World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq: No letup in anti-US riots and guerrilla attacks

ஈராக்: அமெரிக்க எதிர்ப்புக் கலகங்களும், கொரில்லாத் தாக்குதல்களும் குறையவில்லை

By Alex Lefebvre
19 August 2003

Back to screen version

ஈராக்கின் இரண்டு பெரிய நகரங்களான பாக்தாத்திலும், பாஸ்ராவிலும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் பழைய ஈராக்கிய சர்வாதிகாரியான சதாம் ஹூசேனைத் தேடும் முயற்சிகளை முடுக்கிவிட்ட அளவிலும், கலகங்களை அடக்க முற்பட்ட அளவிலும், கடந்த வாரம் ஈராக்கிய, அமெரிக்க இறப்புக்கள் அதிகமாகத் தொடங்கியுள்ளன. ஈராக்கில் அப்பாவி மக்கள் அமெரிக்கப் பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்படுவதையும், பொதுப்பணிகளின் இழிநிலை பற்றியும் மக்களின் சீற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தலைநகரான பாக்தாத்திலும், தெற்கிலுள்ள பெரிய நகரமான பாஸ்ரா, மற்றும் வட மத்திய ஈராக்கிலும் ஆயுதமேந்தியயோருடன் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மத்திய ஈராக்கில் பீரங்கி வண்டிகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஆயுதமேந்தியோரை அடக்குவதற்கு அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்துவதோடு, சதாம் ஹுசேனுடைய சொந்த ஊரான திக்ரிட்டில் அவரைத் தேடி வருகின்றனர். இந்தத் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கத் தரைப்படையின் நான்காவது காலாட்படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ரே ஒடியர்னோ, வாஷிங்டன் போஸ்டிற்கு ஆகஸ்ட் 12 அளித்த பேட்டியில் ''சதாம் ஹுசேனைப் பிடிக்க நெருங்கிவிட்டோமா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது'' என்றார்.

ஈராக்கின் போர் நடவடிக்கையினால் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை பற்றி பென்டகன் குறிப்புக்களை வெளியிடவில்லை என்றாலும், அப்பகுதியில் அமெரிக்கச் செயல்பாட்டினால் பல அமெரிக்க இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆகஸ்டு 10, 13 ம் தேதிகளுக்கிடையே 5 அமெரிக்கப் படைகள் மாண்டதுடன் 11 பேர் காயமுற்றனர். இவை வட மத்திய ஈராக்கில் சாலையோரம் வெடித்த குண்டுகளினால், சிறிய உந்துதல் முறை வெடி குண்டுகளாலும் ஏற்பட்டன. அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் ஜூலை 22 தேதி சதாம் ஹுசேனின் இரண்டு மகன்கள் ஒரு வீட்டில் வைத்து கொல்லப்பட்டபின், அமெரிக்கப் படைகளுக்கு எதிர்ப்பு குறைந்துவிடும் என்று களிப்புடன் கூறப்பட்ட கூற்றுக்களின் பொய்த் தன்மையை இச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

சாதாரண போர் முறை மரணங்களில் இடம்பெறும் பட்டியலில் மேலும் இரண்டு இறப்புக்கள் இடம்பெறவில்லை. ரமாடி என்ற இடத்தில் ஒரு சிப்பாய் வெப்பத்தாக்கினால் ''முகாமில் மடிந்து கிடந்தார்'' எனக்கூறப்பட்டது. அடுத்தது வடக்கே மோசூல் நகரத்தில் ஈராக்கிய வாடகைக் கார் ஒன்றோடு மோதியதில் மேலும் ஒரு சிப்பாய் இறந்து போனார்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் சாவுகளைப் பற்றி குறைந்த அளவு குறிப்பிடப்படும் பெரிய நோக்கத்திற்கு உட்பட்டவையே இந்த இரு மரணங்களும் ஆகும். பிரிட்டிஷ் செய்தித்தாளான கார்டியன் குறிப்பிடுவதுபோல, மே 1 க்கும் ஆகஸ்ட் 4 க்கும் இடையே 52 அமெரிக்கப் போர்முனை இறப்புக்களும், 60 மற்றைய போர் முனையில்லாத இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. ''ஒரு குறைந்த அளவில் நடத்தப்படும் ஈராக்கியக் கொரில்லா முறையில் கூட போர் முனையற்ற இறப்புக்கள், போர்முனை இறப்பைவிட எண்ணிக்கையில் அதிகம் என்பது அசாதாரணமானது'' என்று இராணுவ அவதானிகள் கூறுகின்றனர்.

நியூயார்க் டைம்ஸில், 12 ம் தேதிப் பதிப்பில் போல் கிரக்மன் (Paul Krugman) வெளியிட்டுள்ள கட்டுரையில், வெப்பத் தொடர்புடைய இறப்புக்களும் பொருட்கள் வரவில் சிக்கல்களும் அமெரிக்கப் பிரிவுகளில் மலிந்து இருத்தல் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பும் கடிதங்களில் ''ஒவ்வொரு இராணுவ சிப்பாய்க்கும் நாளொன்றுக்கு 1.5 லிட்டர் தண்ணீர் அளிக்கப்படுவது வெப்பத் தொடர்புடைய இறப்புக்களுக்குக் காரணம்'' எனக் குற்றஞ்சாட்டியுள்ளதை மேற்கோளிட்டிருக்கிறார். ''தேவையற்ற வசதிக் குறைவான நிலைமையில் அமெரிக்கப் படைகள் பல மாத காலமாகக் கஷ்டப்படுகின்றன. இராணுவத்தால் பல பொருட்கள் வழங்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் வருவது கிடையாது'' என்று அவர் மேற்கோளிட்டு காட்டுகிறார். இந்த ஒப்பந்தக்காரர்களுள் முன்பு CEO வாக இருந்து, தற்போதைய துணை ஜனாதிபதியான டிக் செனியின் கட்டுமான நிறுவனமான ஹாலிபர்ட்டனின் துணை நிறுவனமான Kellogg Brown & Root ம் அடங்கும்.

அரசியல் அழுத்தங்களினால் போர்முனை இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக, செய்தித்தாள்களில் போர்முனையல்லாத இறப்புக்களாகக் காட்டுவது மற்றொரு காரணமாக இருக்கலாம்.

ஈராக் போரில் காயமுற்றோரைப் பற்றிய அறிவிப்புக்களைப் பார்ப்போமானால், அது இன்னமும் வினோதமாக இருக்கும். ஆகஸ்ட் வரையிலான அதிகாரபூர்வமான பென்டகன் தகவல்களின்படி, காயமுற்றோர் 827 பேர்கள் ஆகும். ஆனால் கட்டாரில் உள்ள அமெரிக்கப் படையின் மத்தியத் தலைமைக் குறிப்பின்படி கிட்டத்தட்ட 100 பேர்களை கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளனர். (926 என்ற எண்ணிக்கை) ஆனால் National Public Radio TM (NPR) அமெரிக்க லெப்டினன்ட் கேர்னல் ஆலன் டிலேனுடைய பேட்டியின்படி (இவர் தான் காயமுற்ற அமெரிக்கப் படைகளை போர்க்களத்திலிருந்து வாஷிங்டன் DC விமானப்படைத் தளத்திற்கு அனுப்பும் பொறுப்புடையவர்) மத்தியக் கட்டுப்பாட்டினுடைய எண்ணிக்கை பெருமளவில் குறைத்து மதிப்பீடு செய்திருப்பதை தெளிவாக்குகிறது.

''நான் உங்களுக்கு சரியான எண்ணிக்கையை கூற முடியாது. போர் துவங்கியதிலிருந்து 4000 பேர் ஆண்ட்ரூஸுக்கு (Andrews) வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை மற்றைய இடங்களுக்கு அனுப்பப்படுவோரைச் சேர்த்தால் இருமடங்காகிவிடுகிறது'' என்று டிலேன் கூறினார். 90 வீதம் போர் தொடர்புடைய காயங்கள்தாம். இந்த எண்ணிக்கை ஆண்ட்ரூஸிற்கு காயமுற்று வந்தோரை இரு முறை எண்ணுவதால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. அப்படியும் கூட டிலேன் கொடுக்கும் குறைந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமான அரசியல் எண்ணிக்கையோடு ஒத்துப்போகச் செய்ய முடியவில்லை. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு காயமுற்ற சிப்பாயும் ஆண்ட்ரூசில் குறைந்தது 6 தடவைகளாவது வந்து போயிருக்கவேண்டும்.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு பொருளாதார அளவில் நாசம் செய்யும் வகையில் திரும்பியுள்ளது அதிகமாகிவிட்டது. ஈராக்கிய எண்ணெய் அமெரிக்காவினால் ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவும், மின் வசதி, தண்ணீர் ஆகியவை ஈராக்கிய நகரங்களுக்கு வராமல் செய்யவும் இம் முயற்சிகள் செய்யப்படுகின்றன. குறைந்தது இரண்டு எண்ணெய்க் குழாய்களாவது நாசமாயின. கடந்த வார இறுதியில் நடந்த ஒரு தாக்குதலில், மத்திய ஈராக்கிலுள்ள டாஜி என்ற இடத்திற்கு அருகிலுள்ள எண்ணெய்க் குழாய் நாசமடைந்து சிதறியது. ஆகஸ்ட் 16 ம் தேதி குண்டு வெடிப்பானது, ஈராக்கிலிருந்து துருக்கிக்குச் செல்லும் முக்கிய எண்ணெய்க் குழாயை பைஜி என்ற பெரிய வெளியேற்றும் இடத்திற்கு 20 கி.மி வடக்கே ஏற்பட்டுக் குழாயைத் துண்டித்தது. 40 சதவிகித ஈராக்கிய எண்ணெயை எடுத்துச் செல்லும் கிர்குக் நகரத்திலிருந்து எண்ணெய் வரும் குழாய்களின் இத்தகர்ப்பு, அமெரிக்க அதிகாரிகளின் கணக்கின்படி இன்னும் சில வாரங்களுக்குப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாக்குதல்களும், ஈராக்கின் நலிந்த மின் வசதிப் பங்கீட்டு அமைப்புக்களும் அடிக்கடி மின் துண்டிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அங்கு பெரிய மின் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. எண்ணெய் வளம் கொழிக்கும் இந்நாட்டில் மண்ணெண்ணய், டீசல் கட்டுப்பாட்டினால் தத்தளிப்பது என்பது ஈராக்கியப் பொருளாதாரத்தை முறைகேடாக நடத்திச் செல்லும் கூட்டணி ஆட்சியைக் குற்றத்திற்கு உட்படுத்துகிறது. ஈராக்கிய எண்ணெய்ச் சுத்திகரக் கூடங்கள் பழையனவாகப் போய்விட்ட அளவில், கனதியான எண்ணெயை உற்பத்தி செய்வதால், மெலிந்த மண்ணெண்ணைக்கும், டீசலுக்கும், எரிவாயுவிற்கும் அதுவே காரணமாகியுள்ளது. எனவே தேவைப்படும் 38-40 மில்லியன் லீட்டர் எரிபொருளுக்குப் பதிலாக அதில் பாதியைத்தான் இது அளிக்க முடிகிறது. ஐ.நா. அதிகாரிகள், காசில்லாத ஈராக்கிய எண்ணெய் அமைச்சகத்திடம் மெலிந்த எரிபொருள் எண்ணெயை இறக்குமதி செய்யும் பொறுப்பை அமெரிக்கா தள்ளிவிடுமோ என்ற கவலையில் இருக்கின்றனர். ஈராக்கியச் சுத்திகரிப்பு நிலையங்களின் தரத்தை பெருமளவில், உயர்த்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. உள்நுகர்வை அதிகரிக்கும் முயற்சிகளும் இல்லை.

ஹுசேனுடைய தவறான ஆட்சி தான் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று, அமெரிக்கப் - பிரிட்டிஷ் படைகளின் செய்தித் தொடர்பாளர்கள் குறைகூற முயற்சி செய்துள்ளனர். இது ஒரு நம்பிக்கையற்ற முறையில் செய்யப்படும் பிரச்சாரமாகும். முதல் வளைகுடாப் போரின் போதே பரந்த அளவில் அமெரிக்கத் தலைமையிலான படைகள் ஈராக்கிய மின் பங்கீட்டுத் தளங்களைக் கடுமையாகத் தாக்கின என்பது அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட நாட்டின் 85 வீத உற்பத்தி, பங்கீட்டுத் தளங்கள் தாக்கப்பட்டன என்று கார்டியன் கூறுகிறது. ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள் மின் கருவிகளை வாங்கமுடியாத அளவு செய்துவிட்டதால் ஹுசேனின் இவற்றை மீட்கும் முயற்சிகள் தற்காலிகமானவையாகத்தான் இருந்தன. அமெரிக்க, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகள் மின் உற்பத்தி, பங்கீட்டு நிலையங்களைப் பாதுகாக்கத் தவறிய அளவில், அவற்றின் பல பகுதிகளிலிருந்தும் திரும்ப விற்கக்கூடிய செம்புக் கம்பிகளை, கொள்ளையடிப்பவர்கள் இலக்கு வைத்தனர்.

ஐ.நா. நிறுவனங்கள் குளிர்கால மண்ணெண்ணை தட்டுப்பாட்டைப் பற்றியும் கவலைப்படுகின்றன. வெப்பம் நிலவ 500 மில்லியன் லீட்டர் மண்ணெண்ணை இருப்பாகக் கொள்ளப்படவேண்டும். இதிலும் கால அட்டவணைப்படி நிலைமை பின்னடைவில்தான் உள்ளது. இது ஒரு மனிதத் தேவை நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஒரு அமெரிக்க அதிகாரி ''எண்ணெய் சுத்திகர நிலையங்களுக்குப் போதுமான மின் வசதியைப் பொறுத்துத்தான் மண்ணெண்ணை பங்கீடு இருக்கும்'' எனக் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது இப்பொழுது இயலக்கூடிய காரியமாகத் தெரியவில்லை.

சில பூசல்களில் அமெரிக்கப் படையினர் சாதாரண மக்களைக் கொன்ற நிகழ்ச்சிகளையும் பாக்தாத் கண்ணுற்றுள்ளது. ஆகஸ்ட் 9 ம் தேதி, மின் இருட்டடிப்பு பாக்தாத் புறநகரான ஸ்லேயக்கை இருளில் ஆழ்த்தியபோது, அமெரிக்கப் படைகள் அச்சத்தின் காரணமாக சோதனைச் சாவடிகளில் 6 ஈராக்கியர்களைக் கொன்றனர். அன்வார் கவாஸ் என்ற பெண் தனது கணவனையும் 3 குழந்தைகளையும் இழந்தாள். எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவர்கள் சுடப்பட்டு அவர்களுடைய காரிலேயே இறந்ததாக இந்தப் பெண் AP க்குக் (Associated Press) கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். இறந்து கொண்டிருக்கும் குடும்பத்தினரைக் காரிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சி செய்த அண்டை மக்கள் தானியங்கித் துப்பாக்கிச் சூடு பயன்படுத்தப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டனர். அத்துடன் அருகிலிருந்த சாலைத் தடுப்புக்களில் மேலும் இரு குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்திலுள்ள சதர் சிட்டி என்ற இடத்தில் ஏழை ஷியாட்டுக்களால் நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது அமெரிக்க துருப்புக்களினால் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். எதிர்ப்பாளர்கள் ஆகஸ்டு 13 ம் தேதி படைகளுடன் மோதியதில் சில ஈராக்கியர்கள் காயமுற்றனர், ஒருவர் இறந்துபோனார். அமெரிக்க அதிகாரிகள் இறந்துபோன நபர் ஒரு ராக்கெட்டை படைகள் மீது ஏவியதாகக் கூறினர். ஆனால் சாட்சிகளும், செய்தியாளர்களும் அது 10 அல்லது 13 வயதுப் பையன்தான் எனத் தெரிவித்து உள்ளனர். அத்துடன் வாஷிங்டன் போஸ்டிற்கு ஈராக்கிய டாக்டர்கள் மருத்துவமனையில் துப்பாக்கி குண்டுக் காயத்துடன் ஒரு 12 வயதுச் சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினர்.

இந்தப் பூசலுக்குப் பிறகு, ஷியாட் சமயப் பிரிவு ஒன்றான அல்சதர் அமெரிக்கப் படைகள் சதர் ஸிடியை விட்டு வெளியேறுமாறு அறிக்கையொன்றை விடுத்தது. 1999 ல் ஹுசேனால் கொல்லப்பட்ட இரண்டு பிரபலமான ஷியாட் குருமார்களின் நகரான நஜாப்பில் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் முக்டடா அல் சதாரின் பெயர் புகழ் பெற்று வருகிறது. இந்த அமைப்பு ''மக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்'' என்றும், மக்கள் கண்ணிவெடிகள், சிறு ரக ராக்கெட்டுகள், கைக்குண்டுகள், தற்கொலைப்படை வெடிப்பு பெல்ட்டுகள் போன்றவற்றைத் தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமை அதிகாரபூர்வமாக இதற்கு மன்னிப்புக் கேட்டதுடன், ஆகஸ்ட் 14 அன்று சதர் சிடியிலிருந்து படைகள் வெயியேறன.

The Globe and Mail ல், அல்சதர் அழைப்பின் பேரில் மகதிப்படையில் சேர மாலை 6 மணியில் இருந்தே மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர் என செய்திகள் தெரிவிக்கின்றன. மகதிப்படைக்கு ஆள் சேர்க்கும் அல் சதர் உறுப்பினரான ஷேக் கனவஸ்-அல்-கஜராஜி, 10000 பேருக்கு மேல் சதர் சிட்டியில் மட்டும் பெயர்களைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். இப்பத்திரிகைகள், மகதிப்படை முதன் முதல் விருப்பமுடைய ஆண்களைத்தான் சேர்த்துக்கொள்ளும் என்று கூறியபோதிலும் பல பெண்களும் சேருவதற்கு இசைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஈராக்கின் மத்தியிலுள்ள சிறுநகரமான பக்குபாவில் சம்பளம் கேட்டுவந்த பழைய ஈராக்கிய இரகசியப் போலீசார்கள் திருப்பியனுப்பப்பட்டனர். ''ஐந்து மாத காலமாக ஒரு பென்னி கூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. எங்கள் குடும்பங்களை நாங்கள் கவனிக்கவேண்டும்.... எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்த எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை நீடித்தால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்'' என்று ஒரு இரகசியப் போலீஸ்காரரான முடார் கலப் கூறினார்.

சாதாரண குடிமக்கள் நலன்களைக் கவனிக்கும் அமெரிக்க அதிகாரியான காப்டன் டெனிஸ் வான்வே இந்த எதிர்ப்பு ''குறிப்பிடத்தக்க அளவு வன்முறைத் திறனைக் கொண்டுள்ளது'' என்று ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், ''இரகசியப்படை கலைக்கப்பட்டுவிட்டது... அவர்கள் அதிகாரபூர்வமாக இல்லை. எனவே நாங்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாது'' என்றார்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆளும் தட்டினர் ஈராக்கிய நிலைமை உறுதி அற்றது என்றும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டைத் தகர்க்கக்கூடும் என்றும், பெருகி வரும் கருத்தைக் கொண்டுள்ளனர். நியூயோர்க் டைம்சின் கட்டுரையாளர் தாமஸ் ப்ரீட்மன் என்பவர் போர் தேவை என எப்பொழுதும் கூறி வந்தவர். ஆகஸ்ட் 13 ம் தேதி ''அதிகாரமும் ஆபத்தும்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். புஷ் நிர்வாகத்தை ''இந்த ஆரத்தனமான புரட்சிகரமான நடவடிக்கையை ஈராக்கில் மேற்கொண்டதற்காகப்'' பாராட்டிய அவர் ''இந்தத் திட்டத்தை முடிக்கத் தேவையான நேரமோ, பணமோ, மக்களோ நம்மிடம் இல்லாமற் போகலாம்'' என்று எழுதியுள்ளார்.

அத்துடன், பெரிய இடத்துத் தொடர்புடைய செய்தியாளரின் 5 கார் அணிவரிசை ஈராக் - ஜோர்டான் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு AK 47 துப்பாக்கியேந்திய கொள்ளையரால் சூறையாடப்பட்டது. அமெரிக்கப் படைகளுக்கு அவர் இதைத் தெரிவித்தபோது, ஆட்பற்றாக்குறையால் இது பற்றி விசாரிக்க முடியாது என்று அவரிடம் கூறப்பட்டது. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க நண்பர்கள் அனைவருமே இதைத்தான் கூறுகிறார்கள். ''உங்களுடைய சிந்தனைகளை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். ஆனால் என்னுடைய அன்றாட வாழ்வு, சம்பளம், மின் வசதி, பாதுகாப்பு இவை யாவும் நீங்கள் வந்த பிறகு மோசமாகிவிட்டன ஒழிய, சிறக்கவில்லை.''

ஈராக்கிலுள்ள ஐ.நா. வின் இரண்டாம் உயர்ந்த இடத்தில் உள்ள கசாம் சலாமே என்பவர் ஆகஸ்டு 14 ம் தேதி பிரெஞ்சு செய்தியிதழான Le Nouvel Observateur ல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். ''பல செல்வாக்குடைய ஈராக்கியர்கள், முதலில் ஒரு வெறுக்கப்பட்ட ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற உணர்வைக் கொண்டிருந்தாலும், கூட்டணிப் படைகள் நல்ல முடிவைக் கொடுக்க முடியாதென்றால் தாங்களே ஆயுதமேந்தப் போவதாகக் கூறியுள்ளனர்.'' என்றார். ஈராக்கியப் பொருளாதாரத்தை பெரும் அளவில் தனியார் மயமாக்கும் முயற்சியும், ஈராக்கிய எண்ணெய் வளத்தை அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு அளிப்பதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

ஈராக்கில் அமெரிக்காவின் ஆட்சியாளராக உள்ள போல் பிரிமேர் ABC யின் "Good Morning, America" நிகழ்ச்சியில் ஆகஸ்டு 13 ல் தோன்றி, ஈராக்கில் அமெரிக்கக் கொள்கையை நிலைநிறுத்திக் கூறினார். அமெரிக்க இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் பெரிதாக்க விரும்பாமல் தன்னுடைய போட்டியாளரிடம் கூறியதாவது: ''உட்கார்ந்துள்ள வாத்துக்களல்ல இங்குள்ள அமெரிக்க வீரர்கள். ஆனால் அதற்காக இறப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்று நான் கூறவில்லை. யாரும் அப்படிச் செய்ய முடியாது. மக்கள் நாங்கள் இன்னும் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை'' என்றார்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் தொடர்ந்திருப்பது நீண்டும், செலவுடையதாகவும் இருக்கும் என்று முன்கூட்டியே பிரிமர் தெரிவித்துள்ளார். ''நாம் இங்கே (ஈராக்கில்) இன்னும் சில காலம் இருப்போம் என்று நான் நினைக்கிறேன். இது ஒன்றும் ஆழ்ந்த, இருண்ட, இரகசியம் இல்லை. எவ்வாறு நிலைமை வளர்கிறது என்பதைப் பொறுத்து அது இருக்கும்'' என்றார். ஆக்கிரமிப்பிற்கான மொத்த செலவு மதிப்பீட்டைப் பற்றிப் பேசுகையில், இப்பொழுது மாதம் ஒன்றுக்கு 4 பில்லியன் டொலர்கள் ஆகும் அளவில், 100 பில்லியன் டொலர்கள் வரை ஆகும் என்றார். புஷ் நிர்வாகம் போர்ச் செலவைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் 2004 ஆம் ஆண்டிற்காகக் கூடுதலாக 40 லிருந்து 50 பில்லியனுக்கு கோரல் வரும் என எதிர்பார்க்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved