World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Niger president challenges Blair government over uranium allegations

பிளேயர் அரசாங்கத்தின் யூரேனியம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நைஜர் ஜனாதிபதி விடுக்கும் சவால்கள்

By Barbara Slaughter
5 August 2003

Back to screen version

டோனி பிளேயர் தொடர்ந்து சதாம் ஹூசேன் ஆபிரிக்க நாட்டிலிருந்து யூரேனியத்தை வாங்குவதற்கு முயன்றார் என குற்றம் சாட்டுக்களை கூறிக்கொண்டே இருக்கிறார், அவர் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நைஜர் பிரதமர் ஹமா ஹமாதோ (Hama Hamadou) கோரி இருக்கிறார்.

ஈராக் தனது நாட்டை அணுகியது என்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட பின்னர் ஹமாதோ முதல் தடவையாக பிரிட்டனின் சன்டே டெலிகிராப் பத்திரிகைக்கு ஜூலை-28-அன்று பேட்டியளித்தார். அந்த பேட்டியில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை பிளேயர் தாக்கல் செய்தாக வேண்டும் என்று கோரியுள்ளார். ஈராக்குடன் எப்போதுமே தனது நாடு ராஜிய மற்றும் இருதரப்பு உறவுகளைக் கொண்டிருந்ததில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். 1991-ல் நடைபெற்ற வளைகுடாப் போரில் அமெரிக்காவையும், பிரிட்டனையும், ஆதரித்து 500 படைகளை தனது நாடு அனுப்பியதாகவும் தற்போது இத்தகைய குற்றச்சாட்டுக்களை கூறுவதன் மூலம் தனது நாட்டை முறைகேடாக அவர்கள் நடத்திக் கொண்டிருப்பதாகவும் நைஜர் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

''இப்படித்தான், அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது நட்பு நாடுகளை நடத்துவதா? பிரிட்டனிடம் தனது கூற்றை நிரூபிப்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்குமானால் அனைவரும் அவற்றை பார்ப்பதற்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும். எங்களது மனச்சாட்சி தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்தப் பாவமும் செய்யாதவர்கள்'' என ஹமாதோ கூறினார்.

பிரிட்டனோ, அல்லது அமெரிக்காவோ, தனது அரசாங்கம் எந்தவிதமான தவறையும் செய்ததாக முறையான குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை. ஈராக்கிற்கு எதிராக அவர்கள் தொடக்கிய போருக்கு பொதுமக்களது ஆதரவை திரட்டுவதற்காக அந்த அரசாங்கங்களால் செய்யப்பட்ட முயற்சிகளில் இந்தக் கூற்று அதன் தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது. "இக்கூற்றுக்கள் உண்மை அல்லாதவை என அனைவருக்கும் தெரியும்" என மேலும் அவர் கூறினார்.

பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ தனது அரசாங்கம் எந்தவிதமான தவறையும் செய்ததாக முறையான குற்றச்சாட்டு எதனையும் கூறவில்லை என்று ஹமாதோ சரியாக சுட்டிக்காட்டினார். அவர்களது குற்றச்சாட்டில் ஏதாவது உண்மையிருக்குமானால், உலகிலேயே வறுமைமிக்க நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள நைஜர், உடனடியாக "போக்கிரி நாடுகள்" என்று அழைக்கப்படுவனவற்றில் ஒரு ஆளாக ஆகி இருக்கும். சான்று இன்னும் தேவைப்படின், அவர்கள் அவ்வாறு செய்யத் தவறியது ஒரு சான்று ஆகும், உண்மையான கூற்று ஈராக் மீதான தங்களின் முன்கூட்டிய தாக்குதல் திட்டங்களை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட, பொய்களின் மூட்டையைத் தவிர வேறொன்றுமில்லை என்பதற்கான சான்று ஆகும்,

பிளேயர் ஆட்சி 2002- செப்டம்பர்-24- அன்று முதலாவதாக இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளியிட்டது. ஈராக்கில் பேரழிவுகர ஆயுதங்கள் இருப்பதாக விவரிக்கப்படுகின்ற அறிக்கை "சந்தேகத்திற்குரிய" புலனாய்வு அறிக்கையாக ஆகி இருக்கிறது. "ஈராக், ஆபிரிக்க நாடு ஒன்றிடமிருந்து கணிசமான அளவிற்கு யூரேனியத்தை பெறமுயன்றது. ஈராக்கில் அணு மின்சாரம் உற்பத்தி நிலையங்கள் போன்ற சிவிலியன் பணிகள் நடைபெறாத நிலையில் அப்படி குறிப்பிடத்தக்க அளவு யூரேனியத்தை பெறுவதற்கு ஈராக்கிற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை" என புலனாய்வு அறிக்கை தெரிவித்தது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள், கொச்சையான போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது பின்னர் அம்பலத்திற்கு வந்தது. அமெரிக்காவின் அரசுத்துறை மூத்த அதிகாரியான போல் கெல்லி ஏப்ரல்-29-ம் தேதியன்று பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில், 2001- கடைசியில் முதலில் அமெரிக்காவிற்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு வழிகளில் தனியார், செய்தி மூலங்கள் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் இரண்டு மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் மூலம் இத்தகவல்கள் கிடைத்ததாக அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இத்தாலி நாட்டு பத்திரிகையான ரிபப்ளிக்கா தந்திருக்கும் தகவலின்படி, ஆபிரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இத்தாலியில் போலி ஆவணங்களை விற்க முயன்றார், அப்போது அந்த தகவல் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களுக்கு பரிமாறப்பட்டது என்பதில் சிறிதுதான் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது.

அத்தகைய ஆவணங்களில் ஒன்று ஈராக்கிற்கு 500-டன்கள் யூரேனியம் விற்கப்படுவதை உறுதிப்படுத்தி 2000-ஜூலை-6-ந் தேதி ஒரு உடன்படிக்கை கையெழுத்தானதாக கூறுகின்றது. அத்துடன் அக்டோபர்-10- தேதியிட்ட ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் ரோமில் உள்ள நைஜர் தூதருக்கு தகவலாக அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் தலைப்பில் Conseil Militaire Supreme என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய அமைப்பு எதுவும் 1989-மே- மாதம் முதல் நைஜர் நாட்டில் இல்லை. எல்காட்ஜ்- ஹபீப் நைஜர் வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது. எல்காஜ்- ஹபீப் 1989- முதல் வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இல்லை.

தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி சந்தேகங்கள் நிலவுவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெள்ளை மாளிகைக்கு தகவல் தந்தது. இதற்குப்பின்னரும், அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் 2002-டிசம்பர்-19- அன்று சம்மந்தப்பட்ட நாடு நைஜர் என்பதாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைசாலும் ஒருமாதத்திற்கு பின்னர் அமெரிக்க பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டாலும் குற்றச்சாட்டுக்கள் திரும்பக் கூறப்பட்டன.

2003-ஜனவரி-29- அன்று ஜனாதிபதி புஷ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை தொடக்கிவைத்து உரையாற்றும் போது அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டினார். என்றாலும் மிக கவனமாக அந்த ஆவணம் பிரிட்டன் தந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் முகம்மது எல். பாராடி (Mohamed El Baradei) ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அந்த ஆவணங்களை கொச்சையான மோசடிகள் என்று அறிவித்தார். IAEA- நிபுணர்கள் சிலமணி நேரங்களில் அந்த முடிவிற்கு வந்துவிட்டது தெளிவாக தெரிகின்றது. அப்படியிருந்தும் ஈராக் மீது போர் தொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வந்ததால் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது குற்றச்சாட்டுக்களை நிலை நாட்டிக் கொண்டேயிருந்தன.

ஈராக் போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், துணை ஜனாதிபதி டிக் செனி அதே குற்றச்சாட்டுக்களை திரும்பவும் கூறினார். ''சதாம் ஹூசேன் அணு ஆயுதங்களை பெறுவதற்கு மிகத் தீவிரமாக முயன்று வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் அணு ஆயுதங்களை திரும்ப உருவாக்கிக்கொண்டிருக்கிறார், என்ற உண்மையை நாங்கள் நம்புகிறோம்'' என அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆவணங்கள் மோசடிகள் என்று IAEA- முடிவு செய்ததை அவர் கண்டித்தார். ''எல் பாராடி தவறு செய்துவிட்டார் என்று நினைக்கிறேன், சதாம் ஹூசேன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்க- IAEA- தவறிவிட்டது அல்லது தொடர்ந்து 'சதாம் ஹூசேன் பற்றி குறைத்து மதிப்பிட்டு வருகிறது. இப்போது அவர்கள் சொல்வதை முன்பு எப்போதும் இருந்ததைவிட நம்புவதற்கு இல்லை'' என்று துணை ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

ஜூலை-7- ந் தேதியன்று வெள்ளை மாளிகை பகிரங்கமாக அந்த ஆவணங்கள் போலியானவை என ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிரிட்டனின் புலனாய்வு அதிகாரிகள் மீது பழியை போடுவதற்கு வெள்ளை மாளிகை முயன்றது.

அப்படியிருந்தும் அந்தக் குற்றச்சாட்டுக்களை தாங்கி நிற்க பிளேயர் தொடர்ந்து முயன்றார். அண்மையில் பிரிட்டனின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு வெளியிட்டுள்ள பரிந்துரையில் "ஈராக் அண்மைக் காலத்தில் ஆபிரிக்க நாடு ஒன்றிலிருந்து கணிசமான அளவிற்கு யூரேனியத்தை பெறுவதற்கு முயன்றது. என 2002-செப்டம்பர் மாதம் முடிவு செய்ததற்கு அடிப்படை ஆதாரம் என்ன என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்து பதிலளிக்க மறுத்து வருகின்றது. மோசடியான ஆவணங்களுக்கு அப்பாற்பட்ட "பல்வேறு புலனாய்வு" தகவல்களை அல்லது "பத்திரப்படுத்தப்படாத ஆதாரம்" கொண்டு முடிவு செய்ததாகவும் பிரிட்டனின் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். இப்படி கூறப்படும் எந்த சான்றையும் பிரிட்டன் ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யவில்லை.

ஜூலை-14 அன்று பிளேயரின் பேச்சாளர் ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு கீழ்க்கண்ட தகவலை தெரிவித்தார்: ''செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புலனாய்வு ஆவணங்களில் கூறப்பட்ட யூரேனியம் பற்றிய தகவல்களை தொடர்ந்து நாங்கள் உறுதியாக நம்புகிறோம் யூரேனியத்தை பெறுவதற்கு சதாம் ஹூசேன் "முயன்று" கொண்டிருந்தார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம். உண்மையில் அவர் யூரேனியத்தை வாங்கிவிட்டார் என்று கூறவில்லை. இந்த தகவல் ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி மூல ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது, இந்த செய்திகள் அமெரிக்காவிலிருந்தோ பிரிட்டனிலிருந்தோ கிடைத்தவை அல்ல. மோசடி ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு இந்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதைப்பற்றி 2003-வரை எந்த தகவலும் இல்லை.''

ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பிளேயரின் பேச்சாளர் பதிலளிக்கும்போது, 1999-ம் ஆண்டு நைஜர் நாட்டிற்கு ஈராக் தூதுக்குழு சென்றது, "ஈராக், யூரேனியம் பெறுவதற்கு முயன்று வந்து கொண்டிருந்தது என்ற எங்களது முடிவிற்கு ஆதரவாக அமைந்துள்ளன." 1981-82-ல் 21 ஆண்டுகளுக்கு முன்னர் நைஜர் நாட்டிலிருந்து ஈராக்-200டன்கள் யூரேனியத்தை வாங்கியிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். கூட்டு புலனாய்வுக் குழு, புலனாய்வு தகவல்களை மதிப்பீடு செய்த பின்னர்தான் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆவணங்களில் அரசாங்கம் அத்தகைய முடிவுகளுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்போது ஒன்று தெளிவாக தெரிகிறது. பிளேயரின் அதிகாரி கூறுகின்ற செய்தி "மூலங்கள்" ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்ட அதே சந்தேகத்திற்குரிய மோசடிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட அடிப்படைகள்தான். அதே மோசடி அறிக்கைகள் திரும்பத்திரும்ப தொடர்பு இல்லாததாக இரண்டாண்டுகளில் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில் எவரும் எப்படி யூரேனியம் ஈராக்கிற்கு வழங்கப்பட்டது என்பதை விளக்குவதற்கு முயலவில்லை. ''சன்டே டெலிகிராப்'' பத்திரிகையின் நிருபர் டேவிட் ஹாரிசன் அண்மையில் நைஜர் நாட்டில், அதன் தலைநகர் நியாமியிலிருந்து 500-மைல்களுக்கு அப்பால் உள்ள அர்லிட்டில் உள்ள இரண்டு யூரேனிய சுரங்கங்களுக்கு விஜயம் செய்தார். யூரேனியம் உற்பத்தியும் அது கொண்டு செல்லப்படும் ஏற்பாடும் காற்றுக்கூட உள்ளே புக இடமில்லாமல் வரிசை எண்களுடனும் தேதி வாரியாக மூடப்பட்ட டிரம்களில் வைத்தும் அதன் உற்பத்தியானது கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். பிரான்சிற்கு கொண்டு செல்லும் முன் அவை பெனின்னில் உள்ள கொட்டானோ (Cotonou) வழிநெடுக இராணுவ வீரர்களால் கண்காணிக்கப்படுகின்றன என நிருபர் குறிப்பிடுகிறார்.

அந்த சுரங்கத்தின் நிர்வாக இயக்குநர் சேர்ஜ் மார்டினெஸ் (Serge Martinez) "விஞ்ஞான கற்பனைக் கதைகள்" போல யூரேனியத்தை திருட முடியும் அல்லது வழியில் தொலைத்துவிட முடியும் என்ற கருத்தை நிராகரித்தார். அவர் சன்டே டெலிகிராபிற்கு கூறினார், "கடந்த 40 ஆண்டுகளாக யூரேனியம் திருடப்பட்ட அல்லது காணாமற் போன எந்த புகாரும் கிடையாது. "ஈராக்கிற்கு சட்டவிரோதமாக எந்த யூரேனியமும் விற்கப்படும் சாத்தியத்தை மறுத்தார். "ஏனெனில் யூரேனியத்தின் அனைத்து நகர்வும் சர்வதேச அணுசக்தி ஆணையம் மற்றும் கம்பெனிகளால் கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது'' என அவர் விளக்கினார்.

பிளேயரின் குற்றச்சாட்டிற்கு ஏதாவது நியாயம் இருக்குமானால் பிரான்ஸ் அரசாங்கம்தான் அதற்கு உடந்தை என்று குற்றம் சாட்டவேண்டும், ஏனென்றால் பிரான்சிற்குத்தான் அனைத்து நைஜர் யூரேனியமும் செல்கிறது. ஈராக்கிற்கு யூரேனியம் திருப்பப்பட்டுவிட்டிருந்தது என்பதற்கு ஏதாவது முக்கிய ஆதாரத்தை பிளேயர் வைத்திருந்தால், அவர் ஒன்றில் பிரான்சை இதற்கு உடந்தை என்று குற்றம் சாட்டி இருந்திருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு விதிகளை கடுமையாய் மீறியதாக தனது ஐரோப்பியக் கூட்டாளியை எச்சரித்திருந்திருக்க வேண்டும்.

உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் அத்தகைய சான்று இருப்பதாக உறுதிப்படுத்தலை செய்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரு சட்டவிரோத போருக்கான அதனது கந்தல் கந்தலான மற்றும் மோசடியான நியாப்படுத்தல்களை முன்னிலைப்படுத்துவதற்கான ஆற்றொணா பின்னணிக் காவற்படைக் கைகலப்பினை அதிகரிக்கும் பொருட்டு, உலக விவகாரங்களில் நைஜரின் பலவீனமான நிலையை குற்றம் நாடும் பாங்கில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதலாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved