World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US continues to pressure Iran after Geneva talks

ஜெனீவா பேச்சுக்களுக்கு பின்னரும் அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது

By Peter Symonds
2 October 2009

Back to screen version

நேற்று ஜெனீவாவில் சர்வதேசப் பேச்சுக்களை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை மீண்டும் கூறி, அதன் அணுசக்தி கடமைகளை நிறைவேற்றுவதில் "விரைந்து நடவடிக்கை" எடுக்க தெஹ்ரான் தவறினால் அமெரிக்கா "கூடுதலான அழுத்தத்தைக் கொடுக்கத் தயார்" என்று எச்சரித்தார். இப்பேச்சுவார்த்தைகளில் P5+1 என்று அழைக்கப்படும் குழுவின் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி) மற்றும் ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துபவர் சாயிட் ஜலாலி ஆகியோர் பங்கு பெற்றனர்.

அமெரிக்க ஆதரவு பெற்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டும் கடந்த வெள்ளியன்று கோம் நகரத்திற்கு அருகே ஒரு இரகசிய யூரேனிய செறிவூட்டும் ஆலையை ஈரான் வைத்துள்ளதாக ஒரு "கண்டுபடிப்பை" கூறி ஈரான்மீது அழுத்தத்தை அதிகரித்தன. ஈரான், சர்வதேச அணுசக்தி முகவாண்மையிடம் (IAEA) இந்த நிலையம் பற்றி ஏற்கனவே நான்கு நாட்களுக்கு முன்னதாக கூறியுள்ளது; இது இன்னும் கட்டமைப்புக் கட்டத்தில்தான் உள்ளது. டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு முடிவான கெடுவை வாஷிங்டன் விதித்துள்ளது; தன் கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் கீழ்ப்படியாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளின் போது, ஜலாலி அண்மையில் கோம் ஆலையை IAEA ஆய்வாளர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கும் ஈரானின் விருப்பத்தை மீண்டும் கூறி, தன்னுடைய நாட்டின் அணுசக்தி திட்டங்கள் சமாதான செயற்பாடுகளுக்குத்தான் என்று மீண்டும் வலியுறுத்தினார். அணுவாயுத பரவா உடன்படிக்கையின் கீழ் உள்ள தன் கடமைகளை தான் செய்துவருவதாகவும் தெஹ்ரான் கூறியுள்ளது; அதாவது செயற்பாடுகளை தொடங்குவதற்கு 180 நாட்கள் முன்னதாக IAEA இடம் தகவல் கொடுத்தல் அதில் அடங்கும். IAEA தலைவர் மகம்மது எல்பரடே நாளை தெஹ்ரானுக்கு சென்று கோம் நிலையத்தில் ஆய்வாளர்களை பார்ப்பது பற்றிய விவரங்களை விவாதிக்க இருக்கிறார்.

IAEA திட்டமான தன்னிடம் இருக்கும் குறைவான அடர்த்தியுடைய யூரேனியத்தை மருத்துவ ஐசோடெப்ஸ் தயாரிக்க இருக்கும் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள சிறு உலைக்கு எரிபொருள் குச்சிகளாக மாற்றி அனுப்புவதற்கு, ரஷ்யாவிற்கும் பின்னர் பிரான்சிற்கும் மேலதிக செறிவூட்டலுக்காக அனுப்ப ஈரான் ஒப்புக் கொண்டது. தற்பொழுதுள்ள யூரேனிய இருப்புக்கள் 4 சதவிகிதம் வரை செறிவூட்டப்பட்டுள்ளன--இந்த அளவுதான் அணுசக்தி உலைக்கு தேவை, ஆனால் தெஹ்ரான் உலைக்கு எரிபொருள் குச்சிகள் 20 சதவிகித செறிவூட்டலைக் கொண்டிருக்க வேண்டும்.

இத்திட்டம் செயல்பட்டால், அது ஈரானின் அறிவிப்பான அணுவாயுதத்தைக் கட்டமைக்கவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும். அமெரிக்கச் செய்தி ஊடகம் பல முறையும் ஈரானின் குறைந்த செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை, அதன் நாடன்ஸில் உற்பத்தி செய்வதை, "அணுகுண்டு தயாரிக்கப் போதுமானது" என்று கூறிவந்துள்ளது. உண்மையில் ஆயுதத்தர யூரேனியத்திற்கு செறிவூட்டல் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் இருக்க வேண்டும். இதன் பெரும்பாலான இருப்புக்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டால், நாட்டிற்குள் அளிப்பை மீளமைப்பதற்கு ஈரானுக்கு பல மாதங்கள் பிடிக்கும்.

நேற்றைய கூட்டத்தின்போது, ஜலாலி ஒருவரோடு ஒருவர் என்ற முறையில் அமெரிக்க வெளிவிவகார உதவிச் செயலர் வில்லியம் பர்ன்ஸுடன் உணவின்போது பேசினார். இந்தத் தொடர்புதான் 1979 ஈரானியப் புரட்சிக்கு பின்னரும், அணுப்பிரச்சினை வந்ததில் இருந்து முதல்தடவையாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மிக உயர்மட்ட தூதரகத் தொடர்பு ஆகும். புஷ் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்க, ஈரானிய தூதர்கள் பாக்தாத்தில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்; ஆனால் அவை அமெரிக்கத் தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஈரானிய ஆதரவை உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளோடு நின்றிருந்தன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரொபேர்ட் வூட் இன் கருத்தின்படி, பேர்ன்ஸ் ஈரானிய பேச்சுவார்த்தையாளரிடம் ஈரான், "உருப்படியான, நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளை அதன் சர்வதேச கடமைகளுடன் இயைந்த வகையில் எடுக்க வேண்டும்" என்று கூறினார். இந்த விவாதத்தில் "மற்ற பிரச்சினைகள் பற்றியும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் இருந்தது; அவற்றில் மனித உரிமைகளும் அடங்கியிருந்தன." ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் என்பதுடன் ஜலாலி நாட்டின் சக்தி வாய்ந்த தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும் ஆவார்; இந்த அமைப்பு நாட்டின் மிக்குயர் தலைவர் அயதோல்லா அலி காமேனீக்கு நேரடியாக பொறுப்புக் கூறும்.

ஜெனீவா பேச்சு வார்த்தைகள் "ஆக்கபூர்வமானவை" என்று அனைத்து கட்சிகளும் விவரித்தன. ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் சேவியர் சோலனி அனைத்துத் தரப்பினரும் "வரவிருக்கும் வாரங்களில் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்துவதாக ஒப்புக் கொண்டனர்."; அக்டோபர் இறுதிக்குள் இரண்டாவது கூட்டத்தையும் நடத்த உள்ளனர். கூட்டத்தில் நேரிய முடிவு இருந்தாலும், ஒபாமா நிர்வாகம் இதை எதிர்கொண்ட முறை இப்பேச்சு வார்த்தைகளில் வாஷிங்டனின் மோதும் அணுகுமுறையைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.

இப்பேச்சு வார்த்தைகளை "ஒரு ஆக்கபூர்வமான ஆரம்பம்" என்ற விளக்கினாலும், ஒபாமா ஈரானுக்கு புதிய கால கெடுக்களை நிர்ணயித்து, IAEA க்கு "கோமிற்கு அருகில் இருக்கும் இரகசிய அணு நிலையத்தை "தடையற்ற வகையில் ஆராயும் வாய்ப்பு... இரண்டு மாதங்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும்" என்றார். "பேச வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை" என்றார் ஒபாமா. "எங்கள் பொறுமைக்கு வரம்பு உண்டு" என்றும் எச்சரித்தார். ஈராக் போருக்கு முன்னதாக புஷ் நிர்வாகம் இருந்ததுபோல் ஒபாமா புதிய எச்சரிக்கைகள் என்பதைத்தான் ஈரானுக்கு சலுகைகளாக கொடுக்கிறார்.

ஜெனீவா கூட்டத்திற்கு முன், ஒபாமா நிர்வாகம் மற்ற P5+1 உறுப்பினர்களை பலமுறை கேட்பது, மிரட்டுவதின் மூலம் ஈரானுக்கு எதிரான ஐ.நா.பாதுகாப்புக்குழு நடவடிக்கைகளில் வரவிருக்கும் கடுமையான தடைகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தது. ரஷ்யா மற்றும் சீனா தயக்கத்துடன் ஆதரித்துள்ள தற்பொழுதைய பொருளாதாரத் தடைகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என்று ஈரானிய அணுத்திட்டத்துடன் தொடர்பு உடையவற்றுடன்தான் உள்ளன. வாஷிங்டனில இப்பொழுது தீவிரமாக பரிசீலிக்கப்படும் தண்டனை நடவடிக்கைகள் ஈரான் நிதியம், வணிகக் கடன்கள், காப்பீடு ஆகியவற்றைப் பெறுவதை பாதிப்பதுடன் அதற்கு அதிகம் தேவைப்படும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதியையும் தடைக்கு உட்படுத்தும்.

ரஷ்ய ஆதரவைப் பெறும் திட்டத்துடனான நடவடிக்கையில் ஒபாமா சமீபத்தில் அமெரிக்கா திட்டமிட்டிருந்த பாலிஸ்டிக்-எதிர்ப்பு ஏவுகணைக் கேடயத்தில் திருத்தங்களை அறிவித்துள்ளது; இதில் போலந்து மற்றும் செக் குடியரசில் தளங்கள் அமைப்பது இருந்தது; அதுவும் நீக்கப்பட்டுள்ளன; இவை மாஸ்கோவால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடந்த வியாழனன்று ஒபாமாவைச் சந்தித்தபின், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் மாஸ்கோ தெஹ்ரானுகற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று குறிப்பு காட்டினார். அந்த அறிக்கை ஈரானை தற்காப்பில் தள்ளியது; ஏனெனில் அது சீனா, ரஷ்யா இரண்டும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தராது என்று நம்பியிருந்தது.

ஜெனீவா பேச்சுக்கள் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நடந்தபோது, பல கட்டுரைகள் ரஷ்ய நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறித்துக் காட்டின. உள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டனைத் தளமாகக் கொண்ட டைம்ஸ் கூறியது: "வரலற்று அநீதிகள் பற்றி பலமுறையும் கூறப்பட்டிருந்த கருத்துக்களை மீண்டும் கூற முற்பட்டபோது ஈரானின் கவனத்தை ரஷ்யா அணுவாயுதப் பிரச்சினைக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதின் சுமை மேலைத் தோள்களில் இருந்து ஈரானியத் தோள்களுக்கு மாற்றப்படுவதில் மாஸ்கோ வெற்றியடைந்தது."

இந்த அவலமான உண்மை அரசியல், ஈரானிய மக்களின் விதி இழிந்த பேரங்களான பொருளாதார, மூலோபாய நலன்களின் ஒரு பகடையாக இருப்பது, தற்போதைய மோதல் ஈரானின் அணுத்திட்டம் பற்றி முக்கியமாக இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாறாக அமெரிக்கா தெஹ்ரானில் வாஷிங்டனுடைய விழைவுகளுக்கு ஏற்ப மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அதன் பொருளாதார, மூலோபாய ஆதிக்கத்திற்கு வளைந்து கொடுக்கும் ஆட்சியை நிறுவுவதற்கான போலிக்காரணத்திற்கான பிரச்சாரம்தான். கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஏவுகணை-எதிர்ப்பு கேடயத்தைக்கைவிடுவது ஈரான் பற்றிய அமெரிக்கத் திட்டங்களுக்கு ரஷ்யா உதவுவதற்கு பிரதி உபகாரம்தான்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் ஈரானின் "இரகசிய" அணுத் திட்டங்கள் பற்றிய அச்சுறுத்தல் பிரச்சாரத்திற்கு இடையே, தனிக் கட்டுரைகள் தெஹ்ரானுடன் உறவுகளை சீரமைத்துக் கொள்ளும் விதத்தில் வந்துள்ளன; அதற்கு ஈடாக ஒருவர்க்கொருவர் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்கள் கொடுத்துக் கொள்ளலாம். செவ்வாயன்று நியூ யோர்க் டைம்RTM Flynt, Hillary Leverett என்னும் புஷ் நிர்வாகத்தைப் பற்றிய திறனாய்வாளர்கள், மோதலில் இருக்கும் ஆபத்து பற்றி எச்சரித்து, ஈரானுடன் மூலோபாயத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு, சீனாவில் 1972ல் ஜனாதிபதி நிக்சன் சமரசப்படுத்திக்கொண்ட வகையில் செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

புஷ் மற்றும் ஒபாமா ஈரான் பற்றிய ஆக்கிரோஷ நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டபின், Leveretts எழுதினார்: "பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவிற்கு ஈரானிய முடிவு எடுத்தலில் நன்மை பயக்கும் என்ற பொய்யைத் தொடர்வதற்குப் பதில்--இந்த மூலோபாயம் பெரும் திகைப்பு அல்லது போரில்தான் முடிவடையும்--நிர்வாகம் ஈரானுடன் ஒரு மூலோபாய மறு அணிசேர்தலை நாடவேண்டும், சீனாவுடன் நிக்சன் கொண்டுவந்தது போல் முழுத்தன்மையுடன் அது இருக்க வேண்டும். அதற்கு வாஷிங்டன் நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஈரானுடனான மறு ஒற்றுமை என்பது ஈரானின் மூலோபாயத் தேவைகளுக்கு உதவும் என்பது உத்தரவாதமாகக் கூறப்பட வேண்டும்."

ஆனால் ஈரானுடன் உறவுகளை சீரமைக்கும் ஒரு சிறந்த மூலோபாயத் திட்டத்தின் முக்கியமான நலன்களை எவர் பெறுவர் என்பது கேட்கப்பட வேண்டும். ஈராக்கில் இருந்ததுபோல், ஐரோப்பிய சக்திகள் சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஏற்கனவே ஈரானுடன் தூதரக, பொருளாதார உறவுகளை நன்கு நிறுவியுள்ளன. இதில் அதன் மகத்தான எண்ணெய், எரிவாயு இருப்புக்களைப் பயன்படுத்தும் ஒப்பந்தங்களும் அடங்கியுள்ளது. ஈரானிய புரட்சிக்குப் பின்னர் அனைத்து உறவுகளையும் தெஹ்ரானுடன் துண்டித்த அமெரிக்கா முதலில் இருந்து தொடங்க வேண்டும். இடைவிடாமல் அழுத்தங்களுக்கு எரியூட்டினால், போர் ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில், அமெரிக்கா தன்னுடைய போட்டியாளர்கள் ஈரானுடன் கொண்டுள்ள உறவுகளை கீழறுக்க முடிகிறது, அதேபோல அது தெஹ்ரானில் தன்னுடைய நலன்களுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஒரு ஆட்சியையும் நிறுவ முயல்கிறது.

எனவேதான் ஈரானுடன் அழுத்தங்களை அகற்றி அனைத்தையும் தழுவும், ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளை நிறுவும் திட்டத்தைவிட, வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எச்சரிக்கைகள், தூண்டுதல்கள் என்ற விரிவாக்கப்படும் பிரச்சாரங்கள்தான் இருக்கக்கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved