World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

CIA recruiting Saddam's secret police

சி.ஐ.ஏ சதாம் ஹுசேனின் ரகசிய போலீசாரை பணியில் அமர்த்திக் கொண்டிருக்கின்றது

By Julie Hyland
26 September 2003

Back to screen version

ஈராக்கில் சதாம் ஹுசேனின் படுபயங்கரமான அவரது பாதுகாப்பு படையிலிருந்த முன்னாள் ஏஜெண்டுகளை சி.ஐ.ஏ பணியில் அமர்த்திக் கொள்வதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அப்பத்திரிகை செய்தியின்படி, ''சதாம் ஹுசேனின் படுமோசமான ரகசிய போலீசான முக்காபரத் அமைப்பின் முன்னாள் அதிகாரிகளை பணியில் சேர்த்துக் கொள்வதற்கு அமெரிக்கப் படைகள் மறைமுகமான இயக்கத்தை நடத்தி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈராக் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கும், மடிந்ததற்கும் இந்த முக்காபரத் ரகசிய போலீஸ் அதிகாரிகள் தான் பொறுப்பாகும்.''

ஈராக்கிற்குள் அமெரிக்க துருப்புக்களை எதிர்க்கின்ற "குழுக்களை வேட்டையாடுவதற்கு உதவுவதற்கும்", வாஷிங்டனுக்கு மிகப்பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற "வாஷிங்டன் மீது மிகவும் குரோதம் கொண்டுள்ள பக்கத்து நாடுகளான ஈரான் மற்றும் சிரியாவிற்காக வேவு பார்ப்பதாக சந்தேகப்படும் ஈராக் மக்களை அடையாளம் காட்டுவதற்காகவும் மற்றும் கண்டுபிடிப்பதற்காகவும்", இப்படிப்பட்ட பிறரை துன்புறுத்துவது இன்பம் காண்பவர்களான சாடிஸ்ட்டுகளும் கொடூரமான கொலைகாரர்களுமான டஜன் கணக்கான முன்னாள் அதிகாரிகளை அமெரிக்கா பணியில் அமர்த்தியுள்ளது என்று அது அறிவித்திருக்கின்றது.

அப்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள முஹம்மது அப்துல்லா என்பவரை அந்த பத்திரிகை நிருபர் பேட்டி கண்டிருக்கிறார், அவர் முக்காபரத் ரகசிய போலீசில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர் மற்றும் இராணுவ புலனாய்வு அமைப்பில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர். மே மாதம் முதல் சி.ஐ.ஏ உடன் தான் பணியாற்றி வருவதாகவும், அதற்காக மாதம் தனக்கு 700 அமெரிக்க டொலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், முகம்மது அப்துல்லா தனது பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

''அமெரிக்கர்களுடன் நாங்கள் பணியாற்றி வருவது தொடர்பாக பகிரங்கப்படுத்தக்கூடாது என்று எங்களுக்கு கண்டிப்பாக கட்டளையிடப்பட்டிருக்கின்றது. ஆனால் முன்னாள் முக்காபரத் அதிகாரிகள் டஜன் கணக்கில் ஏற்கெனவே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்" என்றார் அவர். "அவர்களுக்கு நாங்கள் தேவைப்படுகிறோம். உலகிலேயே மிகச்சிறந்த அரசாங்க பாதுகாப்பு அமைப்புக்களில் ஒன்று முக்காபரத்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அப்துல்லாவின் புதிய பணி என்னவென்றால் ஈராக்கில் பாத் கட்சி விசுவாசிகள் என்று கருதப்படுபவர்களில் "விசாரணைக்கு தகுதியுள்ளவர்கள் என்பவர்களை" அடையாளம் காட்டுவது ஆகும். இதில் உண்மை என்னவென்றால் ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் துருப்புக்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபடுவதற்கு ஈராக் மக்களிடையே எதிர்ப்பு வளர்ந்துகொண்டு வருகின்றது. ஈராக்கை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்புகளை தற்போது வழக்கமாக சதாம் ஹுசேன் விசுவாசிகளின் நடவடிக்கை என்று கூட்டணிப் படைகள் முத்திரைக் குத்தி வருவதால், இதுபோன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்ற ஈராக் மக்களை கண்டுபிடிப்பதுதான் இந்த புதிய பணியாளர்களின் கடமையாகும்.

தற்போது முக்காபரத்தோடு இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகின்றது. அப்படி அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் சிலர், முன்னாள் சர்வாதிகாரியின் மிக உறுதியான ஆதரவாளர்கள் ஆவர். தனது பேட்டியில் அப்துல்லா பழைய ஆட்சிக்கு தனது விசுவாசத்தை மிக சிரமப்பட்டு நிலைநாட்டியுள்ளார். ''சதாம் உசேன் சிறந்த அறிவாளி, அவர் மக்களை நேசித்தார். அவர் வலிமையான தலைவர், அவர் புரிந்த தவறுகள், அவரைச் சுற்றியிருந்தவர்கள் செய்ததாகும். அவர்கள் அவருக்கு மிக மோசமான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

''தாங்கள் சதாம் ஹுசேனை வெறுத்து வந்ததாக தற்போது ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது பொய். அனால் அமெரிக்கர்களுடன் பணியாற்றுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. எனது நாடு மீண்டும் சீரமைக்கப்படுவதற்கு உதவ நான் விரும்புகிறேன். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நான் என்னை மாற்றிக்கொண்டாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

புதிய ஈராக் ஆட்சியோடு அனுசரித்து போவது எளிது என்று அப்துல்லாவிற்கு தோன்றுவதில் சந்தேகமில்லை. வாஷிங்டன் ஈராக் மீது திணித்துள்ள பொம்மை நிர்வாகத்திற்கும், சதாம் ஹுசேனின் ஆட்சிக்கும் இடையில் அடிப்படைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. அதுவும் கூட பயங்கர நடவடிக்கைகள் மற்றும் மிரட்டல்கள் மூலம் ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தி ஈராக் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

இன்டிபென்டன்ட் பத்திரிகையின் மத்திய கிழக்கு நிருபரான றொபர்ட் பிஸ்க், ஒவ்வொரு வாரமும் 1000 ஈராக் குடிமக்கள் மடிந்து வருகின்றனர் என்று கூறியிருக்கிறார். அவர்கள் ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்ட படைகளால் சொல்லப்படுகிறார்கள். அல்லது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் சட்ட விரோதப் போரினால் விளைந்த குழப்பம் மற்றும் பொதுவான சமுதாய சிதைவினாலும் மடிந்து வருகிறார்கள். 1954 முதல் 62 வரை அல்ஜீரியாவில், ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்களை சித்திரவதைகள், படுகொலைகள் மற்றும் ரகசிய படுகொலைகள் மூலம் பிரஞ்சு இராணுவம் தீர்த்துகட்டிய பொழுது, நடத்திய இரத்தக்களறி போரை நினைவுபடுத்துகின்ற வகையில் ஈராக்கில் தற்போது அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் கொரில்லா போரில் ஈடுபட்டிருப்பதாக அந்த பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார்.

இதே வகையான முடிவை நாடித்தான் தற்போது சி.ஐ.ஏ சதாம் ஹூசேன் பயன்படுத்திய கொலைகாரர்களை தற்போது பணியில் அமர்த்தி வருகின்றது.

சிரியாவிற்கும், ஈரானுக்கும், எதிராக வேவு பார்ப்பதில் நிபுணர்களாக செயல்பட்டு வந்த முக்காபரத் அதிகாரிகளை குறிப்பாக அமெரிக்கப் படைகள் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருவதாக டைம்ஸ் குறிப்பிடுகின்றது. அத்தகைய அதிகாரிகளில், முக்காபரத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய "காலித்", சி.ஐ.ஏ விற்கு பணியாற்ற வேண்டும் என்று அதனால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் என்றும் டைம்ஸ் கூறுகிறது.

சி.ஐ.ஏ அதிகாரியுடன் தான் மூன்று மணி நேரம் சந்தித்து பேசியதாகவும், ஈராக்கில் இரட்டை ஏஜென்ட்டுகள் பணியாற்றுகின்ற முறை குறித்து அந்த அதிகாரி கேள்விகள் கேட்டதாகவும் அந்த முன்னாள் ஏஜண்ட் பத்திரிகையிடம் கூறினார். ஆயினும், சி.ஐ.ஏ வுடன் பணியாற்ற தான் மறுத்துவிட்டதாகவும், ஏனென்றால் தன் நாடான ஈராக்கை "காட்டி கொடுப்பதாக" அது ஆகும் என்று உணர்ந்ததாகவும் அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

முக்காபரத்தின் ஐந்தாவது பிரிவின் ஒரு பகுதியாக தான் செயல்பட்டதாக "காலித்" உறுதிப்படுத்தினார். சிரியாவிற்கும், ஈரானுக்கும் சாதகமாக பணியாற்றுபவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அந்தப் பிரிவு சிறப்பு கவனம் செலுத்தியது. குற்றம் சாட்டப்பவட்டவர்களுக்கு "மின்சார அதிர்ச்சி தரப்பட்டது அல்லது சீலிங் காற்றாடியில் அவர்கள் கட்டி தொங்க விடப்பட்டு ஒரு மணி நேரம் அவர்களை சூழலவிடப்பட்டனர்" என அவர் கூறினார். "அவர்கள் தடிகளால் கடுமையாக தாக்கப்பட்டனர், மற்றும் சில நேரங்களில் சந்தேகத்திற்குரியவர்கள் வாய் திறந்து பேசவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது உறவினர்களை அடித்ததாகவும்" கூறினார்.

தங்களது நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதிலோ கொள்கை வகுப்பதிலோ ஈராக் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் வழங்க அமெரிக்கா தயாராக இல்லை. அதே நேரத்தில் தன்னுடைய கட்டளைகளை ஈராக்கில் செயல்படுத்துவதற்காக முன்னாள் அரசு எந்திரத்தின் மூலக்கூறுகளை பணியில் சேர்த்துக்கொள்வதில் விரும்பி செயல்பட்டு வருகின்றது. இதுதான் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது ஆக்கிரமிப்பு படையெடுப்பின் மூலம் ஈராக்கிற்கு கொண்டு வந்திருக்கும் "ஜனநாயகம்" மற்றும் "விடுதலையின்" தன்மையாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved