World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

The Columbia Space Shuttle disaster: science and the profit system

றிணீக்ஷீt 3றிஷீறீவீtவீநீணீறீ ணீஸீபீ மீநீஷீஸீஷீனீவீநீ நீணீusமீs uஸீபீமீக்ஷீறீஹ்வீஸீரீ tலீமீ ணீநீநீவீபீமீஸீt

கொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்புமுறையும்

பகுதி 3: விபத்திற்கு காரணமான அரசியல், பொருளாதாரக் காரணங்கள்

By Joseph Kay
22 September 2003

Back to screen version

விண்கலம் கொலம்பியா, அதைச்செலுத்திய குழு ஆகியவை அழிந்ததற்கான காரணங்களில் இரண்டை இத்தொடரின் முந்தைய இரு கட்டுரைகளில் கண்டோம். விபத்திற்கான உடனடி தொழிற்நுட்பக்காரணம், கலத்தின் வெப்பபாதுகாப்பு (Reinforced Carbon-Carbon (RCC)) பகுதியில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து கலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது அதை எரியச்செய்துவிட்டது. புஷ் நிர்வாகம், NASA நிர்வாகத்தை விண்கலம் ஏவுதல் கால அட்டவணைப்படி நடக்கவேண்டும் என்பதற்காக கொடுத்த அழுத்தத்தினால், NASA நிர்வாகம் எதிர்கால ஏவுதல்கள் பின்தள்ளப்படாதிருக்க பாதுகாப்பு கவனங்களை பலியிட தள்ளப்பட்டது.

இதற்கும் பரந்த அளவிலான முறையில் இந்தச்செயல்கள் நடந்தன. ஆரம்பத்திலிருந்தே, விண்வெளித்திட்டம் அரசியல், பொருளாதார அழுத்தங்களால் சீர்குலைக்கப்பட்டிருந்தது; பூகோள அரசியல், இலாபநோக்கு அழுத்தத்திற்கு இத்திட்டத்தின் விஞ்ஞானரீதியான திட்டம் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளிக்கலத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட பெருமளவு தனியார்மயம், NASA இன் வரவுசெலவுத்திட்டத்தில் கடுமையான குறைப்புக்களுடன் இணைந்து, இவ் அழுத்தங்களை அதிகப்படுத்தி கொலம்பியா விபத்திற்கு வழிவகுத்தது.

விண்வெளிக்கலத்திட்டத்தின் வரலாறு

1969இல் முதல் மனிதனை சந்திரனுக்கு அனுப்பிய அப்போலோ (Apollo) திட்டத்திற்குப்பின், விண்வெளிக்கலப்பயணத்திட்டம் பிறந்தது. அப்போலோவிற்கு பின், NASA குறைந்த தூரத்தில் சுற்றுப்பாதை கொண்ட விண்வெளி நிலையம் அமைத்து, அதை ஏவும்தளமாகக்கொண்டு சந்திரன்,

செவ்வாய் மற்றும் அதற்கும் அப்பால் முழுமையான ஆய்வு மேற்கொள்ளலாம் என கருதியது. இந்தப்பரந்த அளவிலான விண்வெளித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே விண்வெளிக்கலம் ஆரம்பத்தில் நோக்கப்பட்டது.

1960களின் இறுதியிலும், 1970களின் ஆரம்பத்திலும் வியட்நாம் போர்ச் செலவினங்கள் ஏற்றத்தினால், பொருளாதார நெருக்கடிக்காலங்களாக இருந்தன. NASAவின் பேரவா நிறைந்த விண்வெளிநிலையத்திட்டத்திற்கு ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனோ (Lyndon Johnson) ரிச்சார்ட் நிக்சனோ (Richard Nixon) நிதியொதுக்கத் தயாராக இல்லை. "NASAவின் பேரவாக்களை சிறிது தயத்துடன் நிராகரித்ததோடு, அரசியல்ரீதியாக அதன் ஒதுக்கீட்டிற்கு எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைக்குமாறும் உத்தரவிட்டார். NASAவுடைய விண்வெளி நிலையத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, Saturn V ஏவுகணை வாகன உற்பத்தி இனி வேண்டாம் என இரத்து செய்யப்பட்டதால், விண்வெளிப் பயணக்கலம் ஒன்றுதான் மனிதன் பயணிக்கும் திட்டமாக NASA இனால் செயல்படுத்தக்கூடியதாகப்போயிற்று." (22)

விஞ்ஞான ஆராய்ச்சியைத்தவிர, இராணுவ, வர்த்தக தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள்களை ஏவுதலுக்குமான சகல தேவைக்குமான வாகனமாக பயன்படுத்தத்தலாம் என்பதால இதன் செலவைப்பற்றி, நிக்சன் நிர்வாகத்திடம் NASA நியாயப்படுத்த முடிந்தது. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் இவ்வாகனம் தொடர்ச்சியான மற்றும் நீண்டகாலத்திற்கு பணிபுரியும் வாகனமாக அது காட்டப்பட்டதேயொழிய, ''வளர்ச்சித்திட்டமாக" அது காட்டப்படவில்லை.

பனிப்போர் காலகட்டத்தில், பூகோள அரசியல் ரீதியிலும் தன்னுடைய பணியை தொடர்ந்து செய்யவும் விண்கலத்தால் முடிந்தது. சந்திரனில் இறங்கியதுபோல் அமெரிக்க அரசாங்கத்திற்கு இது ஒரு பிரச்சார அளவில் முக்கியமாக இல்லாவிட்டாலும், சோவியத் யூனியனுக்கு இத்துறையை கையளிப்பதுபோல், விண்வெளியில் மனிதவிண்வெளிப்பயணத்துறையை கைவிடமுடியாது போயிற்று.

ஏப்ரல் 1981 வரை, விண்வெளிக்கூடமான கொலம்பியா ஏவப்படவில்லை. 1982ல் ஜனாதிபதி ரேகன் ''அடுத்த பயணத்திலிருந்து, கொலம்பியாவும், அதன் சகோதரக்கப்பல்களும், விண்வெளியினை விஞ்ஞான ஆய்விற்காக தொடர்ச்சியாக பயன்படுத்தவும், வர்த்தக முயற்சிகள், தேசியப்பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை எளிதில் சிக்கனமாக செயற்படுத்தவும் முழுமையாகத் தயாராகிவிடும்'' என கூறினார்(23).

இது ஒரு தவறாகும். இந்த அறிக்கை குறிப்பிடுவதுபோல் அது இன்னமும் செயலாற்றும் நிலைமைக்கு தயாராகவில்லை. அபிவிருத்திசெய்யப்படும் ஒரு கூடமாகத்தான் அது இருந்தது. அதாவது கடுமையான பரிசோதனைகளுக்கும், கவனமான மேற்பார்வைக்கும் அது உட்படுத்தப்படுதல் வேண்டியிருந்தது. ஆண்டிற்கு 50 ஏவுதல்கள் உட்பட நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்குகள், இந்த சோதனைத்தன்மையுடன் உண்மையில் சாத்தியமற்றதாகும். ஆனால் செலவுகளையம் குறைத்து, ஏவுதல்களையும் அதிகரிக்கும் உத்திரவுகள் தொடர்ந்த வண்ணம் வந்தன.

1986 ஜனவரி 28ல் ஏற்பட்ட Challenger அழிவு நாசாவை நெருக்கடிக்குத் தள்ளியது. விபத்தின் தன்மையை ஆராய நியமிக்கப்பட்டிருந்த குழு, அரசியல் காரணங்களுக்காக ஏவதல்களை விரைவுபடுத்தக் கூறிய றேகனுடைய நிர்வாகத்தின் பங்கு பற்றி மூடிமறைத்துவிட்டது. (பார்க்க htttp://www.wsws.org/articles/may 2003/chal-m06.shtml). நாசாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பல பாதுகாப்புப்பணிகளில் மாறுதல்கள் கொண்டுவரப்படவேண்டும், பாதுகாப்பு, நம்பிக்கைத்தன்மை, தரக்கட்டுப்பாடு இவற்றிற்கு தனி அலுவலகம் தேவை என்பது உட்பட இந்தக்குழு கேட்டுக்கொண்டாலும், அழிவிற்கான அடிப்படைப்பிரச்சினைகள் பற்றிய பொறுப்பை மாற்றுவது குறித்து, அதாவது றேகன் மற்றும் அவருக்கு முந்தைய நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல், பொருளாதார நலன்களுக்கும் விண்வெளித்திட்ட ஆராய்ச்சி ஒரு விஞ்ஞானரீதியான வளர்ச்சியின் தர்க்கரீதியான அபிவிருத்தி என்பதற்கும் இடையிலான முரண்பாடு தொடர்பாகவோ எதுவும் கூறவில்லை. இந்த முரண்பாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் மேலும் தீவிரமடைந்துள்ளன.

அரசாங்கம் திட்டத்திற்கு நிதிக்குறைப்பு செய்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகிய இராணுவ, வர்த்தக ஏவுதல்களுக்கு விண்கூடம் பயன்படுத்தப்படாது என றேகன் விண்கல அழிவிற்கு பதில் அளித்தார். அரசாங்கம் அத்திட்டத்திற்கு நிதி வழங்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றை மறைத்தார்.

பலகாலம் செயலற்றிருந்தபின், செப்டம்பர் 1988ல் விண்வெளிக்கூடம் மீண்டும் செயல்படத்தொடங்கியது. சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station (ISS)) நிறுவுதல் உட்பட, பல விஞ்ஞானத்திட்டங்களுக்கு அது இப்பொழுது பயன்படுத்தப்படலாயிற்று.

விண்வெளிக்கூடத்திட்டம் தனியார்மயமாக்கப்படுதல்

1990களில் விண்வெளிக்கூடத்திட்டம், தனியார்மயம், செலவினங்கள் குறைப்பு போன்றவற்றிற்கு உட்பட்டது. கிளின்டன் நிர்வாகத்தால், குறிப்பாக துணை ஜனாதிபதி அல்கோர் இனால் இவ்விலக்கு ஊக்கம்பெற்றது. அதாவது முன்பு அரசாங்கங்கள் நடத்தி வந்தசெயல்களை செலவுக்குறைப்பிற்குட்படுத்தத் தனிநிறுவனங்களாக மாற்றிவிடுதல் என்பதாகும். உண்மையில், விண்வெளிக்கூடத்திட்டம் முற்றுமுழுதாக கைவிடப்படாமல் போனதிற்கான முக்கிய காரணம் குறிப்பாக Boing, Lockheed Martin போன்ற மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் முக்கிய நலன்கள் இதனுடன் தொடர்புபட்டிருந்ததாலாகும்.

நாட்டின் கூடுதலாக தனியார்மயமாக்கப்பட்டுள்ள நிறுவனமாக NASA உள்ளது. விண்வெளித்திட்டத்தையே தனியார்மயமாக்கும் முயற்சி 1970களில் ஆரம்பமாகிய அமெரிக்க முதலாளித்துவத்தின் முழுசகாப்தத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. உலகப்போருக்குப்பின்னான பொருளாதார விரிவாக்கம் முடிவிற்கு வந்தபோது, தனியார் மூலதனத்தின் மீதான சகல தடைகளும் திட்டமிட்டபடி இல்லாதொழிக்கப்பட்டமை இன்னமும் தொடர்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறைகளான மின்சாரம், போக்குவரத்து போன்றவை கட்டுப்பாட்டின்றி மீள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஒரு காலத்தில் அரசாங்கம் மேலாதிக்கம் செலுத்திய பிரிவுகள்

மாபெரும் நிறுவனங்களின் நலன்களுக்காக தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. NASA எப்பொழுதுமே ஒப்பந்தக்காரர்களை பாவித்தது. ஆனால் இப்பொழுதுள்ள அளவிற்கு அல்ல.

ஜோன்சன் விண்வெளிமையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த கிறிஸ்டோபர் கிராப்ட் (Christopher Kraft) தலைமையில் ஒரு குழு 1995ம் ஆண்டு கொடுத்த அறிக்கையின்பேரில்தான், தனியார்மயமாக்கும்முறை செயலாக்கப்பட்டது. பெரும்பாலான NASA செயல்பாடுகளை, அதன் பொறுப்பிலிருந்து ஒரு தனிநிறுவனத்தின் பொறுப்பிற்கு மாற்றவேண்டும் என்று கிராப்ட் குழு விதித்தது. அதிலும் Challenger விபத்திற்குப்பிறகு கொண்டுவரப்பட்ட கூடுதலான பாதுகாப்பு முறைகளை அது கண்டித்தது.

"சாலெஞ்சர் விபத்தின் விளைவாக, "பாதுகாப்புக்கேடய'' தத்துவம் ஒன்று வளர்ந்து நிர்வாகத்திற்குக் கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தியது. நீதிமன்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமோ என்ற அச்சத்தையொட்டி, மேலாளர்கள், பொறியாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் முடிவெடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.... (பாதுகாப்பு, நம்பிக்கைத்தன்மை, தரக்-கட்டுப்பாட்டு உறுதி இவற்றை) சீரமைப்பதில், ஒழுங்குபடுத்துவதில் விண்வெளித்திட்டம் முழுவதிலும், குறைந்த அளவில் தேவையான தடுப்புக்களையும் மட்டும் குறிப்பிடத்தக்க அளவு செலவைக் குறைப்பதற்காக கொள்கின்றனர்." என்று அறிக்கை முடிக்கிறது.( http://www.fas.org/spp/kraft.htm).

கிராப்ட் அறிக்கையின் விளைவாக Lockheed Martin, Rockwell ஆகிய நிறுவனங்களுக்கு பெரிய ஒப்பந்தம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. Rockwell பின்னர் போயிங் (Boeing) நிறுவனத்தால் வாங்கப்பட்டது. United Space Alliance (போயிங்-லாக்ஹீட் கூட்டு நிறுவனம்) செலவினங்களைக்குறைத்தால் கிடைக்கும் தொகையில் 65 சதவீதம் NASAவிற்கும், 35 சதவீதம் United Space Allianceவிற்கும் என்று ஒப்பந்தம் விதித்துள்ளது.(108). 1996-2004, 6 ஆண்டு காலத்தில் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு $12.8 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றாலும் கூட, ஒப்பந்தக்காரர்கள் எவ்வளவிற்கு செலவைக்குறைக்க முடியுமோ அந்தளவிற்கு செலவை குறைக்க விரும்புவார்கள் என்பது தெளிவு.

United Space Alliance, விண்கலத்தின் பகுதிகள் அமைக்கப்படுதல், விண்வெளிகூடப்பயணத்தை திட்டமிடல், விண்வீரருக்கான பயிற்சியளித்தல், விண்வெளிகலத்திற்கான வசதிகளை ஒழுங்கமைத்தல், பராமரித்தல் ஆகியவற்றிற்கும் ஏனையவற்றிற்கும் பொறுப்பாவர். வெளித்தொட்டி கட்டுதல், RCC வடிவம் உட்பட மற்றைய பகுதிகளை அமைத்தல் போன்றவை லாக்ஹீட் அல்லது போயிங் தனித்தனியே தயாரிக்கும். கொலம்பியா விபத்தினால், முழுத்தனியார்மயமாக்குதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தனியார்மயமாக்கப்படுதலால் ஏற்படும் சில விளைவுகளைப்பற்றி, 2000ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை, குழு மேற்கோள் காட்டுகிறது. "விலைகொடுத்து வாங்கப்படலும், ஆள்குறைப்பும் 5 ஆண்டுகளாக நடைபெறுவது திறமைச்சமநிலையற்ற தன்மையையும், முக்கிய வேலைப்பணியினரின் சுமையதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல தொழிலாளர்கள் விட்டுச்சென்றுவிட்டதால், இருப்போரின்மீதான மன அழுத்தம் அதிகரித்துள்ளது; இதையொட்டி செயல்பாட்டுத்தன்மை, பாதுகாப்புத்தன்மை இவற்றின் மீதான தாக்கத்திறனும் அதிகரித்துள்ளது."(110)

பாதுகாப்பு பற்றிய NASAவின் பங்கு தனி ஒப்பந்தக்காரர்களுக்கு "உள்நோக்கத்தை" வழங்குவதுடன் நின்றுவிடுகிறது. அவர்களுக்குதான் தர உத்திரவாத்திற்கான நேரடிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ''இது கூட்டாக, NASA வின் நிறுவன உள் பொறியியல், தொழில்நுட்ப திறன்களையும் அழித்துவிடுவதோடு, பிரச்சினைகளை கண்டுபிடிக்கவும், தீர்வு காணவும் United Space Alliance இடமும் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்களிடம் நம்பியிருக்கும் கட்டாயத்தை அதிகரித்துவிட்டது. மேலும் கணிசமான அளவு பாதுகாப்பு பொறுப்பை, அரசாங்கத்திடம் இருந்து தனியார் துறைக்கு மாற்றியதுடன், அரசாங்க உத்தரவுப்படி செய்யப்படவேண்டிய ஆயிரக்கணக்கான ஆய்வு செய்யாதுவிடவும் ,NASAவுடைய உள்நிறுவன பாதுகாப்புத் தொடர்புடைய தொழில் நுட்பத் திறமை மிகுந்த விஷயங்களில் பெரும் குறைப்பையும் உருவாக்கியது."(179)

1992லிருந்து 2001வரை NASA நிர்வாகியாக கிளின்டனால் நியமிக்கப்பட்டிருந்த டேனியல் கோல்டின் (Daniel Goldin) தான் விண்வெளிகூடத்திட்டம் தனியார்மயம் ஆனதற்குக் காரணமாயிருந்தவர். "விரைவில், நல்லமுறையில், மலிவாக" என்ற சொற்றொடரைப் புதிய NASA பணிமுறைக்கு பெயரூட்டியது கோல்டின்தான்; மேலும் எட்வார்ட் டெமிங்(Edwards Deming) நிறுவன மேற்பார்வைக்கோட்பாடுகளுக்கு உட்பட்டு, அதிகாரத்தை பகிர்தல், மற்றும் அரச கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை போன்றவற்றை நீக்கவேண்டுமென வாதிட்டார்

நடைமுறையில் இது எதைக்குறிக்கிறது? NASAவின் நிறுவன ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றிற்கு நேரடிப்பொறுப்பு அளிக்கப்பட்டு, NASA தனியார்துறைமீது வெறும் மேற்பார்வைப் பணியைக்கொள்ளும். " திறமை தேவை என்ற பெயரில் பாதுகாப்பு நலனைத்துறக்கிறார் என்ற குற்றச்சாட்டை கோல்டின் மறுத்தார். 1994ம் ஆண்டு Jet Propulsion Laboratory கூட்டம் ஒன்றில் பேசும்போது, "செலவினங்களை குறையுங்கள் என்று நான் கேட்டால், விண்கூடத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்று பதில் கொடுக்கப்படுகிறது... இது ஒரு மடைத்தனமான விடையெனக் கருதுகிறேன்."(106) NASA விலும், அதன் ஒப்பந்தக்காரர்களிடமும் கடந்த 10 ஆண்டுகளில் வேலைசெய்வோர் எண்ணிக்கை குறைப்பு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. 1993 முதல் ஒப்பந்த விண்கூடப் பணியாளர் எண்ணிக்கை 26,310 லிருந்து 15,744 க்கும், NASAவில் 3781லிருந்து 1718ஆகவும் குறைந்தது.

ஒப்பந்தக்காரர்களுக்குக் கட்டுப்பாடு மாற்றப்பட்டது, விண்கூடத்தின் அழிவில் கணிசமான பங்கு கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. இத்தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பது போல், வெளிஎரிபொருள்தொட்டியிலும் RCC அமைப்பிலும் திருத்திவிடக்கூடிய சிக்கல்கள் இருந்தன. செலவினங்களைக் குறைத்தல், பணியாளரைக் குறைத்தல் போன்ற நிறுவன இலாபநோக்கச்செயல்களினால், சோதனை, பாதுகாப்பு நலன்களுக்கான கவனம் செலுத்துவதில் கணிசமான குறைவு ஏற்பட்டது.

இதேவேளை இத்திட்டம் பெருமளவு தனியார்மயமாக்கப்பட்டபோதே, NASAவிற்கான ஒதுக்கீட்டுத்தொகையும் கணிசமாகக் குறைக்கப்பட்டது. "பணவீக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், மொத்த NASA வரவுசெலவுத்திட்டத்தின் 13% வெட்டுடன் ஒப்பிடும்போதுகடந்த 10 ஆண்டுகளில் திட்டத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் 40% வாங்கும் திறன் குறைந்துவிட்டது"(104). மேலும் விண்வெளிக்கூடத்திட்டம், மொத்த NASA ஒதுக்கீட்டிற்குள்ளேயே வழங்களுக்களுக்காக போட்டியிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.1990ல் 5.5பில்லியன் டொலர்களிலிருந்து, 2001ல் 3.1 பில்லியன் டொலர்களாக விண்வெளித்திட்ட ஒதுக்கீடு குறைந்தது.

இலாபநோக்குமுறைக்காக விஞ்ஞானம் கீழ்ப்படுத்தப்படுதல்

கொலம்பியா விபத்திற்கான அடிப்படைக்காரணங்களை விளக்கும்போது, CAIB அறிக்கை "NASA வின் கலாச்சாரம்" பங்கு பற்றி அடிக்கடி மேற்கோளிடுகிறது. "ஒரு நிறுவன அமைப்பின் கலாச்சாரம் என்றால், அது அடிப்படை மதிப்புக்கள், நெறிகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவை குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள்பற்றிக் கூறும். மிக அடிப்படையான அளவில், அமைப்புக்கலாச்சாரம் அதன் பணியாளர்கள் தமது வேலைகளை செய்யும்போது அவர்கள் அதை எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார்கள் என்பதை வரையறை செய்யும்." பாதுகாப்பு எச்சரிக்கைகளை முறையாகப்பொருட்படுத்தாத அளவிற்கு NASA பணியாளர்களின் கலாச்சாரம் காரணமாயிற்று. "NASA மையங்களிலும், மனித விண்கலப்பயணத்திட்டத்திலும் அதன் அதிகாரிகள் அமைப்பு தொடர்பாக தங்களது பார்வையை தக்கவைத்துக்கொள்ள பாடுபட்டபோது, குறைகளை ஏற்கும் தன்மையை இழந்து விட்டனர். இதனால், பல குழுக்களினதும், உயர் அமைப்புக்களினதும் பரிந்துரைகள் (ரோஜர்ஸ் ஆணைக்குழுவும் இதில் அடங்கும்) நிராகரிக்கப்பட்டன."(101-2)

CAIB இனால் அடிக்கடி கூறப்பட்ட வார்த்தையான "NASA இன் கலாச்சாரம்" செய்தி அறிக்கைகளிலும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இது உண்மையில் ஒரு போலிக்கோடாகும். United Space Alliance மற்றும் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் அனைத்திலும் இல்லாத முறையில் NASA வின் உள் சூழ்நிலையில் ஏதோ வித்தியாசமானது போன்ற கருத்தை இது கொடுக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தப் பெரிய அமைப்பும், அதன் சாதாரண தொழிலாளர்கள் உயர்நிர்வாகத்தை, பாதுகாப்பு ஆபத்துத்திறன் பற்றியோ, பணியிடத்திலுள்ள ஆபத்துக்களைப்பற்றியோ, முழு அமைப்பையும் தாக்கி அழிக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றியோ, அதிலும் குறிப்பாக நிர்வாகத்தின் தோல்விகள், தவறுகள் பற்றி எச்சரிக்க அனுமதிப்பதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பெருநிறுவன ஊழல்கள் அலையைப்பற்றிப்பேசவே தேவையில்லை. மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நாளாந்த அனுபவம் எடுத்துக்காட்டுவதைப்போல், பொதுவாக அமெரிக்க முதலாளித்துவத்தில் காணப்படும் உள்ள நடைமுறைக்கு ஒத்துப்போ, "உன் வாயைத்திறக்காதே" போன்ற சூழ்நிலைதான் NASAவிலும் பிரதிபலிக்கிறது.

இந்த கலாச்சார விளக்கத்திற்கான காரணம், ஒரு விபத்து நேருவதுபற்றி முழுமையாக முற்கூட்டி கூறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அரசியல், பொருளாதார முறைப்பற்றி, தீவிரமான குறைபாடு கூறுவதை தவிர்ப்பதற்கே. CAIB அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு முற்றாக எதிர்மாறான அற்பமான ஆலோசனைகளை வழங்குவதுடன் முடியும் அதன் அறிக்கையில் இருந்தே இது நன்கு தெளிவாகும். "தலைவர்கள் கலாச்சாரத்தை தோற்றுவிக்கின்றனர். அதை மாற்றவேண்டியதும் அவர்கள் பொறுப்பேயாகும்.", "தெளிவு, வலிமை, ஆபத்தை எதிர்நோக்கக்கூடிய ஊகங்கள் பற்றிய அடையாளங்களை அறிதல் இவற்றை பெருக்கக்கூடிய வகையில் உத்திகள் இருக்கவேண்டும்." என்ற ஏட்டளவுக்கோட்பாடுகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. (203)

வெளித்தொட்டியில் நுரைத்தாக்குதல், RCC அமைப்பின் தன்மை பற்றிய விஷேடமான பொருட்களின் பிரச்சனைதான் விபத்திற்கு காரணம் என்ற குறுகிய கால பரிந்துரை கொடுத்தபின், தனிப்பட்ட பொறியியல் தொழில்நுட்ப ஆணையம் அமைக்கப்படுதலும், கூடுதலான, சுதந்திரமான பாதுகாப்பு முறைக்கும் முக்கியப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் Challenger விபத்திற்குப்பிறகு விசாரணைக்குப்பின் கொடுக்கப்பட்ட திட்டங்களின் சாரத்திலிருந்து அதிகம் மாறுபட்டவையல்ல.

விசாரணைக்குழு, விண்வெளிகூடவிபத்திற்கு பொறுப்பு என எவரையும் நேரடியாகக் குற்றஞ்சாட்டவில்லை. எனவே, கலத்திலிருந்த விண்வெளி வீரர்கள் மரணத்திற்கும் எவரையும் பொறுப்பாக்கவில்லை. பாதுகாப்புக்களை அசட்டை செய்த ஒப்பந்தக்காரர்கள், தனியார்மயத்தை தீவிரப்படுத்திய ஜனநாயக, குடியரசுக்கட்சி உறுப்பினர்கள், அதை ஒட்டிய நிதி ஒதுக்கீட்டில் வெட்டுக்கள், பாதுகாப்புத் தவறுகள் நேர்கின்றன என்று சான்றுகளிருந்தும், NASAவிற்கு மிகப்பெரிய அளவில் கால அட்டவணை அழுத்தம் கொடுத்த புஷ் நிர்வாகம் எல்லாம் இதில் அடங்கும்.

இதேபோல், விசாரணைக்குழு, அறிக்கையிலேயே வெளிப்படும் கூடுதலான தெளிவான முக்கியமான முறையான பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு நடத்தவும் இல்லை, நடத்தவும் முடியாது. இறுதியில், கொலம்பியா விபத்து, NASA வின் கலாச்சாரத்தன் விளைவல்ல, மாறாக முதலாளித்துவ முறையின் விளைவே ஆகும். ஒரு சிறிய உயர்குழுவின் செல்வத்தை பெருக்குவதை முக்கிய அடித்தளமாக கொண்ட பொருளாதார, அரசியல் கட்டமைப்பினால் மிகச்சிக்கல் வாய்ந்த, ஆபத்து நிரம்பிய பணியான மனித விண்வெளிக்கலப்பயணத்திற்கான தேவைகளை பூர்த்தி செயவது முடியாத செயலாகும். தற்கால விஞ்ஞானமே அதன் தன்மையையில் ஒரு சமுதாய முயற்சியாகும். இதற்கு பரந்த அளவில் வளங்களும், சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சிகளும் தேவை. அதற்கு உணர்வுபூர்வமான, பகுத்தறிவுடைய கட்டுப்பாடு தேவையானதுடன், நிதி ஒதுக்கீடு, கால அட்டவணை, பாதுகாப்புத்தேவைகள் போன்ற தீர்மானங்கள் பற்றிய முடிவு மனிதத்தேவைக்கேற்றவாறும், விஞ்ஞானத்தின் விதிகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் ஏற்றவாறு தீர்மானிக்கப்படவேண்டும்.

மனிதனின் விண்வெளிப்பயணச்சாதனை தற்கால விஞ்ஞான, தொழில்நுட்பத்துறை ஆகியவற்றிற்கு மகத்தான சான்றிதழ் ஆகும். அதன் முற்போக்கான உள்ளடக்கமான மனித அறிவும், ஆய்வும் ஆகக்கூடியளவினை அடைவதற்கு தொடர்ச்சியாகவும் விரிவாகவும் செய்யப்பட வேண்டும். இதற்கு மனித விண்வெளிப்பயணம் எதிர்வரும் ஆண்டுகளிலும் தேவையா என்பதை ஊகிப்பது கடினம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், விண்வெளிகூடத்திட்டம் தனிநபர் சமூக பொருளாதார நலன்களுடன் பிணைந்துள்ள தன்மையால்,ஒரு விஞ்ஞான முன்னோக்கின் கண்ணோட்டத்தில் எது தேவை என்பதை தீர்மானிப்பது கடினமாகும். எதிர்கால மனித விண்வெளிப்பயணம் தற்போதைய சமூக அமைப்பின் உள்ளடக்கத்தினுள் பகுத்தறிவுடன் ஆராயப்படமுடியாது என்பதுதான் தெளிவு.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved