World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German election: The collapse of the Social Democratic Party

ஜேர்மன் தேர்தல்: சமூக ஜனநாயகக் கட்சியின் சரிவு

By Ulrich Rippert
29 September 2009

Back to screen version

ஞாயிறு நடைபெற்ற ஜேர்மனியின் பாராளுமன்ற தேர்தல்களின் மிக முக்கியமான கூறுபாடு வியத்தகு முறையில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வாக்குகளை இழந்ததாகும். ஒரு தனி பாராளுமன்ற பதவிக்காலத்தில் இதற்கு முன் எந்தக் கட்சியும் இவ்வளவு வாக்குகளை இழந்ததில்லை.

1930 களுக்கு பின்னான மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே, SPD பெற்ற வாக்குகள் 11.2 சதவிகிதத்தால் குறைந்தது. 2005ல் 35.2% என்பதில் இருந்து இப்பொழுது 23% ஆகியுள்ளது. கட்சியின் வரலாற்றில் இது இதுவரை இல்லாத மோசமான வாக்குப் பதிவு ஆகும்.

1953TM பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) Konrad Adenauer இன் கீழ் வெற்றி பெற்றபோது, Erich Ollenhauer தலைமையின் கீழான SPD க்கு கிடைத்த 28.8% வாக்குகள்தான் கட்சியின் வரலாற்றளவு மோசமான எண்ணிக்கை என்று கருதப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுதைய SPD தலைவரும் கட்சியின் முக்கிய வேட்பாளர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மயரின் கீழ் கட்சி இப்பொழுது இந்த எதிர்மாறான பதிவை கிட்டத்தட்ட 6 சதவிகிதம் விஞ்சிவிட்டது.

சமூக ஜனநாயகவாதிகளின் சரிவிற்குக் காரணத்தில் இரகசியம் ஏதுமில்லை. மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மரபார்ந்த வகையில் SPD வாக்காளர்களும் இனி இக்கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போட தயாராக இல்லை. இதுதான் 11 ஆண்டுகளாக கூட்டாட்சி மட்டத்தில் பதவியில் இருந்ததற்கு கொடுக்கப்பட்ட விலையாகும். முதலில் SPD அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் பசுமைக் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்து கடுமையான சமூகத்தாக்குதல்களை முன்பு இருந்தை அனைத்து பழைமைவாத அரசாங்கங்களைவிட நடத்தியது. பின்னர் CDU உடனான பெரும் கூட்டணியில் இளைய பங்காளியாக இருந்து, செயற்பட்டியல் 2010 என்னும் சமூகநல எதிர்ப்பு தாக்குதல்களை SPD தீவிரப்படுத்தியது.

கீழேயுள்ள புள்ளிவிவரங்கள் SPD யில் இருந்து எந்த அளவிற்கு திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றது: 1998ல் SPD அரசாங்கத்தில் பசுமைவாதிகளுடன் கூட்டணியில் நுழைந்தபோது கட்சிக்கு 20 மில்லியன் மக்கள் வாக்கு கிடைத்தது. கடந்த ஞாயிறு, அதற்கு 10 மில்லியன் வாக்குகளைகூடக் கிடைக்கவில்லை. ஒரு தசாப்தத்திற்குகள் (உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடி மோசமான சூழ்நிலையில்) SPD அதன் வாக்குத்தளத்தில் பாதிக்கும் மேல் இழந்துள்ளது.

2005TM SPD க்கு வாக்குப் போட்ட குறைந்தது 2 மில்லியன் வாக்களர்களேனும் ஞாயிறன்று வாக்களிக்க வரவில்லை. 2005ம் ஆண்டு 77.7 சதவிகித்தில் இருந்து தேர்தலில் வாக்குப் பதிவு 71.12 என்று குறைந்துவிட்டது. ARD ஒலிபரப்பு இணையத்தின்படி தேர்தல் தினத்தின்று மிக அதிகமாக வாக்களிக்க வராமல் இருந்தவர்கள் முன்னாள் SPD வாக்களார்கள் ஆவர்.

SPD யின் சரிவு, குறிப்பாக கட்சியின் முன்னாள் கோட்டைகளில் தீவிரமாக இருந்தது. 1976ல் SPDக்கு பெருமளவில் வாக்களித்த முன்னாள் எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களான வடக்கு ரூர் பகுதியின் வறிய தொகுதிகளில் கட்சிக்கான வாக்களிப்பு முற்றிலும் சரிந்திவிட்டது.

வடக்கு டோர்ட்முண்ட் நகரில் SPD 15.2 சதவிகிதப் புள்ளிகளை இழந்துள்ளது. 2005 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த கிட்டத்தட்ட 28,000 வாக்காளர்கள் ஞாயிறன்று வரவில்லை. பொஹம் நகரில் இருக்கும் தொழிலாள வர்க்க பகுதிகளில் SPD கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி ஆதரவை இழந்துவிட்டது. அங்கு தேர்தலில் வாக்குப்பதிவு மிகக் குறைந்தவிதத்தில் 68.1 சதவிகிதமாக இருந்தது.

வடக்கு டுயிஸ்பேர்க் நகரில் SPD கிட்டத்தட்ட 40 சதவிகிதம் தன் வாக்காளர்களை இழந்தது. அங்கு வாக்குப்பதிவு இன்னும் குறைந்து 60.1 ஆகியது. சில மிக வறியபகுதிகளான மூன்றில் ஒரு பகுதி மக்கள் பொதுநலன்களைப் பெறும் டுயிஸ்பேர்க் மார்க்ஸ்லோ போன்ற நகர்ப்பகுதியில் 44.5 சதவிகித மக்கள்தான் வாக்களித்தனர்.

ஆனால் SPD வியத்தகு முறையில் மற்ற பகுதிகளிலும் இழப்பைக் கண்டது. பாடன் வூர்ட்டம்பேர்க்கில் சமூக ஜனநாயகவாதிகள் 30.1 ல் இருந்து 13.9 சதவிகிதத்திற்கு சரிந்தனர். தென்மேற்கில் இருக்கும் 38 தொகுதிகளில் SPD 37ல் வாக்குகளை இழந்தது. பல்கலைக்கழக நகரமான Freiburg ல்தான் அது ஒரு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை வெற்றி பெற முடிந்தது. மற்ற இடங்கள் CDU விற்குச் சென்றன.

SPDக்கு வாக்காளர்கள் ஆதரவு கொடுக்க மறுத்த காரணம் அதன் தன்மையை அவர்கள் உணர்ந்துவிட்டனர். ஹார்ட்ஸ் IV, செயற்பட்டியல் 2010 பொதுநல, தொழிலாளர் "சீர்திருத்தம்" என்ற பெயரில் அது ஓய்வூதிய வயதை 67க்கு உயர்த்தியது. கிறிஸ்துவ ஜனநாயக வாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் ஒரு அரசாங்கக் கூட்டணி வரக்கூடும் என்ற கருத்தில், அதில் இருந்து கடுமையான தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படலாம் என்ற நிலையில் SPD ஒரு மாற்றீடாக கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சமூக ஜனநாயக் கட்சியனர் பொதுநலச் செலவுக் குறைப்புக்களை ஊக்குவிப்பர்களாக கருதப்படுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு வாய்ப்பின்போதும், SPD யின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் ஸ்ரைன்மயர் தான் 2010 செயற்பட்டியல் கொள்கையை தொடர்ந்து நிலைநிறுத்துவதாக வலியுறுத்தினார். அவை தோற்றுவித்த மறுக்க முடியாத சமூக இடர்பாடுகள் இருந்தாலும், அவர் "தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களை"--வேலையின்மையில் குறைப்புக்கள், பொதுநலச் செலவுகளில் குறைப்புக்கள்--ஆகியவற்றை தேவையானவை, தவிர்க்க முடியாதவை என்று கருதினார். கட்சித் தலைவர் முன்டேபெரிங் ஓய்வூதிய வயது 67 என்று உயர்த்தப்பட்டுள்ளதை ஆதரித்து அதையொட்டிய ஓய்வூதிய குறைப்புக்களுக்கும் ஆதரவு கொடுத்தார். இவர் பெரும் கூட்டணியில் தொழில் மந்திரியாக இருந்தபோது இவற்றைச் செயல்படுத்தினார். தேர்தல் கூட்டங்களில் இவர்கள் இருவரும் சீற்றம் கொண்ட தொழிலாளர்கள், ஓய்வூதியக்காரர்கள் ஆகியோரால் எதிர்கொள்ளப்பட்டனர்.

ஓராண்டிற்கு முன்பு அரசாங்கத்தின் சமூக விரோதக் கொள்கைகள் பற்றி முன்னதாக தயக்கத்துடன் வெளிவந்த குறைகள் SPD இற்குள் உரத்த குரலில் வெளிப்பட்டபோது அப்பொழுது கட்சியின் தலைவராக இருந்த குர்ட் பெக் சிறு திருத்தங்கள் தேவை என்று கூறினார். முன்டபெரிங்கும் ஸ்ரைன்மயரும் அரசியல் சதிமுறையில் தலைமை மாற்றத்திற்கு ஏற்பாடு செய்தனர். பெக்கிற்கு பதிலாக முன்டபெரிங் கட்சிக்கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்; அவர் SPD-பசுமைக் கட்சி கூட்டணிக் காலத்தின் முதல் ஆண்டுகளில் அதைச் செய்திருந்தார். செயற்பட்டியல் 2010 கொள்கைகள் புனிதமானவை என்று அறிவித்து கட்சிக் கருவியின் சர்வாதிகாரத்தை வலுப்படுத்தி SPD ஐ பொதுநலச் செலவினங்களை செயல்படுத்த அதிகாரத்துவக் கருவியாக மாற்றுவதை உறுதிப்படுத்தினார்.

SPD இனுள் இருந்த வலதுசாரிகளின் நோக்கம் தேர்தல் பிரச்சாரத்தை கிறிஸ்துவ ஜனநாயக வாதிகளுடன் புதுப்பிக்கப்படும் பெரும் கூட்டணிக்கு வழிவகுக்கும் விதத்தில் நடத்த வேண்டும் என்பதாகும். அது சமுகத்தாக்குதல்களை தொடரும். இந்த வலதுசாரிக் கொள்கை பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இன்னும் தொலைவிளவு தரக்கூடிய தாக்குதல்கள் தேவை என்று நினைத்த தாராளவாத ஜனநாயகவாதிகளுக்குப் பின்னால் இருந்த அரசியல் உயரடுக்கினரின் வலதுசாரிக் கொள்கைகளை வலுப்படுத்தியது. இவ்விதத்தில், ஷ்ரோடர் அரசாங்கத்தில் பொருளாதார, தொழிலாளர் விவகாரத்தில் ஒருவித "உயர் மந்திரி" போல் நடந்து கொண்ட முன்னாள் முக்கிய சமூக ஜனநாயக வாதிகளான வொல்ப்காங் கிளெமென்ட் போன்றோர் SPD ஐ வலதில் இருந்து தாக்கி தாராளவாத ஜனநாயகவாதிகளுக்கு (FDP) வாக்களிக்க அழைப்பு விடுத்தனர். வாக்குகள் மாற்றத்தைப் பகுப்பாய்ந்தால் FDP, கடந்த ஞாயிறுத் தேர்தலில் முன்னாள் SPD வாக்காளர்கள் 540,000 பேரைப் பெற்றது என்பது தெரியவரும்.

இடது கட்சி (Left Party) SPD இழந்த வாக்களில் ஒரு சிறு விகிதத்தைத்தான் பெறமுடிந்தது. SPD 11.2 சதவிகிதத்தை இழந்த நிலையில், இடது கட்சி 3.2 சதவிகித ஆதாயம் பெற்று மொத்தத்தில் 11.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இடது கட்சியின் தலைவர் ஒஸ்கார் லாபோன்டைன் தேர்தல் இரவை கோபத்துடன் எதிர்கொண்ட விதத்தில் அறிவித்தார்: "SPD இழப்புக்கள் அனைவரையும் உளைச்சலுக்கு உட்படுத்துகிறது." இவருடைய சக கட்சித் தலைவர் கிரிகோர் கீஸி (Gregor Gysi) எதிர்க்கட்சி என்ற இடத்தில் SPD "தன்னை சமூக ஜனநாயகப்படுத்திக் கொள்ளும்" என நம்புவதாகக் கூறினார். இருவரும் இடது கட்சி SPD க்கு அருகில் வர முயலும் என்றனர்.

ஆனால் இடது கட்சி SPD க்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கையில் சமூக ஜனநாயகவாதிகள் தங்கள் வலதிற்கு நகர்வதை தொடர்கின்றனர். தேர்தல் இரவன்று கூட, முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில் ஸ்ரைன்மயர் செயற்பட்டியல் 2010 ஐ ஆதரித்து, அது பற்றிய பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும், வருங்காலத்தில் அதுதான் SPD கொள்கையின் தளமாக இருக்கும் என்றும் கூறினார்.

கட்சியின் குழுக்களில் எந்த விவாதமும் இல்லாமல், இவர் தானாகவே SPD பாராளுமன்ற பிரிவின் தலைமை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். இது அரசியல் தொடர்ச்சியை உறுதிபடுத்தும் என்றார். கடந்த 11 ஆண்டுகளாக அரசாங்கம் நடத்திய கட்சி என்ற முறையில் SPD எதிர்க்கட்சிகள் முறையாகவும் சுறுசுறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இப்பொழுது அவர் எதிர்க்கட்சியாக SPD யும் அவ்வாறே நடந்து கொள்ளுவதை உறுதியாக்க வேண்டும்.

முன்னாள் நிதிமந்திரியும், SPD யின் துணைத் தலைவருமான ஸ்ரைன்ப்ரூக் தேர்தல் சங்கடத்தைப் பயன்படுத்தி கட்சியை மாற்றி அமைத்தலுக்கு எதிராக எச்சரித்தார். "புரட்சிகர நீதிமன்றங்கள்" மற்றும் இடதிற்கு மாறுதல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியான Sigmar Gabriel தேர்தலில் தோல்வி என்பது கட்சியின் தன்மையைப் பற்றி முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்ற பொருளைத் தருகிறது என்றார். "SPD மீண்டும் தன் கொள்கைகளை சமூகத்தையும் சுற்றுச் சூழலையும் ஒட்டி இணைத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் Braunschweiger Zeitung பத்திரிகையிடம் கூறினார். ஆனால், அதே நேரத்தில் ஸ்ரைன்மயர் SPD பாராளுமன்றப் பிரிவின் தலைமைக்கு வேட்பாளராக நிற்பதை அவர் வரவேற்றார். அவர் ஸ்ரைன்மயர் கட்சியிலும் பாராளுமன்றப் பிரிவிலும் அதிக ஆதரவை பெற்றுள்ளார் என்றும் கூறினார். கட்சியின் தலைமை பற்றி குறைகூறுபவர் எனக்கருதப்படுபவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படலாம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

பேர்லின் நகர தலைவரான Klaus Wowereit ஐப் பொறுத்த வரையிலும் அதிக வேறுபாடு இல்லை எனக் காட்டுகிறது. அவர் தன்னை SPD யின் இடதுசாரியினர் எனக் காட்டிக் கொண்டு இடது கட்சியுடன் பேர்லின் நகரத்தை கூட்டாக ஆட்சி புரிந்து வருகிறார்.

SPD உடைய கொள்கைகள் ஜேர்மனியத் தலைநகரத்தில் குறிப்பாக தீவிரமாக நிராகரிக்கப்பட்டன. அங்கு கட்சி பெற்ற வாக்கு 34.3 ல் இருந்து 20.2 சதவிகிதமாகக் குறைந்தது. கிழக்கு பேர்லினில் SPD 18.1 சதவிகிதம் வாக்கை இழந்தது. லிச்டன்பtர்க், மார்ஜான் ஹெலர்டோர்ப் பகுதிகளில் SPD வாக்கு பாதியாக 16, 17 சதவிகிதம் என முறையே குறைந்து போயிற்று. ஒரு புறநகரத் தொகுதியில்கூட SPD வலுவான கட்சியாக வெளிவரவில்லை. 2005 பாராளுமன்ற தேர்தல்களில் கட்சி 12 தொகுதிகளில் ஒன்பதில் வெற்றி பெற்றிருந்தது. ஞாயிறன்று அது வெறும் கறையுடன் திரும்பியது. இது அவர்களை இடது கட்சிக்குப் பின்னால் தள்ளியதுடன், பசுமைவாதிகளை சற்றே குறைந்த வாக்கில் தோற்கடிக்கவே முடிந்தது.

SPD யின் சரிவு ஒரு புதிய சோசலிசக் கட்சி கட்டமைப்பதற்கு பாதை வகுக்கிறது. இவ்விதத்தில் சோசலிச சமத்துவ கட்சிக்கு (PSG) வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு குறிப்பிடத்தக்கது ஆகும். ஐரோப்பியத் தேர்தல்கள் நடந்த மூன்று மாதத்திற்குள் சோசலிச சமத்துவ கட்சி அதன் வாக்குகளை 714ல் இருந்து 1,423 என இரு மடங்காக ஆக்கிக் கொள்ள முடிந்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved