World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Following massacre in Kunduz

Left Party comes to the aid of German government

குண்டுஸ் படுகொலைகளைத் தொடர்ந்து

இடது கட்சி ஜேர்மன் அரசாங்கத்திற்கு உதவிக்கு வருகிறது

Stefan Steinberg
12 September 2009

Back to screen version

ஒரு ஜேர்மனிய தளபதியின் உத்தரவின் பேரில் நடந்த குண்டு வீச்சில் குண்டுஸில் டஜன் கணக்கான ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டமை தேசியத் தேர்தல்களுக்கு இரு வாரங்கள் முன்பு ஜேர்மனிய அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்கானிய போர் நுழையாமல் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் முனைந்திருந்தது. ஆனால் குண்டுஸ் படுகொலைகள் பற்றிய மக்களின் கூக்கூரல் அதை இயலாமல் செய்துவிட்டது.

செவ்வாயன்று பாராளுமன்றம் (Bundestag) ஆப்கானிஸ்தான் பற்றி ஒரு சிறப்பு விவாதத்தை நடத்தியது. ஆளும் பெரும் கூட்டணிக் கட்சிகளான கிறிஸ்துவ ஜனநாயக யூனியனும் (CDU), சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுவாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜேர்மனிய இராணுவ நடவடிக்கைக்கு தன்னுடைய தளராத ஆதரவை அறிவித்ததுடன், குறிப்பாக குண்டுஸில் இருக்கும் ஜேர்மனிய தளபதி கொடுத்த உத்தரவிற்கு ஆதரவை அறிவித்தன.

அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) "உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ" அப்பகுதியில் இருக்கும் ஜேர்மனிய படைகளின் நடவடிக்கைகள் பற்றி எந்த குறைகூறலையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார். சமூக ஜனநாயகக் கட்சி வெளியுறவு மந்திரியும் துணை அதிபருமான பிராங்க் வால்ட்ர் ஸ்ரைன்மையரால் இக்கருத்துக்கள் எதிரொலிக்கப்பட்டன. அவர் ஆப்கானிஸ்தானத்தில் ஜேர்மனிய துருப்புக்களின் நடவடிக்கை குறித்த "முன்கூட்டிய தீர்ப்புக்கள்" வெளியிடுவதற்கு எதிராக எச்சரித்தார். எதிர்க்கட்சிகளான பசுமைக் கட்சியும், தாராளவாத ஜனநாயகக் கட்சியும் அரசாங்கத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டன.

பாராளுமன்ற விவாதம் நடந்த அன்றே, ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் ஜோசப் யுங் போரில் இறந்த ஜேர்மனிய படையினரின் புதிய நினைவாலயம் ஒன்றை தொடக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இரண்டாம் உலகப் போரின் நாஜிக் கொடுமைகளுக்கு பின்னர் ஒரு ஜேர்மனிய அரசாங்கம் இத்தைகைய நினைவுச் சின்னத்தை எழுப்பும் தைரியம் பெற்றுள்ளது இதுதான் முதல் தடவை ஆகும்.

இவ்விதத்தில் குண்டுஸ் படுகொலைகளின் பிரதிபலிப்பாக ஜேர்மனிய அரசாங்கம், எதிர்க் கட்சிகள் மற்றும் இராணுவத் தலைமைக் கட்டுப்பாடும் ஜேர்மனிய இராணுவவாதத்தின் சார்பாக அனைத்து முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளன.

பாராளுமன்ற விவாதத்திற்கு சில மணி நேரம் முன்புதான் இடது கட்சி பேர்லினின் Brandenburg Gate இல், "குண்டுவீச்சை நிறுத்துக --ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வெளியேறுக" என்ற கோஷத்தில் ஒரு ஊர்வலத்தை நடத்தியது. ஆனால் இந்தக் கோஷம் ஒரு மோசடியாயிற்று. ஊர்வலத்தின் முக்கிய நோக்கம் போருக்கான மக்கள் எதிர்ப்பை திசை திருப்பி ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு இடது கட்சியின் ஆதரவை அடையாளம் காட்டுவதாகும்.

இந்த அணிவகுப்பு குறுகிய அவகாச முன்னறிவிப்பில் நடத்தப்பட்டது. இடது கட்சித் தலைமை போருக்கு எதிராக மக்கள் போர் உணர்வை திரட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே வந்திருந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிருபர்கள், புகைப்படம் எடுப்போர் குழுக்கள் உட்பட கிட்டத்தட்ட 500 பேர் வந்திருந்தனர். இடது கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது ஆளும் கட்சிகளுக்கும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கும் செய்தி அனுப்ப ஒரு அரங்கமைத்ததுபோல் இந்த அணிவகுப்பு இருந்தது. கொடுத்த தகவல்: ஆப்கானிஸ்தானில் போரைத் தொடரும் புதிய மூலோபாயத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்பதுதான்.

ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஜேர்மனிய சர்வதேச நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்ற கவலை கொண்ட இடது கட்சி தன் ஆலோசனையை இன்னும் திறமையான ஏகாதிபத்திய கொள்கை பற்றி ஆலோசனை கூறவும் ஜேர்மனிய மக்களுக்கு அதை விற்கும் வழிவகை பற்றியும் கூற முற்பட்டுள்ளது.

கூட்டத்தின் முக்கிய பேச்சாளரும் கட்சியின் இணைத் தலைவருமான ஒஸ்கார் லாபொன்டைன் இடது கட்சி தன்னுடைய முந்தைய அழைப்பான ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய படைகள் உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதை கைவிடுவதாக தெளிவாகக் கூறினார். தேவைப்படுவது "கனேடிய அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வுடனாவது குறைந்தபட்சம் ஒத்துப் போகக்கூடியதாக இருக்க வேண்டும்" என்று அறிவித்த அவர், "படைகள் முற்றிலும் திரும்பப் பெறுவதற்கு ஒரு திகதி குறிக்கப்பட வேண்டும்" என்றார்.

ஆப்கானிஸ்தானில் கனேடியக் கொள்கை வேண்டும் என்று வாதிடும் லாபொன்டைனின் வாதம் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸின் கருத்துக்களைத்தான் எதிரொலிக்கிறது. அவர்தான் சமீபத்தின் கனடாவை அமெரிக்காவின் மிக நெருக்கமான நாடு என்று பாராட்டியிருந்தார்.

உண்மையில் 2011ல் தன்னுடைய படைகளைத் திரும்பப்பெற இருப்பதாக கனேடிய அராசங்கம் கொடுத்துள்ள உறுதிமொழி கனேடியத் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று பெருகும் கோரிக்கைகள் மற்றும் அதிகரிக்கும் மக்களின் போர் எதிர்ப்பு உணர்வை அடக்கும் நோக்கத்தை கொண்ட இழிவான தந்திரோபாயமாகும். அரசாங்கம் தன் உறுதிமொழியை கைவிடாது என்பதற்கான உத்தரவாதம் சிறிதளவு கூட கிடையாது. அது ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தன் இருப்பை முன்னதாக இரு முறை நீடித்துக்கொண்டது.

ஜேர்மனிய அரசாங்கம் "கனேடிய தீர்வை" ஏற்க வேண்டும் என்று லாபொன்டைன் கூறுவதின் நோக்கமே துல்லியமாக போருக்கு எதிராகப் பெருகும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்குவதற்கும், ஜேர்மனிய படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

தன்னுடைய உரையில் லாபொன்டைன் தற்போதைய ஆப்கானிஸ்தான் பற்றிய உத்தியோகபூர்வ கொள்கை பற்றிய தனது விமர்சனத்தை ஜேர்மனிய முதலாளித்துவத்தின் வெளிநாட்டு, உள்நாட்டு நலன்களுக்கு நாட்டுப் பற்று நிறைந்த ஆதரவு என்னும் வடிவமைப்பிற்குள் இருக்குமாறு கவனத்துடன் பேசினார். ஆப்கானிஸ்தானில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருப்பது ஜேர்மனியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் பற்றிய ஆபத்தை பெருக்கியுள்ளது என்று முக்கிய ஜேர்மனிய இராணுவ, பாதுகாப்பு அதிகாரிகள் பகிரங்கமாக கொடுத்துள்ள எச்சரிக்கையை அவர் மேற்கோளிட்டார். "நம் நாட்டை நாம் பாதுகாக்கவில்லை" என்று அவர் அறிவித்தார்.

இதேபோன்ற அரசியல் சைகைகள் இடது கட்சியின் மற்ற முக்கிய உறுப்பினர்களாலும் அனுப்பப்பட்டுள்ளன. Jungle Welt பத்திரிகைக்கு பேர்லின் அணிவகுப்பு அன்று கொடுத்த பேட்டி ஒன்றில், கட்சியின் பாராளமன்றப் பிரிவின் தலைவரான Dagmar Enkelmann தன்னுடைய கட்சி, "வெளியேறும் மூலோபாயம் ("Exit strategy") பற்றி ஒரு பரந்த மக்கள் விவாதத்தைக் காண முற்படுகிறது" என்று அறிவித்தார்.

அமெரிக்கா ஈராக்கில் தலையிட்டுள்ளது பற்றி சிறிதேனும் தெரிந்தவர்கள் இந்த சொல்லின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொள்ளுவர். "வெளியேறும் மூலோபாயம்" என்பது அங்கு காலவரையற்று துருப்புக்கள் நிறுத்திவைப்பதற்கு அரசியலில் கூறப்படும் மறு சொல் ஆகும்.

உடனடியாக படைகளை திரும்பப் பெறுதல் என்பது "பெரும் குழப்பத்தை" விளைவிக்கும் என்ற வாதத்தை பயன்படுத்தி, ஈராக் போருக்கான ஆதரவாளர்கள் "வெளியேறும் மூலோபாயத்தை" ஆதரித்து வாதிட்டனர். இந்த "வெளியேறும் மூலோபாயம்" ஒபாமா நிர்வாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டு, அந்நாட்டில் நிரந்தரமான இராணுவத் தளங்களை பராமரிப்பதற்கு முறையான, முறைசாராத் துருப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் நிறுத்தப்படுவதுடன்தான் தொடர்பை கொண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதற்காக காலனித்துவவகையில் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளது சற்று வேறுவடிவத்தில் தொடர்கிறது. இது வாஷிங்டனை இது கூடுதலாக விரும்பும் போர் முன்னணியான ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் கவனம் செலுத்துவதற்கு அனுமதித்துள்ளது.

இதே போன்ற ஒரு தீர்வு ஆப்கானிஸ்தானிற்கு வருவதற்கு இடது கட்சி ஆதரவு கொடுக்கிறது என்பது Jungle Welt பேட்டியில், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் ஆகியோர் ஆப்கானிஸ்தான் பற்றி "வெளியேறும் மூலோபாய உச்சிமாநாடு" என்று கூறப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஒன்று வேண்டும் என்று கொடுத்துள்ள அழைப்பிற்கு Enkelmann இசைவு தெரிவிப்பதின் மூலம் அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.

இத்தகைய மாநாட்டின் நோக்கம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்தவோ, படைகளைத் திரும்பப் பெறுவதற்கு சூழ்நிலையை தோற்றுவிப்பதோ இல்லாமல் கூடுதலான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கும், ஒரு பெருகியமுறையில் செல்வாக்கிழந்துள்ள சட்டவிரோதப் போருக்கு ஐ.நா.வின் ஒப்புதலை பெறுவதும் ஆகும். ஒரு ஐ.நா. ஆதரவுடைய "வெளியேறும் மூலோபாயம்" என்பது நாட்டிற்கு அதிக படை அனுப்பப்படுதலுடன் தொடர்புபடலாம்.

அமெரிக்க பாதுகாப்புச் சிந்தனைக் குழு Stratfor எழுதியது: "ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மூலோபாயம் ஒன்றை ஐரோப்பிய தலைவர்கள் பரிசீலிக்கின்றனர். இதில் ஆப்கானியர்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள பயிற்சி அளிப்பதற்கு கூடுதலான துருப்புக்களை அனுப்பும் குறுகியகால திட்டமும் உள்ளது. இரு தரப்பிற்கு உடன்பாடு உள்ள நேரத்தில் படைகளை திரும்பப் பெறுதல் என்ற நீண்ட கால இலக்கும் இதில் உள்ளது."

லாபொன்டைன், இடது கட்சி மற்றும் ஜேர்மனிய முதலாளித்துவத்தின் செல்வாக்கு நிறைந்த அடுக்குகள் இத்தகைய "வெளியேறும் மூலோபாயத்தை" ஐரோப்பிய சக்திகள்மீது குறிப்பாக ஜேர்மனி மீது அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ செயற்பாடுகள் கட்டுப்பாட்டை மாற்றும் வழிவகையாக கருதுகின்றன.

Brandenburg Gate ஊர்வலத்திற்கு முதல் நாள் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வேறுவித இராணுவ தலையீட்டிற்கான ஆதரவை இடது கட்சியின் மற்றொரு தலைவர் Dietmar Bartsch வெளியிட்டார். Bartsch கூடுதலான மக்கள் தொடர்பு, விரைவாக உள்ளூர் ஆப்கானிய போலீசிற்கு ஜேர்மனிய போலீஸ் அதிகாரிகள் பயிற்சியளித்தல் என்ற மாற்று மூலோபாயத்திற்கு அழைப்புவிடுத்தார்.

Bartsch, Engkelmann ஆகியோர் ஆப்கானிஸ்தானத்தில் "வெளியேறும் மூலோபாயத்திற்கு" முன்வைத்த வாதங்களான "நாட்டை மறுகட்டமைப்பது", "குடிமக்கள் நடவடிக்கையில் முக்கியம் காட்டுவது", "உள்ளூர்ப் பாதுகாப்பு சக்திகளுக்கு பயிற்சி அளித்தல்" என்பது திகைக்க வைக்கும் விதத்தில் முதலில் 2003ல் படைகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பவதற்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் கூறிய காரணங்களைத்தான் நினைவிற்கு கொண்டுவருகின்றன.

இடது கட்சி ஜேர்மனிய செய்தி ஊடகம் மற்றும் முதலாளித்துவ அரசியல் வட்டங்களின் செல்வாக்கு உடைய பிரிவுகளால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் நடைபெற உள்ள செப்டம்பர் 27 விரைந்து வந்துகொண்டிருக்கையில், இடது கட்சி போதுமான அளவிற்கு தன் நம்பகத்தன்மையை உள்நாட்டு பிரச்சினைகளில் நிரூபித்துள்ளது என்று அறிவிக்கும் குரல்கள் பெருகியுள்ளன. குறிப்பாக இது பேர்லின் தலைநகரத்தில் சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) நடத்தும் கூட்டணி நிர்வாகத்தில் மிக அதிக சமூகக் குறைப்புக்கள் செயல்பட உதவியுள்ளது.

கூட்டாட்சி மட்டத்தில் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக வரவேண்டும் என்ற கருத்தை முன்னேற்றும் விதத்தில் இடது கட்சி ஜேர்மனிய ஏகாதிபத்திய நலன்களை வெளிநாடுகளிலும் இயக்கத் தான் நம்பப்படலாம் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தத் தொடர்பை ஒட்டித்தான் லாபொன்டைன் மற்றும் இடது கட்சி ஆப்கானிஸ்தானில் கொண்டிருந்த வழிவகையில் இருந்து ஏற்பட்டுள்ள மாறுதல் அறியப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved