World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Sharon stirs up conflict in pursuit of Greater Israel policy

அகன்ற இஸ்ரேல் கொள்கைக்காக, ஷரோன் பூசல்களை முடுக்கிவிடுகிறார்

By Jean Shaoul
15 October 2003

Back to screen version

மேற்குக்கரை, காசாவிற்கு அப்பாலும் சண்டைப் பிராந்தியத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு, முன்னர் என்றுமிருந்திரா தொடர் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்துள்ளது. சிரியா, லெபனான் ஆகிய இதன்அண்டைய நாடுகளோடு நெருக்கடிகளை உயர்த்திக்கொண்டு, போரைத்தூண்டிவிட்டு அதனை பிரதம மந்திரி ஏரியல் ஷரோனுடைய விரிவாக்கக் கொள்க்ைகளுக்கு ஒரு மூடிமறைப்பாக பாதுகாப்பு பிரச்சாரம் என்று கூறப்படுவதைத் தொடுக்க ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்த முடியும் என்பதே இவற்றின் நோக்கமாகும்.

பாதுகாப்பு மந்திரி, ஷாவுல் மொபாஸ், இஸ்ரேலின் வடபுறத்திலுள்ள லெபனான் எல்லையில் படைகளை நகர்த்தியுள்ளார். இது, இஸ்ரேலின் வடகோடி நகரமான மெடுல்லாவில், எல்லை ரோந்தின் போது ஒரு வீரர் கொல்லப்பட்டதையடுத்து நிகழ்த்தப்பட்டது.

ஹெஜ்பொல்லா என்ற லெபனிய போராளிக்குழுதான் இத்தாக்குதலுக்குக் காரணம் என்று, இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளதென்றாலும், அக்குழு இச்சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனக் குறிப்பிட்டுவிட்டது. நாட்டின் தென்புறத்தில் ஒரு சாலையில் காரணமற்ற முறையில் இரு வண்டிகளை இஸ்ரேலியப்படைகள் தாக்கியதாக லெபனானின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த நாள், இஸ்ரேல் எல்லைக்கு ஜெட் விமானங்களையும் ஹெலிகாப்டர் பீரங்கிகளையும் அனுப்பி, ஹெளலா கிராமத்தில் உள்ள நான்கு வயது பையனைக் கொன்றது.

சிரியாவில், டமாஸ்கஸிற்கு வடமேற்கிலுள்ள, ஐன் சாகேப் எனும் ஒரு பாலஸ்தீனிய அகதி முகாமில், தூண்டிவிடும் நோக்கத்துடன், இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சை அடுத்து, இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. முகாமின்மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, ஒருபகுதியைத் தரைமட்டமாக ஆக்கியது, சிரியாவின்மீது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நடாத்தப்பட்ட நேரடித்தாக்குதல் ஆகும்.

ஹைபா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 20 பேர் இறந்தும், 60 பேர் காயம் அடைந்ததற்கும், பதிலடியாகக் கொடுக்கப்பட்டது இது என்ற ஷரோனின் கூற்றை யாரும் நம்ப வேண்டிய அவசியமில்லை. மேற்குக் கரையின் ஜெனினில், கடந்த ஜூன் மாதம், இஸ்ரேலியப் படைகள், இஸ்லாமிய ஜிகாத்காரர்களைத் தொடரும்போது ஒன்றுவிட்ட சகோதரனையும் தன்னுடைய சகோதரனையும் கொன்றதற்கு, அப்பெண்மணி பழிவாங்கினார். அய்ன் சாகேப் அகதி முகாமிற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

சிரியா, இஸ்ரேலின் தீயபார்வைக்கு உட்பட்டுவிட்டது என்றும், நாட்டின் உட்பகுதிகளைத் தாக்க அதனிடம் ஆற்றல் உண்டு என்பதுதான், இத்தாக்குதலின் அடையாளமாகும். "தன்னுடைய குடிமக்களைக் காப்பாற்ற, அதன் விரோதிகள் எங்கிருந்தாலும், எவ்வகையிலேனும் தாக்குவது, தடுக்கப்பட முடியாது" என்று 1973 போரின்போது கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்கான நினைவுப் பிரார்த்தனையின்போது ஷரோன் கூறினார்.

புஷ் நிர்வாகம், தனக்குப்பச்சை விளக்கு காட்டிவிட்டது என்ற தைரியத்தில்தான் ஷரோன் செயல்ப்படுகிறார். இந்த தாக்குதலைக் காரணமின்றி, சட்டவிரோதமாக மற்றொரு நாட்டின்மீதான தாக்குதல் எனக் கண்டனம் செய்வதற்கு, ஐ.நா. பாதுகாப்புக்குழுவில், சிரியா கொண்டுவந்த தீர்மானம் அமெரிக்காவால் தடுக்கப்பட்டு விட்டது; அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியபோது, தான் ஷரோனிடம் தொலைபேசித்தொடர்பு கொண்டதாகவும், "நான் தொடர்ச்சியாய் செய்ததுபோல், இஸ்ரேல் தன்னைக் காத்துக்கொள்ள உரிமை கொண்டுள்ளது என்றும், தன்னுடைய தாய்நாட்டைக் காத்துக் கொள்ள எந்தத் தடையுணர்வும் கொள்ளத்தேவையில்லை." எனவும் தெரிவித்ததாக கூறினார்.

ஷரோனுக்கும் அவருடைய வலதுசாரி ஆதரவாளர்களுக்கும், சிரியாவிற்கெதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள், மத்தியகிழக்கில் அமெரிக்க நோக்கத்தோடு இயைந்து இருப்பதாகவும், சிரியா பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், அது உண்மையாக இருந்தாலும் சரி அல்லது கற்பனையாக இருந்தாலும் சரி, ஈராக்கிற்கு நேர்ந்த கதிதான் அதற்கும் ஏற்படும் என்ற அச்சுறுத்தலும், அடங்கியுள்ளன.

தன் பங்கிற்கு இஸ்ரேல் "பயங்கரவாதிகளுக்கு புகலிடம்" அளிக்கும் நாடுகள் முறைமையான இலக்குகளாகக் கருதப்படும் என்ற அறிக்கையை விட்டது. வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கிடியன் மேயிர், "பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒவ்வொருநாடும், இஸ்ரேல் அரசின் அப்பாவிக் குடிமக்களைத் தாக்கும் அவ்வமைப்புக்களின் தலைவர்களும், தற்காப்பிற்காக, இஸ்ரேலால் சட்டப்படியான இலக்குகளாகக் கருதப்படுவர்" எனக் கூறியுள்ளார்.

அது, "பாலஸ்தீனியப் பயங்கரவாத வலைப் பின்னல்கள்" எனக்குறிப்பிட்டு டமாஸ்கசில் உள்ள சில இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடம் ஒன்றை, செய்தி ஊடகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. சொல்லப்போனால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கிற்கெதிரான குற்றஞ்சார்ந்த போர் தொடக்கிய காரணத்தை, தனக்கு சரி எனப்படும் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள நோக்கங்கொண்டுள்ளது.

ஹெஜ்பொல்லாவின் பொதுச்செயலாளர் சையது ஹசன் நசருல்லா, சிரியாவிலோ லெபனானிலோ இனித் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், தக்க பதிலடி தரப்படும் என்ற எச்சரிக்கையைப் பதிலாகக் கொடுத்துள்ளார்.

நெடுங்காலமாகவே தன்னுடைய வட்டார விரோதிகள், குறிப்பாக ஈராக்கையும், ஈரானையும் அகற்ற அமெரிக்க பலத்தை ஷரோன் நாடிவந்துள்ளார், அல்லது இஸ்ரேலையாவது அவ்வாறு அனுமதிக்கக் கோரியிருந்தார். ஈராக்கின் மீதான போர், பொதுவாக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பற்றிய பேச்சுக்கள் ஈரானையும், சிரியாவையும் "தீமையின் அச்சுக்கள்" என புஷ் விளித்தது ஆகியவையெல்லாம், ஷரோனுடைய பேரவாக்களைத் தூண்டிவிட்டுள்ளன. சில நேரங்களில் வாஷிங்டன் ஷரோனைத் தடுத்து நிறுத்தினாலும், புஷ்நிர்வாகம் அவருக்கு ஆதரவு காட்டத் தயங்குதல் அரபு நாடுகளின் ஆதரவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான தேவையின் காரணமாக தந்திரோபாய அடிப்படையிலேயே ஆகும்.

நிலைமையைக் கொந்தளிக்க வைப்பதற்கு, சிரியாவைச் சீண்டிவிடுவதுதான் சிறந்த வழி என்று ஷரோன் முடிவிற்கு வந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தில் சிரியாவுடன் அரசியல்முறையில் சண்டையிட்டு, சிரியா அதிகாரங்கொண்டுள்ள லெபனான் மீது படையெடுப்பு நடந்தால் ஒழிய, ஷரோனின் திட்டமாகிய பரந்த இஸ்ரேலை அடைவது நிச்சயமாக நிறைவேறாது.

ஷரோனின் மூலோபாயம்

ஷரோனின் இரத்தம் தோய்ந்த பழைய கதையை கொஞ்சமாய் அறிந்தோருக்கும், அவருடைய அரசியல் மூலோபாயம் நன்கு தெரியும். 1982ம் ஆண்டு லெபனான் மீதான படையெடுப்பிற்கு அவர்தான் சிற்பியாவார்.

அந்தப் படையெடுப்பில், பெய்ரூட் முற்றுகையிடப்பட்டு குண்டுவீச்சிற்கு உட்பட்டதும், பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை வெளியேற்றியதும், சப்ராவிலும், ஷாடில்லாவிலும் நிகழ்ந்த அட்டூழியங்களும் இஸ்ரேலின் வடநகரங்களில் பாலஸ்தீனியர் நடத்திய தாக்குதல்களுக்கு தற்காப்பு எதிர்நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டது. அது பாலஸ்தீனியர்களுக்கும், லெபனானிற்கும் எதிராகப் பல தூண்டுதல் செயல்கள் நடத்தப்பட்டு, அதற்கு முந்தைய அமைதித்திட்டத்தில், 1967ம் ஆண்டு போருக்குப்பிறகு, இஸ்ரேலியர் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில், ஒரு பாலஸ்தீனிய நாடு அமைக்கவும், இஸ்ரேலியர் வாழும் உரிமையும், அளிக்கப்பட்டிருந்த ஒரு அமைதித் திட்டத்தை தகர்க்கும் வகையில், தயாரிக்கப்பட்டது.

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பூசல்களுக்கான முடிவு அப்பொழுதும், இப்பொழுது போலவே தன்னுடைய எல்லைகளை லிடானி ஆறு வரை விரிவாக்கவேண்டும் என்ற இஸ்ரேலிய திட்டங்களுக்கு எதிராகப்போய், 1967 ஜூன் போரையொட்டி, ஓரளவுதான் நடைமுறைக்கு வந்தது. அத்தகைய "இயற்கையான" எல்லைகள் பாதுகாப்பதற்கு எளிதாகவும், ஜோர்டன் ஆற்றின் முகத்துவாரம் வரை அணுகுதல் கொடுத்திருக்கும். இஸ்ரேல் லெபனானிடமிருந்து இறுதியாக வெளியேற 18 ஆண்டுகள் கடக்கவேண்டியிருந்தது. ஆனால், பெய்ரூட் முற்றுகைக்கு 21 ஆண்டுகளுக்குப் பின்னர், ஷரோனைப்பொறுத்தவரை, லெபனான் இன்னும் முடிவடையாத விஷயமாகும்.

செப்டம்பர் 2000த்தில், பெரிய ஆயுதமேந்திய படையுடன் மலைக்கோவிலில் (Temple Mount) நுழைந்ததின் மூலம், இப்பொழுதைய இன்டிபதாவை, ஷரோன்தான் தூண்டிவிட்டார். அதுவும்கூட 1993ம் ஆண்டு ஆஸ்லோ உடன்படிக்கைகள் காக்கப்படும் எந்த இறுதி சந்தர்ப்பமும் சிதைந்து போவதற்கும், மேற்குக்கரைப் பகுதியில் குடியேற்றங்களை விரிவு செய்யவும், வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட தூண்டுதலாகும்.

மிக அண்மையில், ஒரு சிறிய பாலஸ்தீனத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தவும், பாலஸ்தீனியர்கள் உடனடியாக இன்டிபதாவை நிறுத்தவும் அழைப்புவிடுத்த, புஷ்ஷின் சாலை வரைபடத்திற்கு ஒப்புக்கொள்வது போல் தோற்றமளித்து, அவருடைய அரசியல் கூட்டாளிகள், இஸ்ரேலின் தீவிரதேசியவாதிகள் தங்களது எனக்கூறும், சிதைந்த பாலஸ்தீனியத்தைக்கூட நாட்டில் இருக்கவிடாத அளவிற்கு, ஷரோன் ஒன்றன் பின் ஒன்றாகத் தூண்டுதல் தாக்குதல்களை தொடங்கியுள்ளார்.

அதேபோல், பாதுகாப்பு என்ற பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தன்மையை ஆழமாகப் பாதிக்கும் வகையில், ஒரு "பாதுகாப்புச் சுவரை" அமைத்து, பெருமளவு பாலஸ்தீனிய பகுதிகள்மீது திறமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு, பாலஸ்தீனியர்களை அவமானத்திற்கு உட்பட்ட வறுமையில் தோய்ந்த, சேரிப்புற வாழ்க்கைக்கு ஆளாக்கியுள்ளார்.

லெபனான், சிரியா இவற்றைப்பொறுத்த வரையில், தன் ஆட்டத்தை உயர்த்திக்கொள்வது இது இஸ்ரேலுக்கு முதல் தடவை அல்ல. செப்டம்பர் 2002ல், இஸ்ரேலுக்குள் பாயும் வஜானி, ஹஸ்பானி என்னும் ஜோர்டன் ஆற்றின் இரு கிளைநதிகளின் நீரைத் திசைதிருப்பிவிட்டால், லெபனான் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாகப் பயமுறுத்தி, அரசியல் வெப்பத்தை அதிகப்படுத்தினார்.

தெற்கு லெபனானில் உள்ள, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான ஹெஜ்பொல்லா போராளிகளுக்கு, வட இஸ்ரேலிய நகர்கள், மாநகரங்கள் ஆகியவற்றைத் தாக்கக்கூடிய சக்தி படைத்த தரை-ஆகாய ஏவுகணைகளை ஆயிரக்கணக்கில் கொடுத்ததாக, இஸ்ரேல், சிரியாமீது குற்றம் சாட்டி, அதைக்கட்டுப்படுத்தவும் கோரியது. அமெரிக்காவின், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் ஹெஜ்பொல்லாவும் அடங்கியுள்ளது.

அந்த நேரத்தில், அமெரிக்கா, அதன் ஈராக்கிற்கெதிரான போர்த்திட்டங்களில் குறுக்கே வந்து தடை செய்யாமல் இருப்பதற்காக, நிலைமையைக் கட்டுப்படுத்த, என்ஜினீயர்களையும், தூதர்களையும் அனுப்பிவைத்தது. இப்பொழுது, புஷ் நிர்வாகத்தின் சில பிரிவினரேனும், போர் மூளும் சூழ்நிலையை சமநிலைப் பார்வையில் காண்கின்றனர்; ஷரோனும் தான் விரும்புவது எதுவாயினும், அதைச்செய்யலாம் என்று நினைக்கிறார்.

இன்னும் அதிக அளவில் திகிலூட்டக்கூடிய வகையில், சண்டையை விரிவாக்க இஸ்ரேல் நினைக்கும்போது, இஸ்ரேலிய-அமெரிக்க அதிகாரிகள், இஸ்ரேல் கடற்படையில், அமெரிக்கா வழங்கும், அணுவாயுதப் போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள், மூன்று டால்பின்பிரிவு நீர்மூழ்கிக்கப்பல்கள் செயல்படத்தயார், என்பதை உறுதிப்படுத்தினர். ஒரு நீர்மூழ்கிக்கப்பல் பாரசீக வளைகுடாவிற்கும், இரண்டாவது கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கும் ஒதுக்கப்பட்டபின், மூன்றாவது உதவிக்கு வைக்கப்பட்டுள்ளபோது, இப்பகுதியின் ஒரே அணுசக்தி வல்லரசான இஸ்ரேல் தன்னுடைய அண்டை அரபு நாடுகளை மட்டும் இன்றி, ஈரானையும் தாக்கமுடியும். சிரியா, ஈரான் ஆகிய நாடுகளை, அமெரிக்க-இஸ்ரேலியக் கோரிக்கைகளுக்கு இணங்க பயப்படவைக்கும் கருத்தோடுதான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தன்னுடைய அணுவாயுதங்களைத் தானே தயாரிக்க ஆரம்பித்து விட்டால், கடலில் இருந்து ஏவும் திறன், ஈரானைத் தாக்கக் கூடுதலான ஆற்றலைக் கொடுக்கும் என Los Angeles Times தெரிவித்துள்ளது. 1981ல், ஈராக்கின் Osirek அணுசக்தி நிலையத்தைத் தாக்கும் முயற்சியில், ஜோர்டான் வழியே, அவர்கள் ராடார் கண்காணிப்பிற்குத் தப்பும் வகையில், ஜோர்டான், ஈராக் வான்வழியில் ஆபத்து நிறைந்த, தாழ்வு உயரத்தில் அப்பணியைச் செய்தது. கடல்வழி ஆற்றல், இதேபோன்ற செயலை இனி எளிதாக்கும்.

பாலஸ்தீனியர்கள்மீது, ஷரோன் அடக்குமுறையை அதிகப்படுத்தியதால், இஸ்ரேலின் அண்டைநாடுகளில் அழுத்தங்கள் கூடிவிட்டன. கடந்த வாரம் பாதுகாப்பு மந்திரி ஷாஉல் மொபஸ், ஒவ்வொன்றிலும் 800 வீரர்கள் உள்ள இரண்டு காலாட்படைத் தயார்ப்பிரிவுகளை விரைவில் ஆயத்தமாக இருக்கும்படி உத்தரவு இட்டுள்ளார். தற்காப்பு நிலைகளில் படைகளைப் பெருக்கவும், மேற்குக் கரை, காசாவில் ஏற்கனவே மிகக்கடுமையாக உள்ள பாலஸ்தீனியர் மீதான பயணத்தடைகளை கூடுதலாக்கவும் அவர் உத்தரவு இட்டுள்ளார்.

அக்டோபர் 10ம் தேதி 70,000 மக்கள் வசிக்கும், காசாப்பகுதியிலுள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ரபாவில், மாபெரும் இரண்டு நாள் தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டன. முகாமிலிருந்து சனிக்கிழமை இரவு, 40க்கும் மேற்பட்ட டாங்க்குகள் வெளிவந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பாலஸ்தீனியர்களை முதலில் வீட்டிற்குள் அடைந்திருக்குமாறு செய்தபின் படைவீரர்கள் உள்ளே புகுந்து துப்பாக்கிமுனையில் அவர்களை வெளியேறுமாறு செய்தனர். முப்பது நிமிஷங்களுக்குப்பிறகு, வீடுகளை டாங்குகள் தகர்த்துத் தரைமட்டமாக்கின. இவ்வீடுகள் வீரர்கள்மீது குண்டுவீச்சு நடத்தவும், சுரங்கப் பாதை நுழைவாயில்களாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் 8 வயது, 15 வயது ஆன இரு சிறுவர் உட்பட எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

இவ்விடத்தற்கு மதிப்பிடச் சென்ற ஐ.நா. நிவாரண உதவி, பணிகள் நிறுவனம் (UNRWA), இவ்விடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி போல் காட்சியளித்ததாகக் கூறியுள்ளது. 120 வீடுகள், தரைமட்டமாயின; அப்படியானால், வீட்டுவசதிகள் குறைந்து, நெருக்கியடித்துக் கொண்டு மக்கள்வாழும் பகுதியில் குறைந்தது 1500 பாலஸ்தீனியர்களாவது வீடிழந்து நிற்கின்றனர்.

ஷரோனுக்கும், இஸ்ரேலிய நிதி செல்வத் தட்டினருக்கும், பாலஸ்தீனியருக்கு எதிரான போரை முடுக்கிவிடுதல் மற்றும் வெளிவிரோதிக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தல், மற்றொரு நோக்கத்தையும் நிறைவேற்றும்: அன்றாட வாடிக்கையாகிவிட்ட வேலைநிறுத்தங்கள், உள்நாட்டில் வளரும் வர்க்க மோதல்கள் இவற்றை அப்படியே செயலற்றுச்செய்துவிட முடியும். இஸ்ரேலிய சட்டத்தின்படி, நாட்டை இராணுவத் தயார்நிலைக்கு அறிவிப்புச்செய்து, இருப்பில் உள்ள வீரர்களை கூப்பிட்டால், வேலை நிறுத்தங்கள் தானே சட்டவிரோதமாகி விடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved