World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு
 

UNESCO Report on Babylon

US occupation caused "major damage" to historic site in Iraq

யுனெஸ்கோவின் பபிலோனியா பற்றிய அறிக்கை

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடத்திற்கு "பெரும் சேதம்" விளைவித்துள்ளது

By Sandy English
11 August 2009

Back to screen version

ஐக்கிய நாடுகளின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, பாக்தாத்திற்கு தெற்கே 60 மைல் (100 கி.மீ.) தூரத்திலிருக்கும் பழமையான பபிலோனியாவின் தொல்பொருள் இடத்தில் ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளினால் விளைவிக்கப்பட்டுள்ள பெருமளவான சேதங்களை கோடிட்டுக் காட்டும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜோன் குர்ட்டிஸ், ஜோன் ரஸல் மற்றும் எலிசபெத் ஸ்டோன் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய சிறப்பு வல்லுனர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த இடத்தின் பரிசோதனைகள் இவ்வறிக்கைக்கு ஆதரமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் போலந்து படைகள் "சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ள இந்த தொல்பொருள் பகுதியில் மோசமாக அத்துமீறி" நடந்துகொண்டன என்று அது குற்றம் சாட்டுகிறது.

அறிக்கை தொடர்ந்து கூறுகிறதாவது, "MNF-I [Multi-National Forces] பன்னாட்டு படைகளும் அவர்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள ஒப்பந்தக்காரர்களும், முக்கியமாக KBR உம் பபிலோனியாவிலிருக்கும்போது, தோண்டுதல், வெட்டுதல், சுரண்டுதல் மற்றும் சமப்படுத்துதல் போன்றவற்றை நேரடியாக நகரத்திற்கு பெரும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செய்தனர். சேதப்படுத்தப்பட்டுவிட்ட முக்கிய கட்டுமானங்களுள் Ishtar Gate மற்றும் Processional Way ஆகியவையும் அடங்கும்."

பபிலோனியா பகுதியானது மிக முக்கிய வரலாற்று மற்றும் அறிவியல்பூர்வமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தற்போதைய ஈராக் எனப்படும் பகுதியான பண்டைய காலத்தைய மெசோபோடாமியாவிற்கு தலைமை நகரமாக பபிலோனியா இருந்தது. உலகின் மிகப் பழமை வாய்ந்த நாகரீக மையங்களில் இதுவும் ஒன்றாகும். தற்கால பண்பாட்டிற்கு அடித்தளமாக பல சமூக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் தோன்றிய இடமாகவும் இதுவுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியியில் சுட்ட களிமண் கட்டிகள் இருந்ததாக முதல் தடவையாக குறிப்பிடப்பட்டதாக பபிலோனியா இருக்கிறது.

இங்கிருந்த இரு ஆட்சியாளர்கள் மூலம் இந்த நகரம் நன்கு அறியப்பட்டுள்ளது; ஹமுரபி (1792-1750 B.C.) - உலகின் முதல் சட்டத் தொகுப்புக்களில் ஒன்றை இவர் இயற்றினார்; நெபுசட்நாஜர் (604-562 B.C) என்ற பபிலோனியாவில் "தொங்கு தோட்டத்தை" நிறுவியவர். இது பண்டைய உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குத்தான் மாவீரர் அலெக்சாந்தர் 323 B.C. யில் இறந்து போனார். பழைய ஏற்பாடு மற்றும் குர்ரான் நூல்களில் இந்நகரம் முக்கியமாக பேசப்படுகிறது. இஸ்லாமிய காலத்திற்கு பின்னர் இந்த நகரம் இருந்ததே மறக்கப்பட்டுவிட்டது.

ஜேர்மனிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரொபேர்ட் கோல்ட்வே 1899ம் ஆண்டு முதன் முறையாக பபிலோனியாவை அறிவியல்பூர்வமான முறையில் வெளிக்கொண்டு வந்தார். பல முக்கிய கண்டுபிடிப்புக்கள் பிந்தைய காலனித்துவ காலத்தில் நடந்தன. வியக்கத்தக்க இஷ்டார் வாயிலும் (Ishtar Gate) அப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாயில், கோல்ட்வே கொடுத்த பொருட்கள் மூலம் மறுகட்டமைக்கப்பட்டு இப்பொழுது பேர்லின் நகர Pergamon அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய தொல்பொருள் நிலையத்தை (German Archaeological Institute) சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் 1962 ல் இருந்து 1973 வரையிலான காலத்தில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களை செய்தனர். 1977ம் ஆண்டிலிருந்து SBAH எனப்படும் ஈராக்கிய அரசாங்க புராதனப்பொருட்கள் மற்றும் மரபிய வாரியத்தின் கீழ் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுவந்தன.

சதாம் ஹுசைனின் பாத்திஸ்ட் ஆட்சி பபிலோனிய தொல்பொருள் மீட்புத் திட்டத்தை தொடக்கியது. ஆட்சியின் நோக்கம் தேசிய உணர்விற்கு மறு ஊக்கம் கொடுத்தல் ஆகும். அப்பகுதி பற்றிய தீவிர ஆய்வு இருந்தபோதிலும் பொறுப்பற்ற தன்மையினால் புதிய கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டன. ஹுசைனுக்காக ஒரு அரண்மனை அங்கு கட்டப்பட்டது. கார்கள் நிறுத்தும் இடத்தைத்தவிர, ஒரு உணவு விடுதி, செயற்கை குன்றுகள் மற்றும் செயற்கை ஓடைகளும் அமைக்கப்பட்டன. இதைதத்தவிர புராதன கட்டிடங்களை மறுநிர்மாணிப்புகள் தவறான முறையில் செய்யப்பட்டதாக யுனேசுகோ அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கப் படையெடுப்பு நடந்த குறுகிய நேரத்தில் நெபுசட்நெசர் மற்றும் ஹமுரபி பகுதியிலிருந்த அருங்காட்சியங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பண்டைய பொருட்களின் பிளாஸ்டர் மாதிரிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றில் முக்கியமாக பபிலோனிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டதாகும். அவற்றில் விலைமதிப்புள்ள தொல்பொருள் சான்றுகள் இருந்தன.

ஏப்ரல் 2003ல் அமெரிக்க இராணுவமும் பின்னர் போலந்து நாட்டுத் துருப்புக்களும் அந்த இடத்தை ஆக்கிரமித்து Camp Alpha என்னும் நிரந்தர முகாம் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இவை டிசம்பர் 2004 வரை அங்கு இருந்தன, பின்னர் இத்தளம் SBAH இடம் ஒப்படைக்கப்பட்டது.

அமெரிக்க இராணுவம் இப்பகுதியை தடுப்பரண்ககள், முள்வேலிகள் ஆகியவற்றால் பிறர் அணுக முடியாமல் செய்தனர். இழிவுற்ற Halliburton உடைய துணை நிறுவனமான KBR ஐ அதன் கட்டுமானப் பணிகள் பலவற்றை செய்வதற்கு ஒப்பந்தம் செய்தது.

கூட்டணிப் படைகள் அல்லது KBR இத்தளத்தில் எட்டு பதுங்கு குழிகளை தோண்டின--அதில் ஒரு பதுங்கு குழி 160 மீட்டர்கள் நீளமாக இருந்தது. இவை அனைத்தும் ஒரு புராதன நகரத்தளத்திற்கு மேல் நடந்தவை. தோண்டி எடுக்கப்பட்ட மண்கள் பதுங்கு குழிகளுக்கு இருபுறமும் குவிக்கப்பட்டன அல்லது HESCO போன்ற தடுப்புக்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. "பழங்கால சுட்ட செங்கல், பானைப் பொருட்களின் சிதைவுகள்" பலவும் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணில் இருந்ததாக யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.

சிறிய பானைப் பொருட்களின் சிதைவுகள் கூட விஞ்ஞான முறையில் முக்கியத்துவம் கொண்டவை; ஏனெனில் நகரத்தின் அமைப்பை மறு கட்டமைக்கவும் பல அடுக்குகளின் தேதி பற்றி அறியவும் அவை உபயோகப்படும். அவை இருந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டால் விஞ்ஞான முறைக்கு உதவாமல் போய்விடும். சில இடங்களில் பதுங்கு குழிகள் புராதன இடத்தின் மேற்பகுதியை ஊடறுத்து இருந்தன.

சாலைகள் போடவோ நிலத்தடுப்பரண்கள் அமைப்பதற்கோ, இராணுவ ஆக்கிரமிப்புப் படைகள் புராதன பகுதியில் பள்ளங்களை தோண்டின; பல காலமாக இருக்கும் குன்றுபோன்ற அமைப்புக்கள் வெட்டப்பட்டிருந்தன; இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதன் இடிபாட்டு எச்சப்பொருட்களின் குவியல்கள் ஆகும். அறிக்கையில் ஒரு விவரிப்பு கூறுகிறது: "வெட்டப்பட்ட பகுதியில் ஒரு பிரிவில் பல தொல்பொருள் எச்சங்களின் சேகரிப்பு காணப்படுகிறது." சில இடங்களில் ஏற்படுத்தப்பட்ட தோண்டல்கள் குன்றுகளின் முழுப் பக்கங்களையும் அகற்றிவிட்டன; அல்லது பழைய சுவர்களைப் பாதித்து விட்டன.

ஆக்கிரமிப்பு படைகள் பல தொல்பொருள் பகுதிகளையும் இடிபாட்டு மேடுகளையும் மட்டப்படுத்திவிட்டன. இவ்விடங்கள் பலவும் பின்னர் மணல், கருங்கல், ஜல்லிகள் ஆகியவற்றால் மூடப்பட்டு இராணுவ இயந்திரங்களை நிறுத்தி வைக்கும் இடமாயின.

"மிகப் பெரிய கனரக இயந்திரங்கள் பயன்படுத்தி நிலமானது நெரிக்கப்படும் நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டது இது பல தொல்பொருள்களைஅதாவது நிலப்பகுதிக்கு சற்றே கீழே இருப்பவற்றை அழித்திருக்கக்கூடும். இந்த நடவடிக்கை பபிலோனியாவின் பரந்த பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. இரசாயன நடத்தைகள் இத்தகைய தொல்பொருள் துணை-அடுக்குகள் மீது ஏற்படுத்திய விளைவுகளை பற்றி இன்னும் தெரியவில்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

யுனெஸ்கோ அறிக்கையின்படி, நெபுசட்நாசர் காலத்திய சாசனங்கள் அல்லது தகவல்களை செங்கற்களில் கொண்டிருந்த இடிபாட்டுப் பொருள்களுடன், பதுங்கு குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணிலிருந்து மண் மேடுகள் கட்டப்பட்டு இருந்தன.

நெபுசட்நெசர் காலத்திலிருந்த சாசனங்கள் அல்லது தகவல்களைக் கொண்ட துண்டுகள் உட்பட்ட புராதன சுவர்களில் கூரான இருப்பு கம்பிகளையும் ஆக்கிரமிப்புப் படைகள் அறைந்திருந்தனர்.

பண்டைய மெசோபோடோமியன் பண்பாடுகளின் முக்கிய சில கலை கண்டுபிடிப்புக்கள் அதாவது இஸ்டர் வாயில் (Ishtar Gate) போன்ற எஞ்சியிருக்கும் பண்டைய நினைவுச் சின்னங்கள் பலவற்றின் மீதும் ஆக்கிரமிப்பு படைகள் நேரடிச் சேதம் ஏற்படுத்தியதை அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

"வாயிலுக்கு ஏற்பட்ட சேதத்தில் உடைக்கப்பட்ட செங்கற்களும், வாயிலை அலங்கரித்த விலங்குகளின் உடல்கள் ஒன்பதும் அடங்கும். பபிலோனிய நகர கடவுளான மர்டுக்கின் அடையாளமான புனைவு dragon-snake விலங்குகளாக அவைகள் வரையப்பட்டிருந்தன."

நகரத்தின் ஊர்வலப் பாதையிலும் அதிர்ச்சிதரும் வகையில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நகரத்தின் பழமை வாய்ந்த சாலையோர நடைபாதைகளை கனரக வாகனங்களைக் கொண்டு சிதைத்துவிட்டன. இதைத்தவிர, "ஊர்வலப்பாதையின் நடுவே, நடைபாதைக்கு மேலே மூன்று வரிசைகளில் 2 டன்கள் எடையுள்ள தடுப்புக்களும் இருந்தப்பட்டன". இவை 2004ல் ஹெலிகொப்டர் மூலம் அகற்றப்பட்டன.

இப்பகுதியில் கனரக கருவிகள் கொடுத்த அதிர்வுகளினால் மற்றய தொல்பொருள் அமைப்புக்களையும் சேதப்படுத்தியுள்ளது. நின்மக் கோயிலின் கூரை அருகே இயங்கிய ஹெலிகெப்டர் தளத்தின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரிந்துவிட்டது.

இந்த அனைத்துவித சேதங்களையும், ஆக்கிரமிப்பு படைகள் SBAH ஊழியர்களை அந்த இடங்களுக்கு சென்று பண்டைய கட்டிடங்களை பராமரித்தல், மீள்நிர்மாணிப்பு செய்தல் ஆகியவற்றை செய்ய அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த இடத்திலிருக்கும் அருங்காட்சியக அலுவலகங்கள் மற்றும் கல்வி மையம் ஆகிய தற்காலக் கட்டிடங்களையும் ஆக்கிரமிப்புப் படைகள் சேதத்திற்கு உட்படுத்தியுள்ளன "இந்த கட்டிடங்களில் கதவுகள், சன்னல்கள், மின்பொருட்கள் ஆகியவை இல்லாத கூடுகள் போல்" உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

இப்பகுதியிலிருந்து வெளிநாட்டு இராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், அமெரிக்காவினால் உருவாக்கிய ஈராக்கிய அரசாங்கத்திற்குள் நடக்கும் உட்பூசல்களால் இந்த இடம் தடைக்குத் தொடர்ந்து உட்பட்டுள்ளது. உள்ளுர் மாநிலத்தின் கவர்னர் இப்பொழுது இந்த இடத்தில் ஒரு பெரிய தோட்டத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக இந்த இடத்தை புல்டோசர் மூலம் சமமாக்கியுள்ளார். அவரும் SBAH ம் இப்பகுதிக்கு செல்லுவதற்கான உரிமைக்குகாக சர்ச்சையில் ஈடுபட்டிருந்தன.

யுனெஸ்கோ அறிக்கை பல பரிந்துரைகளைச் செய்துள்ளது. தொல்பொருள் இடத்தில் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய நீண்ட கால உட்குறிப்புக்கள் ஆராயப்பட வேண்டும் என்பது அவற்றுள் ஒன்றாகும். மேலும் தொன்மையான பபிலோனிய இடத்தை ஒரு உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்படுவதற்கும் அழைப்பு கொடுத்துள்ளது. இது மிகுந்த புகழ்வாய்ந்ததும் அதிக நிதி ஆதார அந்தஸ்தையும் கொண்ட ஒரு வரலாற்றுத் தளம் என்று இந்த அமைப்பின் மூலம் இதற்கு கிடைக்கும்.

தேவையான அளவிற்கென்றாலும் இந்த ஆலோசனைகள், குற்றம் சார்ந்த தன்மையில் அழித்த இப்பகுதி அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆதரவின் கீழ் நடந்த செயற்பாடு பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

போருக்கு முன்பும், போரின்போதும், தொல்பொருள் ஆய்வாளர்களால் பல முறையும் எச்சரிக்கப்பட்டும், அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் ஈராக்கிய மக்களுடையது மட்டுமில்லாமல் இந்த புவி முழுவதின் பண்பாட்டு மரபியத்தை தூக்கி எறியும் வகையில் வேண்டுமேன்றே புறக்கணித்து நடந்து கொண்டனர்.

புஷ் நிர்வாகமும் அமெரிக்க அரசியல் அதிகாரத்துவமும், ஈராக் படையெடுப்பிற்கு உதவியளித்த ஜனநாயகக் கட்சி உட்பட, நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை ஏப்ரல் 2003 க்கு பிறகு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதற்கு பொறுப்புடையவை ஆகும். இன்னும் தொடர்ந்து பல தொல்பொருள் இடங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவை புராதனப் பொருட்களுக்கான சட்டவிரோதச் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இதை வெளியிடும் அமைப்பின் உண்மையான வகையில் அதனுடைய கண்டுபிடிப்புக்களிலிருந்து கிடைக்கும் தர்க்கரீதியான முடிவை இந்த யுனெஸ்கோ அறிக்கையினால் வரைய முடியவில்லை அதாவது: பபிலோனியாவிற்கு ஏற்படுத்திய சேதம் என்பது ஒரு பெரிய போர்க் குற்றத்தின் பாகமாகும்; இதற்கு பொறுப்பானவர்கள் குற்ற விசாரணைக்கும் நீதி விசாரணைக்கும் உட்படுத்தப்பப்பட வேண்டும் என்பதே அது.

ஆனால் இந்த அறிக்கையின் விவரங்கள் தாமே முழு உண்மையையும் வெளிப்படுத்துகின்றன அதாவது: உலகின் மிகப் பழமையான நகரம் ஒன்றின்மீது அமெரிக்கர் வருகை மிகப் பெரிய அழிவை வேண்டுமென்றே ஏற்படுத்தினர் என்பதே அது.

இக்குற்றம் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பதற்குக் காரணம், மில்லியனுக்கு மேற்பட்ட ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதுடன் 2003 இருந்து அமெரிக்க படையெடுப்பையடுத்து மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் ஆழ்ந்துள்ளதுடன் தொடர்ந்தும் இடம் பெயர்ந்தும் வருகின்றனர் என்ற ஒப்பீட்டினால் இது மங்கிவிட்டது.

ஈராக்கின் தொல்பொருள் இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வி அமைப்புக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சேதம் சமூகக் கொலையில்--ஒரு முழுச் சமூகத்தை அழித்தல்-- ஒரு முக்கிய பகுதியாகும் - இதுதான் இந்நாட்டின் இயற்கை இருப்புக்கள், மூலோபாய இருப்பிடம் ஆகியவற்றை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வாஷிங்டன் நடத்தும் முயற்சியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved