World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Pentagon scheme for a futures market in terror

பயங்கரவாதத்தில் சந்தைக்கான எதிர்காலம் பற்றி பெண்டகன் திட்டம்

By Barry Grey
31 July 2003

Back to screen version

பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள், இராணுவத் தாக்குதல்கள் பற்றிய ஊகப் பங்குச் சந்தைகளை ஏற்படுத்துதற்கான பென்டகன் திட்டம் அம்பலப்படுத்தப்பட்டது, புஷ் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டங்களில், கீழ்த்தர எண்ணங்கள் நிறைந்துள்ன என்று புலப்படுத்துவதோடு, அமெரிக்காவை ஆட்சி புரியும் சக்திகளின் குற்றஞ்சார்ந்த தன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டுமாகும்.

கொள்கைப் பகுப்பாய்வுச் சந்தை (Policy Analysis Market -PAM), என பொய்யாகப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், பணக்கார மற்றும் அநாமதேய உள்ளாட்கள் பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராஃபத் கொலை செய்யப்படுவாரா, ஜோர்டானின் முடியாட்சி கவிழ்க்கப்படுமா, வடகொரிய ஏவுகணைத் தாக்குதல் நடக்குமா போன்ற நிகழ்வுகளைப் பற்றிப் பந்தயம் கட்டும் வகையில் ஒரு ஊகப் பங்குச்சந்தையை நிறுவத் திட்டமிட்டிருந்தது. அத்தகைய ஊகங்கள்பால் பணம் கட்டியவர்கள் -ஊகப் பங்கு முதலீட்டு முறைபோல, பயங்கரவாதத் தாக்குதல்கள், போர் போன்றவை முடிந்த பின்னர் கணிசமான இலாபத்தைப் பெறுவார்கள்.

பென்டகன் செயல்திட்டத்தின் வலைத் தளம் உறுதியளித்துள்ளது போல: "இந்தக் குழு ஊக வழிமுறை நேர்த்தியாக அமைய இருப்பதுடன் நல்ல இலாபத்தையும் ஈட்ட வகை செய்யும்."

மேலும் வலைத் தளம், ஊகப் பங்கு முதலீடு செய்பவர்கள் பெயர் வெளியிடப்படமாட்டாது என்றும், அரசாங்க மேற்பார்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அரசாங்க முகவாண்மை அமைப்புக்கள் இதில் பங்கேற்கத் தடையென்றும் வணிகர்களின் நிதிகள் அல்லது அடையாளங்கள் இவைகளை அவை அணுக முடியாது என்றும் உறுதியளித்திருந்தது. ஆகஸ்ட்-1, வெள்ளிக்கிழமை அன்று 1000 வணிகர்களைப் பதிவு செய்யும் முயற்சி தொடக்கப்படுவதாகவும் இருந்தது.

2005 வரை PAM ஊகப் பங்குச் சந்தைக்காக 8 மில்லியன் டாலர்களை புஷ் நிர்வாகம் கோரியிருந்தது. New York Times, ஜூலை 29 பதிப்பின்படி, "திட்டத்தின் பொதுப்பார்வையின்படி, பொருளாதார, சிவில், இராணுவ வகை முறைகள், எகிப்து, ஜோர்டான், ஈரான், ஈராக், இஸ்ரேல், செளதி அரேபியா, சிரியா, துருக்கி இவற்றின் தன்மையும், அமெரிக்கா இந்நாடுகளோடு தொடர்பு கொள்வதன் விளைவுகளும், சந்தையின் குவிந்த பார்வைக்கு வரும். நிலவுகின்ற சந்தை முறைகளில் உள்ள அணுசரனைகள் இந்த ஊகப்பங்குச் சந்தையிலும் நிறைந்து காணப்படும் என்று இதைத் தோற்றுவித்தவர்கள் கூறியுள்ளனர்.

இரு ஜனநாயக் கட்சியின் செனட் உறுப்பினர்கள், வட டகோடாவின் பைரன் டோர்கனும், ஒரேகானின் ரோன் வைடனும் திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, இத்திட்டத்தைப் பெரும் கண்டனத்திற்கு உட்படுத்திய அளவில், திட்டம் கைவிடப்பட்டது. டோர்கன் வினவினார்: "வேறு ஒரு நாட்டில் அரசாங்கமே ஏற்பாடு செய்யும் ஒரு சூதாட்டக்கடையில், மக்கள் நுழைந்து அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் எவர் கொலை செய்யப்படலாம் என்பது பற்றி பந்தயம் கட்டினால் எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?"

இத்திட்டத்தின் செயல்முறையைப் பற்றி வைடன் பின்வருமாறு விளக்கிக் கூறினார்: "உதாரணமாக, பிரதம மந்திரி x, கொலை செய்யப்பட்டுவிடக்கூடும் என்று நீங்கள் முன்னரே ஊகிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஊகப் பங்குச்சந்தையில் ஒப்பந்தக் குறிப்புக்களை ஒன்று 5 சென்ட் என்று வாங்குகிறீர்கள். கூடுதலான மக்களும் அவ்வாறே நினைத்தால் குறிப்பின் விலை அல்லது மதிப்பு 50 சென்டாக உயர்ந்துவிடும். அவர் கொலை செய்யப்பட்டால் உங்களுக்கு ஒரு குறிப்பாக 1 டாலர் கொடுக்கப்படும். அதாவது 5 சென்ட் இருக்கும்போதே குறிப்பை வாங்கியவர்களுக்கு 95 சென்ட்டுகள் இலாபமாகக் கிடைக்கும். 50 சென்டுகளுக்கு வாங்கியவர்கள் 50 சென்டுகள் இலாபமாகப் பெறுவர்."

திட்டச் செயல்பாட்டில் தனி அக்கறையுடையவர்கள் -பயங்கரவாதிகள், பயங்கரவாதக் கொடூரங்களில் இலாபம் காண விழையும் பெரும் முதலீட்டாளர், அரசாங்கம் நடத்தும் ஊகச் சந்தையை தங்கள் நலனுக்கேற்ப சற்று மாற்றித் திருத்த முற்படுவர். பென்டகன் முதலில் திட்டத்தை தொடக்குவதை ஆதரித்து அறிக்கையில் தெரிவித்ததாவது: "ஊகச் சந்தைகள் மிகத்திறமை வாய்ந்தவை, மிகுந்த செயலாற்றல் கொண்டவையென்பதோடு தற்காலத்தில் பிரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவல்களைக்கூட நேரத்தில் இணைத்துக்கொள்ளும் நுட்பம் கொண்டவையாக உள்ளன என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஊகச் சந்தைகள் தேர்தல் முடிவுகள் போன்றவற்றை ஊகித்துக் கணிப்பதில் திறமையுடையனவாகவே விளங்கி வருகின்றன...``

செவ்வாயன்று முக்கியமான குடியரசுக்கட்சி உறுப்பினர்களும் திட்டத்தைப் பெரும் கண்டனத்திற்கு உட்படுத்திய அளவில், பாதுகாப்பு அமைச்சகம் பின்வாங்கியதோடு PAM வலைத் தளத்தை அப்புறப்படுத்தியதோடு, திட்டத்தை கைவிட்டுவிட்டதாகவும் அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் சில ஜனநாயக, குடியரசுக் கட்சியினர், திட்டப் பொறுப்பு அதிகாரியான ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஜோன் பாயின்டெக்ஸ்டர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததை அலட்சியப்படுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் DARPA எனப்படும் (Defence Advance Research Projects Agency) பாதுகாப்புத்துறை சிறப்பு ஆய்வுத் திட்டங்கள் நிறுவனம், மற்றும் இரு தனியார் நிறுவனங்கள்-- Net Exchange என்ற சாந்தியாகோவில் உள்ள சந்தை தொழில்நுட்ப நிறுவனம், Economist Intelligence Unit என்றும் பிரிட்டிஷ் Economist இதழின் ஒரு பிரிவு-- ஆகியவை இணைந்து கொண்டுவந்த கூட்டுத்திட்டமாகும் இது. மற்றொரு DARPA திட்டமான பயங்கரவாதத் தகவல் உணர்வுத் திட்டத்தையும் (Terrorrism Information Awareness Program) இயக்கும் Poindexter ன் கீழ் இது இயங்கியது.

இத்தகைய வக்கிரமான, பிற்போக்கான செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு பாயின்ட்டெக்ஸ்டர் சாலப்பொருத்தமானவர்தான். ஓராண்டுமுன் அப்பொழுது முழுமையான தகவல் உணர்வுத் திட்டம் (Total Information Awareness Program) என்ற பெயரில் மருத்துவம், பயணம், பணத் தகுதி, நிதிச்சான்றுகள் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் பென்டகன் மில்லியன் கணக்கிலான மக்களின் நிலை பற்றி கணினி மின்னனு ஆய்வுமுறையில், பெண்டகன் தகவல் தளங்களை வேவுபார்த்திட, வகை செய்த திட்டத்திற்காக பெரும் கண்டனத்திற்கு ஆளானவர். இந்த ஆண்டு தேசியப் பாராளுமன்றம் இவருடைய திட்டத்தை அமெரிக்கக் குடிமக்களிடம் நடத்தக்கூடாது என்று தடை செய்துவிட்டது; செனட் மன்றம் அதன் மீதான செலவினங்கள் அனைத்தையும் தடை செய்துவிட்டது. அத்தகைய குறைப்பு ஆனது பிரதிநிதிகள் மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஈராக் - கொன்ட்ரா சதித்திட்டம்

1980களில் ஈரான் - கொன்ட்ரா விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய, றேகன் நிர்வாகத்தின் பொழுது அதிகாரிகளாய் இருந்த அதிகாரிகளுள் பாயின்ட்டெக்ஸ்டர் ஒருவராவர். தற்போதைய நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட, ஈரான்-கொன்ட்ரா விவகாரத்தில் பங்கு கொண்டிருந்த, இரு மூத்தவர்களில் இவரும் ஒருவராவார். ``குற்றவாளி`` (Criminal) என்ற அடைமொழி இவருக்குப் பெயரளவிலும் கருத்தளவிலும் முற்றும் பொருந்தும்; இருவருமே அந்த ஜனநாயகத்திற்கெதிரான, சட்டவிரோதமான, சதியில் செயல்பட்ட அளவில் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்களாவர்.

றேகனுடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகச் செயல்பட்ட பாயின்ட்டெக்ஸ்டர் ஐந்து இழி செயல்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டவர்; சட்டமன்றத்திற்குப் பொய் கூறியதும் ஈரான்-கொன்ட்ரா சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர் லோரன்ஸ் வால்ஷின் விசாரணைக்கு இடர்ப்பாடுகள் கொடுத்ததும் அதில் அடங்கும். 1990ல் இந்த தண்டனை லெப்டினன்ட் கேர்னல் ஒலிவர் நோர்த்துடையதையும் சேர்த்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய கூட்டாட்சிக் குழுவினால் இரத்து செய்யப்பட்டது; லோரென்ஸ் சில்பர்மன், டேவிட் சென்டில்லே என்ற நீதிபதிகள் தான் இதற்குக் காரணம். இவர்களிருவருமே வலதுசாரிக் குடியரசுக் கட்சியினர்; ஜனாதிபதி கிளின்டனுக்கு எதிராகச் சதித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பெரிய குற்ற விசாரணையில், கென்னத் ஸ்டாரின் ஆய்வில், பின்னர் முக்கிய பங்கை வகித்திருந்தனர். (See "Who is Laurence Silberman," July 18, 1998).

புஷ்ஷினால் தேசியப் பாதுகாப்புக் குழுவில் ஜனநாயகம், மனித உரிமைகள், பன்னாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அலுவலகத்தை இயக்க நியமிக்கப்பட்டுள்ள எலியட் அப்ராம்ஸ் தான், பாயின்ட்டெக்ஸ்டரின் கூட்டாளி ஆவார். காங்கிரசிற்குத் தான் பொய் கூறிவிட்டதாக 1991ல் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தவர். 1992ல் வெள்ளை மாளிகையை விட்டு நீங்குவதற்கு முன் செய்யப்பட்ட இறுதி நடவடிக்கைகளில் ஒன்றாக, மூத்த புஷ், தற்போதைய புஷ்ஷின் தகப்பனார், அப்ராம்ஸுக்கு மன்னிப்பை அளித்துவிட்டார்.

வெள்ளை மாளிகையின் நில அறை ஒன்றைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு, தேசியப் பாதுகாப்புக்குழுவில் ஒரு அதிகாரியான நோர்த்தினால் இரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் ஈரான் - கொன்ட்ரா சதித்திட்டம் நடத்தப்பட்டது. நிக்கராகுவாவில் இடதுசாரி சான்டினிஸ்டா அரசாங்கத்தைக் கவிழ்த்து, "கொன்ட்ரா" சக்திகளை ஆதரிப்பதற்கும் பண உதவி செய்வதற்கும் இச்சதித்திட்டம் தொடக்கப்பட்டது. நிக்கராகுவா மக்களுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் கொலை போன்ற தாக்குதல்களில், கொன்ட்ரா சக்திகள் ஈடுபடுபடுதற்கு உதவி செய்ய பழைய சிஐஏ அதிகாரிகள், இராணுவத்தினர், கியூபாவின் எதிர்ப்புரட்சியாளர்கள், பாசிஸ்டுகள், போதைப் பொருள் கடத்துவோர், மற்றைய ஆயுதமேந்திய அராஜகக் கும்பலைச் சார்ந்தவர்கள் ஆகியோரை நோர்த் தேர்ந்தெடுத்து ஒரு வலைப் பின்னலை அமைத்தார்.

நிக்கராகுவாவின் மீதான நடவடிக்கைச் செலவுகளுக்காக, பணம் திரட்டவும், அமெரிக்கப் பணயக் கைதிகளை மீட்கவும் நோர்த்தும், அவருடைய றேகன் நிர்வாகத்தில் அவர்களுக்கு உடந்தையாளரும் ஈரானுக்குத் திருட்டுத்தனமாக ஏவுகணைகளை விற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

கொன்ட்ராக்களுக்கு உதவக்கூடாது என்று 1982-ல் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட போலன்ட் திருத்த சட்டத்திற்கு நேரடியான மீறலில் முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தேசியப் பாதுகாப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் பாயின்ட்டெக்ஸ்டர், நிக்கராகுவா பயங்கரவாதிகள் நடவடிக்கைகளை ஆதரித்த நோர்த், அப்ராம் போன்ற ஏனையோரின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தவர் ஆவார்.

கூட்டமைப்பு நெருக்கடி நிர்வாக நிறுவனம் (Federal Emergency Management Agency) - Rex.84 - என்று அழைக்கப்பட்ட, நோர்த்தினால் இயக்கப்பட்ட ஈரான் - கொன்ட்ரா சதித்திட்டத்தின் ஒரு பிரிவின்படி, மத்திய அமெரிக்காவில் போர் ஏற்பட்டால் "உள்நாட்டு தேசிய அவசரகாலச் சட்டம்" என்ற பெயரில் 400,000 மத்திய அமெரிக்கர்களை மற்றும் "அறிந்த கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளை" வளைத்துப் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

செய்தி ஊடக மூடிமறைத்தல் ஆரம்பமாகிறது

பென்டகனின் பயங்கரவாத ஊகப் பங்குச்சந்தைப் பிரச்சினையை மூடிமறைத்துவிட, செய்தி ஊடகம் முடிவு செய்துவிட்டமை ஏற்கனவே தெளிவாகிவிட்டது. புஷ் நிர்வாகத்தின் குற்றங்கள், ஜனநாயக எதிர்ப்பு, கொலைப்போக்குடைய இழி கூட்டத்தாரின் நடவடிக்கைகளைத் தெடர்ந்து மறைத்துவருவது என்ற அதன் கொள்கைக்கேற்ப முக்கியமான செய்தித்தாள்கள் அனைத்தும் PAM பற்றிய தகவல்களைப் பாதி நகைச்சுவையுடன் வெளியிட்டன மற்றும் தொலைக்காட்சி அமைப்புக்கள் அதைப் பற்றி அதிகமாக ஏதும் குறிப்பிடவில்லை.

புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில், நான்கு மாதத்திற்குப்பின் நடந்த முதலாவது சம்பிரதாய செய்தியாளர் கூட்டத்தில் பென்டகனுடைய பயங்கரவாத ஊகப் பங்குச்சந்தை தொடர்பாக ஒரு கேள்விகூட கேட்கப்படவில்லை.

"பாயின்டெக்ஸ்டரின் மூடச்செயல்கள்" என்ற தலையங்கத்தை வெளியிட்ட நியூயோர்க் டைம்ஸ், பென்டகனில் பாயின்டெக்ஸ்டரின் "இழிவான வேவுபார்க்கும் நடவடிக்கை" கைவிடப்படவேண்டும் மற்றும் புஷ் நியமித்தவரை நீக்க வேண்டும் என்று அழைப்புவிட்டது. இப்பத்திரிகையின் நம்பிக்கையற்ற வாதிகளைப் பொறுத்தவரை இந்த விவகாரத்திற்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஊழலுக்கும் சமரசத்திற்கும் உட்பட்ட அமெரிக்க செய்தி ஊடகத்திலிருந்து, இதைவிட வேறு ஒன்றையும் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால் பெண்டகனின் பந்தயப்பணம் கட்டுதல் திட்டம் நகைச்சுவையான ஒன்று அல்ல. மிக உயர்ந்த மட்டத்திலிருந்து செயல்படும் பாசிச அரசியல் சக்திகள் மற்றும் பெருநிறுவன நிழல் உலக சக்திகளும் இணைந்த ஓர் அச்சு, எவ்வாறு நாசவேலை மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பினை உலக மக்களுக்கு எதிராகவும், அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள், சமுதாய நலன்கள் இவற்றைத் தாக்குவதின் மூலமும், தங்களை கூடுதலான செல்வந்தராக்கிக் கொள்வதற்காக தொடர்ந்த சதித் திட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை இது புலப்படுத்துகிறது.

இந்த வெளிப்பாடுகள் பின்வரும் முழுமையான மற்றும் பகிரங்க விசாரணைகளைக் கோருகின்றன. இந்தக் கொடூரமான திட்டத்தை தீட்டியவர்கள் யார்? பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டின் பங்கு இதில் என்ன? பென்டகனால் அதன் சூதாடு தளத்திற்குத் பொறுக்கி எடுக்கப்பட்ட ஆயிரம் பேர்கள் யாவர்? மத்திய கிழக்கு, கொரியத் தீபகற்பம், மற்ற இடங்களில் அவர்களின் நிதி ரீதியான அக்கறைகள் எப்படிப்பட்டவை?

PAM திட்டத்தினால் எழுந்துள்ள மற்றொரு விஷயமும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் - செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதிகளால் நியூயோர்க், வாஷிங்டன் ஆகிய இரண்டு நகரங்கள் மீதும் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்பு பங்கு, பத்திரங்கள் ஆகியவை பற்றிய, நன்கு ஆராயப்பட்ட ஆவணங்கள் பற்றியது அது: அப்பொழுது அமெரிக்க நிதிச் சந்தையில் வணிகத்திற்காக சில பெரும் செல்வந்தர்கள், தொடர்பு கொண்டிருந்தோர், முதலீட்டாளர்கள் வரவிருக்கின்ற பேராபத்தைப் பற்றி முன் தகவலை அறிந்திருந்தனர். அது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று?

விமானப் போக்குவரத்து, சுற்றுலா, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு மதிப்பு குறைந்து, அமெரிக்கப் பொருளாதார அமைப்பு முழுவதன் மீதான நம்பிக்கையைக் கீழறுக்கும் வகையில் மகத்தான அளவு பணம் கணக்கில் வராமல், பெரும் நெருக்கடி வரும் என்பதற்கு ஊகமாகக் காட்டப்பட்டது. மேலே கூறப்பட்டுள்ள துறைகளிலுள்ள பெருநிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்குள்ளாயின என்பதுடன் WTC - உலக வர்த்தக மைய அலுவலக, நிறுவனங்களிலும் தொடர்புகொள்ளப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் ஐந்தாண்டு காலத்திற்கு விமானக்கடத்தல், குண்டு வீச்சுக்குச் சிறிது நேரம் முன்னர் மிகப்பெரிய அளவில் வாங்கப்பட்டன. உலக நெருக்கடி ஏற்பட்டால், அதிலும் குறிப்பாக அமெரிக்க நெருக்கடி ஏற்பட்டால், இவைதான் மிகச்சிறந்த முதலீட்டுச் செயல்களாக ஏற்கப்பட்டவையாகும்.

செப்டம்பர் 11ம் தேதிக்குப் பின்னர், அமெரிக்க பத்திரங்கள், மாற்று விகிதக்குழு (US Securities and Exchange Commission), இரகசியப் பணியினர் (Secret Service), கூட்டமைப்பு உளவுத்துறை நிறுவனம் (Federal Bureau of Investigations) அனைத்துமே பங்குகள், பத்திரங்கள் ஆகியவை சந்தேகப்படும் வகையில் கைமாறியதை விசாரணை செய்யப்போவதாக அறிவித்து இருந்தன. அந்தக் காலகட்டத்தில் செய்தி ஊடகங்கள் இதைப் பற்றி அதிகம் தெரிவிக்கவில்லை; இன்றளவும்கூட செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து 22 மாதங்கள் ஆனபின்னரும் கூட எந்த விசாரணைகளின் முடிவும் வெளியிடப்படவில்லை.

அப்பொழுது உலக சோசலிச வலைத் தளம்: "வேறு எந்த வகையிலும் விளக்க முடியாத கருவூலப் பத்திரங்கள் வாங்கவும், குறிப்பான பங்குகளைக் குறைந்த மதிப்பிற்கு விற்பதற்குமான மிகப்பெரிய அவசர நடவடிக்கைகள், இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்கள், அமெரிக்கச் சமுதாயத்தின் பல கூறுபாடுகளையும் நன்கு, ஆழ்ந்த முறையில் அறிந்தவர்கள் என்பதோடு உயர்மட்டத்தில் செல்வக்கொழிப்போடும், நேர்த்தியான வாழ்க்கை முறையையும் மேற்கொண்டிருப்பவர்கள் என்பதற்கு இது ஒரு கூடுதலான குறிப்பு ஆகும்." என எழுதியது.

எனவே பயங்கரவாதிகளின் கொடுமைகள் பற்றி ஊக நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு முன்னோடி உள்ளது என்பது தெளிவாகிறது; இதைப் பற்றி அரசாங்கமும், செய்தி ஊடக அதிகாரிகளும், சில பெரும் முதலீட்டாளர்களும் நன்கு அறிவர்; ஆனால் இது அமெரிக்க மக்களுக்கு விளக்கப்படாமலேயே உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved