World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The firing of a German supermarket cashier: A case of class justice

An answer to Professor Rieble

ஜேர்மன் சூப்பர்மார்கெட் காசாளர் பதவிநீக்கம்: ஒரு வர்க்க நீதியின் வழக்கு

பேராசிரியர் ரீபெலேக்கான ஒரு பதில்

By Justus Leicht and Peter Schwarz
24 August 2009

Back to screen version

பொதுவாக "எமிலி" என்று அழைக்கப்படும் சூப்பர்மார்கெட் காசாளர் (Cashier) பார்பராவின் பணிநீக்கம், ஜேர்மனியில் பொதுமக்களிடையே கடுங்கோபத்தை தூண்டிவிட்டிருக்கிறது. ஒரு வாடிக்கையாளரால் விட்டு செல்லப்பட்ட 1.30 யூரோ மதிப்பிலான பொருட்கூப்பன்களை அவர் திருப்பி அளித்தார் என்பதற்காக, 30 ஆண்டுகள் பணியாற்றியும் வரிக்கு முந்தைய மாதச்சம்பளமாக 1,700 யூரோ மட்டுமே பெறும், 50 வயது நிரம்பிய அந்த பெண்மணி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டார். அவரின் பணிநீக்கம், பேர்லின் தொழிலாளர் நீதிமன்றத்தாலும், ஒரு மேல்முறையீடு நீதிமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நிதி உயரடுக்களுடன் ஒப்பிடும் போது, சராசரி தொழிலாளர்கள் இரண்டு விதமாக நடத்தப்படும் நிலைப்பாடுகள் காரணமாக, இந்த வழக்கால் எழுந்திருக்கும் பொதுமக்களின் கோபம் பெரியளவில் உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு வங்கியாளர்களும், ஊகவணிகர்களும் காரணமாக இருந்த போதிலும், அவர்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்காக எவ்வித தண்டனையும் அளிக்கப்படுவதில்லை, ஆனால் ஒன்றுமில்லாத ஒரு சிறுவிஷயத்திற்காக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் காசாளர் ஒருவரின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, எமிலிக்கு எதிரான தீர்ப்பை, உலக சோசலிச வலைத் தளம், அதன் முந்தைய கட்டுரையில் "வர்க்க நீதிக்கான" ஒரு விஷயமாக விபரித்தது.

அக்கட்டுரை பேராசிரியர் Volker Rieble இடம் இருந்து ஒரு பதிலை வரவழைத்திருந்தது. முனீச்சில் உள்ள Ludwig Maximilians பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்கள் மற்றும் சிவில் சட்டத்திற்கான அப்பேராசிரியர், எமிலிக்கு எதிரான தீர்ப்பை நியாயப்படுத்தி Neue Juristische Wochenschrift (NJW, New Legal Weekly Revue) பத்திரிகையில் ஐந்து பக்க கட்டுரை ஒன்றை பிரசுரித்தார். அதில் உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரையையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

Rieble இன் கட்டுரை, வர்க்க நீதி என்ற குற்றச்சாட்டை மறுத்து வாதிட முயற்சிக்கிறது, ஆனால் அதற்கு எதிர்திசையில் சென்று முடிகிறது. அவரின் தீவிரமும், சிறிது அவமதிக்கும் தொனியும், அவரின் மிகைப்படுத்தல்களும், அர்த்தமற்ற சமூக தப்பெண்ணங்களும் மற்றும் பில்லியன்களைக் கொள்ளை அடித்த அல்லது வரிகளை தட்டிக்கழித்த வங்கியாளர்கள் மற்றும் மேலாளர்களுடனான அவரின் கூட்டும், எமிலிக்கு எதிரான தீர்ப்பில் அவரின் வர்க்கப் பாத்திரத்தை அடிக்கோடிட்டு காட்ட மட்டுமே உதவுகின்றன.

இதுபோன்ற ஒரு முதிர்ந்த சர்ச்சைகளை பதிப்பிப்பது, ஜேர்மனியில் மிகவும் புகழ் பெற்ற சட்ட இதழாக கருதப்படும் NJWக்கு, பொதுவாக, வழக்கமான ஒன்று தான். எமிலியின் வழக்கு ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட வழக்கல்ல என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடையும் போது, வைய்மார் குடியரசில் (Weimar Republic) அது செய்ததைப் போலவே, சட்டத்துறையும் மேலும் மேலும் வெளிப்படையாக அதன் வர்க்க பாத்திரத்தை வெளிக்காட்டுகிறது.

வர்க்க நீதி ஏன்?

எமிலிக்கு எதிரான தீர்ப்பின் வர்க்கப் பாத்திரம், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட சட்டத்தின் ஒருதலைபட்சமான விளக்கம் என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது தற்போதைய சட்டம் மற்றும் சட்ட முன்வரைவுகளிலும் உள்ளடங்கி உள்ளது. அது தான் பேராசிரியர் Rieble ஆல் மும்முரமாக பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு, அறியாமையின் விளைவு (persumption of innocence) தொழிலாளர் சட்டத்திற்கு பொருந்தாது. தவறாக நடப்பதாக வெறும் சந்தேகம் ஏற்பட்டாலே பணிநீக்கம் செய்வதற்கு போதுமானதாகும், அதுவும் "அந்த நபரால் மீண்டும் ஒருபோதும் ஒரு வேலையும் பெற முடியாது", என்று எமிலி குறித்து Rieble திருப்திகரமாக எழுதுகிறார்; ஆகவே பணிநீக்கம் என்பது ஆயுள்கால தண்டனையாகி விடுகிறது.

உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் மேற்கோள் காட்டி, இது "சந்தேகத்தின் அடிப்படையிலான பணிநீக்கம்" என்று Rieble நியாயப்படுத்துகிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார், இதுபோன்ற பணிநீக்கம், ஓர் ஒழுங்குமீறல் மீதான பிரதிபலிப்பல்ல, மாறாக சந்தேகத்தால் எழும் நம்பிக்கை இழப்பின் மீதான ஒரு பிரதிபலிப்பு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: ஒரு தொழிலாளி ஒழுங்குமீறி இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு உள்ளானால், அந்த ஆணோ அல்லது பெண்ணோ பணிநீக்கம் செய்யப்படலாம், ஏனென்றால் ஒழுக்கமீறல் சிறிதும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கூட, பரஸ்பர நம்பிக்கை அங்கு தொடர்ந்து இருப்பதில்லை.

ஏற்க முடியாத அளவிற்கு பரஸ்பர நம்பிக்கை உடைந்து போவதுடன், எமிலியின் பணிநீக்கத்தை Rieble நியாயப்படுத்துகிறார். இழப்பு "சமமற்றிருப்பதை அவர் புறக்கணிக்கிறார்அதாவது, ஒருபுறம் 1.30 யூரோ இழப்பு, மறுபுறம் வேலை இழப்பு". "நல்லெண்ணம் இல்லை என்பதையே இதுபோன்ற அவதூறு" எடுத்துக்காட்டுகிறது என்று அவர் எழுதுகிறார். "உண்மையில், ஒருவரின் வேலை இழப்பு என்பது ஒரு கிரிமினல் ஒழுக்கமீறலுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்லது தடைக்கு போதுமானதாக இல்லை" என்று எழுதும் அவர், "இது இதற்கு மட்டும் பொருந்தாது... இந்த பிரச்சனை எதிர்கால பரஸ்பர நம்பிக்கை சம்பந்தப்பட்டதாகும்." என்று குறிப்பிடுகிறார்.

இந்த வாதம் மிகவும் வேடிக்கையாக உள்ளது. முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஓர் அற்பத்தொகையான 1.30 யூரோ மதிப்பிலான ஒரு கூப்பனைத் திருப்பி அளிப்பது என்பது, நம்பிக்கையின் நீக்கமுடியாத ஒரு அவதூறாக உள்ளது. இது சமமற்றது இல்லை என்றால், பின் வேறென்ன சமமற்று இருக்கும்?

பார்பரா E. தொடர்ந்து 1977ல் இருந்து, Kaisers/Tengelmann பல்பொருள் அங்காடிகளில் பணியாற்றி வந்துள்ளார். 2005ல், ஒரேயொரு முறை மட்டும், ஒரு வாடிக்கையாளரிடமிருந்து அவர் ஓர் எச்சரிக்கையைப் பெற்றார். இந்த புகாரின் அல்லது எச்சரிக்கையின் விபரங்கள் தீர்ப்பிலோ அல்லது Rieble ஆலோ குறிப்பிடப்படவில்லை. அதுதவிர, அப்பெண்மணி முப்பது ஆண்டுகளில் ஒரு குறையும் இல்லாத வரலாற்றை தான் கொண்டிருக்கிறார். அவருக்கு பணிநீக்க அறிவிப்பு வழங்கப்பட்ட உடனே, அப்பெண்மணி ஒருமுறை, 3 யூரோ நிறுவன செலவில், அங்கீகாரம் இல்லாமல் டிஜிட்டல் கூப்பன்கள் வழங்கினார் என்று தொழில்வழங்குனர்கள் நிரூபணம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சேர்த்து கூறினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அடையாளம் தெரியாத ஒரு வாடிக்கையாளருக்கு உரிமையாக சேரவேண்டியதென்பதால், கூப்பனை திரும்ப அளித்ததால், நிறுவனத்திற்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த காரணத்திற்காக, முதல் தொழிலாளர் நீதிமன்றம், திருட்டு என்றோ அல்லது கவனக்குறைவு என்றோ அல்லாமல், மாறாக மோசடி என்று கூறி எமிலியைக் குற்றஞ்சாட்டி இருந்தது. எவ்வகையிலும் அவர் தொழிலிட விதிகளை மீறியிருக்கிறார் என்பதால், அவர் ஒரு குற்றம் மிக்க அளவில் ஒழுக்கமீறலை செய்திருந்தால், அதை (அத்தீர்ப்பை) பொருட்படுத்த வேண்டியதில்லை என்று இரண்டாவது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

50 யூரோவிற்கு குறைவாக இருந்தாலும் கூட, பொதுமக்கள் நிதியைக் கவனக்குறைவாக கையாண்டதைத் தள்ளுபடி செய்துவிடக்கூடாது என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினார்கள் என்ற மத்திய நிர்வாக நீதிமன்றத்தின் (Federal Administrative Court) ஒரு தீர்ப்பை Rieble தாமே சுட்டி காட்டுக்கின்ற போதும் கூட, இதுபோன்ற அற்பமான விஷயங்களின் ஓர் அளவுகோலை Rieble ஏற்றுக்கொள்ள மாட்டார். "பொதுத்துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் தொழிலாளர்களுக்கும் உள்ள சட்டரீதியான பிணைப்பை விட [சாதாரண] தொழிலாளர்களுக்கும், அவர்களின் தொழில்வழங்குனர்களுக்கும் இடையில் ஆழமான பிணைப்பு உள்ளது" என்று கூறி அவர் அதை நியாயப்படுத்துகிறார். ஆனால் இந்த ஆழமான பிணைப்புகள் ஏன் குறைந்தளவு நம்பிக்கையைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதை அந்த பேராசிரியர் விளக்கவில்லை.

சில்லறை வர்த்தகத்தில் நடந்த ஒரு வேலைநிறுத்தத்தில் தாம் கலந்து கொண்டதற்காகவே தம்மை பணிநீக்கம் செய்திருப்பதாக பார்பரா E. அவரின் தொழில்வழங்குனர் மீது குற்றஞ்சாட்டுகிறார். நீதிமன்றத்தில் அவர் கூறிய இந்த குற்றச்சாட்டு, பேராசிரியரை ஆத்திரத்திற்குள் தள்ளியிருக்கிறது. அவர் பின்வருமாறு எழுதுகிறார்: அப்பெண்மணி என்ன கோருகிறார் என்றால், "புறநிலைமையாக கூறுவதானால், வேலைநிறுத்தகாரர்களுக்கு எதிரான பணிநீக்கத்திற்கு ஒரு சிறப்பு பாதுகாப்பை கோருகிறார். தொடர்ச்சியாக கடமையை மீற நினைக்கிறவர்கள் அல்லது அவ்வாறு கடமையை மீறிய எவரும் ஒரு சங்கத்தில் சேர அறிவுறுத்தப்படலாம், இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பணிநீக்கத்திற்கான பிரதிபலிப்பாக சங்க எதிர்ப்பு முனைவுகளை ஏற்படுத்த முடியும்".

இங்கு Rieble சுலபமாக ஆதாரத்தின் சுமையை திருப்பி போடுகிறார். இருப்பினும், வெறும் சந்தேகத்தின் மீதான பணிநீக்கம் என்ற விடயத்தில், உண்மையில் ஓர் ஒழுங்குமீறல் நடந்துள்ளது என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதாடி இருந்தார்,

தற்போது அவர், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது போன்ற பணிநீக்கத்திற்கான உண்மையான காரணங்களின் வலுவான அறிகுறிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வாதிடுகிறார். தாம் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பார்பராவின் குற்றச்சாட்டை, "வேலைநிறுத்தகாரர்களுக்கு எதிரான பணிநீக்கத்திற்கான சிறப்பு பாதுகாப்பை அவர் கோருகிறார்" என்று Rieble திசைதிருப்புகிறார். இதுபோன்றதொரு வாதம், பாதிக்கப்படுபவருக்கு எதிரான எவ்வித பாதுகாப்பையும் மறுக்க பயன்படுத்தப்படலாம். இந்த இரண்டு விடயங்களிலும், Rieble இன் வாதம் தொழில்வழங்குனர்களின் பக்கம் மத்தியஸ்த நடவடிக்கைக்கு மடைகளைத் திறந்து விடுகிறது.

அவரின் வாதங்கள் மிகவும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதை அவரே வெளிப்படையாக உணர்வதால், அவர் அந்த ஏழை காசாளரைக் கொடூரமாக அலைக்கழிக்கிறார். "வெறும் 1.30 யூரோ மதிப்பிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் இதுபோன்ற ஒரு வழக்கிற்கு எந்த அரசு வழக்கறிஞரும் வாதாட முன்வரமாட்டார் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்த போதினும், அவர் தொடர்ந்து எமிலியை ஒரு "கிரிமினல் குற்றவாளி" என்றே அழைக்கிறார், "ஓர் அவமானத்திற்குரிய பொய்யர்" என்று அவரை அவமதிக்கிறார், "பொய் மற்றும் பித்தலாட்டத்தின்" அடிப்படையில் ஒரு பாதுகாப்பு மூலோபாயத்தை அவர் மீது சுமத்தி குற்றஞ்சாட்டுகிறார், மேலும் இறுதியாக அவரை (எமிலியை) விசாரிக்க அரசு வழக்கறிஞருக்கும் அழைப்புவிடுக்கிறார்.

தமது கடைசி முறையீட்டிற்கு அவர் அளிக்கும் காரணம், 1.30 யூரோ மதிப்பிலான கூப்பன்களைத் திருப்பி அளித்ததை விட மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது. கூப்பன்களை திருப்பி அளித்ததாக எமிலி குற்றஞ்சாட்டப்பட்ட போது, என்ன நடந்திருக்க கூடும் என்று அவர் சந்தேகப்பட்டார் என்றால், தம் மகளோ அல்லது உடனிருப்பவரோ தம் கைப்பையில் கூப்பன்களை போட்டிருக்கலாம் என்று அவர் விளக்கினார். Rieble ஐ பொறுத்தவரை, இந்த தீங்கிழைக்காத மன்னிப்பும் ஒரு குற்றத்தையே குறிக்கிறது "ஒரு தண்டைக்குரிய குற்றச்செயலுக்கான கமிஷனை போலியாக ஏமாற்றுவது இதில் பேர்லின் அரசு வழக்கறிஞர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்".

ஜேர்மன் நீதிமன்றங்களால் கோழி திருடர்களுக்கு கூட தூக்கு தண்டனை வழங்கப்பட்ட காலங்களும் இருந்தன. ஆனால் மற்றொருவரால் 1.30 யூரோ மதிப்பிலான கூப்பன்கள் தம் கைப்பையில் போடப்பட்டன என்று கூறும் ஒருவரை கிரிமினல் குற்றவாளியாக கருதி தண்டிப்பதென்பது, ஜேர்மன் சட்ட வரலாற்றில் தனித்துவமானது.

பார்பரா E. அவருக்கெதிரான தீர்ப்பை வெளிப்படையாக எதிர்த்துள்ளார் இது அவரின் ஜனநாயக உரிமை என்ற உண்மையுடன், தண்டனைக்கான அவரின் அழைப்பை Rieble நியாயப்படுத்துகிறார். "ஜேர்மன் சட்ட அமைப்பைத் தாக்கி, திருமதி. எமிலியால் கொண்டு வரப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாகவும், சட்டவிதிகளின் மீது ஒரு கேள்விக்குறியை நிறுத்தியதன் மூலமாகவும், இதுபோன்ற வழக்குகளில் எவ்வித கிரிமினல் குற்றங்களுக்காகவும் தண்டிப்பதில் கணிசமாக மக்களின் ஆர்வம் ஏற்பட்டுள்ளது", என்று அவர் எழுதுகிறார். நீதிமன்றங்களை விமர்சித்ததைப் பழிவாங்க தண்டனை என்பதை தான் இங்கு பேராசிரியர் கோருகிறார்.

பிற அளவுகோல்கள்

வங்கியாளர்கள் மற்றும் மேலாளர்களின் நடத்தை குறித்து பேராசிரியர் கூறும் போது மட்டும், காசாளர் விடயத்திற்கு முற்றிலும் மாறான நிலைப்பாடுகளை அவர் திணிக்கிறார். குறிப்பாக Deutsche Post தலைமை செயலதிகாரி Klaus Zumwinkelன் விஷயத்தில் இது வெளிப்படையாக உள்ளது, இவர் மில்லியன்கணக்கில் வரிகளில் மோசடி செய்தார் என்பதற்காக, பதவி விலக வேண்டியிருந்தது. இங்கு அறியாமையின் விளைவு (persumption of innocence) நியாயப்படுத்தப்படுகிறது, பரஸ்பர நம்பிக்கை இங்கு திடீரென எவ்வித பாத்திரமும் வகிப்பதில்லை.

Zumwinkel பெற்ற மிகவும் குறைவான தண்டனைக்கு உலக சோசலிச வலைத் தளத்தால் அளிக்கப்பட்ட ஓர் ஆதாரத்திற்கு பிரதிபலிப்பாக, அப்பேராசிரியர் பதிலளிக்கையில், "திரு Zumwinkel வரிகளை 'மட்டுமே' ஏய்த்திருக்கிறார், என்கிறார். அரசுத்துறை சேவைக்கு வெளியில், சந்தேகத்தின் அடிப்படையிலான பணிநீக்கத்திற்கு இது எவ்வித அடித்தளத்தையும் உருவாக்கவில்லை, உண்மையின் அடித்தளத்திலும் கூட எதுவும் நடக்கவில்லைதொழிலாளர்-தொழில்வழங்குனர் உறவிற்கு இடையிலான முக்கிய பிணைப்பு இதில் காணப்படவில்லை".

ஒரு தொழிலாளரின் கவனக்குறைவு நடவடிக்கை மீதான வெறும் சந்தேகம் மட்டுமே பணிநீக்கத்திற்கு போதுமானதென்றால், மில்லியன்கள் சம்பந்தப்பட்ட மேலாளர் விடயத்தில் இது முற்றிலும் வேறுவிதமாக இருக்க வேண்டும்: "சந்தேகத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கையும், வீட்டு சோதனைகளும் மட்டும் நிச்சயமாக போதாது". 'வானொலியும், தொலைக்காட்சியும் அவர் சொத்துக்களை சோதனையிட அனுமதித்த பின்னர்", "பொதுமக்கள் அழுத்தம்" அளித்ததால், இறுதியில் Zumwinkel தாமே முன்வந்து வேலையிலிருந்து விலகினார் என்று Rieble வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். அவர் (Zumwinkel) 20 மில்லியன் யூரோ பதிலீடாக பெற்றார், இதை Rieble குறிப்பிடவில்லை.

ஒரு பெரிய நிறுவனத்தின், குறிப்பாக இந்த நிறுவனம் அரசுக்கு சொந்தமாக இருக்கும் போது, அதன் தலைவர் மில்லியன் கணக்கான வரி ஏய்ப்பில் ஈடுபட்டால், "நம்பிக்கை பிணைப்பு" அழிக்கப்படும் என்பது கூட பேராசிரியருக்குப் புலப்படாமல் போனது. ஆனால் இதையே அவர் எமிலி விடயத்தில் மிகவும்-வெளிப்படையாக இருப்பதாக கூறுகிறார்அதாவது, 1.30 யூரோ மதிப்பிலான கூப்பன்களை திருப்பி அளித்ததானது, நம்பிக்கையின் பிணைப்பை மீட்டுபெற முடியாத அளவிற்கு அழித்துவிட்டதாக கூறுகிறார் ஆனால் பொதுத்துறையில் மில்லியன்கள் ஏமாற்றப்பட்ட போது, அது பொருந்துவதாக இல்லை.

இருந்தபோதினும், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அவர் கைகொண்டிருப்பதாக Rieble இடைவிடாமல் குறிப்பிடுகிறார். Zumwinkel ஒரு சிறிய தொகையான அவரின் பயணச்செலவை வேண்டுமென்றே அதிகமாக்கி காட்டியிருந்தால், ஜேர்மன் நீதிமன்றத்திற்கு முன்னால் அவர் மாட்டிக்கொள்வார் என்று தம் நம்பிக்கையை வெளிட்ட ஒரு நீதிபதிக்கு எதிராக, சிறு தொகைகளுக்காகவும் நிர்வாக இயக்குனர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒருசில தீர்ப்புகளை Rieble மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இதுபோன்ற இயல்புக்கு மாறான வாதம், பிரெஞ்சு எழுத்தாளர் Anatole France ன் பின்வரும் சொற்தொடரைத் தான் நினைவுப்படுத்துகிறது: "சட்டத்திற்கு முன்னிருக்கும் சமத்துவம் பணக்காரர்களை மன்னிக்கிறது, அதுவே பாலங்களுக்கும் அடியில் படுத்திருக்கும், தெருக்களில் பிச்சையெடுக்கும் அல்லது உணவுக்காக ரொட்டியைத் திருடும் ஏழைகளைத் தண்டிக்கிறது".

நடப்பு நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான "குற்றவாளிகள்" (மேற்கோளுக்குள் உள்ள வார்த்தை Rieble இடம் இருந்து வந்தது) குறித்து, முனீச்சின் பேராசிரியர் அறியாமையின் விளைவு என்று குறிப்பிடுகிறார். "நிபுணத்துவமில்லாத பொதுமக்களிடம் இருந்து முன்கூட்டியே அவர்கள் மீது வரும் குற்றச்சாட்டுக்களை" எதிர்க்கும் அவர், "நகைப்பிற்காக இருந்தால் போதுமானது, வங்கியாளர்கள் மற்றும் அவர்களைக் கண்காணிப்பதற்கு பொருப்பானவர்கள் விடயத்தில் நேரடியாக பொருந்தினாலும் கூட, யாரும் அறியாமையின் விளைவு குறித்து பேசுவதில்லை", என்று எழுதுகிறார்.

இலாபங்களால் உண்டான கர்வம் வங்கியாளர்களை ஊகவணிக பில்லியனர்களாக மாற்றியுள்ளது, அதன் மூலம் மில்லியன்கணக்கான வேலைகளை அழித்தும், ஆபத்திற்கும் உள்ளாக்கியும் இருக்கும் அவர்கள், கிரிமினல் அல்லது சிவில் வழக்குகளில் வைக்கப்பட வேண்டுமா, இதை "தற்போது யாராலும்" கணிக்க முடியாது, என்று Rieble குறிப்பிடுகிறார்.

எவ்வாறிருப்பினும், சில அரசு வழக்கறிஞர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள்அதாவது முற்றிலுமாக Rieble இன் நிலைப்பாட்டிற்கு ஒத்த வகையில் வந்திருக்கிறார்கள். IKB வங்கியின் முன்னாள் தலைவர் Stefan Ortseifen க்கு எதிரான ஆரம்ப விசாரணைகள் பெருமளவில் பரணில் போடப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் அறிவித்ததாக Financial Times Deutschland குறிப்பிட்டது. IKBன் ஊகவணிக நடவடிக்கைகளில் அவர் சம்பந்தப்பட்டிருந்ததற்காக ஒருவேளை அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்காமலும் இருக்கலாம்.

Ortseifenன் நடவடிக்கைகளை FTD பின்வருமாறு குறிப்பிடுகிறது: "பல ஆண்டுகளாக, அந்த வங்கி அமெரிக்காவின் அடைமான கடன் சந்தையில் பெருமளவிலான பணத்தை முதலீடு செய்திருந்தது; இறுதியில் அவற்றின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, அந்த வங்கியை தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு வந்தது." அப்பத்திரிகை தொடர்ந்து எழுதியது, "அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் கருத்துப்படி, இந்த புள்ளியில், IKB வங்கி இயக்குனர்களின் கையாடல்களை காட்ட சாத்தியமில்லை. பெரும்பாலும், கவனக்குறைவாக நடந்து கொண்டார்கள் என்று தான் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட முடியும், எவ்வாறிருப்பினும் இதை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. ஒப்பிடக்கூடிய விடயங்களில் கூட, முன்னாள் வங்கி நிர்வாகிகள் மீது தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நிரூபிப்பதில் புலனாய்வாளர்களுக்கு சிக்கல் உள்ளது. உள்நோக்கம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, கையாடலுக்காக ஒரு நிர்வாகி தண்டிக்கப்பட முடியும்."

Rieble அவரே, கடந்த அக்டோபரில் ஏற்கனவே IKB நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். வங்கி, அதன் முன்னாள் இயக்குனர்கள் இலாப பங்குகளின் மூலம் பெற்றிருந்த மில்லியன்களை திரும்ப செலுத்துமாறு வலியுறுத்திய போது, அவர் அதை "ஒட்டுமொத்த தொழில் உரிமையைப் பறிப்பதாகும்" என்று குறிப்பிட்டார். நிதி நெருக்கடியைப் பற்றிய கருத்தில், வங்கியாளர்கள் "சமூகரீதியாக சட்டத்தின் காப்பை இழந்திருக்கும் ஒரு தொழிலில்" இருக்கிறார்கள், என்று செய்தி சஞ்சிகை Focusக்கு அவர் தெரிவித்தார்.

பிராங்க்பேர்ட் பங்குச்சந்தையான Frankfurter Allgemeineன் அறிக்கையிலும் இதேபோன்ற வாதம் நிறுவப்பட்டது. Bochum வழக்கறிஞர் Klaus Bernsmannஐ குறிப்பிட்டு, கிரிமினல் சட்டத்தை ஒட்டுமொத்தமாக, நிதி நெருக்கடி போன்ற "ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மீது தீர்ப்பளிக்க பொருத்தமற்றது" என்று குறிப்பிட்ட அப்பத்திரிகை, நிதி நெருக்கடிக்கு காரணமானவர்கள் நீதிமன்றங்கள் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், முதலாளித்துவத்தின் தடையற்ற சந்தை பொருளாதாரத்தின் நலன்களுக்கு அது ஏற்றதில்லை என்ற தீர்மானத்திற்கும் அது வருகிறது. "இயக்குனர்கள் முகங்கொடுக்கும் தேவைகள் கட்டாயமாக இருந்தால், கடுமையான சட்டங்கள் கோழைகளை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. நீதிமன்றங்களின் பயத்தால் துணிச்சலாக செயல்படும் விருப்பங்களை செயலதிகாரிகள் இழந்துவிடக்கூடும்."

அவமரியாதையான வாதம்

விஷயங்களை ஒருதலைபட்சமாக பார்க்கும் அவரின் பார்வையைப் பகிர்ந்து கொள்ளாத அனைவருக்கும் எதிராக, முனீச் பேராசிரியர் நெருப்பையும், கந்தகத்தையும் வீசுகிறார். அவர் விமர்சனங்களின் நற்பெயரைக் காப்பதற்கான ஆர்வத்தில், எவ்வித புறநிலைமையையும் அவர் கைவிடுகிறார்.

எமிலியின் விமர்சனங்களை "வெறியூட்டும் சமூக உணர்ச்சிகள் என்று அவர் அழைக்கிறார்"கீஷிகீஷி மற்றும் taz ஆகியவற்றின் ஆசிரியர்களையும்" குறிப்பிடுகிறார்"கருத்து சுதந்திரமானது, புறநிலை சாராமலும், உணர்ச்சிப்பூர்வமாகவும் நீதிமன்றங்களையும், சட்ட அமைப்புகளையும் விமர்சிக்க அரசுசாரா அமைப்புகளை அனுமதிக்கிறது" என்று அவர் வருத்தப்படுகிறார்.

Horst Seehoferம் (கிறிஸ்துவ சமூக யூனியன், CSU) கூட விமர்சிக்கப்படுகிறார்: "பவாரியன் பிரதம மந்திரியும் எதையும் கூறாமல் இந்த ஜனரஞ்சகமான பாதையிலிருந்து தப்பிடவிட முடியாது", என்று Rieble எழுதுகிறார்.

எமிலியின் தீர்ப்பை "சமூகத்திற்கு எதிரான தரத்தைக் கொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு" என்று கூறிய Wolfgang Thierseக்கு (சமூக ஜனநாயக கட்சி, SPD) எதிராக பல வலுவான அவமரியாதைகள் திரும்பின, ஆனால் பின்னர் உடனடியாக அவர் தமது வார்த்தைகளைத் திரும்ப பெற்று கொண்டார். ஜேர்மன் அரசின் இரண்டாவது உயர்ந்த பிரதிநிதியாகவும், 1998 முதல் 2005 வரை ஜேர்மன் Bundestagன் தலைவராகவும் இருந்த, முன்னாள் GDRல் இருந்து உருவான இந்த SPD அரசியல்வாதியை, Rieble ஒரு "கிழக்கு ஜேர்மானிய மண்தூவி" என்று அழைக்கிறார். அதாவது "தீர்ப்புகளின் மீது அரசியலமைப்புக்கு எதிரான விமர்சனங்களுக்கு தகுதியற்ற" அவரை, குழந்தைகளின் கட்டுக்கதைகளில் வரும் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு இழிவாக அழைக்கிறார். மேலும் "மக்கள் மன்றங்களை (Volksgerichte) அவர் மீண்டும் கொண்டு வர விரும்புகிறாராபழைய நல்ல GDRன் முரண்பட்ட கமிஷன்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க விரும்புகிறாரா?" என்று அவர் கேட்கிறார்.

இந்த குறிப்பின் மூலம், Rieble தம்மைத்தாமே தகுதியற்றவராக்கி கொள்கிறார். GDRTM "மக்கள் மன்றங்களே" இருக்கவில்லை, இதை முதலில் பேராசிரியர் தெரிந்து கொள்ள வேண்டும். நாஜிகளின் கொடூரமான Volksgerichtshof க்கு அது ஒத்திருந்ததால், அவர் நனவுபூர்வமாக அந்த சொல்லை தேர்ந்தெடுத்திருக்க கூடும். அவர் மறைமுகமாக குறிப்பிடும் முரண்பட்ட கமிஷன்கள், மக்கள் மன்றங்கள் அல்ல, மாறாக அவை ஒருவகையான தொழிலாளர் குறைதீர்ப்பு கமிஷன்களாக இருந்தன. அவை தொழில்வழங்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன, வேலைகளில் ஏற்பட்ட விவாதங்களுக்கும், சிறிய சட்டமீறல்களுக்கும் அவை பொறுப்பாக இருந்தன. அவை உள்ளூர் மற்றும் மாகாண நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களின் நேரடி வழிகாட்டுதலிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தன.

ஆசிரியர் அறிந்த வரையில், பாவரியாவில் 1918 முதல் 1924 வரை மட்டுமே, ஜேர்மனியில் "மக்கள் மன்றங்கள்" (people's court) இருந்தன. முனீச் சோவியத் குடியரசு ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் புரட்சிக்குப் பின்னர் சமூக ஜனநாயக அரசாட்சியால் உருவாக்கப்பட்ட அவை, வலதுசாரியால் நீதிமன்ற இராணுவ சட்டமாக மாற்றப்பட்டன, இதன்மூலம் "தொல்லை அளித்த" இடதுசாரிகளுக்கு குறைந்தளவில் தூக்குதண்டனைகளும் வழங்கப்பட்டன. ஹிட்லரின் திடீர் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து நடந்த ஒரு போலியான வழக்கின் போது, அவரை முனீச் மக்கள் மன்றம் விடுதலை செய்து, அவரின் "நாட்டுப்பற்று உத்வேகத்திற்காகவும் மற்றும் அவரின் தலையாய ஆசைக்காகவும்" அவரை பாராட்டிய போது, மக்கள் மன்றங்கள் கலைக்கப்படுவதற்கு சற்று முன்னர், அவை ஒரு சோகமான கொண்டாட்டத்தை மேற்கொண்டன.

இவ்வாறு "மக்கள் மன்றங்கள்" குறித்த Rieble இன் கூற்றுகள் முற்றிலுமாக ஒரு வரலாற்று திரிபுகளாக உள்ளன. எவ்வாறிருப்பினும், சட்ட அமைப்புமுறையின் மீது மக்களின் எவ்வகையான செல்வாக்கும் அவரைப் பொறுத்த வரையில் ஒரு வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதாக உள்ளது என்பதையே அவரின் கண்டன பேச்சுக்கள் தெளிவுபடுத்துகின்றன. அவர் எழுதுகிறார், "நீதிமன்றங்கள் உணர்ச்சிவயப்படாமலும், சாந்தமாகவும் தீர்மானிக்க வேண்டும்... உணர்ச்சிவயமான தங்களின் முடிவுகளின் அடிப்படையில் மக்கள் மன்றங்களைக் கோரும் எவரும், அது எதை குறிக்கிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்"!

எமிலியின் வழக்கு "வர்க்க நீதியின் வழக்கல்ல என்ற முடிவுக்கு தான் அவர் கட்டுரை வருகிறதுஆனால், குடிமக்கள் அவர்களின் (!) சட்ட அமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன". அது சட்ட அமைப்பினால் அல்ல, மாறாக "குடிமக்கள் தயாராக இருப்பதாலும், அறிவிலிருந்தும், முயற்சியிலிருந்து சுதந்திரமாக இருப்பதாலும், அவர்களின் சொந்த கோபத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் அளிக்கப்படுவதிலும் அமைந்திருக்கிறது".

அதுவொரு வெளிப்படையான உள்ளீடு. "குடிமக்கள் அவர்களின் சட்ட அமைப்பை புரிந்து கொள்ளவில்லையானால்" என்பது, நீதிமன்றங்கள் "மக்களுக்காக என்ற பெயரில்" அவற்றின் தீர்ப்புகளை அறிவித்தாலும் கூட, மக்களிடமிருந்து அவை வெகு தூரத்தில் உள்ளன என்பதையும், வேறுபட்ட நலன்களையே, அதாவது மற்ற வர்க்கங்களின் நலன்களையே அவை பாதுகாக்கின்றன என்பதையுமே இது குறிக்கிறது. துல்லியமாக, இது தான் வர்க்க நீதியின் சாரம்.

Rieble இன் வாதம் ஆழமாக ஜனநாயகமற்று உள்ளது. சட்ட அமைப்பின் மீது குடிமக்களின் நேரடி செல்வாக்கு என்பது ஜனநாயகத்தின் ஓர் அடிப்படை பண்பாகும், இது நிலபிரபுத்துவ வர்க்க நீதிக்கு எதிராக போராடி பெற்ற சாதனையாகும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற பாரம்பரியம் ஊறிய முதலாளித்துவ ஜனநாயகத்தில், முக்கியமான வழக்குகள் இன்றும் கூட அறங்கூறாயங்களால் (juries) முடிவு செய்யப்படுகின்றன. ஜேர்மனியில், 1848 புரட்சிக்கு பின்னர் இதுபோன்று ஏதோவொன்று நடைமுறைக்கு வந்தது, ஆனால் பின்னர் வைய்மார் குடியரசில் அறங்கூறாயங்கள் பெரியளவில் அழிக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பாளர் நீதிமன்றங்கள் (lay assessor courts), ஒரு தொழில்முறையான மற்றும் இரண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுடன் சிறிய கிரிமினல் வழக்குகளை முதல் விசாரணைக்கு உட்படுத்தும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை நிலைபெற்றன.

குடிமக்கள் அவரின் சட்ட அமைப்பைப் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள் என்ற உண்மைக்கு பேராசிரியர் Rieble மிகவும் உணர்வுபூர்வமாக மிக உண்மையான பிரதிபலிப்பில் இருக்கிறார். வர்க்கங்களுக்கு மேல் நிற்கும் அரசியலமைப்பு ஆட்சியின் கற்பனைகள் இடிய தொடங்குகின்றன. எமிலி வழக்கின் சட்ட விஷயங்கள் குறித்து அவர் ஒன்றும் கவலைப்படவில்லை. மாறாக, எழும் சமூக அதிருப்தி மற்றும் பொதுமக்களின் அழுத்தத்தின் செல்வாக்கின் கீழ் சட்டம் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் வந்துவிடுவதைத் தடுக்கும் ஒரு பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.

யார் இந்த பேராசிரியர் ரீபெலே?

Rieble இன் பின்புலத்தை ஒருவர் ஆராய்வாரேயானால், அவரின் கண்ணோட்டங்கள் ஓர் ஆச்சரியமாக இருக்காது. அவரின் பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக பதவிகளுக்கு இடையில், அவர் தொழில்வழங்குனர்களின் அமைப்புகளில் நியமன ஆதரவு திரட்டுபவராக (lobbyist) இருக்கிறார்.

இவர், தொழிலாளர் தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்ட மையத்திடமிருந்து [Centre for Labour Relations and Labour Law (ZAAR)] அவரின் சம்பளத்தை பெறுகிறார், இதன் இயக்குனராகவும் உள்ளார். பெருநிறுவனங்களின் நிதியுதவியில் செயல்படும் ஓர் அமைப்பிடமிருந்து ZAAR நிதி ஆதாரங்களைப் பெறுகிறது, மேலும் இது முனீச்சில் உள்ள Ludwig Maximilians (LMU) பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பொறுப்பாண்மையாளர்கள் குழு, நிறுவன ஆலோசகர்கள் மற்றும் நிறுவன பொதுக்குழு ஆகியவை தொழில்வழங்குனர்கள் அமைப்புகளின் மற்றும் பெரும் நிறுவனங்களின், குறிப்பாக இரசாயன, உலோக மற்றும் மின்னியல் துறைகளின் மற்றும் அத்துடன் டைம்மிலர், போஸ்ச் மற்றும் சீமென்ஸ் ஆகியவற்றின் பிரத்யேக பிரதிநிதிகளை உள்ளடக்கி உள்ளன.

Rieble உரிமைநுகர்வு பேராசிரியராக (Tenured professor) உள்ளார், அவர் வேலைக்கு வராதபட்சத்தில் பல்கலைக்கழகம் அவருக்கு சம்பளமில்லா விடுப்பு அளித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும், பல்கலைக்கழக பதவிக்கு மீண்டும் திரும்பும் உரிமை அவருக்கு உண்டு. ZAAR அறிக்கையின்படி, இந்த ஏற்பாடு LMU மற்றும் பார்வாரியா அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் உடன்படிக்கையில் உருவாக்கப்பட்டது. பெருவணிக வியாபாரங்களுக்கும், அரசிற்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவுகளின் ஓர் சிறந்த உதாரணம் தான் இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும்.

ZAARன் நோக்கங்கள் எதையும் கற்பனைக்கு விட்டு வைக்கவில்லை. அது, தொழிலாளர் சட்டமானது "வியாபார இடங்கள் மற்றும் போட்டிக்கான ஒரு முக்கியமான காரணியாக" அணுகுகிறது, அதாவது நிரந்தரவிதி அரசுகளின் அடித்தளங்களுக்கான பீடிகையாக அணுகுகிறது, அத்துடன் "தொழிலாளர்களை பாதுகாக்கும் தொழிலாளர் சட்டங்களின் பொருளாதார விளைவுகள் குறித்தும் ஆய்வு" செய்து வருகிறது. பிற வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களின் உரிமைகள் பிரத்யேகமாக நலன் அளிக்கக் கூடியவையல்ல, அவை வியாபார இருப்பையும், போட்டித்தன்மையையும் பாதிக்கிறது என்று Rieble இன் ZAAR கருதுகிறது. அதற்கான எல்லாமும் சட்டமாக இயற்றப்பட்டிருந்த போதினும், ZAAR மற்றும் பேராசிரியர் Rieble உண்மையில் ஒரு ஆதரவு திரட்டுவதற்கான கருவிகள் என்பதுடன், பல்கலைக்கழக பயிலகத்தின் வேடத்தில் தொழில்வழங்குனர்களுக்கான சிந்தனையாளர்கள் தான் அவர்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved