World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: The Left Party in power implements massive job cuts

ஜேர்மனி: அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சி பாரிய வேலைக் குறைப்புக்களைச் செயல்படுத்துகிறது

By Ludwig Weller
10 November 2009

Back to screen version

ஜேர்மனிய தேர்தல்கள் முடிந்து நான்கு வாரங்களில் சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) இடது கட்சியும் (Die Linke) பிராண்டன்பேர்க் மாநிலத்தில் கூட்டணி அமைப்பதில் நேரத்தை வீணடிக்கவில்லை. கிட்டத்தட்ட சமூக ஜனநாயகக் கட்சி கோரிய அனைத்து நிபந்தனைகளையும் இடது கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.

இரு கட்சிகளுடைய அரசியல் வேலைத்திட்டங்களும் அநேகமாக ஒன்றாக இருக்கையில், இது ஒன்றும் வியப்பைத் தரவில்லை. இரண்டு பிரச்சினைக்குரிய பகுதிகளான பாரிய பொதுத்துறை வேலைக்குறைப்புக்கள், பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களில் இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சியின் வழிவகைக்கு முற்றிலும் சரணடைந்துவிட்டது.

சமூக ஜனநாயகக் கட்சி கோரியுள்ளபடி, அடுத்த சில ஆண்டுகளில் பொதுப் பணித் துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தற்போதைய 51,000த்தில் இருந்து 40,000 ஆகக் குறைக்கப்படும். சமூகநல அரசாங்கத்தின் காவலர் என்று காட்டிக் கொள்ள விரும்பும் இடது கட்சி பொதுத்துறையில் ஐந்து ஒரு வேலையை தகர்க்கும் பங்கைக் கொண்டுள்ளது.

இதற்காக அவர்கள் பெரும் வெகுமதி ஏனையவற்றுடன் நான்கு மந்திரி பதவிகளும் உள்ளடங்கும். இடது கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் பொருத்தமான பதவிகளான வரவுசெலவுத்திட்ட குறைப்புக்களுக்குப் பொறுப்பான நிதி மந்திரி, நீதித் துறை மந்திரி, சுற்றுச் சூழல் மந்திரி, சுகாதார, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவர். இதைத்தவிர பொருளாதார, ஐரோப்பிய விவகாரங்கள் மந்திரிப் பதவியும் உண்டு.

உள்துறைப் பதவிகளை தவிர மற்ற முக்கிய பதவிகளை இடது கட்சி எடுத்துக் கொள்ளும் என்பது சற்று வியப்பைத்தான் தருகிறது. மத்தியாஸ் பிளாட்சேக் தலைமையில் சமூக ஜனநாயகக் கட்சி இந்த முக்கிய அரசாங்க பதவிகளை கைவிடும் முடிவு, இடது கட்சி அவற்றை எடுத்துக் கொள்ளக் காட்டும் ஆர்வம் என்பது பெரும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இதில் இருந்து நாம் இரு விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்: முதலாவது இடது கட்சி அரசாங்கப் பதவிகளை ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் தீவிர நெருக்கடி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் தொடர்ந்த சிதைவை எதிர்கொண்டுள்ள இக்கட்சி சரியும் சமூக ஒழுங்கை முட்டுக்கொடுத்து நிறுத்த நம்பகமான தூண்கள் என்று தன்னுடைய சேவையை வழங்குகிறது.

இரண்டாவதாக, ஒரு சில சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களைவிட, பிளாட்சேக், தற்போதைய பேர்லின் நகர முதல்வரான கிளவுஸ் வோவரைட் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் அந்திரேயா நாலஸ் ஆகியோர் இடது கட்சியுடன் பல உடன்பாடுகளைக் காணவேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்குக் காரணம் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆதரவுச் சரிவுவாகும். இடதுகட்சி மிகஉயர்ந்த ஆளும்நிலைக்கு வருவதற்கு அவர்கள் உதவுவதன் மூலம் இக்கட்சி வலதிற்கு மாறுவதற்கு உதவுகின்றனர். பிராண்டன்பேர்க் அனுபவம் ஒருவித "தீயில் குளித்து தூய்மையாக வருவதுபோல்" இடது கட்சிக்கு இருக்கும். பேர்லினைப் போல் இங்கும் இப்பொழுது அது சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு குழுவாகச் செயல்பட்டு சமூகக் குறைப்புக்கள், கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும் என்று நிரூபிக்க வேண்டும். அதனால் மற்ற கூட்டாட்சி மாநில அரசாங்கம் எதையும்விட பிராண்டன்பேர்க் இதைச் சிறப்பாகச் செய்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.

இடது கட்சி பிராண்டன்பேர்க்கில் மிக உயர்ந்த அரசாங்கப் பதவிகளை ஏற்கும் முடிவு கட்சித் தலைவர்களான ஒஸ்கார் லாபோன்டைன் மற்றும் கிரிகோர் கீசி ஆகியோரின் அழுத்தத்தை ஐயத்திற்கு இடமின்றிப் பிரதிபலிக்கிறது. இவ்விருவரும் ஏற்கனவே சார்லாந்து, தூரிங்காவில் அரசாங்கப் பதவிகளைப் பெற முயற்சித்தனர்; ஆனால் மாநிலத் தேர்தல்களின் போதுமான பெரும்பான்மைகளைப் பெற்றாலும், தூரிங்காவில் சமூக ஜனநாயகக் கட்சியும், சார்லாந்தில் பசுமைக் கட்சியும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் (CDU) கூட்டணி அரசாங்கங்கள் அமைக்க விரும்பிவிட்டன.

சமூகநலக்குறைப்புகள் மற்றும் தொழிலாள வர்க்க நலன்களுக்கு எதிரான நடவடிக்கை போன்ற வரலாற்றை கொண்டுள்ள "சிவப்பு-சிவப்பு" என்று பேர்லினில் அழைக்கப்பட்ட கூட்டாட்சி அரசாங்கம் ஒரு விதிவிலக்கு என்று கருதியவர்களுக்கு இன்று முகத்தில் அறை விழுந்துள்ளது. பிராண்டன்பேர்க்கில் கூட்டணி உடன்பாட்டிற்கு கையெழுத்திட்டபின், இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடதுபுறம்தான் இருக்கிறது என்று கூறுவது மிகக் கடினம் ஆகும். வேலைக் குறைப்புக்கள் மற்றும் சமூக நலப்பணிகளை தகர்ப்பதில் எந்தக்கட்சி முக்கிய உந்துதலைக் கொடுக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியது ஆகும். கூட்டணி அரசாங்கத்தின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி வேண்டுமென்றே ஒரு தெளிவற்ற சொல்லாட்சியில் இயற்றப்பட்டுள்ளது. அதுதான் வருங்காலச் சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், பெருகிய பொதுக் கடன்களை நிறுத்தும் அரசியல்வாதிகளுடைய கட்டாயத்தை பூர்த்தி செய்யவும் அனுமதிக்கும்.

அரசாங்கத்தில் நுழைவதற்காக இடது கட்சி தன்னுடைய தேர்தல் உறுதிமொழிகளை உடனே கைவிடவும் தயாராக இருந்தது. தேர்தல் வரை அது பழுப்பு நிலக்கரி விசை ஆலைகளில் இனியும் பயன்படுத்தபடுவதை எதிர்த்த மக்கள் எதிர்ப்பு இயக்கத்திற்கு Lusatia வில் (மில்லியன் மக்களுக்கு மேல் இருக்கும் ஒரு கிழக்கு ஜேர்மனியப் பகுதி) ஆதரவு கொடுத்தது. அவர்கள் கிராமங்களில் அகளும் பணிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்துவதுடன், உற்பத்தி வழிவகையில் வெளிவரும் கார்பன் டையொக்சைடின் சுற்றுச் சூழல் பாதிப்பிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

பிராண்டன்பேர்க்கில் உள்ள "சிவப்பு-சிவப்பு" கூட்டணி உடன்பாடு செய்தி ஊடகத்தால் முழுமையாக வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்று வெளிப்படையான வியப்புடன், செய்தி ஊடகம் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடது கட்சிக்கும் இடையே உள்ள சுமூக உறவுகளைப் பற்றிக் கூறி அவை எப்படி முன்பு சமூக ஜனநாயகக் கட்சி-கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய ''சிவப்பு-கறுப்பு'' கூட்டணி வணிகத்தில் இருந்து கல்வி வரை திட்டமிடப்பட்டிருந்த பரந்த கொள்கைகளை தொடர முற்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளன. Berliner Zeitungன் அரசியல் வர்ணனையாளர் பிராண்டன்பேர்க் கூட்டணி "கூட்டாட்சி மாநில அரசியலில் ஒரு முன்னோடித் திட்டம்" என்றும் கூறியுள்ளார்.

"இடது" தன் கொள்கைகளைக் கைவிட்டதற்கு சில உதாரணங்கள், இடைநிலைப் பள்ளிகளை விரிவான பள்ளிகளாக மாற்றுவது, இணக்கமான சுற்றுச்சூழல் கொள்கை ஆகியவை செயற்பட்டியலில் இப்பொழுது இல்லை. இடது கட்சி "வெற்றிகள்" என்று கூறிக் கொண்டவற்றை கூட, கவனமாக ஆராய்ந்தால், வெறும் வெற்றுப் பொதிகள் என்று தெரிவரும். 2014 ஐ ஒட்டி 1,250 கூடுதல் ஆசிரியர் வேலைகள் தோற்றுவிக்கப்பட உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை உண்மைத் தேவையின் மிகச் சிறிய பகுதியைத்தான் பிரதிபலிக்கிறது. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில்கூட, இடது கட்சி 2,500 புதிய ஆசிரியர்கள் நியமனம் வேண்டும் என்று கூறியிருந்தது. எப்படிப் பார்த்தாலும், புதிய ஆசிரியர்கள் நியமனம் என்பது பொதுப்பணி வேலைகளில் மற்ற திட்டமிட்டுள்ள வேலைக்குறைப்புக்களோடு பார்க்கும்போது அதிகம் இல்லை என்று ஆகிவிடும்.

பொதுப்பணித் திட்டம் கூட, 8,000 சமூகப்பணி வேலைகள் தோற்றுவிக்கப்படும் என்று கூறப்படுவது, நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்பவர்களை வேலையற்றோர்கள் எண்ணிக்கையில் இருந்து அகற்றும் ஒரு நடவடிக்கைதான். பின்னர் இவர்கள் குறைவூதிய வேலைத்துறைக்கு மாற்றப்பட்டுவிடுவர். இந்தத் திட்டத்திற்கான நிதியம் கூட்டாட்சி மட்டத்தில் இருந்து வரும் ஆதரவைத்தான் தொடர்ந்து நம்பியுள்ளது. பிராண்டன்பேர்க்கில் முந்தைய சமூக ஜனநாயகக் கட்சி-கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கூட்டணியின் வலதுசாரி உள்துறை மந்திரி ஜோர்க் ஷோன்போம் ஆல் செயல்படுத்தப்பட்ட தீவிர போலீஸ் அதிகாரங்களின் விரிவாக்கம் அகற்றப்படப் போவது இல்லை. அதைப் பற்றிய "விசாரணைதான்" நடத்தப்படும். இந்தப் புதிய போலீஸ் அதிகாரங்களில் வாகன இலக்கத்தட்டுகளின் விபரங்கள் சேகரித்து, தொகுத்து வைக்கப்படும். அதே போல் மக்களை அவர்களுடைய கைத்தொலைபேசி மூலம் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கும் திறனும் இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில், இடது கட்சி லிஸ்பொன் உடன்பாட்டில் இருப்பது அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளது. கூட்டணி உடன்பாட்டின்படி பிராண்டன்பேர்க் மாநில ஆட்சி அந்த உடன்படிக்கையை முற்றிலும் ஏற்கிறது.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை பொறுத்தவரையில், குறிப்பாக பொதுப்பணித்துறை வேலைகளை குறைத்தல்பற்றி, தற்போதைய, தொடர்ந்து இருக்கும் பிரதம மந்திரி மத்தியாஸ் பிளாட்சேக் (SPD), Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: "ஏற்கனவே எங்கள் ஆரம்ப பேச்சுக்கள் சுமுகமான சூழ்நிலையில் நடந்தன. எங்கள் விவாதங்கள் நேர்த்தியாக, தரமாக இருந்தன; இரு திறத்தாருக்கும் நாம் கடினமான எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறோம் என்பது தெளிவாயிற்று. இது உலக நிதிய நெருக்கடி, குறைந்துவிட்ட வரி மூல வருவாய்கள் ஆகியவற்றால் வந்துள்ளன. இதனால் சமூக கூட்டினை பாதுகாப்பது இன்னும் கடினமாக உள்ளது.

செய்தித்தாள் பிளாட்சேக்கை கேட்டது:"பிராண்டன்பேர்க் பொதுத்துறையில் மிகப் பெரிய வேலை வெட்டுக்கள் அலையை எதிர்கொண்டுள்ளது. இடது கட்சி இதற்கு ஒப்புக் கொள்ளுமா?" அதற்கு அவர் கொடுத்த விடை: "இதைப் பொறுத்தவரையில் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடதுகட்சிக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. நாம் கடினமான வரவுசெலவுத்திட்ட முடிவுகளை எடுக்க வேண்டும். அது ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்சினைதான். இதை எவரும் கைதட்டி வரவேற்கமாட்டார்கள், ஆனால் பல நேரமும் குறைகூறும் எதிர்ப்புக்கள் வரும்....மாநில வரவுசெலவுத் திட்டம் 1.5 பில்லியன் யூரோக்கள் கடனில் உள்ளது. புதிய சமூகநல செயல்களுக்கு இருப்புக்கள் ஏதும் இல்லை."

ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் அதிகாரத்துவ மரபைக் காக்கும் வகையில், இடது கட்சியும், சமூக ஜனநாயகக் கட்சியும் ஏற்கனவே அவற்றின் உறுப்பினர்கள் கட்சியின் முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் தங்கள் கருத்துக்களை கூறவும் மாட்டார்கள், அதில் பங்கு பெறவும் மாட்டார்கள் என்பதை உறுதியாக்கிவிட்டன. இது இந்தக் கட்சிகளில் சிறிதுகூட உள் ஜனநாயக முறைகள் இல்லை என்பதற்கு மற்றொரு சான்று ஆகும்.

பத்து ஆண்டுகள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் (CDU) "பெரும் கூட்டணியில்" இருந்த பின்னர், நவம்பர் 6ல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஜனநாயக கட்சியின் பிளாட்சேக் சில காலத்துக்கு முன்னரே இந்த கூட்டில் இருந்து விலகி இடது கட்சியுடன் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார். அவருடைய நடவடிக்கை அப்பொழுது புரியாத்தன்மையை ஏற்படுத்தி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தினுள்ளும் மற்றும் அவருடைய சொந்த உறுப்பினர்களிடையேகூட தீவிர விமர்சனத்தை எதிர்கொண்டது.

ஆனால் கூட்டாட்சி உடன்பாட்டை கவனித்துப் பார்ப்பவர்களுக்கும், புதிய அரசாங்க மந்திரிகளின் அமைப்பு முறையையும் காண்பவர்களுக்கு பிளாட்சேக் மனத்தில் என்ன வைத்துள்ளார் என்பதைக் கண்டறிய முடியும். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தை விட இடது கட்சிதான் தொழிலாளர் பிரிவிற்கு எதிராகத் திட்டமிட்டுள்ள தாக்குதல்களை திறமையாக செயல்படுத்த சிறந்தது என்று அவர் கருதுகிறார். ஏற்கனவே கூட்டணிப் பேச்சுக்களின் தொடக்கத்தில், அவர் "ஒரு சிவப்பு-சிவப்பு" ஆட்சிக்கு தன் விருப்பத்தை நியாயப்படுத்தும் வகையில், வரவிருக்கும் அரசாங்கத்தின் கடின கொள்கைகளைச் செயல்படுத்த இடது கட்சி இன்னும் நம்பிக்கைத்தன்மை உடைய கட்சி என்று கருதுவதாக கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved