World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Why are they dying?

More questions over US military fatalities in Iraq

ஏன் அவர்கள் இறக்கிறார்கள்?

ஈராக்கில் அமெரிக்க சிப்பாய்களின் இறப்புக்களைப் பற்றி மேலும் சில கேள்விகள்

By James Conachy
20 August 2003

Back to screen version

ஈராக்கிய நடவடிக்கைகளில் பங்குபெற்று வரும் அமெரிக்க இராணுவத்தை தாக்கும் கடுமையான நுரையீரல் காய்ச்சலின் காரணங்களை ஆய்வு செய்வதற்காக, மருத்துவ வல்லுநர்களின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஜூலை 31 ம் தேதி, அமெரிக்க இராணுவ தலைமை அறுவை சிகிச்சை அலுவலகம் அறிவித்துள்ளது. இரண்டு ஆரோக்கியமான இளம் சிப்பாய்கள் இக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 பேர்கள் தீவிர நோய்வாய் பட்டுள்ளதாகவும் செய்தி ஊடகத்திற்கு இராணுவம் தெரிவித்துள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினரில் நான்கு பேர்கள் அசாதாரண முறையில் இறந்தது பற்றி பொது மக்களுக்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.

ஆகஸ்டு 6 ம் தேதி சிறப்புப் பயிற்சி பெற்ற, 20 வயதான இரண்டாம் கவச ரெஜிமென்டைச் சேர்ந்த ஜெபரினோ கோலுங்கா (Zeferino Colunga) என்பவர் ஜேர்மனியில் உள்ள ஹோம்பர்க் பல்கலைக் கழக மருத்துவமனையில் உயிரிழந்ததாகப் பாதுகாப்புத் துறை அறிவித்தது. ஆகஸ்ட் 4 ம் தேதி அவர் ஈராக்கிலிருந்து இந்த மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். "தென் மேற்கு ஆசியாவில் சமீபத்தில் தோன்றியுள்ள இந்தக் காய்ச்சலோடு, இவருடைய மரணம் தொடர்பு அற்றது" என்று பாதுகாப்புத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறப்பு பயிற்சி பெற்ற 21 வயதான இரண்டாம் கவசக் குதிரை ரெஜிமென்டைச் சேர்ந்த லெவி கிஞ்சென் என்பவர் பாக்தாத்தில் ஆகஸ்டு 9 ம் தேதி இறந்து போனார். "ஒரு சக சிப்பாய் கிஞ்செனை எழுப்ப முயற்சிக்கையில் அவர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கவில்லை" என்று, இந்த இறப்புகளின் காரணத்தைப் பற்றி எழுதுகையில் பாதுகாப்புத் துறை இப்படி பட்டியலிட்டுள்ளது. மாத்யூ டி. புஷ் என்னும் 20 வயதுடைய 10 வது கவசப் பிரிவைச் சேர்ந்தவரும் இவ்வாறே சக சிப்பாய் ஒருவரால் ஆகஸ்டு 9 ம் தேதி "மூச்சு விட்டுக் கொண்டிருக்கவில்லை" எனக் கண்டறியப்பட்டார்.

அமெரிக்க இராணுவ உளவுத் துறையில் பலகாலம் இருந்த இராணுவ அதிகாரி, 37 வயதான சார்ஜன்ட் ரிச்சர்ட் ஈடன் ஆகஸ்ட் 12 ம் தேதி இறந்து போனார். ரெயிட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு இராணுவ அதிகாரிகள் ஈடன் "நுரையீரல்களில் சளி சேர்ந்தது காரணமாக இறந்து போயிருக்க கூடும்" என்று துவக்கத்தில் தெரிவித்தனர். இந்நோய் நுரையீரலுக்கு கடுமையான வெப்பம், நச்சுப் பொருட்கள் அல்லது விஷ வாயுவினால், கெடுதல் செய்து மூச்சு விடுவதில் தொற்று வியாதி தன்மையோ, கூடுதலான உடல் திரவப் பெருக்கையோ கல்லீரல் தகர்ப்பில் ஏற்படுத்துவது போல் தோற்றுவிக்கும்.

ஆகஸ்ட் 14 ம் தேதிக்குப் பின்னர், வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கட்டுரையொன்றில் இராணுவ அதிகாரிகள் வெப்ப அழுத்தத்தினால் மற்றும் கடுமையான ஈராக்கியக் கோடை காலத்தால் ஈடனும் மற்ற இருவரும் படுக்கையிலேயே இறந்து போயிருக்கக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறியதாக எழுதியுள்ளது. இருப்பினும் இந்த மூன்று இறப்புக்களுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது.

இந்த நுரையீரல் நோய் பற்றிய முதல் அறிக்கைகள் அமெரிக்கப் படைகள் குறை யுரேனியப் பாதிப்பால் இறக்கிறார்களா என்ற சந்தேகத்தை கொடுக்கும் கூடுதலான கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்த நுரயீரல் காய்ச்சல் என்று கூறப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் ஒருவர் பற்றிய மருத்துவக் குறிப்புக்கள் பரந்த அளவில் வெளியிடப்பட்டுள்ளன. ஜோஷ் நியூஷே (Josh Neusche) என்ற 20 வயதான சிப்பாய், ஈராக்கில் ஜூலை 2 ம் தேதி மூச்சுத் திணறல் பிரச்சனையால் சரிந்து வீழ்ந்தார். ஜூலை 12 ல் அதற்குப் பின் ஏற்பட்ட கல்லீரல், மற்ற உறுப்புக்களின் தகர்ப்பினால் மடிந்து போனார்.

ஆகஸ்டு 4 ம் தேதி, Are American soldiers in Iraq dying due to depleted uranium? என்ற தலைப்பில் உலக சோசலிச வலைதளத்தில் வந்த கட்டுரை, நியுஷேவின் (Neusche) நிலைக்கும், குறை யுரேனியப் பாதிப்பின் அடர்த்தியினால் தோன்றும் விளைவுகளின் தன்மையையும் ஒப்பிட்டுக் கூறியிருந்தது. அதிக அளவு அடர்த்தியுடைய குறை யுரேனிய மாசினால் நிறைந்த பொருளை மூச்சு உள்ளிழுத்தாலோ, ஏற்றுக் கொண்டாலோ கடுமையான மூச்சுத் திணறல் பிரச்சனைகளையும் கல்லீரல் சேதமும் - பல்மொனரி எடிமாவின் (pulmonary edema) தன்மையைக் காட்டும் அடையாளங்களைக் கிளப்பிவிடும்.

இந்த இளம் சிப்பாயின் இறப்புச் சூழ்நிலைபற்றி தன்னால் திரட்ட முடிந்த விவரங்களை நியுஷேயின் குடும்பம் வெளியிட்டுள்ளது. அவரது சக சிப்பாய்களின் கடிதங்கள், தகவல்கள் அடிப்படையில் அவருடைய பெற்றோர்களான மார்க்கும், சிந்தியாவும் பாக்தாதில் குண்டுவீச்சுக்குட்பட்ட சதாம் ஹூசைன் அரண்மனைகளுள் ஒன்றில் சிதறிய கற்களையெல்லாம் ஒதுக்கிய வேலையில் நியுஷே தொடர்பு கொண்டிருந்ததுதான் இவரின் கடைசிச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், "ஜோஷியுடைய குழுவில் இருந்த மூன்று அல்லது நான்கு சிப்பாய்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று இராணுவம் உறுதி செய்துள்ளது" என்று மிசூரி செனட்டர் ஐக் ஸ்கெல்டன் செய்தி ஊடகத்திற்கு கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்பு, சிப்பாய்கள் பணிபுரிந்த இடத்தின் சூழ்நிலையில் - குண்டுவீச்சிற்கு இலக்கான முன்னாள் ஈராக்கிய அரசின் அரண்மனையொன்றில் - இருந்த ஏதோ ஒரு மாசுபடுத்தும் பொருள் இவர்களுடைய மூச்சுத் திணறல் பிரச்சனைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை எழுப்பியுள்ளது.

இராணுவத்தினர் மறைத்து வைக்கப்பட்ட ஈராக்கிய உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் தளத்தில் தடுக்கிக் கொண்டிருக்கலாம் என்ற கருத்து நியுஷேயின் தகப்பனார் உட்படப் பலபேரால் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் "நாங்கள் இறுதியில் பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று புஷ் நிர்வாகம் வெற்றிக்குரல் கொடுக்காதது இக்கருத்தை மறுப்பதாக உள்ளது.

சதாம் ஹூசேனின் அரண்மனைகள், ஆக்கிரமிப்பின் போது அமெரிக்க விமானங்களால் பெரும் குண்டுவீச்சுக்கு உட்பட்டன. அம்முயற்சி ஈராக்கிய தலைவர்கள் அனைவரையுமே படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அத்தகைய இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துக்களில் "நிலவறைத் தகர்ப்பு" (bunker-buster) என்று கூறப்பட்ட குண்டுகளும் இருந்திருக்கலாம். பகுப்பாய்வாளர்கள் அத்தகைய குண்டுகளில் உள்ள "அடர்த்தியான உலோகப் பொருள்'' கீழே இருப்பதாகக் கூறப்படும் நிலவறைக்குத் துளைத்துக் கொண்டுப் போகும் தன்மையுடையது தான் DU எனப்படும் யுரேனியம் எனக் கூறுகின்றனர்.

பிரிட்டனில் உள்ள DU பற்றித் தனித்து ஆராயும் வில்லியம்ஸ் (Dai Williams) என்பவர், ஜனவரி 2002 அறிக்கையில் எழுதியதாவது: "நிலவறைத் தாக்குதல் குண்டிலுள்ள, GBU - 28 & 37 உடன் DU போர்க்கருவி பால்கன் போரில் A10 விமானத்தினால், டாங்கிகளை எதிர்த்து (30 mm) தாக்கின. இது 50 - 100 மடங்கு கூடுதலான மாசை வெளியிடும். இந்த ஆபத்தானது ஈராக், பால்கன் பகுதி, ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் பழைய, தற்பொழுது, வரவுள்ள போரின் முயற்சியால் படைகளுக்கும் மக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலையின் ஆபத்துக்களுக்கும் கொண்டுள்ள பழைய மதிப்பீட்டை பெரிதும் மாற்றியுள்ளது" (இந்த அறிக்கையின் விபரத்தை இப் பக்கத்தில் கான்க- http://www.eoslifework.co.uk/du2012.htm

இன்றளவும் பென்டகன் ஆனது, ஈடன் மற்ற இருவருடைய கடைசிப்பணி, அவர்கள் படுக்கையில் இறப்பதற்குமுன் என்ன என்பதை வெளியிடவில்லை. அமெரிக்க இராணுவத் தலைமை அறுவை சிகிச்சை அலுவலகமும் அது நடத்திக் கொண்டிருக்கும் ஆய்வு பற்றி எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை. வசதி உடைய செய்தி ஊடகங்களும், ஈராக்கிய மருத்துவமனைக்குச் சென்று இந்த நோய் அடையாளங்களோ, பல்மெனரி எடிமா போன்ற தன்மையோ அதிக அளவில் பழைய ஈராக்கிய வீரர்களையோ, ஈராக்கியக் குடிமக்களையோ (இந்த அமெரிக்க குறை யுரேனிய வெடிமருந்துத் தாக்குதலின் விளைவாக) பாதித்துள்ளதா என்று ஆய்வு நடத்தும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அத்தகைய கண்காணிப்பு தேவையான ஓன்றாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved