World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German federal election

SPD leader presents "Germany Plan"

ஜேர்மனி கூட்டாட்சி தேர்தல்

சமூக ஜனநாயக கட்சித் தலைவர் "ஜேர்மன் திட்டத்தை" முன்வைக்கிறார்

By Ludwig Weller
12 August 2009

Back to screen version

ஆகஸ்ட் 3ம் தேதி சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் பிராங்-வால்டர் ஸ்ரைன்மயர் செப்டம்பர் 27 அன்று நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தன் கட்சியின் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்தார். "ஜேர்மன் திட்டம்' என்று அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆண்டுகளுக்குள் 4 மில்லியன் முழுநேர வேலைகளை தோற்றுவித்தல் மற்றும் நியாயமான வருமானம் ஆகியவற்றை நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறது.

ஆனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களால் உடனடியாக கோரப்படும் இந்த அடிப்படை சமூகத் தேவைகள் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் இயைந்து இருக்க முடியாது. மில்லியன் கணக்கான புதிய வேலைகளை தோற்றுவிப்பது முற்றிலும் இயலக்கூடியதே, வெறும் கற்பனையன்று. ஆனால் அவற்றைச் சாதிக்க சோசலிச நடவடிக்கைகள்தான் அவசியமாகும். ஒரு சமூகம் நிதிய உயரடுக்கினதும், ஒரு சிறிய வணிக நலன்களை கொண்டுள்ள அடுக்கின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் வரை, சமூக சமத்துவமின்மை தவிர்க்க முடியாமல்தான் பெருகும். கீழிருந்த ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கம் ஒன்றுதான் நிதிய பிரபுத்துவத்தின் அதிகாரத்தீன் மீதான பிடியை உடைத்து பொருளாதார வாழ்வில் ஜனநாயக உறவுகளை நிறுவ முடியும். அதே நேரத்தில் உலகத்தின் பிரச்சினைகள் சர்வதேச சோசலிச கொள்கைகளின் அடிப்படையில்தான் தீர்க்கப்பட முடியும்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் முக்கிய வேட்பாளாரும் ஜேர்மனியின் துணை அதிபருமான ஸ்ரைன்மயர் இத்தகைய முன்னோக்கை முற்றிலும் நிராகரித்துள்ளார். "ஜேர்மன் திட்டம்" ஒரு நிர்வாகிகள் கூட்ட கருத்தரங்கில் இறுதி ஆய்வு அறிக்கை போல் காணப்படுகிறது. ஜேர்மனியின் நலன்களையும், மூலப் பொருட்களுக்கு நடத்தும் போராட்டத்தில் முதலாளிகளை வலுப்படுத்துவது பற்றித்தான் முழு அக்கறையைக் காட்டியுள்ளது.

ஸ்ரைன்மயரின் ஆய்வில் "ஜேர்மன்" என்னும் சொல் 149 முறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் "சமூகச் சமத்துவமின்மை" என்பது இரு முறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைவிடாமல் இந்த ஆவணம் "ஜேர்மனி வருங்கால முக்கிய சந்தைகளை அறிந்து கட்டுப்படுத்த வேண்டும்", ஜேர்மனிய மென்பொருள் பிரிவு "அமெரிக்கா கொண்டிருக்கும் தரத்தை அடைவதற்கு" உதவப்பட வேண்டும், "மின்சக்தியில் ஓடும் கார்களுக்கு முக்கிய சந்தை" என்னும் இடத்தை ஜேர்மனி அடையவேண்டும் என்ற தேவைகளை குறிப்பிடுகிறது. புதுப்பிக்கப்படும் விசைத் துறையிலும் ஜேர்மனி "முக்கிய இடத்தை" பெற வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

"முடிவாக ஜேர்மனி முன்னணியில் இருக்க வேண்டும்", "இதில் ஜேர்மனி உயரிடத்தில் உள்ளது", "உலகின் திறமைப் புரட்சி என்பது 'ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டது' என்று இருக்க வேண்டும்", "உலக ஏற்றுமதி வெற்றியாளனாக ஜேர்மனி விளங்குகிறது" போன்ற சொற்றொடர்கள் 70 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில் ஒரு சிவப்பு நூலிழை போல் செல்லுகின்றன.

ஒவ்வொரு துறையிலும் ஜேர்மனி உலக வெற்றியாளன் என்றால் உலகின் மற்ற பகுதிகள் என்ன ஆகும் என்ற வினாவை கேட்கும் கட்டாயம் ஏற்படுகிறது. உண்மையில், "ஜேர்மன் திட்டம்" என்பது வணிக மற்றும் பொருளாதார போருக்கு ஒரு திட்டம் ஆகும். குறிப்பிடத்தக்க வகையில் ஸ்ரைன்மயர் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெளியுறவு, இராணுவக் கொள்கை போன்ற பிரச்சினைகளை பற்றியும் அவர் குறிப்பிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஜேர்மனி எப்படி ஐரோப்பா மீது தனது நலன்களை சுமத்தும் என்பதை விவாதிக்கும்போது.

"ஜேர்மன் திட்டம்" என்பது பெருநிறுவனங்கள், மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் சமூக பங்காளித்தன (social partnership) முறையில் இன்னும் கூடுதலான வகையில் விரிவாக்கப்பட்ட வகையில் இவற்றை இணைக்க இத்திட்டம் விரும்புகிறது. "தொழிலாளர் பிரிவு மற்றும் நிறுவன நிர்வாகம் இரண்டும் ஒன்றாக இணைந்து செயலாற்றும் நிறுவனங்கள் நெருக்கடிகாலத்தில் சிறப்பாக வெளிவருகின்றன" என்று ஆய்வறிக்கை கூறுகிறது; "வணிகம், தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கிகளை ஆகியவற்றை ஒரே மேசையில் விவாதத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அதுதான் நெருக்கடிக்கு அப்பாலும் மூலோபாய வெற்றிக் காரணங்களை ஜேர்மனிக்கு உறுதியளிக்கும் விதத்தில் ஏற்படுத்தும்."

ஸ்ரைன்மயரின் ஆய்வறிக்கை "ஊழியர்கள் நிதிப் பங்கு பெறுதல்" என்று அழைக்கப்படும் முறையில் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் திட்டத்தை வலுவாக வலியுறுத்துகிறது. இதுதான் "நீடித்த நிறுவன நிர்வாகம் மற்றும் நிதிய முறைக்கு உத்தரவாதம் கொடுக்கும், நிறுவனங்களில் சமூக பங்காளித்தனத்தையும் தேசியப் பொருளாதாரத்தை வளர்க்கவும் செய்யும்."

மறுபக்கத்தில், ஸ்ரைன்மயர் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அழைப்புவிடக்கூட முயற்சி செய்யவில்லை. சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கத்தின் ஏழு ஆண்டு காலத்தில் ஸ்ரைன்மயர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். தற்போதைய சமூக ஜனநாயகக் கட்சி கன்சர்வேடிவ் கூட்டாட்சி அரசாங்கத்தில் துணை அதிபராகவும் வெளியுறவு மந்திரியாகவும் உள்ளார். செயற்பட்டியல் 2010, Hartz IV சட்டங்கள் போன்றவற்றிற்கு அவர் நேரடி பொறுப்பு கொண்டுள்ளார். அதே போல் ஓய்வூதியம் பெறுவதற்கு வயது 67 என்று உயர்த்தியதற்கும் செல்வந்தர்களுக்கு பெரும் வரிச்சலுகைகள் அளித்ததற்கும் பொறுப்பு கொண்டுள்ளார். இந்த கணக்கின்படி சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் எந்த பிரிவுடைய பரந்த ஆதரவையும் பெறும் என்னும் நம்பிக்கையை கைவிட்டுவிட்டது என்பதுதான் தெளிவாகிறது.

தேர்தல் திட்டத்திற்கு முன்னுரை அப்பட்டமாக கூறுகிறது: "சமமான பகிர்வு, சலுகை வழங்கும் தன்மை என்பவற்றை தளமாகக் கொண்ட அரசு நமக்கு வேண்டியதில்லை....செழிப்பு என்பது தனி நபர் உரிமை, மற்றும் நிறுவனச் செயல்பாட்டு சுதந்திரத்தைத்தான் தளமாகக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்."

முக்கிய சமூகத் துறைகளான சுகாதாரப் பணிகள் போன்றவை கூட சமூக ஜனநாயகக் கட்சியின் திட்டத்தில் "காத்திரமான பொருளாதாரத்தின்" பொருளாதாரப் பக்கம் என்றுதான் முற்றிலும் கருதப்படுகிறது. "ஜேர்மன் திட்டத்தின்படி", காத்திரமான பொருளாதாரம், என்பது "தொழில்துறையில் இயக்கம் நிறைந்தது, உயர்ந்த அளவில் புதுமைக் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பெரும் பொருளாதார முக்கியத்துவத்தை ஜேர்மனிக்கு கொடுப்பது ஆகும்.". "ஜேர்மனியில் சுகாதார உற்பத்திநிலையம்" என்பது, "சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்பட வேண்டும்."

இதே அளவுகோல்தான் கலாச்சாரத்திற்கும் கூறப்படுகிறது. ஸ்ரைன்மயர் அதை "படைப்பாற்றல் தொழில்துறை" என்று அழைக்கிறார். ஜேர்மனியின் படைப்பாற்றத் தொழிலின் போட்டித்தன்மை வளர்க்கப்பட வேண்டும், வருங்காலத்திற்கு ஒரு தேசியக் கொள்கையாக அது வளர்க்கப்பட வேண்டும்" என்று ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சி பேரழிவுதரக்கூடிய தொடர்ச்சியான தோல்விகளை வாக்காளர்களிடம் இருந்து தொடர்ந்து கூட்டாட்சி, மாநில மற்றும் ஐரோப்பியத் தேர்தல்களில் பெற்றதை அடுத்து, ஸ்ரைன்மயரின் அடிப்படை செய்தி "வழக்கம் போல் செயற்பாடுகள்" என்பது ஆகும். இதன் விளைவு கருத்துக் கணிப்புக்களில் காணப்படலாம்--மிகச் சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்கு வாக்காளர்களில் 20 சதவிகித ஆதரவைத்தான் கொடுக்கிறது. ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் இருந்த (SPD) முந்தைய அரசாங்கத்தில் ஸ்ரைன்மயர் ஜேர்மன் அதிபர் அலுவலகத்தின் தலைவராக இருந்து செயற்பட்டியல் 2010 ஐ வளர்த்தார். அதுதான் தொழிலாள வர்க்கத்திடம் சமூக ஜனநாயகக் கட்சிக்கான எஞ்சியிருந்த ஆதரவையும் இழக்கச் செய்து, கட்சி நூறாயிரக்கணக்கான உறுப்பினர்களை அக்காலத்தில் இழந்தது.

கல்வித்துறையில்தான் "ஜேர்மன் திட்டம்", கட்டணங்கள் அகற்றப்படும் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, "மழலையர் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை கட்டணங்கள் கிடையாது" என உறுதியாகக் கூறுகிறது. மேலும் "கல்வி பயிலும் உரிமை அடிப்படை மனித உரிமை ஆகும்" என்றும் அறிவிக்கிறது. 2015 ஐ ஒட்டி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும் என்றும் திட்டம் கருத்துக் கொண்டுள்ளது.

இத்தகைய வெற்று உறுதிமொழிகளில் எவ்வித நம்பிக்கையும் வைக்கப்பட முடியாது. முதலில் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் சமூக ஜனநாயகக் கட்சி அதன் பழைமைவாத கூட்டணிக் கூட்டாளிகளுடன் "கடன் தடைக்கு" (Debt brake) ஒப்புக் கொண்டது. இச்சட்டம் அரசியலமைப்பில் சேர்க்கப்படும் என்றும் இதனால் அனைத்து எதிர்கால கூட்டாட்சி, மாநில அரசாங்கங்கள் பில்லியன் கணக்கில் சேமிக்க கட்டாயப்படத்தும் என்று கூறப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுக்கப்படும் உறுதிமொழி ஒவ்வொன்றும் இந்த கடன் தடைக்கு தவிர்க்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டாவதாக, அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளபடி கூட்டாட்சி முறையில் சமீபத்திய சீர்திருத்தத்தின்படி, கல்வி விஷயங்கள் முற்றிலும் மாநில அரசாங்கங்களுடைய பொறுப்பில் உள்ளவை ஆகும். இத்துறையில் கொள்கை மீது எந்த எதிர்கால கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் கட்டுப்பாடு கிடையாது.

ஸ்ரைன்மயர் நாட்டின் குறைவூதியப் பிரிவை அதிகப்படுத்த விரும்புகிறார் என்பதைத்தான் ஆவணம் தெளிவுபடுத்துகிறது. இது முதலில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணிக் காலத்தில் தொடங்கியது. அதன் பின் மகத்தான பரிமாணங்களை பெற்றுவிட்டது. "சுய உதவி மற்றும் தன்னார்வ கடமைப்பாடு ஆகியவை பராமரிப்பு மற்றும் உதவி ஆகியவற்றில் அதிகரிக்கப்படும்" என்று கூறுகையில், நோயாளர் பாதுகாப்பு நிலைமையில் ஏற்கனவே உள்ள வறிய நிலைமைகள் இன்னும் அதிகமாகும்.

ஸ்ரைன்மயரின் ஆய்வு "படைப்பாற்றல் தொழில்துறையில்" இருக்கும் மோசமானநிலை பற்றியும் கருத்துக் கூறுகிறது. இங்கு "வேலைகள் குறைந்த வரம்புடையவை, அல்லது திட்டங்களுடன் தொடர்பு கொண்டவை, உறுதியான ஒப்பந்தங்கள், நிலையான ஊதியத் தரங்கள், பங்குபெறுதல் ஆகியவற்றை அடைவதில்லை"; தவிர, தனிப்பட்ட ஊக்கம், எதிர்பார இழப்பினை எதிர்கொள்ளல் இரண்டும்.....பல கலைஞர்களும் படைப்பாளிகளும் சுயஉறுதி மற்றும் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு என்று கருதுகின்றனர்." கலாச்சாரத்துறையில் வேலைபார்ப்பவர்களின் பாதுகாப்பிற்காக இவர் கூறும் நடவடிக்கைகள் முற்றிலும் போதாதவை ஆகும்.

"ஜேர்மன் திட்டம்" பரந்த முறையில் குறைந்த ஊதிய பட்சம் வேண்டும் என்று கூறுகிறது. பல தயக்கங்கள் இதில் காட்டப்பட்டாலும் ஆனால் இது 7.50 யூரோ என்று விதிக்கப்படுகிறது. இது அண்டை நாடுகளில் இருப்பதைவிட மிகக் குறைவு ஆகும்.

ஸ்ரைன்மயர் மூலப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றை பெறுதல் பற்றிய ஜேர்மனிய முதலாளித்துவத்தின் வரலாற்றளவு பிரச்சினை பற்றியும் பரிசீலிக்கின்றார். இத்தகைய பிரச்சினைகள்தான் துல்லியமாக ஸ்ரைன்மயரின் வெளியுறவு மந்திரி என்னும் முறையில் பங்கை கொண்டிருந்தன. ஜேர்மனிய இராணுவம் உலகெங்கிலும், குறிப்பாக ஆப்கானிஸ்தானில், நிறுத்தப்பட்டிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது. சில காலமாகவே ஜேர்மனி ஆயுதங்கள் தயாரிப்பில் முதலிடத்தை கொண்டுள்ளது என்பது தற்செயல் நிகழ்வும் அல்ல. ஆனால் ஜேர்மனிய பொருளாதாரத்தில் இராணுவவாதத்தை பற்றி பகிரங்கமாக உயர்த்திக் கூறுதல் என்பது ஸ்ரைன்மயருக்கு பிரச்சனைக்குரியதாகி விடும் என்பதால் அவர் அதைப்பற்றிப் பேசாமல் இருந்துவிடுகிறார்.

ஸ்ரைன்மயர் இதே பிரச்சினையை வேறுவிதமாக "எரிசக்தி மற்றும் பாதிக்கப்படாத சுற்றுச்சூழல்" என்று முத்திரையிட்டு அணுகுகிறார். உண்மையில் அவர் கொண்டுள்ள பொருள் இதுதான்: "எவர்கள் அதிக போட்டியை விரும்புகிறர்களோ, அவர்கள் வருங்காலத்தில் எரிசக்தி மற்றும் மூலப்பொருள் திறமை பற்றி முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். திறமையில் உலகப் புரட்சி என்பது "ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டது" என்று இருக்க வேண்டும். பசுமைவாதிகள் முன்னே பேசியதைப் போல், ஸ்ரைன்மயர் "பசுமைப் பொருளாதாரத்தை தளமாகக் கொண்ட ஜேர்மனியில் மகத்தான வணிக வாய்ப்புக்களை காண்கிறார்.

கடந்த சில மாத நிகழ்வை கருத்திற் கொள்ளுகையில், ஸ்ரைன்மயர் சர்வதேச நிதிய நெருக்கடி பற்றிக் குறிப்படுவதைத் தவிர்த்தல் இயலாது. ஆனால் அதன் காரணங்களை ஆராய்வதை விடுத்து, இதை முற்றிலும் சிந்தனைப்போக்கு பிரச்சினையாக அவர் குறைக்கிறார். "நெருக்கடிக்கு காரணமான சிந்தனைப் போக்கு" என்பதுதான் உரிய அத்தியாயத்தின் தலைப்பு ஆகும். அதில் "பங்குதாரர் மதிப்பு என்னும் கோட்பாடு" தோற்றுவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தீர்விற்கான ஸ்ரைன்மயரின் திட்டங்கள் அபத்தமாகவும் நாட்டுவெறித்தனமாகவும் உள்ளன. ஜேர்மனியில் உள்ள நிர்வாகத்தின் நியாயமான, நீடித்த வடிவமைப்புக்கள்" "உலகெங்கிலும் முன்மாதிரியாக" பின்பற்றப்பட வேண்டும் என்று ஆவணம் அறிவிக்கிறது. "ஜேர்மனிய வணிகச் சட்டம், "பொறுப்பான வணிகர்" என்ற அறநெறித் தன்மை படைத்த கருத்தாய்வை தளமாகக் கொண்டது வணிக மறுமலர்ச்சியின் மத்தியில் இருத்தப்பட வேண்டும்--அத்துடன் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள சிறப்பு ஜேர்மன் வகையிலான சமூக கூட்டாளித்துவமும் சேர்க்கப்பட வேண்டும்."

மற்றொரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது; "இந்த வரம்புகடந்த செயல்களும், அவற்றின் விளைவுளும் பொறுப்பு உடையவர்களுக்கு ஒரு பாடம் ஆகும். எந்தப் பொருளாதாரமும் எளிதில் பணம் ஈட்டுவதை நம்பியிருக்க முடியாது; அப்படி இருந்தால் அதன் அடிப்படை சார்பு இழக்கப்பட்டுவிடும். மனித இயல்பின் ஒரு பகுதிதான் பேராசை; ஆனால் நாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த இலக்கை அடையும்விததிதல் நாம் உலக நிதிய கட்டமைப்பின் மறுசீரமைப்பை காண வேண்டும்.

இத்தகைய வெற்றுச் சொற்றொடர்கள் நிதியத் தன்னலக் குழுக்களின் கால்களில் விழுந்து சமூக ஜனநாயக கட்சி அடிபணிந்து நிற்கும் உண்மையை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டவை. சந்தை கட்டுப்பாடு கூடாது, வரி சலுகைகள் வேண்டும் என்று கூறும் நெருக்கடி தொடங்கியதில் இருந்து வங்கிகளின் நலன்களை காக்க அனைத்தையும் செய்துள்ள ஊக வணிகர்களுக்கு வழிதிறக்கிறது. ஒரு ஊக வணிகர்கூட பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. மாறாக, வரிப்பணத்தில் மில்லியன் கணக்கானவை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சினையில் ஆவணம் எதையும் கூறவில்லை. மாறாக, வெற்றுத்தனமாக அது ஒப்புக் கொள்ளுவதாவது: "இது மீண்டும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது--ஏதோ ஒன்றுமே நடைபெறவில்லை என்பது போல். வங்கிகளின் இலாபங்கள் பில்லியனில், அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வங்கிகள், தனியார்முதலீட்டு நிதியங்களில் உள்ள ஊழியர்களுக்கு ஊதியமாக மில்லியன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அவற்றின் பழைய வணிக மாதிரியை தூசு தட்டிப் புதுப்பித்துள்ளன.....சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு செப்டம்பர் 27ல் தேர்ந்தெடுக்கப்பட்டால், இதைப் பற்றி நாங்கள் ஏதேனும் செய்வோம் என நீங்கள் உறுதியாக நம்பலாம்." என அவ்வறிக்கை கூறுகின்றது.

தொழிற்சங்கங்களும் சில உயர்மட்ட நிர்வாகிகளும் ஸ்ரைன்மயரின் திட்டத்தை வரவேற்றுள்ளனர். மருத்துவத் துறை தொழில்நுட்ப உற்பத்தி குழு Fresenius Medical Care உடைய உறுப்பினரான Emannuele Gath அறிவித்தார்: "சுகாதாரப் பிரிவு பெரும் வளர்ச்சியடையும் வாய்ப்பை கொண்டுள்ளது. மென்பொருள் பெருநிறுவனமான SAP இன் தலைமை நிர்வாகி, "அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பிடும்போது நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது." என்றார்.

"ஜேர்மன் திட்டம்" பற்றி வங்கியாளர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மோர்கன் ஸ்ரான்லி வங்கியின் நிர்வாகக் குழுத் தலைவரான Dr.Dirk Notheis, "முன் எப்பொழுதையும் விட சரியான வருங்கால மூலோபாயம் பற்றி சிந்தனாவாத போராட்டம் தேவை. ஆனால் ஸ்ரைன்மயருடைய திட்டம் ஒரு உறுதியான அரங்கை அமைத்துக் கொடுக்கிறது. ஒரு முழுமையான கருத்தாய்வாக இது இருப்பதுடன் முக்கியமான பகுப்பாய்வாகவும் உள்ளது." எனக் கூறினார்.

ஸ்ரைன்மயரின் திட்டம் அவர் கட்சி வருங்காலத்தின் ஜேர்மனிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இது வந்தால், எப்படி சிறிதும் தளர்வற்று அவற்றின் நலன்களைப் பிரதிபலிக்கும் என்பதை நிதிய வணிக உயரடுக்கிற்கு நிரூபணம் செய்யும் சமூக ஜனநாயகக் கட்சியின் சமீபத்திய முயற்சி ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved