடாவிலும், மத்திய தரைக்கடல் பகுதியிலும் நடமாடயிருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved