World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government crisis over Kunduz massacre

குண்டுஸ் படுகொலையை ஒட்டி ஜேர்மனிய அரசாங்கத்தின் நெருக்கடி

By Ulrich Rippert
30 November 2009

Back to screen version

முன்னாள் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் ஜோசப் யங் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) தற்போதைய அவருடைய அரசாங்கப் பதவியான வேலைத் துறை மந்திரியில் இருந்து கடந்த வார இறுதியில் இராஜிநாமா செய்துள்ளார். செப்டம்பர் மாதம் ஏராளமான சாதாரண மக்கள் உட்பட 142 பேர் படுகொலை செய்யப்பட்ட குண்டுஸ் நிகழ்வை மூடி மறைப்பதற்காக பயன்படுத்திய பொய்களுக்கு அவர் இவ்விதத்தில் விலை கொடுத்துள்ளார். அதே காரணத்திற்காக அதற்கு முந்தைய தினம் தலைமை ஆய்வாளர் Wolfgang Schneiderhan என்னும் மூத்த இராணுவ அதிகாரியும், அரசாங்க செயலர் பீட்டர் விஷெர்ட்டும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த இராஜிநாமாக்கள் ஒரு பெரிய அரசியல் பின்னணியில் காணப்பட வேண்டும். முதலில், பாதுகாப்பு மந்திரி, இராணுவத் தலைமை மற்றும் பாதுகாப்பு அமைச்சரகத்தில் மூத்த அரசு அதிகாரிகள், இரண்டு பெட்ரோல் டாங்கர்கள் குண்டுவீச்சில் தாக்கப்பட்டது மற்றும் அதையொட்டி சாதாரண மக்கள் இறப்பைச் சுற்றியிருந்த சூழல் பற்றி தவறான தகவல்கள் கொடுத்ததற்கு முழுப் பொறுப்பை கொண்டிருக்கவில்லை. முழு அரசாங்கமும்தான் ஜேர்மனிய மக்களுடைய கண்கள் மீது மண்ணைத் தூவ முயன்றிருந்தது.

இரண்டாவதாக, இதை அரசாங்கம் செய்ய முடிந்ததற்கு காரணம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள், எல்லாவற்றைக் காட்டிலும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைவாதிகள் எந்தத் தயக்கமும் இன்றி ஆப்கானிஸ்தான் போரில் ஜேர்மனியின் பங்கிற்கு ஆதரவு கொடுத்திருந்தனர். மூன்றாவதாக, இந்த நிகழ்ச்சிகள் போரை பெரிதும் விரிவாக்குதல் மற்றும் பெரிய அளவு இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு தயாரிப்பு நடத்தவும், நெறிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உண்மைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட சித்திரம் வெளிப்படுகிறது. செப்டம்பர் 4 அதிகாலையில், குண்டுஸில் உள்ள மாநில மறுசீரமைப்புக் குழுவிற்கான தளபதி கர்னல் ஜோர்ஜ் கிளீன் கடத்தப்பட்ட இரு பெட்ரோல் டாங்கர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய சில மணி நேரத்தில், பல சிவிலிய மக்கள் இறந்துவிட்டனர் என்பது ஏற்கனவே அறியப்பட்டிருந்தது.

அடுத்த நாள் அருகில் இருந்த மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்த ஆப்கானிய டாக்டர் ஒருவருடன் நடாத்திய பேட்டி ஒன்று ஒலிபரப்பானது, அது குழந்தைகள் உட்பட பாதிப்பாளர்கள் இருந்ததை உறுதிபடுத்தியது. இரு நாட்களுக்குப் பின்னர், சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படைகளின் (ISAF) தளபதி, அமெரிக்க ஜேனரல் மக்கிரிஸ்டன் சம்பவ இடத்திற்கு சென்றார். அவருடன் சென்றிருந்த செய்தியாளர் ஒருவர் பின்னர் வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கட்டுரையில் இப்படுகொலையின் பரப்பு பற்றி நிறைய விவரங்களைக் கொடுத்திருந்தார்.

செப்டம்பர் 7ம் தேதி, நேட்டோவின் நிகழ்வு பற்றிய முதல் இடைக்கால அறிக்கை பேர்லினுக்குக் கிடைத்தது; இதில் ஜேர்மனிய துருப்புக்கள் பெருமளவு தொடர்பு படுத்தப்பட்டிருந்தனர். இந்த அறிக்கை இருப்பதே ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சரகம் மற்றும் காபினெட் மந்திரிகளால் நான்கு நாட்கள் மறுக்கப்பட்டது.

செப்டம்பர் 8ம் தேதி அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) பாராளுமன்றத்தில் அரசாங்க அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். நிகழ்ச்சியைச் சுற்றியிருந்த சூழலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர் அழைப்புக் கொடுக்காமல், பாதுகாப்பு மந்திரிக்கு தன்னுடைய ஆதரவைக் கொடுத்தார். முன்னால் இல்லாத அளவிற்குத் தீவிரத்துடன் இராணுவத்தின் நடவடிக்கைகளை காத்து குறைகூறல்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, இராணுவப் படைகளை பற்றி எவ்வித "முன் தீர்ப்பிற்கும்" வரக்கூடாது என்றும் வலியுறுத்தினார். "உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் எந்தவித குறைகூறல்களும் எவரிடம் இருந்தும் வருவதை, நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று மேர்க்கெல் பகிரங்கமாக அச்சுறுத்தினார்.

அதிபருடைய தற்போதைய கூற்றான அப்பொழுதிருந்த பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து தனக்கு போதிய தகவல் கிடைக்கவில்லை என்னும் கூற்று, ஜேர்மனிய இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை பற்றி எவ்விதக் குறைகூறலும் எழுப்பப்படக்கூடாது என்னும் அவருடைய கூற்றைப் போலவே போலித்தனமானதுதான். அவருடைய அரசாங்க அறிக்கை செய்தி ஊடக அறிக்கைகளுக்கு எதிராக இருந்தது; இதற்கு இடையில் அவற்றின் உண்மை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாள், அந்த நேரத்தில் குண்டுத் தாக்குதலுக்கான உத்தரவு "இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர் பெரும் இறப்பைக் கொடுத்த ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைக்கு" வழிவகுத்தது என்று அப்பொழுது எழுதியிருந்தது. மேர்க்கெலின் ஆக்கிரோஷவகை பாராளுமன்ற நிலைப்பாடு ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய போர்ப்பணி பற்றி எவ்வித குறைகூறலையும் மிரட்டும் தன்மையைக் கொண்டிருந்ததுடன், தணிக்கை முறைக்கு ஒப்பாகவும் இருந்தது.

இராஜிநாமா, பணிநீக்கம் ஆகியவற்றால் Jung, Schneiderhan, Wichert ஆகியோர் போலியாக தவறு செய்தவர்கள் போல் காட்டப்பட்டுள்ளனர். பேர்லினில் ஹிட்லரின் நாஜி ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஜேர்மனிய இராணுவம் செய்த மிகப் பெரிய போர்க்குற்றத்தை ஜேர்மனிய அதிபர் காத்ததில் ஏற்பட்ட சீற்றத்தை தணிக்கும் வகையில் அவர்கள் நீங்கியது செய்துள்ளது.

அதிபர் மேர்க்கெல் தன்னுடைய போர்க் கொள்கையை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதற்கு எந்தக் கட்சிக்கும் துணிவில்லை என்ற உண்மையை நம்பினார், இன்னமும் நம்புகிறார். SPD மற்றும் பசுமைவாதிகள் அரசாங்கத்தை அமைத்தபோது (1998-2005) ஜேர்மனிய இராணுவப் படைகளின் சர்வதேசப் பணிகளை அவர்கள் அதிகம் விரிவாக்கி, ஆப்கானிஸ்தானிற்கும் இராணுவத்தை அனுப்பி வைத்தனர். அப்பொழுது முதல் அவர்கள் ஹிந்து குஷ் பகுதியில் இராணுவ நடவடிக்கையை பெரிதும் காத்து மேர்க்கெலை வலதில் இருந்து குறைகூறி வந்தனர்.

உதாரணமாக கடந்த வாரம் நடந்த ஒரு விவாதத்தில், பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவர் Susanne Kastner (SPD), ஆப்கானிஸ்தானில் உள்ள ஜேர்மனிய துருப்புக்களின் உள்ளத் திண்மையை "கடந்த செப்டம்பர்மாத விமானத் தாக்குதல், சிவிலிய பாதிப்புக்கள்" குறைத்துள்ளன என்று பெரிதும் வருந்தினார். SPD யின் பாராளுமன்றப் பிரதிநிதி கூறினார்: "இது துருப்புகளுக்கும் அனைத்து ஜேர்மனிய படைகளின் உறுப்பினர்களுக்கும் ஒரு கூடுதலான சுமையாகும்" Jung கும் அவர் தவறாகக் கொடுத்த தகவலும் "பணி நிலைப்பாட்டை ஏற்பதற்கு மக்களிடையே ஆர்வத்தைக் குறைத்துவிட்ட" செயலுக்கு உதவி விட்டது என்றும் அவர் கூறினார்.

இடது கட்சி போரைப் பற்றிய தற்போதைய விவாதத்தில் குறிப்பிடத்தக்க இழிந்தை வகையைக் கொண்டுள்ளது. அவர்களுடைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் நடவடிக்கையை குறைகூறுகையில், கட்சி இடைவிடாமல் அரசாங்கத்திற்கு இப்பிரச்சினை குறித்து எந்தவித கஷ்டங்களையும் கொடுப்பதாக இல்லை என்று அடையாளம் காட்டி வருகிறது. மாறாக, அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு அது அழைக்கப்பட வேண்டும் என்று குறிப்புக் காட்டியுள்ளதுடன், அரசாங்கத்தில் பங்கு பெற தானும் அழைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது; அதையொட்டி தானும் இப்பிரச்சினையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக இணைந்து நிற்கலாம் என்பது அதன் கருத்து.

இக்கட்சியின் பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்; அவர்களுக்கு அக்டோபர் நடுப்பகுதியில் குண்டுஸ் படுகொலை பற்றி நேட்டோ கொடுத்த இரகசிய அறிக்கையின் பொருளுரை தெரிவிக்கப்பட்டிருந்தது. இடது கட்சியின் மூன்று பிரதிநிதிகளில் எவரும் அறிக்கையில் இருந்த குறைகூறல்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சரகத்தையும் அரசாங்கத்தையும் சாவலுக்கு விடத் தயாராக இல்லை.

இந்த, இன்னும் மற்ற தகவல்களை Bild-Zeitung க்கு அனுப்பும் செயலை அவர்கள் வலதுசாரி வட்டங்களுக்கு விட்டனர். புதிய பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் ஜு குட்டன்பேர்க், இப்பொழுது இந்த அம்பலங்களை பயன்படுத்தி ஆட்சி தனிநபர் மாற்றங்களை கொண்டு வருவதுடன், இராணுவ, அரசாங்கத் தலைமையை ஆப்கானிய போர் பெரும் விரிவாக்கப்படுவதற்கும் தயாரிப்புக்களை நடத்துகிறார். தலைமை ஆய்வாளர் Wolfgang Schneiderhan தன்னுடைய பதவியை 2002ல் SPD-பசுமைக் கட்சிக் கூட்டின் போது எடுத்துக் கொண்டார். அவருடைய இராஜிநாமா இப்பொழுது குட்டன்பேர்க்கிற்கு உயர்மட்ட இராணுவப் பதவியைத் தான் விரும்புவருக்குக் கொடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

பாதுகாப்பு மந்திரி குட்டென்பர்க், தற்பொழுதைய பூசலைப் பயன்படுத்தி இராணுவத்தின் செல்வாக்கை வலிமைப்படுத்த முயற்சிக்கும் தன் விருப்பத்தை மறைக்க முற்படவில்லை. கடந்த வாரம் வாஷிங்டனுக்கு முதல் முதலாகச் சென்றிருந்தபோது அவர் அமெரிக்க நிர்வாகத்திடம் ஆப்கானிய போர் விரிவாக்கப்பட தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்தார். "இன்னும் கூடுதலான சுமையை" ஜேர்மனி ஏற்கத் தயார் என்றும் குட்டன்பேர்க் தன்னை உபசரித்தவர்களிடம் கூறினார். மேலும் கூடுதலான மக்கள் ஆதரவுடன் ஜேர்மனி போரில் பங்கு பெறவும் தான் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். ஜேர்மனிய இராணுவப் படைகள் இப்பொழுது உலகில் தங்கள் பிரிவுகளுடன் 10 செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. இது தீவிர ஈடுபாடு கொண்டுள்ள இராணுவமாக மாறிவிட்டது; ஜேர்மனியில் வெளிப் பணிகளில் இதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

முந்தைய காரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பேர்லினின் போர் நோக்கங்கள் விரிவுபடுத்தப்படுதலும் தேவை என்று குட்டன்பேர்க் கருதுகிறார். தன்னுடைய கருத்தை, "இன்று அசாதாரணம் என்று நினைப்பது, அன்றாட வாடிக்கை, எந்த நிலை வரவேண்டும்" என்ற சொற்களுடன் அவர் சுருக்கமாகக் கூறியுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved