World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Violence sweeps northwest Pakistan in wake of Mehsud assassination

மெசூத் படுகொலையை அடுத்து வடமேற்கு பாக்கிஸ்தானில் வன்முறை படர்கிறது

By James Cogan
15 August 2009

Back to screen version

அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய மற்றும் பழங்குடி மக்கள் போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப்போர், ஆகஸ்ட் 5ம் தேதி பாக்கிஸ்தானிய தாலிபன் தலைவர் பைத்துல்லா மெசூத் ஒரு அமெரிக்க பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதலை அடுத்து தெற்கு வஜீரிஸ்தானில் கொல்லப்பட்டதை அடுத்து விரிவடைந்துள்ளது. இக்கொலையை தொடர்ந்து இன்னும் கூடுதலான பிரிடேட்டர் தாக்குதல்கள், ஆயுதமேந்திய பூசல்கள், கொலைகள், குண்டு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் என்று வடமேற்கு பாக்கிஸ்தான் முழுவதும் நடந்துள்ளன.

செவ்வாயன்று, ஆளில்லாத அமெரிக்க ட்ரோன்கள் மெசூத் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் ஒரு கிராமத்தில் போராளிகள் எனக் கூறப்பட்ட 14 பேரை படுகொலை செய்தன. பழங்குடி மற்றும் தாலிபன் தலைமை, மெசூத் பழங்குடி மற்றும் அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமிய குடை இயக்கமான Tehrik-e-Taliban இரண்டுக்கும் தலைமை ஏற்க பைதுல்லாவுக்கு பதிலீடாக வருவது யார் என்று கூட்டம் போடும் என்று கணக்கிட்டு, அமெரிக்க இராணுவம் தெற்கு வஜீரிஸ்தான் மீது பறந்து தாக்குதல் நடத்துவதை முடுக்கி விட்டுள்ளது .

மெஹ்சூத் மற்றும் தாலிபன் ஆகியவை தங்கள் தலைவர் படுகொலைக்கு பெரும் பதிலடி நடத்திக் கொண்டு, தங்களுக்கு எதிராக இஸ்லாமாபாத்துடன் ஒத்துழைத்துள்ள பழங்குடியினரை இலக்கு வைத்துள்ளன.

புதனன்று கிட்டத்தட்ட 1,000 மெஹ்சூத் பழங்குடிப்போராளிகள், தெற்கு வஜீரிஸ்தான் நகரமான ஜன்டோலாவில் இருக்கும் போட்டி பழங்குடி இனத்தவரான துர்க்கிஸ்தான் பிட்டானி உடைய வலுவான கோட்டையின் மீது தாக்குதலை நடத்தியது. போர் பல மணி நேரம் நீடித்தது, தாலிபன் ராக்கெட்டுக்கள் மற்றும் மோட்டார் ஷெல்களை பயன்படுத்தி 40 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கின.

பாக்கிஸ்தானிய இராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல் பிரிவும் தரைப்படை பீரங்கிப் பிரிவும் தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடிக்க அழைக்கப்பட்டனர். பிட்டானியின் போராளிக் குழுவில் குறைந்தது 70 உறுப்பினர்களாவது கொல்லப்பட்டதுடன், கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமானவர் காயமுற்றனர். தாலிபன் இழப்புக்கள் பற்றித் தெரியவில்லை; ஆனால் கணிசமாக இருக்கும் என்று தெரிகிறது. இராணுவம் அதன் பீரங்கிப்படை அப்பகுதியை விட்டு தப்பிச் செல்ல முயன்ற மூன்று வாகனங்களை அழித்தபோது, குறைந்தது 15 போராளிகளாவது கொல்லப்பட்டிருப்பர் என்று கூறுகிறது.

பாக்கிஸ்தானிய படைகள் வியாழனன்று இதற்கு பெரிய முறையில் ஹெலிகாப்டர் மூலம் குண்டுத் தாக்குதலை பெய்துல்லா மெசூத்தின் நெருங்கிய உறவினரும், ஒருவேளை அவருக்குப் பின் பதவிக்கு வரக்கூடிய குர்ரம், ஒராக்ஜாய் பழங்குடி முகவாண்மைகளில் உள்ள ஹகிமுல்லா மெசூத்தின், தெற்கு வஜீரிஸ்தானுக்கு வடக்கே இருக்கும் தளங்கள் என்று கூறப்படுவனவற்றை தாக்கின. பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன என்றும் குறைந்தது 12 போராளிகளாவது கொல்லப்பட்டனர் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

இலக்கு வைத்த படுகொலைகளை நாள் முழுவதும் நடத்திய வகையில் தாலிபன் இதற்கு பதிலடி கொடுத்தது. பஜார் பழங்குடி அமைப்பில் உள்ள இராணுவத்துடன் தொடர்புடைய குடிப்படையின் இரு கொமாண்டர்கள் போராளிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். வஜீரிஸ்தானிலேயே ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் வெடிமருந்துகள் ஏராளமாக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை செலுத்தி அரசாங்க சார்புடைய பழங்குடித் தலைவர் மாலிக் காதீன் மற்றும் அவருடைய துணைப்படையினர் பலரை அப்பகுதியின் கோடைகால தலைநகரான வானாவில் கொன்றார். காடீனுடைய பழங்குடி குடிப்படையினர், இராணுவ ஆதரவுடன் தாலிபனிடம் இருந்த வானாவை பல ஆண்டுகள்தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

தாலிபனின் பழிவாங்கும் தாக்குதல்கள் நாட்டின் எந்த மூலையையும் அடையலாம் என்னும் பாக்கிஸ்தானிய அமைப்பின் அச்சம் ஆகஸ்ட் 14, 1947 நாடு நிறுவப்பட்டதை களிக்கும் நிகழ்வுகளின்போது, நேற்று நன்கு நிரூபணம் ஆயிற்று. பல்லாயிரக்கணக்கான துருப்புக்களும் போலீசாரும் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் போன்ற முக்கிய நகரங்களில் சாலைத் தடைகள் மற்றும் பாதசாரிகள் சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டும், அரசாங்கக் கட்டிடங்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றை பாதுகாக்கவும் நிறுத்தபட்டிருந்தனர். பல பகுதிகளில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அசம்பாவித நிகழ்வுகள் இல்லை என்றாலும், வட மேற்கு பாக்கிஸ்தானில் உள்ள போராளிகள் பெஷாவரில் இருக்கும் இராணுவ தளத்தை தாக்கி ராக்கெட்டுக்களை ஏவியதுடன், வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் கைபர் பழங்குடிப் பகுதிகளில் உள்ள இராணுவத் தளங்களையும் தாக்கினர். பலூசிஸ்தானில் குண்டுவீச்சுக்கள் தலைநகர் குவெட்டா மற்றும் ஹப், மாச் என்ற நகரங்கள் மீதும் நிகழ்த்தப்பட்டன; மற்றும் இரு இடங்களில் மின்விசைக் கோபுரங்கள் அழிக்கப்பட்டன. தாலிபன் தொடர்புடைய போராளிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா அல்லது பல தசாப்தங்களாக பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு எதிராக நீண்ட எழுச்சி நடத்திவரும் இனவழி பலூச் பிரிவினைவாதிகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இஸ்லாமாபாத் அரசாங்கம் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டுள்ள வெறுப்பு மற்றும் உள்நாட்டுப்போரின் அளவு பேச்சு வார்த்தைகள் மூலம் வன்முறை தீர்க்கப்படாது என்ற முதற் கட்டத்தை தாண்டிவிட்டிருக்கிறது.

வாஷிங்டனில் இருந்து வந்த அழுத்தத்தின்பேரில், குறிப்பாக ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர், இஸ்லாமாபாத் இராணுவத்தை வடமேற்கில் மேலாதிக்கம் செய்யும் இனவழி பஷ்டூன் மக்கள்மீது முக்கியமாக மிருகத்தனமான தாக்குதலை நடத்த உத்தரவிட்டது. இதன் குறி இலக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பாக்கிஸ்தான் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதை எதிர்க்கும் பல்வேறு இஸ்லாமிய மற்றும் பஷ்டூன் பழங்குடி போராளிக் குழுக்களை அழிப்பதும், தெற்கு ஆப்கானிஸ்தானில் பஷ்டூன் மக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் தாலிபனால் போராடப்பட்டு வரும் அமெரிக்க எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

இதன் விளைவு பேரளவில் உயிரிழப்பும் இடம் பெயர்தலும் ஆகும். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் பிற மாலகண்ட் மாவட்டங்களிலும் ஏப்ரல்-மே மாதம் நடத்திய தாக்குதல்களில், இராணுவம் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உட்படுத்தி, அப்பகுதியில் மதப்பிரிவு தலைவர் மெளலானா பஸ்லுல்லாவும் அவருடைய Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi (TSNM) இயக்கமும் நடத்திய இஸ்லாமிய எழுச்சியை நசுக்கியது.

பாக்கிஸ்தானிய மனித உரிமைகள் குழு, ஸ்வாட் பள்ளத்தாக்கில் இப்பொழுதுதான் உண்மை கண்டறியும் பணியை முடித்தபின், இந்த வாரம் தாக்குதலை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது; அதில் நேரில் கண்டவர்கள் கூறியிருக்கும் அசாதாரண, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் இராணுவத்தின் பதிலடி ஆகியவை அடங்கியுள்ளன. ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்ட குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் பேரழவிற்கு உள்ளாகியது; ஏராளமான வீடுகள் சேதமுற்று உள்கட்டுமானமும் அழிக்கப்பட்டுவிட்டது. தாக்குதல்கள் நடந்து பல மாதங்களுக்கு பின்னரும் 1.2 மில்லியன் இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இராணுவ நடவடிக்கைகளால் பஜார் மற்றும் மஹ்மண் பழங்குடிப் பகுதிகளில் இடம் பெயர்ந்த 500,000 மக்கள் இன்னமும் மட்டமான முகாம்களில் அல்லது பாக்கிஸ்தானில் பிற இடங்களில் இருக்கும் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று 2,300 குடும்பங்கள் பெஷாவருக்கு வெளியே இருக்கும் ஒரு முகாமில் சுதந்திர தின களிப்பு நிகழ்ச்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து, பாக்கிஸ்தானிய கொடியை அசைத்துச் செல்வதற்கு பதிலாக கறுப்புக் கொடியை காட்டி நின்றனர். இடம் பெயர்ந்தவர்களின் செய்தித் தொடர்பாளரான பாட்ஷா குல் Pakistani News International இடம், "எங்கள் மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டுவிட்டனர்; எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன; பயிர்கள் இராணுவ நடவடிக்கையின்போது சேதமுற்றன, ஆகவே நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.

வாஷிங்டனுடைய கோரிக்கைகளுக்கு இறுதியாக பணிந்து, தான் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் தெற்கு வஜீரிஸ்தான் மீது படையெடுத்து மெசூத் பழங்குடி மற்றும் பாக்கிஸ்தானிய தாலிபன் மீது குருதி கொட்டும் மோதலை தொடர உள்ளது என்பதற்கான வலுவான அடையாளங்களை பாக்கிஸ்தான் அரசாங்கம் காட்டியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் "போர் விரிவாக்கம்" என்று ஈராக்கில் பென்டகன் நடைமுறையை மாதிரியாக கொண்டு அனுப்பி வைத்துள்ள ஒபாமா நிர்வாகம், பாக்கிஸ்தானிய படைகள் தாலிபனுடனான போரில் ஈடுபடும் சுமையில் பெரும்பங்கை வகிக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளது.

வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தின் கவர்னரான ஒவைஸ் அஹ்மத் கானி, நேற்று சுதந்திரதின நிகழ்வு ஒன்றில் அறிவித்தார்: "அரசாங்கக்கட்டுப்பாட்டிற்கு மீறி இருந்த பகுதிகள் குறைந்து கொண்டு வருகின்றன. "உறுதியாக நிற்போம்" என்ற வழிவகையை இப்பொழுது ஏற்று உள்ளோம், இனி பின்வாங்குதல் இருக்காது. பெஷாவர் எக்கணமும் வீழ்ச்சியுறலாம் என்ற பேச்சு இருந்தது. இன்று நாம் அதைப் பாதுகாப்பாகக் கொண்டுள்ளோம், இதேபோல் வடக்கில் மாலக்கண்டும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இராணுவம் இப்பொழுது தெற்கு வஜீரிஸ்தானை மீட்க புறப்படுகிறது."

ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு ஏற்கனவே தெற்கு வஜீரிஸ்தானில் இருந்து தப்பியோடிய 45,000 மக்கள் தவிர, தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படும் பல்லாயிரணக்கணக்கான குடி மக்களுக்கு முகாம்கள் அமைக்கும் தயாரிப்புக்களை தொடங்கி விட்டது. ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர், மார்ட்டின் மோக்வஞ்சா புதனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: "இப்பொழுது நாம் கொண்டிருக்கும் மதிப்பீடும், இடம் பெயர்ந்தோர்கள் எனப் பயன்படுத்த இருக்கும் எண்ணிக்கையும் 90,000த்தில் இருந்து 150,000 வரை உயரக்கூடும்."

இப்படி வன்முறை பெருகியுள்ளது மிக வெடிப்புத் தன்மை படைத்த அரசியல் மற்றும் சமூக விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். பாக்கிஸ்தானின் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையானவர்களும், கிராமப்புற வறியவர்களும் தாலிபான் அல்லது மற்ற இஸ்லாமியவாதிகளுடைய பிற்போக்கு நோக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. பாக்கிஸ்தானிய மக்கள் கூட்டணி தலைமையில் இருக்கும் அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்தின் விருப்பிற்கேற்பத்தான் நடக்கிறது, ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசிய பகுதியையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரத்தான் முயற்சிக்கிறது என்பதை முழுமையாக அவர்கள் உணர்ந்துள்ளனர். இப்போரினால் நலம் பெறக்கூடிய ஒரே பிரிவினர் ஊழல் மிகுந்த வணிக, இராணுவ, நிலக்கிழார் உயரடுக்கு ஆகியவைதான்; இவர்கள்தான் அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் அளிக்கும் பில்லியன் கணக்கான டாலர்களில் இருந்து ஆதாயம் பெறுகின்றனர், அதேவேளை பெரும்பாலான மக்கள் மோசமான வறுமையில்தான் வாழ்கின்றனர்.

Al Jazeerah விற்காக நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு, எதிர்ப்பின் பரப்பை எடுத்துக்காட்டியது--கேட்கப்பட்ட 2,600 பேரில் 59 சதவிகிதத்தினர் பாக்கிஸ்தானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா என்றும், 67 சதவிகிதத்தினர் நாட்டின் வடகிழக்கில் அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

பாக்கிஸ்தானிய டெய்லி மெயிலின் தலைமை ஆசிரியர், மக்தூம் பாபர், அல் ஜசீராவிடம் கூறினார்: "இது ஒரு உண்மை. அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் கூடிவருகிறது; இதற்குக் காரணம் டிரோன் தாக்குதல்கள் ஆகும். உளவுத்துறைப் பிரிவுகள், இராணுவத்தினர் இவற்றை பயனுடையது என்று கருதலாம், ஆனால் பொதுமக்களை பொறுத்தவரையில் இது சிக்கல் வாய்ந்தது. டிரோன் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது." நூற்றுக்கணக்கான குடிமக்கள் அமெரிக்கத் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர்.

பல நிரபராதிகளைக் கொன்றுள்ள பொறுப்பற்ற மற்றும் பயங்கரவாதத்தன்மை நிறைந்த தாலிபன் பதிலடிகள் இருந்தபோதிலும், 41 சதவிகிதத்தினர் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்தனர். 11 சதவிகிதத்தினர்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியின் கொள்கைகளுக்கு ஆதரவை தெரிவித்தனர்; 42 சதவிகிதத்தினர் எதிர்ப்பைத்தான் தெரிவித்தனர். நாட்டை எவர் வழிநடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு 9 சதவிகிதத்தினர்தான் ஜர்தாரிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு பின்னர் பதவிக்கு வந்துள்ள ஜர்தாரி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு பாக்கிஸ்தானின் ஆதரவை அதிகப்படுத்தியுள்ளார் என்பது மட்டும் இல்லை. அவருடைய அரசாங்கம் IMF கோரிக்கையான விசைக்கான உதவித்தொகைகள் அகற்றப்படல், தனியார்மயமாக்குதலை அதிகப்படுத்தும் திட்டம் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிரம் தாழ்ந்து செயல்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved