World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The political failure of the PLO and the origins of Hamas

பி.எல்.ஓ வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்

பகுதி2

By Jean Shaoul
6 July 2002

Back to screen version

1973-ல் அரபு நாடுகள் இரண்டாவது முறையாக இஸ்ரேலிடம் தோற்றுப்போயின இதனைத் தொடர்ந்து இஸ்ரேலை ஆதரித்த நாடுகளுக்கு பெட்ரோல் வினியோகம் தடை செய்யப்பட்டது, பெட்ரோல் விலைகள் நான்கு மடங்கு உயர்ந்தன. இதனால் நாசரின் எகிப்துடன் இவற்றிற்கு கருத்து வேறுபாடு இருந்த, அரபு தீபகற்பத்தின் பிற்போக்கு நிலப்பிரபு ஆட்சிகளுக்கு வருமானம் பெருகிற்று மற்றும் அது அவர்களின் செல்வாக்கை உயர்த்த இருந்தது. இஸ்லாமிய போராளி குழுக்கள் எண்ணெய் வளமிக்க நாடுகளின் புதிதாக ஈட்டப்பட்ட பணத்திலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்தன. சவூதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் தங்களது நிலையை அச்சுறுத்தக் கூடிய, தொழிலாள வர்க்கத்திற்குள்ளே எந்தவித முற்போக்கு அரசியல் போக்குகளும் உருவாவதை நசுக்கவும் அதற்கு எதிராகவும், முஸ்லிம் சகோதரத்துவ (Brotherhood) அமைப்புக்கும் அதேபோன்ற ஏனைய அமைப்புக்களுக்கும் பண உதவி அளித்தன. வளைகுடா நாடுகளில் வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் பணம் அனுப்பியதால் எகிப்திய மற்றும் ஜோர்டானிய இயக்கங்களும் வலுப்பெற்றன.

ஈரான், எகிப்து, செளதி அரேபியா, சூடான் மற்றும் காசாவில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டே போயிற்று. முக்கியமாக மிகவறுமை அடைந்த தட்டினர் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மத்தியில் இவை வலுப்பெற்றன. ஈரானில் ஷாவின் கொடுங்கோலாட்சிக்கு எதிரான வெற்றிகரமான மதவாத எதிர்ப்பு மற்றும் 1979 புரட்சி ஆகியன ஒரு இஸ்லாமிய நாட்டை அமைக்க முடியும் என நிரூபணத்தை வழங்கின. இதனால் பல ஷைட் குழுக்களின் வலைப்பின்னல் தோன்றி வலுவடைந்தன. லெபனானில் அமல் மற்றும் ஹெஜ்புல்லாவும், ஈராக் ஆட்சிக்கு எதிராக ஷியைட் (Shi'ite) எதிர்ப்பு சக்திகளும், வளைகுடா நாடுகளில் ஷியைட் சிறுபான்மை குழுக்களும் இவற்றில் அடங்கும். ஈரானிய புரட்சி வெற்றி பெற்றதால் சுனி (Sunni) போன்ற இதர முஸ்லீம் போக்குகளும் வளர்ச்சியடையத் தூண்டின.

இதைத் தவிர, இந்த இஸ்லாமிய போராளி இயக்கங்களுக்கு இன்னொரு முக்கிய ஆதரவாளர் இருந்தது. மத்திய கிழக்கிலும் சர்வதேச ரீதியாகவும் மாஸ்கோவின் செல்வாக்கிற்கு ஒரு எதிர்ப்பை வழங்க அவற்றின் செல்வாக்கை முன்னேற்றுதற்கும், சிரியாவில் பாத் கட்சி போன்ற தீவிரவாத தேசியவாதிகளுக்கு ஒரு அரசியல் ஆயுதமாகவும், ஜோர்டான் மற்றும் செளதி அரேபியாவில் பிற்போக்கு முடியாட்சிகளுக்கான ஒரு அடிச்சுமையாகவும், ஒடுக்கப்படும் மக்களை தீவிர சொற்ஜாலங்களால் திசை திருப்ப ஒரு வெளிப்படையான கம்யூனிச விரோத சக்தியாகவும் அவற்றின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் தீர்க்கமான பாத்திரத்தை வாஷிங்டன் ஆற்றியது.

சோவியத் ஒன்றியத்தை சீர்குலைக்க 1980-89-வரை, அமெரிக்க வரலாற்றில் காணாத அளவிற்கு ஆப்கானிஸ்தானுக்கு சிஐஏ மாபெரும் உதவி அளித்தது. இது காபூலில், சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கான் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் தீவிரவாத முஜாஹைதின் குழுக்களுக்கு ஆயுத மற்றும் பண உதவி அளித்தது. இவற்றுள் தீவிரவாத இயக்கமான ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா வலைப்பின்னலும் அடங்கும். எகிப்து, சவுதி அரேபியா, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் மற்றும் எங்கிலும், இவ்வாறு அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் இராணுவப் பயிற்சி பெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் பதிலுக்கு தீர்க்கமான பங்கை வகித்தன.

ஈரானிய புரட்சிக்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றிய அமெரிக்க கருத்து மாறிவிட்டது. இப்புரட்சி அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியும் வளைகுடாவில் அமெரிக்காவின் நலன்களுக்குப் பொறுப்பாளருமாக இருந்ததை அதிகாரத்தில் இருந்து அகற்றியது. ஆரம்ப காலத்திலிருந்தே ஈரானிய புரட்சி அமெரிக்காவிற்கு எதிராகவும் யூதர்களுக்கு எதிராகவுமான பண்பை வெளிப்படையாகவே எடுத்தது.

இஸ்லாமிய போர்ககுணம் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு கூட்டாளிகளை பாதிக்க ஆரம்பித்தது. நவம்பர், 1979-ல் சவுதி ஆட்சிக்கு எதிரான போர்க்குணம்மிக்க இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் குழு மெக்காவில் உள்ள பெரிய மசூதி (Grand Mosque)-ஐ கைப்பற்றியது. சவுதி அரசு பல நூற்றுக்கணக்கான பேரை கொலை செய்த பின்பே, ஜோர்டானிய மற்றும் பிரெஞ்சு இராணுவ ஆலோசகர்களின் உதவியுடன்தான் கிளர்ச்சியை ஒடுக்க முடிந்தது. பின்னர் 1981-ல், எகிப்து அதிபர் அன்வர் சதாத் வளர்த்துவிட்ட அதே எதிர்ப்பு சக்திகள்தான் அவருக்கு எதிராக ஆயுத எழுச்சிக்கு அழைப்பு விடுத்தது. அதன் பின்னர் விரைவிலேயே, அவர் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்ததை எதிர்த்த, இஸ்லாமிய (ஜிஹாத்) புனிதப்போர் அமைப்பைச் சார்ந்த இராணுவ அதிகாரிகள், அவரைக் கொன்றுவிட்டனர். லெபனானில், ஏப்பிரல் 1983ல், இஸ்ரேலினால் நியமிக்கப்பட்ட மற்றும் மரோனைட்டுகளின் (Maronite) ஆதரவு பெற்ற ஜனாதிபதி அமின் கெமாயிலை அமெரிக்க படைகள் வெளிப்படையாகவே ஆதரித்தன. ஆனால் இஸ்லாமிக் ஜிஹாத் அமெரிக்க தூதரகத்தை அழித்தது. 1983 அக்டோபரில், மற்றொரு தற்கொலைப் படை அமெரிக்க கடற்படையின் நிலப்படைப் பிரிவின் தடுப்பு அரணை அழித்தது. அடுத்த சில ஆண்டுகளில், பல ஷியைட் குடிமக்கள் படைக் குழுவினர் அமெரிக்கரையும் மற்ற மேற்கத்திய நாட்டவரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தெற்கு லெபனானில் ஹெஜ்புல்லா இஸ்ரேலிய படைகளைத் தாக்கிற்று. 1984-அளவில் றேகன், அமெரிக்காவின் நிலைமை மோசமானது என்று ஒப்புக்கொண்டு லெபனானிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

ஆக்கிரமிப்புக்குட்பட்ட எல்லைப் பகுதிகளில் அரசியல் இஸ்லாம் உதயம்

செப்டம்பர் 1982க்குப் பின்னர், பிஎல்ஓ துனிசியாவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டவுடன், சோவியத் அதிகாரத்துவத்திடமிருந்தும் அரபு முதலாளித்துவ அரசுகளிடமிருந்தும் ஆதரவு கிடைக்காமையால், அரபாத் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் மக்களின் போராட்டத்தில் மிகக் குறைந்த பங்கையே ஆற்றினார், மக்களால் அவர் செயல்திறன் அற்றவராயும் லஞ்சத்தில் ஊறினவராகவும் இனம்காணப்படலானார். பாலஸ்தீனியர்கள் அரபு ஆட்சிகளின் ராடார் திரைகளில் விழுந்திருந்த சூழ்நிலைகளின் கீழ், ராஜதந்திர சூழ்ச்சி முறைகளுக்கு ஆதரவாக, அவர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டார். 1987 நவம்பரில், ஜோர்டான் தலைநகரான அம்மானில் அரபு உச்சிமாநாடு நடைபெற்றது, பிரதானமாக ஈரான்-ஈராக் போர் பற்றி கவனிக்க அழைப்பு விடுத்தது, பாலஸ்தீனிய பிரச்சினையை பின் யோசனையாகவே நிகழ்ச்சிநிரலில் வைத்தது. பாலஸ்தீனிய பிரச்சனை பற்றி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. லண்டன் மற்றும் பாரிஸ் தெருக்களில் வெளிப்படையாகவே கோஷ்டிகள் உட்பூசல் காரணமாக அவை மோதிக்கொண்டன.

மீண்டும் முஸ்லிம் சகோதரத்துவம், மதச்சார்பற்ற தேசியவாதத்தின் நெருக்கடி விட்டு சென்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்பிற்று. சகோதரத்துவத்திற்கு அரபு முதலாளித்துவ வர்க்கம் தாராளமாக பண உதவி அளித்தது. இவை பாலஸ்தீனிய பிரச்சனையை ஒரு தீவிர ஏகாதிபத்திய விரோத உணர்வாகவும் தங்கள் சொந்த சலுகைகளுக்கு எதிராக உள்ள ஆபத்தான மூலமாகவும் கருதின. இவை சகோதரத்துவத்தை பிஎல்ஓவுக்கு எதிரிடையாக வளர்க்க முயற்சித்தன. மற்றும் பாலஸ்தீனிய உழைக்கும் வர்க்கத்தை பிளவுப்படுத்தும் ஒரு சாதனமாக அதனை வளர்க்க விரும்பின.

ஜோர்டான் ஆதரவுடன் காசாவில் உள்ள சகோதரத்துவம் மேற்குக்கரை மற்றும் ஜோர்டானில் உள்ள சகோதரத்துவத்தினருடன் இனைந்தனர். சவுதி அரேபியாவிடமிருந்தும் ஜோர்டான் முடியாட்சியிடமிருந்தும் ஊற்றெடுத்த பணத்தை சகோதரத்துவம் மசூதிகள், கலாச்சார நிறுவனங்கள் மற்றும் சமூக சேவைகளின் வலைப்பின்னல்களைக் கட்ட பயன்படுத்திற்று. ஏழ்மை பீடித்த பாலஸ்தீனியர்களுக்கு இவை வாழ்வாதாரத்தை வழங்க இருந்தன.

காசாவில் உள்ள சகோதரத்துவத்தின் தலைவர் ஷேக் முகம்மது யாசின் என்னும் ஆசிரியர். இவர் 1936-ல் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளை உரிமைப் பிரதேச பாலஸ்தீனப் பகுதியில் (Mandate Palestine) பிறந்தார். அவர் நிலம்படைத்த ஒரு வசதியான நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தார். இவரது குடும்பம் 1948ல் வெளியேறி காசாவில் அகதி முகாமில் தங்கியிருந்தது. 1973-ல் இவர் மதம், கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முன்னின்று செயல்படும் அமைப்பாக இஸ்லாமிய பேராயம் (Islamic Congress) என்னும் அமைப்பை நிறுவினார்.

சகோதரத்துவத்தின் பிரதான நோக்கம் "இஸ்லாமிய தனிப்பண்பை நிறுவுதல்" என்பதாகும். இஸ்ரேல் அரசை அழிப்பதற்கான அதன் கோரிக்கை இருப்பினும், தகுந்த சமயத்தில், அனைத்து விதமான ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளவில்லை. பதிலாக அது பிஎல்ஓவின் மதசார்பற்ற தேசீயவாதத்திற்கு பிஎல்ஓவின் "நாத்திக" கடமைப்பாட்டிற்கு எதிராக பிஎல்ஓவுடன் கலாச்சார மோதலில் இறங்கிற்று.

ஷேக் யாசின், யாசிர் அரபாத் தொடர்பான அவரது வெறுப்பை ஒருபோதும் மறைத்ததில்லை. மதச்சார்பற்ற பிஎல்ஓ தலைமையை பன்றி கறி சாப்பிடுபவர், மதுபானம் அருந்துபவர் என்று யாசின் அவதூறாகப் பேசினார். அவர் கம்யூனிசத்தின்பாலும் பாலஸ்தீனிய கட்சிகளான பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (Popular Front for Liberation of Palestine -PFLP), பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னனி (Democratic Front for the Liberation of Palestine -DFLP) போன்ற இடதுசாரி தேசியவாத பிரிவுகளுக்கும் (கன்னைகள்) கூட மிகக் குரோதமாக இருந்தார்.

இதன் காரணமாக, எதிர்பாராத இடத்திலிருந்து --இஸ்ரேலிலிருந்து யாசினுக்கு ஆதரவு கிடைத்தது. சகோதரத்துவத்தை, பிஎல்ஓவுக்கு ஒரு மாற்றாக இஸ்ரேலும் அதன் இராணுவமும் ஊக்குவித்தன. இஸ்ரேலை அழிப்பதற்கான அதன் அழைப்பு இருந்தபோதிலும், பயங்கரவாதத்திற்கு அதன் எதிர்ப்பு மற்றும் தானதர்ம கல்வி முயற்சிகள் பிஎல்ஓவுக்குப் பதிலாக முஸ்லிம் சகோதரத்துவத்தை விரும்பத்தக்கதாக ஆக்கியது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகிகள் பாலஸ்தீனியர்களைப் பிளவுபடுத்த இஸ்லாமிய குழுக்களைப் பயனுள்ள கருவியாகப் பயன்படுத்த எண்ணினர். காசாவின் முன்னாள் இராணுவ ஆளுநர், General Yitzhak Segev, தான் எப்படி பிஎல்ஓ மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்களுக்குப் பணம் உதவி அளித்தார் என்பது குறித்து விளக்கம் அளித்தார். பத்திரிகையாளர் Graham Usher: "எனக்கு இஸ்ரேலிய அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தைத் தருகிறது. பிஎல்ஓவை ஆதரிக்கும் இடதுசாரி அணிக்கு எதிராக நிற்கும் ஒரு அணியை உருவாக்க உதவியாக, இதை இஸ்லாமிய குழுக்களுக்கு மசூதிகள், மத பள்ளிகள் மூலமாக நாங்கள் நிதி உதவி அளிக்கிறோம்." என அவர் கூறினார்.

David Shipler என்னும் நியூயோர்க் டைம்ஸ்- ஐ சார்ந்த பத்திரிகையாளர் எழுதுவதாவது, 1980-ல் இஸ்லாமிய தீவிரவாதிகள் காசாவில், ஒரு கம்யூனிஸ்டும் பிஎல்ஓ ஆதரவாளருமான, Haidar Abdel-Shafi தலைவராக இருந்து நடாத்திய செம்பிறை சங்கம் அலுவலகத்துக்கு (Red Crescent Society) தீ வைத்தனர். இஸ்ரேல் இராணுவம் முதலில் ஒன்றும் செய்யவில்லை. கும்பல் அவர் வீட்டிற்கு சென்று அதற்குத் தீவைத்தபோது மற்றும் அவரைத் தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தியதாகத் தெரிந்தபோது தான் இராணுவம் தலையிட்டது.

1978-லேயே முஸ்லிம் வக்ப் (Muslim Waqf) என்னும் மத அறக்கட்டளையின் கமிஷனர், இஸ்லாமிய பேராயத்தை பதிவு செய்து, அங்கீகாரம் அளிப்பது பற்றியும் அதற்கு வக்ப் கட்டுப்பாடு அதிகாரத்தை அளிப்பது பற்றியும் இஸ்ரேலை எச்சரித்தார். வக்ப் என்பது நிலங்கள், கடைகள், வியாபாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கியது. காசாவின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் வக்பை சார்ந்தது. இஸ்ரேல் கமிஷனரின் ஆலோசனையை அலட்சியம் செய்து, சகோதரத்துவத்தின் முன்னணி அமைப்புக்கு 1979-ல் ஒரு உரிமம் வழங்கிற்று.

பத்து வருடங்களுக்குள் யாசின், இஸ்லாமிய பேராயத்தை ஒரு சக்திவாய்ந்த மத, பொருளாதார சமுதாய நிறுவனமாக காசாவில் உருவாக்கினார். மசூதிகளை சுற்றி ஒரு சமூக சேவை வலைப் பின்னலை உருவாக்கினார். இவை சமுதாய கூடங்களாக செயல்பட்டன. காசாவில் மசூதிகள் 1967-87ல் மும்மடங்காக, 200லிருந்து 600ஆக உயர்ந்தன, அதேவேளை தொழும் பக்தர்கள் இரட்டிப்பானார்கள். மேற்குக் கரையில் மசூதிகள் எண்ணிக்கை 400லிருந்து 750ஆக உயர்ந்தன. பெண்கள் பர்தா (முக்காடு) அணியவேண்டும், துணிக்கு மேலாக கயிறு அணிய வேண்டும், மற்றும் இளைஞர்கள் தாடி வளர்க்க வேண்டும். இளைஞர்களை கவர்ந்து அவர்களை இஸ்லாமிய கழகத்துக்கு பிணைக்க விளையாட்டு பயன்படுத்தப்பட்டது.

முஸ்லிம் சகோதரத்துவமானது, கிராமப்புறத்திலும் அகதி முகாம்களிலும் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், குறிப்பாக ஏழைகளைக் குறி வைத்தது. தொழிற்சங்கத்திலும் அமைப்புக்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பெண்களை சேர்க்கவில்லை. "தகுந்த நேரம்" வரும்வரை இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையை தவிர்க்கும் அதேவேளை, அவ்வியக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சாராயம் விற்கும் கடைகளையும், ஓட்டல்களையும் தாக்கி அழித்தனர். மக்களை பாரம்பரிய இஸ்லாமிய வழிமுறைகள் என்று கூறப்படுபவற்றுக்கு திரும்புமாறும் மேற்கத்திய பாணி இசை, பொழுதுபோக்கு மற்றும் பழக்கவழக்கங்களைத் தவிர்க்குமாறும் நிர்ப்பந்தித்து தொல்லைப்படுத்தினர் மற்றும் அச்சுறுத்தினர்.

அது பிஎல்ஓ அமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்திற்று. பல்கலைக் கழகங்களில் பிஎல்ஓ மாணவ ஆதரவாளர்களையும் இடதுசாரி குழுக்களையும் தாக்கியது. 1982-86 க்குள் பல வன்முறை தாக்குதல்களுக்கு பின்னர் காசாவில் உள்ள அல்அசார் என்னும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அங்கு பிஎல்ஓ ஆதரவாளர்களைக் களைஎடுப்பதில், பாலஸ்தீன மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஸ்ராலினிச ஆதரவாளர்களுடன் குட்டி யுத்தம் நிகழ்த்தியது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் 700 இராணுவ வீரர்களாக மாற்றியது. தனது ஆதரவாளர்கள் இந்த வழியில் வெளியேற்றப்படுவதைத் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை என்று ஃபத்தா சுட்டிக்காட்டிய பின்னரே இஸ்ரேல் போரை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.

முஸ்லிம் சகோதரர்களும் இண்டிபடா எழுச்சியும்

1987 டிசம்பரில், பாலஸ்தீனிய இளைஞர் மற்றும் தொழிலாளர்களிடையே ஒரு தன்னெழுச்சியான திடீர் கிளர்ச்சி எழுந்தது. சகோதரத்துவம் இதை எதிர்பார்க்கவில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கடுமையான நிலைமைகள் மற்றும் மோசமான பொருளாதார சூழ்நிலைகள் இவற்றின் உற்பத்தியாக இண்டிபடா இருந்தது. காசா நிலைமை படுமோசமானது. 1986-ல், 28 மைல் நீளமும் 3.5 மைல்களிலிருந்து 8 மைல் வரை அகலமும் உள்ள குறுகிய மணற் பரப்பில் 634, 000 பாலஸ்தீனியர்கள் வசித்து வந்தனர். வருடா வருடம் ஜனத்தொகை 4.3 வீதம் அதிகமாகிக் கொண்டே வந்துள்ளது. 1988-ல் ஜனத்தொகையில் 59 சதவீதம் 19 வயதுக்குட்பட்டும் 76.9 சதவீதம் 29 வயதுக்குட்பட்டும் இருந்தது. இன்றைய ஜனத்தொகை 50 சதவீதம் அளவில் வளர்ந்து 10 லட்சம் ஆகியிருக்கிறது.

ஆனால் காசா பாலைநிலத்துண்டில் இருக்கின்ற மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. சுத்தமான குடிநீர் அளிப்பு போதுமான அளவு இல்லை. அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. வீட்டிற்கோ, விவசாயத்திற்கோ, பள்ளிகளுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ சிறு இடம்தான் இருந்தது. மேலும் இஸ்ரேல் யூத குடியேற்றக்காரர்களுக்காக "அரசு நிலங்களை" ஒதுக்கீடு செய்தது. 2,500 யூதர்களுக்கு (ஜனத்தொகையில் 0.4 சதவீதம்) 28 சதவீத அரசு நிலங்கள் வழங்கப்பட்டன, மற்றும் அவர்கள் இன்னும் கேட்டிருந்தனர்.

இஸ்ரேல் தனது சொந்த தொழில்களைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் போட்டியிலிருந்து சந்தையை சுதந்திரமாக வைப்பதற்கும் பாலஸ்தீனியப் பொருளாதாரம் கீழ்ப்படுத்தப்பட்டது. பாலஸ்தீனிய விவசாயிகள் சந்தையிலிருந்து கசக்கிப் பிழியப்பட்டனர். அவர்களுக்கு கடனுதவி மறுக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கான சாகுபடி, மற்றும் விவசாயத்திற்கான நிலம் குறைந்தது. தாக்குப் பிடித்த தொழில்களுக்கு பொருள் வெளியேற இடமில்லை. ஜோர்டான் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்திருந்ததால், பாலஸ்தீனிய பொருட்களை இஸ்ரேலிலோ ஜோர்டானிலோ ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

ஆகையால் பாலஸ்தீனியர்கள் வேலைக்காக முற்றிலும் இஸ்ரேலை சார்ந்து இருந்தார்கள். ஆனால் இந்நிலையிலும் கூட, அவர்கள் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டனர், பயணம் செய்வதற்கும் வேலைசெய்வதற்கும் அவர்கள் பத்திரம் பெறவேண்டி இருந்தது. இண்டிபடா என்ற புத்தகத்தில் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்கள், Zeevschiff மற்றும் Eavd Ya'ari கூறுவதாவது, "விளைவு ஒன்றைவிட பல வழிகளாக இருந்தது ஒப்புக்கொள்வதற்கு வருத்தமாயிருந்தது, எல்லைப் பகுதிகளில் ஒரு வகை அடிமைச் சந்தை வந்தது."

1987 டிசம்பரில், இண்டிபடா வெடித்த பொழுது, சியோனிச மேலாதிக்கத்திற்கான எதிர்ப்பின் பிரதான வளமாக பாலஸ்தீனிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆயினர், பாலஸ்தீன விடுதலை இயக்க கொரில்லாக்கள் அல்லர். முஸ்லிம் சகோதரத்துவம் நெருக்கடியை எதிர்கொண்டது: இஸ்ரேலுடன் ஒத்துப்போய் அதனைக் காத்துக்கொள்வது அல்லது கிளர்ச்சியை ஒருங்கிணைக்கவும் கட்டுப்படுத்தவும் பிஎல்ஓ நிறுவிய, ஐக்கிய தேசிய தலைமைச் சங்கத்திடம் (UNLU) பாலஸ்தீனியர்களை இழப்பது.

சகோதரத்துவம் இஸ்லாமிய அடிப்படையிலான எதிர்ப்பு இயக்கத்தை நிறுவ தீர்மானித்தது. இதன் சுருக்கமான பெயர்தான் ஹமாஸ். இந்த இயக்கம் தேசிய விடுதலைக்காக பாடுபடும் ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சி. பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கத்தின் சக்திகளைத் திசை திருப்பி மதச் சார்பாக மாற்றுவதே இதன் லட்சியம்.

1988 ஆகஸ்டில் வெளியிடப்பட்ட பொது ஒப்பந்தம், அடிப்படை ரீதியில் அதன் ஸ்தாபக அரசியல் சாசனம், தேசியவாதத்தை மதத்துடனும் அப்பட்டமான செமிட்டிச எதிர்ப்புடனும் இரண்டறக் கலந்தது. அது பிரத்தியேக இஸ்லாமிய பாலஸ்தீனிய நாட்டை உருவாக்க முயன்றது. பிஎல்ஓவின் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டை உருவாக்குதற்கான சூத்திரத்தை இஸ்லாத்திற்கு எதிரானது என கூறிற்று. முன்னர் ஒருவகை உருவ வழிபாடாக இருந்த, எல்லைப்புற தேசியவாதத்தை, மத வழிப்பட்ட பணிக்குழு அல்லது புனிதப்போராக ஆக்கியது. அது இஸ்ரேல் அரசை அழிக்க அழைப்பு விடுத்தது. இஸ்ரேலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் அரசியல் சியோனிசத்தை யூதர்களுடன் தவறான முறையில் சமப்படுத்தியது. யூதர்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கும், கம்யூனிஸ்ட் புரட்சிக்கும் காரணகர்த்தாக்கள் என்று கண்டனம் செய்தது. அவர்கள் இரண்டு உலக மகாயுத்தங்களுக்கும் காரணம், உலகை மேலாதிக்கம் செய்வதற்கான இரகசிய அமைப்புக்களாக சர்வதேச சங்கம் (League of Nations) மற்றும் ஐக்கிய நாடுகளது ஒன்றியத்தை (United Nations) அவர்கள் உருவாக்கியவர்கள், எல்லாவற்றுக்கும மேலாக, இஸ்லாமிய கலிஃபாத்துக்களை (Caliphate) அழிக்கின்றவர்களாக இருக்கின்றனர், என்றது.

பாலஸ்தீனிய மக்களுக்கு மாற்றுத் தலைமையை உருவாக்க தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த சாசனம் பிஎல்ஓவுடன் நேரடி மோதலை வெளிப்படையாக தவிர்த்தது. தனது கொள்கைகளின்படி ஹமாஸ், ஐக்கிய தேசிய தலைமை அமைப்பிலிருந்து சுதந்திரமாக, அதன் சொந்த துண்டறிக்கைகளை வெளியிட்டது, புனிதமான நாட்களில் தனியே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது. வேலைநிறுத்தங்களில் கலந்து கொள்ளாத கடைகளையும் வர்த்தகங்களையும் அழித்தது, நெருப்பிட்டுக் கொளுத்தி அச்சுறுத்தியது. அது பிஎல்ஓ வின் "ஒட்டுமொத்த பிரதிநிதித்துவ அந்தஸ்தை" அங்கீகரிக்க மறுத்தது.

ஹமாஸ், இஸ்ரேல் ஆக்ரமிப்பு அதிகாரிகளுக்கு எதிராக சிறு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனால் இஸ்ரேல், ஹமாஸ் நடத்திய வேலைநிறுத்தங்களில் குறுக்கிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யிட்சாக் றொபின் 1988 கோடையில் ஹமாஸ் உடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

தொடரும்...


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved