World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Telecom workers commence national strike

இந்தியத் தொலைத் தொடர்பு தொழிலாளர்கள் தேசிய வேலைநிறுத்தத்தை தொடங்கினர்

By Arun Kumar
20 April 2010

Back to screen version

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இல் வேலைசெய்யும் கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் இன்று முதல் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தை மறுசீரமைக்கும் இந்திய அரசாங்கத் திட்டங்கள் மற்றும் அதன் பங்குகளில் 30 சதவிகிதத்தை விற்பது ஆகியவற்றிற்கு எதிரான காலவரையறையற்ற ஒரு தேசிய வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளனர். மறுசீரமைப்பில் மிகப் பெரிய அளவிற்கு 100,000 ஊழியர்களை அகற்றிவிடும் திட்டமும் உள்ளது. இது விருப்பு ஓய்வுத் திட்டம் (Voluntary Retirement Scheme-VRS) என்று அழைக்கப்படுவதின் மூலம் நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் CPM, CPI மற்றும் இந்து மேலாதிக்க BJP ஆகியவற்றுடன் இணைந்த BSNL தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவினால் (JAC) இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது. JAC அரசாங்கத்துடனும் நிர்வாகத்துடனும் மறுசீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட ஜனவரி மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

JAC பிரதிநிதிகள் வெள்ளியன்று தொலைத்தொடர்பு மந்திரி திரு. ஏ.ராஜாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். ஒரு சில சிறிய மாறுதல்கள் உடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தொழிற்சங்கங்கள் கருத்துப்படி 30 சதவிகிதப் பங்கு விற்பனை ஒரு மந்திரி குழுவிற்கு பரிசீலிக்க அனுப்பப்படலாம் என்ற பரிந்துரை உள்ளது. VRP "முற்றிலும் சுயவிருப்பத்தின்படித்தான்" என்று கூறிய அவர் ஓய்வூதியங்கள் பற்றிய திருத்தம் பரிசீலிக்கப்படும் என்றும் நான்கு மாதங்களுக்குள் அது பற்றி தகவல் கொடுக்கப்படும் என்றும் கூறினார். தனியார்மயமாக்கப்படுவதற்கு, பணிநீக்கங்களுக்கு மற்றும் வணிகத்தின் சில பகுதிகள் வெளியே உள்ளோருக்கு அனுப்பப்படுவது ஆகியவற்றிற்கு தொழிற்சங்கங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரின.

BSNL மறுசீரமைப்பானது வேலைகள் மற்றும் பணி நிலைமைகளில் பெரும் தாக்குதலை கொண்டுள்ளன. அரசாங்கம் நியமித்த குழுவான சாம் பிரோடா என்னும் முக்கிய வணிகரின் தலைமையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் நாட்டின் பெரும் போட்டிமிக்க தொலைத் தொடர்புகள் சந்தையில் நிலைத்திருக்க திட்டங்களை இயற்றியுள்ளது. BSNL ஆனது தனியாருக்குச் சொந்தமான பார்தி ஏர்டெல்லுக்கும் பின்னே ஐந்தாவது இடத்தில் உள்ளது. நிறுவனம் முதல் தடவையாக 2009-2010ல் இழப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL ன் நடவடிக்கைகள், பொதுச் செலவீனங்களை குறைக்கும் அரசாங்கத்தின் பரந்த திட்டங்களின் ஒரு பகுதி ஆகும். பெப்ருவரி மாதம் நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜி அளித்த தேசிய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவிகிதத்தில் இருந்து 2011-12 ல் 4.8 சதவிகிதமாகக் குறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது அனைத்து இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 10 சதவிகிதம் விற்பதற்கும், அடுத்த இரு ஆண்டுகளில் 60 பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) பங்குளை விற்பதற்கும் தயார் செய்து வருகிறது.

மார்ச் 23ம் தேதி பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு இந்திய திட்டக்குழு தயாரித்து அளித்த 11வது 5 ஆண்டுத் திட்டம் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கு "PSU க்களில் ஆக்கிரோஷ பங்கு விற்பனைத் திட்டம்" தேவை என்று வலியுறுத்தியுள்ளது. 1991ம் ஆண்டு நிதி மந்திரியாக இருந்தபோது சிங் தான் சந்தைச் சார்பு செயல் பட்டியலை தொடக்க பொறுப்பாக இருந்தார். இது பின்னர் தொடர்ந்த இந்திய அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட பரந்த தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகள் அகற்றப்படல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.

BSNL மறுசீரமைப்பின் தொலைவிளைவுகளுக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம் UPA அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை உள்ளடக்கியது ஆகும். ஆனால் தொடர்புடைய அனைத்துத் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் சந்தைச் சார்பு கொள்கைகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுடன் இணைந்தவை ஆகும். UPA கூட்டணியின் முக்கிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வலதுசாரி BJP எதிர்க்கட்சியும் 2004 தேசிய தேர்தலில் தோற்பதற்கு முன் இத்தகைய பொருளாதார திட்டத்தைத்தான் தொடர்ந்திருந்தது. CPI, CPM என்னும் ஸ்ராலினிச கட்சிகள் பதவிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு நான்கு ஆண்டுகள் ஆதரவை கொடுத்தன. அக்கூட்டு மக்கள் அழுத்தத்தை ஏற்கும் என்று காரணத்தை கூறியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு CPM தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் UPA உடன் இயைந்த கொள்கைகளைத்தான் தொடர்ந்திருந்தது.

தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைகளையும் நிலைமைகளையும் பற்றி ஆழந்த கவலை கொண்ட தொழிலாளர்களின் அடிப்படை எதிர்ப்பை எதிர்கொள்ளும் விதத்தில் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் JAP இதை விரைவில் முடிப்பதற்கான சூத்திரத்தைக் காண முற்படும்.

தனியார்மயமாக்கலுக்கு முதல்படி 2000ம் ஆண்டில் BJP தலைமையில் இருந்த அரசாங்கம் BSNL ஐ அரசாங்கத்திற்கு சொந்தமான, இலாபம் அடையக்கூடிய ஒரு தனி நிறுவனமாக தொலைத் தொடர்புகள் துறையில் இருந்து பிரித்து அமைத்தது. NFTE எனப்படும் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் கூட்டமைப்பு, FNTO எனப்படும் தொலைத்தொடர்பு அமைப்புக்களின் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பாரதிய தொலைத் தொடர்பு கூட்டமைப்பு (BTEF) -- முறையே CPI, காங்கிரஸ், BJP உடன் இணைந்தவை--அரசாங்கத்தின் திட்டம் செயல்படக் கருவியாக இருந்தன.

மூன்று தொழிற்சங்கங்களும் ஒரு நாள் வேலைநிறுத்தம் ஒன்றிற்கு வழிசெய்தன. ஆனால் தொலைத் தொடர்புகள் மந்திரி ராம் விலாஸ் பாஸ்வான் வேலைகள் மற்றும் ஓய்வூதிய உரிமைகளுக்கு உத்தரவாதம் கொடுத்து மாதம் 1,000 ரூபாயாக ஊதியத்தை அதிகரிக்க உறுதி கொடுத்தவுடன் சரணடைந்துவிட்டன. தொழிற்சங்கங்களின் குற்ற உடந்தையுடன் BSNL அக்டோபர் 2000 த்தில், திட்டத்திற்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே நிறுவப்பட்டது.

CPM உடன் இணைந்த BSNL ஊழியர்கள் தொழிற்சங்கம் (BSNLEU) நிறுவனத்திற்குள் இயங்கி வந்த எட்டு சிறிய சங்கங்களின் இணைப்பு மூலம் அமைக்கப்பட்டது. BSNLEU மற்ற மூன்று முக்கிய தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் போராக்குணம் மிக்க அமைப்பு என்று தன்னைக் காட்டிக் கொண்டது. BSNLEU வின் பொதுச் செயலாளர் வி.ஏ.என். நம்பூதிரி அனைத்து BSNL தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் செயற்பாட்டுத் தலைவர் ஆவார்.

ஜனவரி மாதம் பிட்ரோடா குழுவின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் மற்றும் BSNL நிர்வாகத்துடன் நடத்தின. தொழிலாளர்களின் பரந்த சீற்றத்தை எதிர்கொண்ட விதத்தில் JAC மார்ச் 13, 26 திகதிகளில் எதிர்ப்புக்களை நடத்தி பின்னர் மார்ச் 23 அன்று காலவரையறையற்ற வேலைநிறுத்தம் வரும் என அறிவித்தது.

"BSNL ஐ காப்பாற்றுக" என்னும் JAC யின் கோஷம் தொழிற்சங்கம் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் நிறுவனத்தை இலாபகரமாக இயக்குவதற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளது என்பதின் தெளிவான அடையாளம் ஆகும். இது அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் வரையாகும். மார்ச் மாதம் நிறுவனமானது 36 பில்லியன் ரூபாய்கள் (அமெரிக்க $810 மில்லியன்) நஷ்டத்தை அறிவித்தது. தவிர்க்க முடியாமல் "BSNL ஐக் காப்பாற்றுக" என்னும் கோஷம் பிரோடா குழு வகுத்த வகையில் வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பொருளைத் தரும்.

தங்கள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வழிகாண விரும்பும் தொழிலாளர்கள் தங்கள் சுயாதீன நடவடிக்கையை தொடங்குவதற்கு இந்தியாவிலும், சர்வதேசத்திலும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளின் ஆதரவை நாட அடிப்படையான தொழிலாளர் குழுக்களை நிறுவ வேண்டும். அத்தகைய போராட்டம் வெற்றிபெறுவதற்கு, தொழிலாளர்களின் அடிப்படை சமூகத் தேவைகளுக்கு முன்னால் தனியார் இலாபத்தை அடிப்படையாக வைத்திருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைத்தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved