World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

International banks exploit the crisis to reap massive profits

நெருக்கடியை பயன்படுத்தி சர்வதேச வங்கிகள் பாரிய இலாபங்களை ஈட்டுகின்றன

Stefan Steinberg
31 July 2009

Back to screen version

இந்த வார ஆரம்பத்தில் ஜேர்மனியை தளமாகக் கொண்ட Deutsche Bank அதன் இலாபங்களில் பெரும் அதிகரிப்பை அறிவித்தது. இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் நிகர இலாபம் 1.1 பில்லியன் யூரோக்கள் என்று அது அறிவித்துள்ளது. இது, இதே காலத்தின் கடந்த ஆண்டு அது ஈட்டியதை விட (645 மில்லியன் யூரோக்கள்) கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் ஆகும்.

Deutsche Bank இன் இலாபங்களில் பாரிய அதிகரிப்பு என்பது அமெரிக்க தளத்தை கொண்ட கோல்ட்மன் சாக்ஷ்ஸின் அதிக இலாபங்களை தொடர்ந்து வந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு இந்த அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஜூன் மாதம் முடிந்த கடந்த மூன்று மாதங்களில் $3.44 பில்லியன் (2.44 பில்லியன் யூரோக்கள்) இலாபம் ஈட்டப்பட்டதாக கூறியிருந்தது.

உலகம் முழுவதும் பேரழிவை கொடுத்து உலகின் செல்வத்தில் 40 சதவிகிதம் என மதிப்பிடப்பட்டதை அழித்த ஒரு நிதிய நெருக்கடி வெடித்து ஓராண்டு முடிவதற்குள் பல முக்கிய வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் மிக அதிக இலாபங்களை காட்டுவதுடன், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் ஆகியவற்றிற்காக மிக உயர்ந்த தொகையையும் (சில இடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு) ஒதுக்கியுள்ளன.

2008TM Deutsche Bank அதன் வரலாற்றில் மிகப் பெரிய இழப்பை, 3.9 பில்லியன் யூரோக்கள் என்று பதிவு செய்தது. இப்பொழுது இந்த மாறுதல் எப்படி விளக்கப்பட முடியும்?

சமீபத்தில் Der Spiegel இதழில் பேராசை மீண்டும் திரும்புதல்-பூகோள சூதாட்டத்தை மீண்டும் வங்கிகள் திறத்தல் (The Return of Greed -Banks Reopen Global Casino) என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை இதுபற்றிய உட்பார்வையை கொடுக்கிறது. ஒரு முன்னாள் முக்கிய நிதியாளர், "சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் பணத்தில் செல்வம் ஈட்டின. அந்த ஆதாரம் மிகச் சிறியதாக போனபின், அவர்கள் பங்குதாரர்களின் பணத்தை நம்பினர். இப்பொழுது உலகம் அளிக்கக்கூடிய மிகப் பெரிய பணத் தொகுப்பை பெற்றுள்ளன--அதாவது வரி செலுத்துபவர்களின் பணத்தை." கூறியதாக இக்கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.

இக்கட்டுரை ஒரு சர்வதேச முதலீட்டு வங்கியின் ஜேர்மனிய பிரிவின் தலைவரை, "சூதாடுவதற்கான துண்டுகளுக்காக வரிசெலுத்துபவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில் மாற்றும் ஏதும் இல்லை" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

செப்டம்பர் 2008ல் ஏற்பட்ட லெஹ்மன் பிரதர்ஸ் சரிவைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் மகத்தான பிணை எடுப்புப் பொதியுடன் குறுக்கீடு செய்தது. அப்பொழுதில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் பல திட்டங்களை தொடக்கியது. அவை கிட்டத்தட்ட $23.7 டிரில்லியனை நிதிய முறைக்கு ஆதரவு கொடுக்க ஒதுக்கும் திறனைக் கொண்டுள்ளன. இது அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் 1.7 மடங்கு அதிகம் ஆகும்.

வாஷிங்டன் செயல்படுத்திய நடவடிக்கைகள் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களாலும் பின்பற்றப்பட்டன.

அவ்வங்கிகள் கொடுத்த கோரிக்கைகளின் பேரில், குறிப்பாக Deutsche Bank ன் தலைவர் ஜோசப் ஆக்கர்மான் கொடுத்த அழைப்பின்படி, ஜேர்மனிய அரசாங்கம் 500 பில்லியன் மீட்புத் திட்டத்தை ஜேர்மனிய வங்கிகளுக்கான கடந்த ஆண்டு இறுதியில் தயாரித்தது. அப்பொழுது முதல் அது இன்னும் கூடுதலாக நூற்றுக்கணக்கான பில்லியன்களை நிதிய சமூகத்திற்கு "மோசமான வங்கிகள்" (bad banks) திட்டத்தின் கீழ் உறுதியளித்துள்ளது.

செப்டம்பர் 2008ல் நிதிய நெருக்கடி வெடித்ததில் இருந்து அரசாங்கங்கள் மொத்தம் $18 டிரில்லியன் பொதுப்பணத்தை வங்கி முறைக்கு மறுமுதலீடு அளிப்பதற்காக உறுதியளித்துள்ளன. இந்தப்பணம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் ஆகும். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தொழில்துறை நாடுகளில், முக்கிய வங்கிகளும் நிதிய அமைப்புக்களும் "அமைப்பு முறைக்கு அவசியமான நிறுவனங்கள்" எனக் கருதப்பட்டவையும், தங்கள் நாட்டு கருவூலங்களால் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன.

இத்தகைய பிணை எடுப்பு நடவடிக்கைகள், தேசிய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டவை, வங்கிகளுக்கு மகத்தான பாதுகாப்பு வலையை பிரதிபலிக்கின்றன. இதையொட்டி அவை மீண்டும் மிக உயர்ந்த ஊக வகை நிதிய வணிகத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. வங்கி பிணை எடுப்புப் பொதி, மற்றும் பிற பொருளாதார ஊக்க நிதிகளில் இருந்து விளையும் கடன் அளவுகள் பேருரு பரிமாணங்களை அடைந்து, அவற்றை பல தலமுறைகள்தான் தீர்க்க முடியும் என்ற நிலை வந்துள்ளது.

அதே நேரத்தில், அரசாங்கங்கள் விரைவில் கடன்களை சேகரித்துள்ளமை வங்கிகளுக்கு பரந்த, பெரும் பணம் ஈட்டும் வாய்ப்புக்களை கொடுக்கிறது. அரசாங்கக் கடன்களில் வணிகம் செய்வது என்பது, நிதிய மீட்புப் பொதியுடன் பிணைந்துள்ள நிலையில் பெரிய வங்கிகளின் மத்திய நடவடிக்கையாக வெளிப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி அரசாங்கக் கடன் என்பது இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உறுபத்தியில் 80 சதவிகிதத்திற்கு உயரும் என்றும் 2010ல் அதையும்விடக் கூடுதலாகப் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் அரசாங்கக் கடன் 2009ல் மொத்த உள்நாட்டு உறுபத்தியுடன் 100 சதவிகிதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய அரசாங்கத்தின் கடன் 2011க்குள் 200 சதவிகிதமாகும், அமெரிக்காவில் அரசாங்கக் கடன்கள் அதே கால கட்டத்தில் மொத்த உள்நாட்டு உறுபத்தியின் 100 சதவிகிதம் என்று ஆகிவிடும்.

கடன் அளவுகள் உலகெங்கிலும் உயரும்போது, மதிப்பிடும் நிறுவனங்கள் தனி நாடுகளின் கடன்வழங்கும் அந்தஸ்தை தாழ்த்திக் கொண்டு வருகின்றன. இதை அடுத்து அவை வங்கிகளுக்கு கூடுதலான வட்டி கொடுத்தால்தான் தங்கள் கடன்களுக்காக கொடுக்க வேண்டிய கட்டணங்கள் சரியாகும். வங்கிகளை பொறுத்த வரையில் இது வழமையான "வெற்றி-வெற்றி" என்ற நிலைப்பாடு ஆகும்.

அதே நேரத்தில் வங்கிகள் வணிகத்தில் முதலீடு செய்வதில் இருந்து ஒதுங்கியுள்ளன. ஏனெனில் "தற்போதைய நிதிய சூழலில்" சாதாரண நிறுவனங்களும் தொழில்துறை அமைப்புக்களுக்கும் பணம் கொடுப்பது என்பது "பெரும் அபாயம் ஆகிவிடும்". வங்கிகள் கடன்களை கொடுக்க மறுக்கும் நிலையை எதிர்கொண்டுள்ள விதத்தில், தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள் பெருநிறுவனப் பத்திரங்களை அதிக வட்டி விகிதத்திற்கு விற்க வேண்டியுள்ளது. இந்த பத்திரங்கள் விற்பனையில் ஊகம் செய்து வங்கிகள் மேலும் இலாபத்தை ஈட்டுகின்றன.

Der Spiegel கட்டுரை கூறுகிறது; "மூலதனச் சந்தைகளில் தொடங்கிய தற்போதைய நெருக்கடி மீண்டும் மூலதன சந்தைகளை இப்பொழுது வலுப்படுத்துகிறது என்பது ஆழ்ந்த விந்தையாகும். பத்திர வெளியீடுகள் தொகுப்பின் அளவு, வெடிப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் நிறுவனங்கள் (வங்கிகள் சேர்க்கப்படவில்லை) இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் $318 பில்லியன்களை [பத்திர விற்பனை மூலம்] கடன் வாங்கியுள்ளன ....கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரியில் இது கிட்டத்தட்ட 50 சதவிகிதத்திற்கும் மேலானது ஆகும்.

இந்த பெரும் வங்கி இலாப அதிகரிப்புடன் இணைந்திருப்பது வங்கி ஊழியர்களின் ஊதியங்களில் ஒரு வெடிப்பும் ஆகும். ஆலோசனை நிறுவனமான Johnson Associates உடைய மதிப்பீட்டின்படி வங்கித் தொழில் முழுவதும் ஊதியங்கள் இந்த ஆண்டு சராசரியாக 20 முதல் 30 சதவிகிதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்ட்மன் சாக்ஷ்ஸ் ஊழியர்களுக்கு பணத்தை மீண்டும் அளித்தல் என்பது இந்த ஆண்டு $770,000 சராசரியாக இருக்கும் என்றும் இது வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த ஆண்டு ஊதியத் தொகை என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து ரொக்கமாக $45 பில்லியனை பெற்ற சிட்டி க்ரூப், அதன் சொத்துக்களுக்கு அரசாங்க உறுதியாக $300 பில்லியனுக்கு அதிகமாக வாங்கியுள்ள போது அதன் 34 சதவிகித பங்கு உரிமை இப்பொழுது அரசாங்கத்திடம் உள்ளது. இது இந்த ஆண்டு ஊதியத்தை 50 சதவிகிதம் உயர்த்தி கடந்த ஆண்டு குறைவாக கொடுக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு பணத்திற்கு ஈடு செய்ய திட்டமிட்டுள்ளது. UBS, Morgan Stanley உட்பட மற்ற வங்கிகளும் தங்கள் ஊழியர்களுக்கு மிக அதிக ஊதிய உயர்வை, 30 முதல் 40 சதவிகித அதிகத்தை கொடுக்கின்றன.

ஜேர்மனியில் திவால்தன்மையை தவிர்க்க அரசாங்க உதவி பல பில்லியன்களை வாங்கிய பவேரிய அரசாங்க வங்கியின் (BayernLB) தலைவர் மைக்கேல் கெம்மர் தன்னுடைய வங்கி ஊழியர்களுக்கு "ஊக்க" மேலதிக கொடுப்பனவாக பெரும் பணம் கொடுக்க இருக்கும் திட்டத்தை காத்துள்ளார்.

இப்படி அதிரவைக்கும் ஊதியப் பொதிகள் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் வணிகர்களுக்கும் விகிதத்திற்கு பொருந்தாமல் அதிகம் கொடுக்கப்படுகின்றன. ஊதியங்கள், மேலதிக கொடுப்பனவுகள் என்ற வகையில் அவர்கள் பல பல மில்லியன் டாலர்களை பெறவுள்ளனர்.

பணத்தை ஈட்ட முன்னோடியில்லாத வகையில் வாய்ப்புக்களை பெற்றுள்ள பெரிய வங்கிகள், கோல்ட்மன் சாக்ஷ்ஸ், JP Morgan Chase, Deutsche Bank போன்றவை தாக்குதலில் இறங்கி தங்கள் போட்டி நிறுவனங்களை அகற்றும் மூலோபாயத்தில் வேண்டுமென்றே ஈடுபட்டுள்ளன.

புதனன்று பைனான்சியல் டைம்ஸில், Deutsche Bank தலைவர் ஆக்கர்மான் வங்கிகள் சார்பில் உலகம் முழுவதும் அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவற்றை உலகின் முக்கிய நிதிய நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் முயற்சியை தீவிரப்படுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கிச்சமூகம் தற்போதைய நெருக்கடிக்கு பொறுப்பு என்ற குற்றச்சாாட்டை ஆக்கர்மான் உதறித்தள்ளி, சிறு வங்கிகளை தோற்றுவிக்கும் எந்த நடவடிக்கையும் பயனற்றதாக போய்விடும் என்று அறிவித்துள்ளார். மாறாக "சிக்கல் வாய்ந்த உலக நிதிய அமைப்புக்களின்" அதாவது முக்கிய வங்கிகள் Deutsche Bank போன்றவற்றின் நலன்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Deutsche Bank உடன் தொடர்புடைய முக்கிய முதலீட்டு வங்கியாளரான Anshu Jain பிரிட்டிஷ் சஞ்சிகையான Euromoney இடம் மே மாதத்தில் ''வருங்காலத்தில், முதலீட்டு வங்கித்துறையில் ஐந்து அல்லது ஆறு மகத்தான உலகளவு அமைப்புக்களை நாம் காண இருக்கிறோம்." என்றார்.

இந்த உயரடுக்கு முதலீட்டு வங்கி பெருநிறுவனங்கள் Der Spiegel கருத்தின்படி புதிய நிதிய "சிறு குழுவாக" (Oligopoly), முன்னோடியில்லாத வகையில் அரசாங்க கருவூலங்கள் மற்றும் வரிசெலுத்துபவர் பணத்தை பெறும் வகையில் இயங்கும். அரசாங்கத்தில் எந்த அரசியல் கட்சி இருந்தாலும் முன்னைக்காட்டிலும் அதிகமாக வங்கிகள் அரசாங்கக் கொள்கை வகுக்கப்பட ஆணையிடும். வங்கிகளும் அவற்றின் செல்வாக்குச் செலுத்துபர்களும்தான் வாஷிங்டன், பேர்லின் மற்றும் இலண்டனில் அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

கோல்ட்மன் சாக்ஷ்ஸ், JP Morgan Chase, Deutsche Bank ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அவர்களே அதிக அளவில் பொறுப்பாக இருந்த, தற்போதைய நிதிய நெருக்கடியை ஒரு வாய்ப்பாகக்கருதி இரக்கமில்லாமால் அதைச் சுரண்டுகின்றனர். தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இதன் பொருள் தொழிலாளரை மகத்தான முறையில் சுரண்டுவது தீவிரமாக்கப்பட்டு, ஒரு நூற்றாண்டு காலம் போராடிப்பெற்ற சமூக நலன்களில் மிச்சம் இருப்பவையும் அழிந்துவிடும் என்பதாகும்.

உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களில், அரசாங்கங்கள் ஒரு சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்கு தயாரிப்பு நடத்துகின்றன. இதுதான் ஒபாமா சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் மற்றும் வெள்ளை மாளிகை கார்த்தயாரிப்பு தொழிலை வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு ஏற்ப மறு சீரமைக்க குறுக்கீடு செய்ததின் முக்கியத்துவம் ஆகும்.

ஒரு தேசிய தேர்தலை ஒரு சில மாதங்களில் எதிர்கொள்ள இருக்கும் ஜேர்மனிய அரசாங்கம் பெரும் எச்சரிக்கையுடன் செயல்படும் கட்டாயத்தில் உள்ளது. ஆயினும் கூட பழைமைவாதக்கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பெரும் கூட்டணி முக்கிய தொழில்துறை நிறுவனங்களான ஓப்பல் (Opel) போன்றவை திவாலாகப் போக அனுமதிக்கத் தயார் என்பதுடன், நாட்டின் பொதுநல, ஓய்வூதிய திட்டங்கள் மீது மகத்தான தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களும் தயார் செய்யப்படுகின்றன.-இவை தேர்தல் தேதி கடந்தபின் செயல்படுத்தப்படும்.

உலக நிதிய சூதாட்டம் இன்னும் பேரழிவை தரக்கூடிய பொருளாதார மற்றும் சமூக அதிர்ச்சிகளை காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்தின் கட்டுப்பாடு ஆக்கர்மான் மற்றும் குழுவின் கைகளில் விடப்பட்டால், மனிதகுலம் பேரழிவைத்தான் எதிர்கொள்ளும். முக்கிய நிதிய நிறுவனங்கள்மீது ஜனநாயக உரிமையையும் மற்றும் ஒரு திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தின் உள்ளடக்கமாக இவற்றை சர்வதேச தொழிலாள வர்க்கம் கட்டுப்படுத்துதற்கும் இது போன்ற உரிய நேரம் இருந்ததில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved