World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan descends deeper into civil war

பாக்கிஸ்தான் உள்நாட்டுப்போரில் ஆழமாக மூழ்கின்றது

By Peter Symonds
16 October 2009

Back to screen version

பாக்கிஸ்தானிய இராணுவம் தெற்கு வஜீரிஸ்தானில் பழங்குடிப் பிரிவில் பெரும் தாக்குதலை நடத்த முற்படுகையில், இஸ்லாமிய போராளிகள் நேற்று லாகூர் நகரத்தில் போலீஸ் நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த உயர்மட்ட தாக்குதல்களை நடத்தினர்.

பல துப்பாக்கிப் போராளிகள் குழுக்கள் போலீஸ் அதிகாரிகள் போல் மாறுவேடம் அணிந்து இரு போலீஸ் பயிற்சி மையங்களையும் மத்திய விசாரணை அமைப்பின் மாநிலத் தலைமையகத்தையும் தாக்கினர். 1 போலீஸ் அதிகாரிகள் உட்படக் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த இலக்குகளில் இரண்டு ஏற்கனவே முந்தை 18 மாதங்களில் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தன.

வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் நேற்று இன்னும் இரு தாக்குதல்கள் நடந்தன. கோஹட் என்னும் இடத்தில் ஒரு போலீஸ் நிலையத்தின்மீது தற்கொலைக் கார்க் குண்டு தாக்கி மூன்று போலீஸ் அதிகாரிகளும் எட்டு சாதாரணக் குடிமக்களும் உட்பட 11 பேரைக் கொன்றது. மாநிலத் தலைநகரான பேஷாவரில் அரசாங்க ஊழியர்களுக்காக வீட்டு வளாகத்தில் வெடித்த ஒரு சிறு குண்டு ஒரு குழந்தையைக் கொன்று மற்றும் ஒன்பதை பேரைக் காயப்படுத்தியது.

வார இறுதியில் இராணுவத் தலைமையிடமான ராவல்பிண்டியில் பெரும் தைரியத்துடன் 22 மணி நேரம் போருக்கு வித்திட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நேற்றைய தாக்குதல்கள் வந்துள்ளன. ஒரு பிரிகேடியர் ஜெனரல் மற்றும் ஒரு கேர்னல் உட்படக் குறைந்தது 6 படையினராவது மோதலில் கொல்லப்பட்டனர். முன்பு அக்டோபர் மாதம் பேஷாவரில் ஒரு கார்க் குண்டு சந்தையில் வெடித்தபோது அது 52 பேரைக் கொன்று 100 பேருக்கும் மேலானவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. அக்டோபர் 5ம் தேதி ஒரு தற்கொலைக் குண்டுவீச்சு தாக்குதல் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத் தலைமையகத்தில் நடந்தபோது ஐந்து உதவிப் பணியாளர்களை கொன்றது.

நேற்றைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் "விரோதிகள் ஒரு கெரில்லாப் போரைத் தொடங்கிவிட்டனர்." என அறிவித்தார். உண்மையில் வாஷிங்டனின் ஆழ்ந்த அழுத்தத்தின் பேரில் பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஏப்ரல் மாதம் ஸ்வாட் பள்ளாத்தாக்கு மற்ற அண்டைப் பகுதிகளில் இராணுவத்தை அனுப்பியதில் இருந்து நாடு பிரகடனப்படுத்தப்படாத ஒரு உள்நாட்டுப் போர் நிலைமையில்தான் உள்ளது.

இப்பொழுது சமீபத்திய புதிய "பயங்கரவாதத் தாக்குதல்கள்" திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தெற்கு வஜீரிஸ்தானில் இதே போன்ற நடவடிக்கையை இராணுவம் நடத்தத் தயாராகிவிட்டது. பல மாதங்களாக பழங்குடிப் பகுதியின்மீது பெரிய பாக்கிஸ்தானிய தாக்குதல் நடாத்த வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்த இடத்தைத்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக போரிடும் எழுச்சியாளர்கள் புகலிடமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு முழுத்தயாரிப்பிலான தரைப்படைத்தாக்குதல் இன்னும் நடக்கவில்லை என்றாலும், இராணுவம் அதன் துருப்புக்கள், டாங்குகள் மற்றும் பீரங்கிப் படைகளை உரிய இடங்களில் நிறுத்தி மாமோ மலைப்பகுதிகளில் மூலோபாய சாலைகளை கட்டமைக்கின்றது. விமானம் மூலம், மற்றும் பீரங்கிப் படைகள் மூலம் எழுச்சியாளர்கள்மீது தாக்குதல் என்பது இந்த வாரம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இராணுவத் தலைமையகத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு இது ஓரளவு விடையிறுப்பு ஆகும்.

"போராளிகளின் பதுங்குமிடங்களை ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டரில் இருந்து குண்டுவீசுதல் என்ற முறையில் இலக்கு கொண்டிருக்கிறோம். இது தெற்கு வஜீரிஸ்தானில் நடவடிக்கையின் முதல் கட்டமாகும்" என்று Dawn செய்தித்தாளிடம் பழங்குடி எல்லைப் பகுதிகளுக்கு பொறுப்பான உயர்மட்ட அரசாங்க அதிகாரி Tariq Hayat கூறினார். செவ்வாய் புதனன்று நடந்த இதே போன்ற தாக்குதல்களை தொடர்ந்து நேற்று ஐந்து தனிப் பகுதிகளில் அதிக குண்டுவீச்சுக்களை இராணுவம் நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர்.

புதன் இரவு ஸ்பின்கால் பகுதியில் ஒரு குகை மறைவிடத்தில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் எழுச்சியாளர்கள் என்று பாக்கிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகள் கூறினாலும் உள்ளூர் பழங்குடிமக்கள் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தன்படி பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் குடிமக்கள் என்றும் பாதுகாப்பிற்காக வீடுகளை விட்டு நீங்கி குகைகளுக்கு வந்த மூன்று மகளிரும் மூன்று குழந்தைகளும் அதில் அடங்குவர் என்றனர்.

பழங்குடிப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறுவது விரைவாகி வருகிறது. அசோசியேட்டன் பிரஸ்ஸின் கருத்துப்படி, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தெற்கு வஜீரிஸ்தானை விட்டு 200,000 மக்கள் நீங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பாதிபேர் இடம் பெயர்ந்த மக்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளர். தெற்கு வஜீரிஸ்தானின் மக்கள் எண்ணிக்கை துல்லியாமாக தெரியவில்லை, ஆனால் பொதுவாக இது 500,000 ஆக இருக்கலாம் என்று மதிக்கப்படுகிறது.

Spiegel Online இடம் ஒரு வணிகரான முகம்மத் ஷாபாஸ் "இங்கு வாழ்க்கை பெருகிய முறையில் கடினமாகியுள்ளது; எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். போர் இல்லாவிடினும் எங்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. இராணுவம் எல்லா இடங்களிலும் ரோந்து சுற்று வருகிறது; ஒவ்வொரு தெருவிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. உணவு மற்றும் அன்றாடப் பொருட்களை வாங்குவதும் கடினமாகிவிட்டது." என கூறினார்:

அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நைமதுல்லா கான் என்னும் போலீஸ் அதிகாரி இந்த வாரம் மக்கள் வெளியேறியுள்ளது அதிகரித்துவிட்டதாக கூறினார். அகதிகளை ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட 80 வாகனங்கள் ஒவ்வொரு நாளும் கோண்டா சோதனைச் சாவடி என்று பகுதியின் கடைசியில் இருக்கும் இடத்தை கடந்து செல்லுகின்றன. தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் பின் தெருக்கள் வழியை தப்பிய ஹாஜி அயுப் மெசுத் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இந்தத் தீவிரக் குண்டுத் தாக்குதல் வெளியேறுவதை தவிர அவரை வேறு வழியின்றி செய்துவிட்டது என்றார். "உள்ளூர் மக்கள் அங்கு அமைதியுடன் இருப்பது கடினம். நான் என்னுடைய குடும்பத்துடன் வெளியேற வேண்டியதாயிற்று." என்று அவர் கூறினார்.

பல அகதிகளும் தேரா இஸ்மைல் கான் மற்றும் டாங்க் போன்ற பாதுகாப்பான மாவட்டங்களுக்கு செல்லுகின்றனர். இவர்களை கவனிப்பதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கும் அடையாளம் இல்லை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து இந்த ஆண்டு முன்தாக இடம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கான மக்கள் போதிய உணவு, நீர், மின்விசை இல்லாத மோசமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். டேரா இஸ்மெயில் கானில் இருக்கும் உள்ளுர் அதிகாரி Spigel Online இடம் "இராணுவத் தாக்குதல் மீண்டும் தொடங்கினால் மிகப் பெரிய மக்கள் வெளியேற்றம் தெற்கு வஜீரிஸ்தானத்தில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம். எங்கு இத்தனை மக்களையும் நாங்கள் தங்கச் சொல்லி வசதிகளை செய்து கொடுப்போம்?" எனக்கூறினார்.

தரைவழித் தாக்குதல் எப்பொழுது தொடங்கும் என்பது தெளிவாக இல்லை. திங்களன்று உள்துறை மந்திர ரஹ்மான் மாலிக் அரசியல் தலைவர்கள் தாக்குதலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இராணுவத் தலைமை அதிகாரிதான் எப்பொழுது என்பதை முடிவெடுப்பார் என்று கூறினார். ஆனால் அரசாங்கமும் இராணுவமும் பல வாரங்களாக வரவிருக்கும் தாக்குதல் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன. தலிபான் மற்றும் அதனை இணைந்த இஸ்லாமியக் குழுக்களுடன் மோதல் வளர்வதால் ஏற்கடக்கூடிய உள்அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடிய ஆபத்திற்கான அடையாளம், தயக்கத்திற்கு ஒரு காரணமாகும்.

இராணுவ ரீதியில், தெற்கு வஜீரிஸ்தான் மீதான தாக்குதல் பெரும் செலவைக் கொடுக்கும். மூன்று முந்தைய நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன. கணிசமாக உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள 10,000 ஆயுதமேந்திய போராளிகளுடன் மோதுவதற்கு இராணுவம் 28,000 படையினரை திரட்டியுள்ளது. எல்லைப் பகுதிகளில் இருக்கும் பஷ்டுன் பழங்குடி மக்களிடையே அரசாங்கம் ஒரு அமெரிக்க கைப்பாவை என்று பெரிதும் வெறுக்கப்படுகிறது. அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு அதிகம் உதவுவதால் இக்கருத்து உள்ளது.

பாக்கிஸ்தானிய பழங்குடிப் பகுதிகளில் இயங்கும் அமெரிக்க ஆளின்றிய பிரிடேட்டர் ட்ரோன்கள் விமானங்கள் மக்கள் சீற்றத்தை அதிகரிக்கத்தான் செய்துள்ளன. இத்தகைய தாக்குதல்கள் ஒபாமா நிர்வாகத்தின்கீழ் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 20 அன்று ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்து 40 அத்தகைய தாக்குதல்கள் வந்துள்ளன. சமீபத்திய தாக்குதல் நேற்று வடக்கு வஜீரிஸ்தானில் ஒரு வீட்டின் மீது நடந்தது நான்கு பேரைக் கொன்றுவிட்டது. பாக்கிஸ்தானிய அரசாங்கம் பகிரங்கமாக தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், தனியாக அமெரிக்கர்களுக்கு இதைச் செய்யுமாறு பச்சைவிளக்கு காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாக்கிஸ்தானுள்ளான மக்கள் எதிர்ப்பு பஷ்டுன் எல்லைப் பகுதிகளோடு நின்றுவிடவில்லை. இன்னும் கூடுதலான சீற்றத்தை ஏற்படுத்துவதில் அச்சம் கொண்டுள்ள அரசாங்கம் வாஷிங்டன் மிக அதிக அழுத்தத்தைக் கொடுத்த பிறகுதான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தன்னுடைய தாக்குதலை தொடங்கியது. தெற்கு வஜீரிஸ்தானத்தில் பெரும் தாக்குதல் என்பது நாட்டின் முக்கிய நகரங்களில் இஸ்லாமியவாதிகள் தாக்குதலை அதிகரித்து ஆழ்ந்த அதிருப்தி எதிர்ப்புக்கள் ஆகியவற்றைத்தான் தூண்டிவிடும்

ஒரு பாதுகாப்புத் துறை வல்லுனரான டாக்டர். ஹசான்.அஸ்காரி-ரிஸ்வு நேற்று கார்டியனிடம் போராளிகளின் தாக்குதல் அரசாங்கத்தைச் வீழ்ச்சியடைய செய்ய வாய்ப்பில்லை என்றார். ஆனால் "இவை தொடர்ந்து நடந்தால் அரசாங்கத்திடம் பெரிய அளவிற்கு நம்பிக்கை போய்விடும். பாக்கிஸ்தான் நெடுகிலும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உள்ளது. தெருக்களில் நடக்கும்போது என்ன நேரிடும் என்று தெரியாத நிலை வந்துள்ளது."

அமெரிக்க காங்கிரசின் உதவி நிதி சட்டவரைவு பற்றி ஒரு இராஜதந்திர முரண்பாடு பாக்கிஸ்தானில் உள்ள உறுதியற்ற நிலைமைக்கு மற்றொரு அடையாளம் ஆகும். வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியை பாக்கிஸ்தான் அரசாங்கம் வாஷிங்டனுக்கு அனுப்பும் கட்டாயத்திற்கு உட்பட்டது; இதற்குக் காரணம் இராணுவம் சட்டத்தில் ஒபாமாவின் ஆப்-பாக் (AfPak) போரில் தன்னுடைய பங்கை பாக்கிஸ்தான் செய்கிறதா என்று அமெரிக்க மேற்பார்வையிடும் என்ற விதிகள் இருந்ததுதான்.

இந்த வேறுபாடுகள் குரேஷி சட்டவரைவை கொண்டுவரும் செனட்டர் ஜோன் கெர்ரி மற்றும் காங்கிரஸ் பிரதிநிதி ஹோவர்ட் பெர்மனை சந்தித்த பின்னர் களையப்பட்டன. சட்டவரைவுடன் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையில் அமெரிக்கா இச்சட்டம் "பாக்கிஸ்தானின் இறையாண்மையை அங்கீரிக்கவில்லை மதிக்கவில்லை" என்ற உட்குறிப்புக்களை கொடுக்கும் வகையில் விளக்கம் காணப்படக்கூடாது என்று கூறினர். அமெரிக்காவின் தாராள மனதை பாராட்டியும், உண்மையில் சாதாரண மக்களுக்கு இந்தப் பணம் கொடுக்கப்படுகிறது மற்றும் இது அவர்களை அடைகிறது என்று வைத்துக் கொண்டாலும் ஐந்து ஆண்டுகளுக்கு 7.5 பில்லியன் உதவித் தொகை என்பது மக்கள் தொகையில் ஒருவருக்கு ஆண்டிற்கு 10 டாலருக்கும் குறைவான தொகையாக உள்ளது.

லாகூரில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் ஆப்-பாக் போரை பொறுப்பற்ற முறையில் ஒபாமா விரிவாக்கும் பொறுப்பற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் நவ-காலனித்துவ மோதலில் பங்கு பெற அமெரிக்க நிர்வாகம் அனுப்பத் தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில், அது ஆப்கானிஸ்தானிற்கு அருகே இருக்கும் பாக்கிஸ்தானை ஆழ்ந்த உள்நாட்டுக் கொந்தளிப்பில் தள்ளுவதுடன், இது இப்பகுதி முழுவதும் உறுதியைச் சீர்குலைக்கத்தான் உதவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved