World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US troops voice anger at Pentagon

அமெரிக்கப் படைகள் பென்டகன் மீது சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன

By James Conachy
21 July 2003

Back to screen version

ஈராக் அபூர்வமான நிகழ்ச்சியொன்றைக் கடந்த வாரம் சந்தித்தது. அமெரிக்க இராணுவத்தின் முக்கிய போர்ப் பிரிவுகளில் ஒன்றிலிருந்து சீருடை அணிந்த வீரர்கள் ஏபிசி தேசியச் செய்திகளில், அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்டை வெளிப்படையாகக் கண்டித்ததோடு தங்களை தாயகத்திற்கு திரும்பக் கொண்டுவரவேண்டும் என்றும் கோரினர். ஏனைய செய்தி ஊடகப் பிரிவுகளும் இராணுவ வீரர்களுடனான பேட்டிகளை வெளியிட்டு அவர்களிடையே மன உறுதிப்பாடு " இருக்கவில்லை" என்றும் அறிவித்துள்ளன.

ஈராக்கிலிருந்து மூன்றாம் தரைப்படைப் பிரிவின் 1, 2ம் பிரிகேட் தாயகம் திரும்புவதற்காக தேதி உறுதிப்படுத்தப்படவில்லை என்ற ஜூலை 14ம் தேதிய அறிவிப்பால் சீற்றத்தின் வெடிப்பைத் தூண்டிவிட்டது. முந்தைய வாரம், பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ப்ளொன்ட், ரம்ஸ்பெல்ட் மற்றும் ஜெனரல் டொமி பிராங்ஸ் ஆகியோர் செப்டம்பரையொட்டி படைகள் திரும்ப வரும் என்று கூறப்பட்டிருந்த உறுதிமொழிகளுக்கு எதிரிடையாக அமைந்தது. வீடு செல்லத் தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்த மூன்றாம் தரைப்படைப் பிரிவு வீரர்களுக்கும், ஜோர்ஜியா தளத்தில் இருந்த அவர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் ஒரு திடீரென்ற முடிவாகிவிட்டது. ஒரு இராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறினார்: ``அந்தக் கால அட்டவணை கடந்த போய் விட்டது, இப்பொழுது ஒரு கால அட்டவணையும் கிடையாது.`` இந்தத் திட்டங்களின் மாறுதல் இந்திய அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு உதவுவதற்காக 17,000 இராணுவ வீரர்களை அனுப்ப மறுத்துவிட்டதால் தூண்டிவிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மூன்றாம் தரைப்படைப் பிரிவின் 2வது பிரிகேட் வீரர்களின் அறிவிப்பிற்கான விளைவு கலகம் செய்யும் போக்கிலிருந்து, மனச்சோர்வு கொள்ளுதல் வரை பலவிதமாகக் காணப்பட்டது.

வல்லுனர் கிளின்டன் டீட்ஸ் ABC செய்திக்குக் கூறினார்: "டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இங்கு இருந்தால், அவருடைய ராஜிநாமாவைக் கோருவேன்." சார்ஜன்ட் பெலிப் வேகா ``என்னை யாரோ வயிற்றில் நன்கு உதைத்தது போலவும், முகத்தில் அறைந்தது போலவும் உணர்கிறேன்`` என்று கூறினார். காலாட் வீரர் ஜெய்சன் புனிஹோத்ரா "நம்முடைய படையிலேயே நம்பிக்கையை எனக்கு குறைத்துவிட்டது" என அறிவித்தார். அமெரிக்க இராணுவத்தினருக்கு ஈராக்கியத் தலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட சீட்டுக்கட்டுக்கள் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய, பெயர் சொல்லப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட, ஒரு சார்ஜன்ட், ABC நிருபர்களிடம் கூறியதாவது: ``நானும் 'தேடப்படுவோரின் சொந்தப் பட்டியல்' ஒன்றை கொண்டுள்ளேன். என்னுடைய சீட்டுக்கட்டின் 4 ஏஸ்கள், போல் ப்ரீமர், டொனால்ட் ரம்ஸ்பெல்ட், ஜோர்ஜ் புஷ், போல் வொல்ஃபோவிட்ஸ் ஆவர்`` என்றார்.

சார்ஜன்ட் சிபோன்பான் (Siphon Pahn)லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்குக் கூறியதாவது: ``டொனால்ட் ரம்ஸ்பெல்டிடம் 2ம் பிரிகேட் பல்லுஜாவில் சிக்கியுள்ளது, நாங்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறோம் என்று தெரிவியுங்கள்.`` மற்றொரு வீரர் செய்தித்தாளுக்குக் கூறினார்: ``ரம்ஸ்பெல்ட் பதவியை விட்டுத் தொலையவேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.`` சார்ஜன்ட் எரிக்ரைட் BBC செய்திக்குக் கூறினார்: ``நாங்கள் களைப்படைந்துவிட்டோம். உடலளவிலும், மனத்தளவிலும் எந்த அளவிற்குக் களைப்படைந்துள்ளோம் என்றால் யாரேனும் எங்களைச் சுட்டால் காயமுற்று வீடு திரும்பிவிடலாமே என்று நம்பிக்கை கொள்ளும் அளவிற்குக் களைப்படைந்துள்ளோம். 'ஏய், நீ என்னைச் சூடு, நான் வீட்டுக்குப் போக விரும்புகிறேன்'.``

வல்லுநர் சீன் கில்கிறிஸ்ட், Kinght-Ridder நிருபர்களிடம்: ``கிரகத்திற்கு வெளியே விழுந்துவிட்டது போல, எங்களை எல்லோரும் மறந்துவிட்டதுபோல உணர்கிறோம்.`` எனக் கூறினார். சாதாரண வீரர் ஆன்டனி மொன்டெல்லோ Kinght-Ridderக்குக் கூறுகையில்: ``அனைத்துக் குப்பைகளும் ஒருபுறம் இருக்கட்டும், எங்களுடைய தீர உணர்வு போய்விட்டது, உண்மையிலேயே போய்விட்டது.`` என்றார். பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், ``இந்த வீரர்கள் எத்தகைய நிலைகளைக் கடந்தனர், அன்றாட வாழ்வை எந்த முறையில் கழிக்கிறார்கள் என்பதைப் பற்றி மேலிடத்தில் ஒருவரும் புரிந்துகொள்ளவேயில்லை என்று தெரிகிறது; ஒரு சோதனைச்சாவடியில் பகல் வெப்பத்தில், ஒவ்வொரு நாளும், முழுப்போர்க் கூவல்களுக்கும் இடையே, எப்பொழுதும் இன்று தன்னை யாரேனும் கொன்றுவிடுவரோ என்ற நினைப்புடன் அவர்கள் ஒருபொழுதும் நின்றதில்லை என நான் உத்தரவாதம் கூற முடியும். எங்களைப்பற்றி அவர்கள் சிறிதேனும் அக்கறை எடுத்துள்ளனரா?``

சாதாரண வீரர் ஜேசன் ரிங், பல்லுஜாவில் San Francisco Chronicle பத்திரிக்கைக்கு கூறுகையில், ``நாம் ஈராக்கிற்கு விடுதலை வாங்கித் தந்தோம். தற்போது மக்கள் நாம் இங்கே இருப்பதை விரும்பவில்லை; ஏன் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? எங்களுக்கும் இங்கே இருப்பது விருப்பமாகவே இல்லை. ஆகையால் நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம்? எங்களை ஏன் வீட்டிற்கு அனுப்பவில்லை?``

அமெரிக்காவில் வீரர்களின் மனைவிகள், வெள்ளை மாளிகையை இதே போன்ற கடும் சொற்பிரயோகங்களால் கண்டித்தனர். ஒரு சார்ஜன்டின் மனைவியான ஜூலி கோலோவே அசோசியட் பிரசுக்கு கூறினார்: ``சிறிதும் கூசாமல் அவர்கள் எங்களிடம் பொய் கூறியுள்ளனர்.`` டாஷா மூர் என்ற ஒரு காப்டனின் மனைவி: ``ஜனாதிபதி புஷ், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் உள்ளோருக்கும் என்னுடைய முடிவு: தயவு செய்து வாயை மூடுங்கள். உண்மை என்னவென்று தெரியவில்லையானால், எதையும் கூறாதீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு வீரர் சுடப்பட்டுக் கொலையாகும்போது என்னுடைய மனத்தில் அது என்னுடைய கணவரோ என்ற கேள்வியை எழுப்புகிறது என அறிவித்தார். ஒவ்வொரு நாட்களையும் கணவனோ, மணைவியோ, குழந்தைகளோ எப்படிக் கழிக்கின்றனர் என்பதை அரசாங்கம் அறிவதாகத் தெரியவில்லை.``

அமெரிக்க இராணுவம் இந்த வீரர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறது. ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் புதிய தளபதியான ஜெனரல் ஜோன் அபிசாயிட் ஜூலை 16ம் தேதி ஒரு செய்தியாளர் கூட்டத்தில்: ``இந்தச் சீருடையை அணிந்துகொண்டிருக்கும் எந்த வீரருக்கும் பாதுகாப்பு மந்திரியைப் பற்றியோ அமெரிக்க ஜனாதிபதியைப் பற்றியோ குறைகூறும் வகையில் பேசுவதற்கு உரிமை கிடையாது. அதுதான் தொழில் முறையிலான கட்டுப்பாடு ஆகும். நாங்கள் அவ்வாறு விரும்புவதைப் பேசக்கூடாது. எந்த நடவடிக்கை எடுத்தாலும், பேச்சினால் கடிந்துகொண்டாலும், அதைவிடக் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டாலும், அங்குள்ள தளபதிகள் செய்ய வேண்டியது அது, அதைப் பற்றி நான் பேச வேண்டியதில்லை.`` எனக் கூறினார்.

தன்னுடைய தன்மைக்கேற்றவாறு, அமெரிக்கச் செய்தி ஊடகங்களும் இந்தக் கீழ்ப்படியாத தன்மையுடைய அறிக்கைகளை பரபரப்புடன் வெளியிட்டுவிட்டு, அடுத்த செய்திக்குச் சென்றுவிட்டன. ஆனால் பல காரணங்களை ஒட்டி, இவை ஆழ்ந்த பரிசீலனைக்கு கொள்ளப்படவேண்டும். ஈராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஒன்றுபட்ட தன்மை மிக வேகமாகச் சிதைந்துவிட்ட நிலைக்குச் சான்றாக அமைந்துள்ளன.

பரந்த அளவிலான தளர்ச்சியும், போரின் களைப்பும் மூன்றாம் தரைப்படைப் பிரிவு போன்றவற்றின் வீரர்களிடையே உள்ளன என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கியதிலிருந்தே, ஈராக்கின் மீதான போர்க் காய்ச்சலின் கடுமைக்கு இப்பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மார்ச் 2002ல், காலவரையற்று குவைத்தில் ஒரு பிரிகேட் நிறுத்திவைக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தது; மூன்றாவது பிரிகேட் முதல் ஆறு மாத காலப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் 2002ல் அது இரண்டாம் பிரிகேட்டினால் விடுவிக்கப்பட்டது. மார்ச் 2003ன் போது போருக்கான கால அளவு நெருங்கியபோது முழுப் படைப் பிரிவும் குவைத்தில் இருந்தது.

இராணுவ வீரர்கள் கண்ட பயங்கரங்களும், அவர்களே போரின்போது இழைத்த கொடுமைகளும் மற்றொரு காரணியாகும். ஈராக்கில் நுழைந்த அமெரிக்க முதல் படைகளுள் மூன்றாம் படைப்பிரிவும் ஒன்றாகும்; பாக்தாதைக் கைப்பற்றுதல் என்ற முக்கிய பணியையும் அதே செய்தது; ஏப்ரல் 3ம் தேதி நகரத்தின் சர்வதேச விமான நிலையத்தையும் அது கைப்பற்றியது. அப்பொழுது வந்த பல அறிக்கைகளின்படி, வீரர்கள் அமெரிக்க விமானத் தாக்குதலினால் உயிரிழந்திருந்த நூற்றுக்கணக்கான ஈராக்கிய வீரர்களின் சடலங்களை அவர்கள் கடந்திருந்தனர். அந்தப் படைப்பிரிவு பாக்தாதில் ஏராளமான மக்களையும் அது கொன்று குவித்திருந்தது. ஏப்ரல் 5ம் தேதி 2வது படைப்பிரிவின் பீரங்கிப்படைதான் நகரத்தின் தெற்குப்புற நகரப் பகுதிகளில் மூன்று மணி நேரம் போர்க் களரியை ஏற்படுத்தி 3,000 ஈராக்கிய வீரர்களைக் கொன்று குவித்ததுடன் மற்றும் ஆயிரக்கணக்கானோரைக் காயமுறவும் செய்திருந்தது. நியூயோர்க் டைம்ஸிற்கு ஒரு வீரர் கூறியதாவது: ``சாலையில் எப்புறத்திலும் மக்கள் சரிந்துகிடந்தனர். எத்தனைபேர் என்று என்னால் எண்ண முடியாத அளவிற்கு அவ்வாறு கிடந்தனர்.`` அப்படிப்பட்ட செயல்களில் பங்குபெற்றவர்கள் ஈராக்கிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவிற்குச் செல்ல விரும்புவார்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும்.

இதுவரை இராணுவ தீர உணர்வில் முக்கியமான காரணியாக இருப்பது கருத்தியல் ரீதியான கடப்பாடு ஆகும். வரலாறு முழுவதும் வீரர்கள் மாபெரும் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு, தோற்றாலும்கூட, தங்களுடைய தளபதிகளுக்கும் எந்தக் காரணத்திற்காக போருக்கு அனுப்பப்பட்டனரோ அதற்கும் முழு அளவில் விசுவாசத்தோடு விளங்கியுள்ளனர். ஆனால் போர் முடிந்த நான்கு மாத காலத்திற்குள்ளேயே போருக்குப் பிந்தைய ஈராக்கில் ஆக்கிரமிப்பில் எந்தப் பங்கையும் அமெரிக்க வீரர்கள் கொள்ள விரும்பவில்லை என்பது போரின் மீது அவர்கள் கொண்டுள்ள தீர்ப்பினால்தான் என்பதை அறிந்தால்தான் உணர முடியும். அமெரிக்க இராணுவ வீரர்கள், போரை நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பொய்களே என்பதை இப்பொழுது அறிந்துகொண்டுவிட்டனர்.

ஈராக்கின் மீதான தாக்குதல், போருக்குத் தாயகத்தில் ஆரம்பத்தில் எந்த அளவு ஆதரவு இருந்திருந்தபோதிலும் அது கரைந்துவிட்டது என்பதும், ஈராக்கிடம் ``பேரழிவு ஆயுதங்கள் இருந்ததில்லை`` என்பதும் அது அமெரிக்காவிற்கு ஒருபொழுதும் அச்சத்தைத் தரக்கூடிய நிலையில் இருந்ததில்லை என்பதும் உணரப்பட்டுவிட்டதும் அது கரைந்து விட்டது. அமெரிக்க மக்களும், குறிப்பாக இராணுவ வீரரும், புஷ் நிர்வாகம் தன்னுடைய புதிய காலனித்துவ வெற்றியை, எண்ணெய் வளம் கொழிக்கும் மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டை கைப்பற்றும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான ஈராக்கியரும் 225 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அறிந்த அளவில் அடிவயிற்றில் வேதனையுடன் சுருண்டுபோயுள்ளனர்.

அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக்கிய மக்களால் ``விடுதலை பெற்றுத்தந்தவர்கள்`` என்று போற்றப்படுவர் என கூறப்பட்ட புஷ் நிர்வாகத்தின் பொய்தான் மிகப்பெரிய அளவில் அமெரிக்க வீரர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தி விட்டது. போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சாரம் வீரர்களுடைய உள்ளங்களில் பதிக்கப்பட்டிருந்தது. மாறாக அமெரிக்க வீரர்களை ஆக்கிரமிப்பு படையினர் என்று வெறுத்து ஒதுக்கும் மனப்பாங்கையும், அமெரிக்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு முடிவிலா எண்ணிக்கையில் ஆட்களைத் தரத்தயாராக இருக்கும் சாதாரண மக்கட்தொகையைத்தான் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு சான்றாக, ஈராக்கின் கொந்தளிக்கும் பெரிய நகரங்களில் ஒன்றான பல்லுஜாவை மே மாதத்திலிருந்து இரண்டாம் பிரிகேட் பாதுகாத்து வருகிறது. இந்த பிரிகேட், பனி படர்ந்த கோழிக் குஞ்சுகளை மக்களுடைய `உள்ளத்தையும் இதயத்தையும் வெல்லும் நோக்கத்துடன்` அன்பளிப்பாகக் கொடுக்க முற்பட்டபோது மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதை லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் தன் ஜூலை 15 பதிப்பில் எழுதியுள்ளது. பல மசூதிகளிலும் உள்ளூர் சுன்னி பிரிவு சமய குருமார்கள் உணவை ஏற்க மறுத்துவிட்டனர். அமெரிக்கப் படையினரிடம் ஒரு சமய குரு கூறினார்: ``நாங்கள் அமெரிக்கரிடமிருந்து பெறும் கோழிக் குஞ்சுகளை ஏற்பதைவிட, கற்களைத் தின்போம். பல்லுஜாவில் பரம ஏழைகூட உங்களிடமிருந்து கோழிக் குஞ்சை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.`` லாரிகள் நிறைய கொண்டுவரப்பட்டிருந்த கோழிக்குஞ்சுகளை திருப்பியெடுத்துச் செல்வதற்குள், அமெரிக்க வீரர்கள் கற்களாலும், உடைந்த செங்கற்களாலும் சிறுவர்களால் அடிக்கப்பட்டனர்.

யூப்ரெடிஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையேயுள்ள கிராமங்களிலும், பெரும்பாலான ஈராக்கிய மக்கள் வாழும் இடங்களிலும் இதேபோன்ற நிலைமையைத்தான் சந்திக்கின்றனர்.

ஈராக்கிய மக்கள் அமெரிக்கப் படைகளை வரவேற்கும் என்ற கணிப்பில், போர்ப் படையெடுப்பிற்கு முன்பு பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட், ஆக்கிரமிக்குப் பின்னர் 40,000 லிருந்து 60,000 வீரர்கள் வரை அங்கிருந்தால் போதும் என வலியுறுத்தியிருந்தார். ``வெற்றி`` கண்டு மூன்று மாதங்கள் ஆகியபோதிலும், நாடு முழுவதும் ஒருபுறமிருக்க, பாக்தாதை மட்டும் 1,46,000 அமெரிக்கப் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகக் கூற முடியவில்லை.

ஈராக்கில், சராசரி நாளொன்றில் ஏதோ ஒரு பகுதியில், ஓர் அமெரிக்க வீரர் கொல்லப்படுகிறார்; மே 1லிருந்து குறைந்தது 88 பேராவது இறந்துள்ளனர் என்பதும் நாளொன்றுக்கு ஐந்திலிருந்து பத்து பேராவது காயமுறுகிறார்கள். ஆறு வழியுடைய, ஆறு மைல் நீளச் சாலை விமான நிலையத்திற்கும் பாக்தாத் நகரத்திற்கும் இடையே உள்ளது; இராணுவ வாகன வரிசைகள் அன்றாடம் இதைக் கடக்கும்போது, இடையறாத் தாக்குதலுக்கு உட்படுகின்றன. கடந்த திங்களன்று சுழல் ஏவுகணை எறிகுண்டு (RPG) கொண்டு இராணுவ வாகனத்தைத் தாக்கியபோது, ஓர் அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்தனர். வாஷிங்டன் போஸ்டிற்கு அந்த இடத்திலிருந்த ஓர் அமெரிக்க பாரசூட் வீரர் கூறினார்: ``ஒவ்வொரு 10 அடி இடைவெளியிலும் ஒரு பீரங்கி வண்டியை நிறுத்திவைத்தால் ஒழிய, நாம் வேறு எதுவும் செய்வதற்கில்லை.``

கடந்த புதனன்று மற்றொரு அமெரிக்க வாகன வரிசையை RPG ஒன்று தாக்கி ஓர் அமெரிக்கர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமும் அடைந்தனர். அதே நாள் பாக்தாதில் நடந்த இரண்டு தாக்குதல்களில் 3 படை வீரர் உயிரிழந்ததுடன், தலைநகரின் மேற்குப் பகுதியில் அமெரிக்கா நியமித்திருந்த ஈராக்கிய மேயர் ஹடித்தா (Hadithah) கொலை செய்யப்பட்டார். வெள்ளியன்று பல்லுஜாவிற்கு அருகில் தொலைவிலிருந்து இயக்கப்பட்ட குண்டு ஒன்று, வாகன வரிசை பாலத்தைக் கடக்கையில், அதன் மீது வீழ்ந்தது. மூன்று வண்டிகள் சேதமடைந்தன, மூன்றாம் படைப்பிரிவிலிருந்து வீரர் ஒருவர் இறந்ததுடன், கணக்கில் தெரிவிக்கப்படாத அளவு வீரர்கள் காயமுற்றனர். வாரக் கடைசியில் மூன்று அமெரிக்க வீரர்கள் பாக்தாதிலும் மோசூலிலும் கொல்லப்பட்டனர்; அமெரிக்கப் படையெடுப்பிற்கு மிகுந்த ஆரவார ஆதரவு தருவர் என்று வெள்ளை மாளிகையால் வர்ணிக்கப்பட்ட ஷியைட் முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் நஜப்பில் நடைபெற்றது.

கொரில்லாப் போர் முறையைப் பற்றிய வரலாற்று அனுபவத்தைக் கொண்டு காணும்போது, மிக அதிக அளவிலான இறப்புக்களை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி எதிர்ப்பு இயக்கங்கள் அறிந்துகொள்ள அதிக நாட்கள் பிடிக்காது என்பதை அறிய முடியும். இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, ஜூலை 17ம் தேதி எதிர்ப்பு இயக்கப் போராளிகள் பாக்தாதில் வந்திறங்கிய வாகன விமானத்தின் மீது தரையிலிருந்து வான்பொருளைக் குறிவைக்கும் ஏவுகணை கொண்டும் தாக்கினர். போர் வேண்டும் என்று வாதிட்டவரும், ``அதிர்ச்சியும் பெருவியப்பும்`` (Shock and Aue) என்ற போரின் தந்திர அணுகுமுறை ஆசிரியர்களில் ஒருவருமான ஹார்லன் உல்மான் என்பவர் இதற்கு விடையளிக்கும் வகையில் எச்சரித்துள்ளார்: ``பாக்தாதில் நுழையவிருக்கும் பெரிய விமானத்தையோ, அல்ரஷித் ஹோட்டலையோ (பாக்தாதிலுள்ளது) அவர்கள் தாக்க முற்பட்டால் என்ன செய்ய முடியும்? நாம் எதற்கும் தயாராக இருக்கவேண்டும்.``

புஷ் நிர்வாகத்தின் தப்புக்கணக்குகளும், தடையற்ற இராணுவ ஆற்றலைக் கொண்டுள்ளோம் என்ற இறுமாப்புடன் கூடிய தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் போக்கும் அமெரிக்க இராணுவத்தைப் புதைகுழியில் தள்ளிவிட்டது. அமெரிக்கப் படைகள் ஈராக்கில் 10 ஆண்டு காலம் வரை இருக்க நேரிடலாம் என்று அங்குள்ள வீரர்கள் கேள்விப்படுகின்றனர்; அதே நேரத்தில் விரைவில் அவர்களுக்குப் பதிலாக இராணுவ வீரர்களை அமர்த்த முடியவில்லை என்றும் அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. படையின் மொத்த 33 பிரிகேட்டுகளில், ஈராக்கில் 16 உம், ஆப்கானிஸ்தானத்தில் 2 உம், தென்கொரியாவில் 2 உம், கொசோவாவில் இன்னமும் 1 உம் ஆக படைகள் நிற்கின்றன. அமெரிக்காவிலுள்ள 12 பிரிகேடுகளில் 3 நவீனப்படுத்தப்படும் பயிற்சியிலும், கொரியத் தீபகற்பத்திற்குத் தயார் நிலையில் 3 உம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு மாற்றாகச் செல்ல இருக்கும் 2 பிரிவுகளும் உள்ளன. எஞ்சியுள்ள 4 பிரிகேடுகள்தான் ஈராக்கிலுள்ள 16 பிரிவுகளுக்கு மாற்றாக வரவேண்டும்.

பாதுகாப்பு செயலர் ரம்ஸ்பெல்டுக்கும், படைத்தலைமைக்கும் இடையே தொடர்ச்சியான நீண்டகாலப் பூசல்கள் புகைந்து வருமளவிலான இக்கட்டான சூழ்நிலை பற்றிய குறிப்புக்களும் வெளிவந்துள்ளன. Wall Street Journal, Los Angles Times மற்றும் New York Times ஆகியவற்றில் வரம்பின் விளிம்பில் அவை நின்று செயல்படவேண்டி இருக்கிறது என்ற படையின் குறைகள் பற்றியும், ஈராக்கிற்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயத்தினால் இருக்கும் வீரரை தக்கவைத்துக்கொள்வதிலும், புதிதாக ஆள் சேர்ப்பதிலும் உள்ளதாகக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஈராக்கில் முடங்கியுள்ள இராணுவத்தினருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு இதுவரை கண்டிராத அளவிற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்காக பென்டகனுக்கு அழுத்தம் வந்துள்ளது. மூன்றாம் தரைப்படைப் பிரிவு விரைவில் தாயகம் திருப்பியனுப்பப்படும் என்று புதிய உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ``அமைதி காக்கும் பணியில்`` பயன்படுத்தப்படாத கடற்படை பிரிவுகள்கூட (Marine Units) இங்கு பயன்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இன்னும் சர்ச்சைக்குரிய முறையில் 10,000 பகுதி நேர National Guardsmen இந்த ஆண்டு இறுதிக்குள் 13-16 மாத கால முழுநேரப் பணியில் அமர்த்தப்பட்டு ஈராக்கிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிகிறது.

அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும்கூட அமெரிக்க இராணுவத்தில் இப்பொழுதுள்ள அல்லது எதிர்காலத்தில் சேர இருக்கின்ற வீரர்கள், உறுதியற்ற பல காலமும் அழுத்தம் நிறைந்த ஆண்டுக்கணக்கான ஈராக்கிய பயணத்தை மேற்கொண்டு சண்டையிடுவதிலும், ஒருக்கால் இறப்பதிலும், சட்டபூர்வமான கொரில்லா எதிர்ப்பு முறையைத் தாக்குவதற்காக மேற்கொள்ளப்படும், நியாயமற்ற அடக்குமுறைப் போரில் ஈடுபட நேரிடும். அங்கிருந்து மீண்டும் வருவோர் சில காலம் கடந்தபின்னர் மீண்டும் ஈராக்கிற்கோ அல்லது வேறு ஏதேனும் கடல் கடந்த பணிக்கோ ஒரு குறுகிய கால இடைவேளைக்குப் பின்னர் அனுப்பப்படுவர். இதை ஒட்டிய, தவிர்க்க முடியாத, உறவுகளின் தடைகளும், மற்றைய தனிப்பட்ட கஷ்டங்களும், மன அதிர்ச்சியை அதிகரிக்கும். ஏற்கனவே ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தினரில் 9 பேர், இராணுவம் இடக்கரடக்கலாகத் தற்கொலைக்குப் பயன்படுத்தும் ``எதிரிகளிடமிருந்து தாக்கப்படாத`` மரணத்தைச் சந்தித்துள்ளனர்.`` இன்னும் எத்தனை காலம்தான் அமைதியை இழந்த நிலையில் வீரர்கள் தங்கள் அதிகாரிகளையோ அல்லது ஒருவரை ஒருவரையோ சுடத் தொடங்காமல் இருப்பர்?

போருக்கான மந்திரம் எப்போதுமே ``படை வீரர்களுக்கு ஆதரவளிங்கள்`` என்பதாகும். பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தின் இளைஞர்கள் கல்லூரிப் படிப்பு கிடைக்கும் வாய்ப்பு இல்லாதாலும், மற்ற தேர்ந்த தொழில்நுட்பங்களைக் கற்க வாய்ப்பு இல்லாததாலும் இராணுவத்தில் சேர்கின்றனர்; இவர்கள் ஈராக்கில் தங்களுக்கு வேலை இல்லை என்பதை சரியான வகையில் உணர்ந்து தாயகம் திரும்ப விழைகின்றனர். இந்த ஈராக்கிய ஆக்கிரமிப்பு கொடூரமானதொன்று; இது உடனடியான, நிபந்தனையற்ற முறையில், அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் படைகளைத் திரும்பப்பெறுவதின் மூலம் கைவிடப்படவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved