World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

Zambia: New president installed amidst accusations of vote rigging

சாம்பியா: வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

By Barry Mason
5 January 2002

Back to screen version

ஆட்சியிலுள்ள பலகட்சி ஜனநாயகத்துக்கான இயக்கத்தின் (MMD- Movement for Multi-party Democracy) வேட்பாளரான லேவி மவனவாசா (Levy Mwanawasa) ஜனவரி 2 ல் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சாம்பியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். 10 எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இத்தேர்தல் முடிவுகள் மோசடியானவை எனக் கண்டனம் செய்ததுடன் தலைநகர் லுசாக்காவில் நடைபெற்ற இதற்கான வைபவத்தையும் அவர்கள் பகிஸ்கரித்தார்கள்.

டிசம்பர் 27 அன்று புதிய ஜனாதிபதியையும் 150 தேசிய பேரவை உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் முகமாக வாக்காளர்கள் தேர்தல் சாவடிகளில் வாக்களித்தனர். சாம்பியா 11 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. 5 மில்லியன் பேர்கள் வாக்களிக்க தகமையுள்ளபோதும் 2.6 மில்லியன் பேர்களே அதற்கு பதிவு செய்துள்ளனர். குறைவான வாக்களர்களே திரும்புவர் என ஆரம்பத்தில் முன்கணித்திருந்தபோதும், பாரிய எண்ணிக்கையான வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்காக வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற ஜனாதிபதியான பிரடரிக் சிலுபா (Frederick Chiluba) கடந்த பத்து வருடத்தில் இரண்டு தடவைகள் ஆட்சியிலிருந்தார். இவர், 1964 ல் பிரித்தானியாவிலிருந்து சாம்பியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜனாதிபதியாக இருந்த கென்னத் கவுண்டா (Kenneth Kaunda) ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், 1991 ல் முதல்முறையாக தேர்தல் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். உணவு மாணியங்களை வெட்டித் தள்ளியதனால் கென்னத் கவுண்டாவின் செல்வாக்கு சரிந்துபோக, அவர் ஆட்சியிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார்.

தொழிற்சங்க அதிகாரிகளின் பின்னணியைக் கொண்ட சிலுபா, ஊழல் மிகுந்த ஆட்சி முறையை மாற்றி நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தார். அவர் உண்மையில் செய்தது என்னவெனில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை மற்றைய ஆபிரிக்கத் தலைவர்களிலும் பார்க்க மிகக் கடுமையான முறையில் அமுல் செய்ததுதான்.

பதவியில் இருப்பதற்காக தனது அரசியல் எதிரிகளை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சிலுபா, அரசியல் சாசனத்தை நிராகரித்து மூன்றாவது முறையாகவும் ஆட்சியிலிருக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்சியான MMD யிலிருந்து வந்த கடும் எதிர்ப்பையும், நாட்டு மக்களுடைய பாரிய எதிர்ப்பையும் முகம் கொடுக்க முடியாத நிலையில் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இப்போராட்டத்தின் உச்சத்தில் MMD யிலிருந்து பிரிந்தவர்கள் ஜனநாயகத்துக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான முன்னணி (FDD- Front for Democracy and Development) ஐ உருவாக்கினார்கள்.

தற்போது வந்துள்ள ஜனாதிபதி மவனவாசா 1994 வரை சிலுபாவுக்கு உப ஜனாதிபதியாக இருந்தவராவர். அவர் ஒரு பொம்மைத் தலைவராக இருப்பதுடன், உடல்நலமற்றுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. சிலுபா தொடர்ந்தும் MMD யின் தலைவராக இருப்பதோடு இப்பதவியினூடாக திரைமறைவுக்குப் பின்னாலிருந்து உண்மையான அதிகாரத்தைப் பாவிக்க முயற்சி செய்வார்.

150 தேர்தல் தொகுதிகளில் 148 எண்ணப்பட்டதுடன், சாம்பியாவின் தேர்தல் கமிஷனால் வெளிவிடப்பட்ட ஜனாதிபதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் 29.16 வீதம் மவனவாசாவுக்கும், 27.15 வீதம் ஐக்கிய தேசிய அபிவிருத்திக்கான ஐக்கிய கட்சியின் (UPND- United Party for National Development) ஆன்டர்சன் மசோக்காவுக்கும், 13.16 வீதம் ஜனநாயக மற்றும் அபிவிருத்திக்கான மன்றத்தின் (FDD- Forum for Democracy and Development) கிரிஸ்டியன் தம்போவுக்கும் கிடைத்தது. மற்றைய கட்சி வேட்பாளர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 30.53 வீதமாகும்.

காமன்வெல்த்திலிருந்தும், ஐரோப்பிய யூனியனிலிருந்தும், ஐக்கிய ஆபிரிக்க அமைப்பிலிருந்தும், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்திலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் காட்டர் மையத்திலிருந்தும் வந்திருந்த 300 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களால் தேர்தல் கண்கானிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனின் கண்கானிப்புத் தலைவரான மைக்கல் மெடோகுரோப்ட் (Michael Meadowcroft) ''பல முறைகேடுகள்'' நடந்துள்ளதுபற்றிய விசாரனைகள் நடப்பதாக தெரிவித்தார். தேசிய அரசுப் பேரவை வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விழுந்துள்ள வாக்குகளுக்கிடையிலான முன்னுக்குப் பின்னான முரண்பாடுகள் பற்றிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் அவர் கூறுகையில் ''கூப்பர் பெல்ட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் 13.000 மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். ஆனால் அதே இடத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வெறும் 4.000 வாக்குகளே போடப்பட்டுள்ளன. இது மிகையாகக் கிடைத்துள்ளன என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. தேர்தல் முடிவுகளை அவர்கள் அறிவிக்கும் முன்பு தேர்தல் கமிஷன் இந்த முரண்பாடுகளை விசாரிக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

உள்ளூர் கண்கானிப்பாளர்களால் 2001 அமைக்கப்பட்ட கூட்டிணைவின் தலைவர் Ngande Mwanajiti பல வாக்குச் சீட்டு மோசடிச் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளதை தான் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ''தேர்தல் முடிவுகளில் தலையீடுகள் இருந்துள்ளதால் நாங்கள் இதனை சாதாரண ஊகமாக எடுக்க முடியாது'' என்றும் கூறினார்.

முதல் வார இறுதியில் எதிர்பார்த்தபடியே ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இருந்ததினால் இதன் காரணமாக டிசம்பர் 29ல் புதிய ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் செய்ய தயாராகிக்கொண்டார். இத் தேர்தலைத் தொடர்ந்து செல்வந்த வியாபாரியான UPND வேட்பாளர் ஆன்டர்சன் மசோக்கா, ஐரோப்பிய யூனியன் கண்கானிப்பாளர்கள் அவருக்கு 36 வீத வாக்குகளையும் மவனவாசாவுக்கு 23 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளதை ஒப்பிட்டுக்காட்டி உரிமை கோரியுள்ளார். ''நான் ஒருபோதும் இந்த மோசடித் தேர்தலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை மற்றும் சாம்பியா மக்களும் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை'' என்றார்.

ஜனவரி 1 காலையில் உயர் நீதிமன்ற நீதிபதியான பீற்றர் சித்தென்ஜி (Peter Chitengi) ஐ மசோக்காவும் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் சந்தித்து வாக்குகள் மீள எண்ணப்பட்டு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றனர். இதுபற்றி இன்று அவர்களையும் சந்தித்து அவர்கள் தரப்பு விவாதத்தையும் கேட்கிறேன் என நீதிபதி கூறினார்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்தனர். அவர்கள் சிலுபாவின் வாசஸ்தலத்தை நோக்கி ஊர்வலமாக சென்றபோது பொலிசாரோடு கைகலப்பிலும் ஈடுபட்டார்கள். ரொயிட்டர் செய்தியாளரிடம் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் தெரிவிக்கையில், ''நாங்கள் ஒரு மாற்றம் வேண்டி வாக்களித்தோம் மற்றும் எமக்கு மாற்றம் கிடைத்ததாகவும் நம்பினோம் ஆனால் இப்போது எம்மிடமிருந்து யாரோ ஒருவர் கொள்ளையடித்துக் கொண்டுபோக விரும்புவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்'' எனக் கூறினார்.

ஜனவரி 2 வரை அவர் ஒரு முறையான அறிவிப்பு செய்யமாட்டாரென நீதிபதி சித்தென்ஜி கூறியதுடன், மவனவாசாவின் வெற்றியை அவர் அறிவித்தபொழுது வெற்றியாளர் உடனடியாக பதவியேற்பு வைபவத்தை ஆரம்பித்தனர்.

மவனவாசா ஜனாதிபதியாக பதவியில் அமர்ந்தது சாம்பியாவில் பதட்டமான சூழ்நிலைமையை உருவாக்கியுள்ளது. வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் ஆகியன லுசாக்காவிலும் மற்றும் கொப்பர் பெல்ட் பிராந்தியத்திலுள்ள Kitwe நகரிலும் மூடப்பட்டிருந்தன. இவ்விடங்களில் குறிப்பாக சிலுபாவுக்கு பலமான எதிர்ப்பு நிலவுகிறது. 1999 ல் செப்புச் சுரங்கங்களை தனியார்மயப்படுத்தியதானது பாரியளவில் வேலைகள் ஒழிக்கப்பட்டன. சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் புகையிரதத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் இராணுவத்தையும் பொலிசையும் கட்டவிழ்த்து விட்டுஅடக்கப்பட்டன.

கடந்த வருடம் யூனில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை சிலூபா அமுல்படுத்தியபோது அதனை எதிர்த்து பொது சேவைத் தொழிலாளர்கள் உணவு விலைகளின் ஏற்றத்தை சமாளிக்க 100 வீத சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். லுசாக்காவிலுள்ள முக்கிய தாதிகள் பயிற்சிக் கல்லூரியிலுள்ள தாதிமார்களின் கூற்றுப்படி சுகாதார சேவைகள் மீதான சிலூபாவின் தாக்குதல்கள் காரணமாக மரணவீதம் இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளன.

பாரளுமன்றத்துக்கான தேர்தல் தொகுதிகளின் வாக்கு முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவுள்ளன. இதில் MMD பாரிய பெரும்பான்மையை இழக்கலாமென ஆய்வாளர்கள் முன்கூட்டியே கூறியுள்ளனர். ஆனால் எந்தவொரு எதிர்க்கட்சி வேட்பாளர்களும் சாம்பிய தொழிலாள வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பதிலீடாக இல்லை. உண்மையில் அதிகமான எதிர்க்கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் ஆளும் MMD யினுடைய கிளை வாரிசுகளாகவே உள்ளனர்.

பெரும்பான்மையான சாம்பிய மக்கள் கொடிய வறுமைக்கு முகம் கொடுக்கும்போது, நாடு வளமான கனிவளங்களையும் விவசாயத்துக்கான நல்ல ஆற்றலையும் கொண்டிருக்கின்றது. தினமும் 1 டொலருக்கும் குறைவான வருமானத்துடனேயே முக்கால்வாசி மக்கள் வாழ்க்கையை ஓட்டத் தள்ளப்பட்டுள்ளனர். Africa Confidential பத்திரிகையின் படி 80 வீதமான கிராமத்தில் வாழும் மக்கள் வறுமையில் வாழ்ந்து வருவதுடன் 60 வீதமான மக்கள் நீடித்த போஷாக்கின்றி வாடுகின்றனர். முக்கிய உணவான சோளத்தின் பற்றாக்குறையின் விளைவாக அதனது விலை 19 வீதத்தால் உயர்ந்துள்ளது. அடுத்த உணவான சோளக்கதிர் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சாம்பியா பொதுமக்கள் சிலூபாவின் ஆட்சியை வெறுக்கின்றனர். தேர்தல் தினத்தன்று பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியிலேயே அவரால் நடோலாவிலுள்ள வாக்குச் சாவடிக்கு செல்ல முடிந்தது. பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டளைகளையும் மீறிய கூட்டமானது தமது வரிசைகளையும் உடைத்து சிலூபாவை நெருங்கினர். அவர் அங்கிருந்து வெறியேறும்போது கூட்டத்தினர் ''நீ அனுபவித்தது போதும், போய் அமைதியாய் ஓய்வெடு'' என்று கூச்சலிட்டனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved