World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Free Julian Assange! Hands off WikiLeaks!

ஜூலியன் அசாங்கேயை விடுதலை செய்! விக்கிலீக்ஸ் மீது கை வைக்காதே!

Bill Van Auken
8 December 2010

Back to screen version

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாங்கே செவ்வாயன்று பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்க அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட அரசியல் அடக்குமுறை நடவடிக்கைக்கான நொண்டிச்சாக்கு என்பதற்கு மேலாக ஒன்றும் இல்லாதவை.

அமெரிக்க அதிகாரிகள் நிகழ்த்திய குற்றங்கள் மற்றும் சதிகளை அம்பலப்படுத்துகின்ற இரகசிய ஆவணங்களை மக்களறியச் செய்ததற்கு அசாங்கேயைத் தண்டிப்பது தான் இந்த நீதித்துறை கேலிக்கூத்தின் நோக்கம் என்பது முதல் பார்வையிலேயே தெரியக் கூடியதாகும்.

இரண்டாவதாக, அசாங்கேயை லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் (Wandsworth prison) தள்ளுவதன் மூலமாக, விக்கிலீக்ஸ் வாயை மூடிவிடலாம் என்று மட்டுமல்லாது அரசாங்க இரகசியங்கள் மற்றும் பொய்களை மூடியுள்ள மூடியை அகற்றத் துணியும் எவரையும் அச்சுறுத்தி வைப்பதற்கும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இந்த சட்டபூர்வமான இட்டுக்கட்டல் வேலைகளின் இறுதி இலக்கு அசாங்கேயை ஒரு உளவாளியாகவோ அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போனவராகவோ குற்றம்சாட்டி அமெரிக்காவில் விசாரணைக்குட்படுத்த அங்கு நாடு கடத்தச் செய்வது தான் என்பது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று.

அமெரிக்காவின் முன்னணி அரசியல்வாதிகளும் ஊடகப் புள்ளிகளும் அசாங்கேயைபோர் எதிரி அல்லதுபயங்கரவாதி என அறிவிப்பதற்கும் அவரைநாடு கடத்துவதற்கு அல்லதுபடுகொலை செய்வதற்கும் பொது அரங்கில் முன்கண்டிராத, வெட்கங்கெட்ட வகையில் ஊளையிடுவதைக் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் அசாங்கேவுக்கு நியாயமான விசாரணை நடைபெற முடியாது என்பது மட்டுமல்ல, அவர் உயிர் வாழ்வதே கூட சந்தேகத்துக்குரியதாய் ஆகி விடும்.

அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் பல தசாப்தங்கள் நடைபெற்று வந்த குற்றவியல் செயல்களுக்கு (தேர்தல் தில்லுமுல்லுகள் முதல் வலிந்து செய்த சட்டவிரோதப் போர்கள், சித்திரவதை மற்றும் சர்வதேசப் பயங்கரத்தின் மற்ற நடவடிக்கைகள் வரை) பொறுப்பான ஒரு அரசாங்கத்தின் மற்றும் ஆளும் ஸ்தாபகத்தின் பிரதிநிதிகள் தான் அசாங்கேவுக்கு மற்றும் விக்கிலீக்ஸ்க்கு எதிரான பிரச்சாரத்தின் முன்னணியில் நின்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நாடு தான், “பேரழிவு ஆயுதங்கள் மற்றும் இருந்தேயிராத பயங்கரவாத தொடர்புகள் குறித்தான முற்றுமுதலான பொய்களின் அடிப்படையில் (கடமை தவறாத ஊடகக் கூட்டாளிகள் இதனை உண்மை போல் செய்திகளை வழங்கினர்) நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய ஈராக் போருக்குள் இழுத்து விடப்பட்டது.

அரசு இரகசியங்கள் என்பதற்குப் புனிதம் சேர்த்தோ அல்லது மக்களுக்கு முற்றுமுதலான பொய்யுரைத்தோ பிரச்சாரம் செய்து இந்த குற்றங்களும் மற்ற குற்றங்களும் மறைக்கப்பட்டன, அல்லது நியாயப்படுத்தப்பட்டன. இது தான் விக்கிலீக்ஸ் மீது தாக்குதல் நடத்துவோர் அதன் வேலையை வெறுப்பதற்கும் அதனைக் கண்டு அஞ்சுவதற்குமான காரணம். அது தான் விக்கிலீக்ஸ் வேலையை மிக அவசியமானதாய் ஆக்குகின்ற காரணமும் ஆகும்.

சென்ற ஏப்ரல் மாதத்தில், விக்கிலீக்ஸ் தளம்துணைக் கொலை” (Collateral Murder) என்கிற காணொளியை வெளியிட்டது. 2007ல் பாக்தாத்தில் ஒரு ஹெலிகாப்டர் தாக்குதலில் 15 ஈராக்கியர்கள் (இவர்களில் ராய்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் உண்டு) படுகொலை செய்யப்பட்டதை இது ஆவணப்படுத்தியிருந்தது. அதன்பின் வெகுவிரைவில் இந்த காணொளியையும் பிற ஆவணங்களையும் கசிய விட்டதாய் குற்றம் சாட்டப்பட்டு பிரைவேட் பர்ஸ்ட் கிளாஸ் பிராட்லி மேனிங் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது வர்ஜினியாவின் குவாண்டிகோ சிறைச்சாலை அறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து சென்ற ஜூலையில் ஆப்கானிஸ்தானின் போர்க்கள விவரங்கள் தாங்கிய சுமார் 391,000 ஆவணங்கள் வெளியாயின. இவை பெண்டகன் மறைத்திருந்த அப்பாவிகளின் படுகொலைகளை (நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொன்று சாய்க்கப்பட்டது மற்றும் சிறப்புப் படைகளின் கொலைப் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றிருந்தன) ஆவணப்படுத்தியிருந்தது. அதன்பின் அக்டோபரில் ஈராக் போர்க்களத்தில் இருந்தான விவரங்கள் அடங்கிய 400,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் கிடைக்கச் செய்தது. இதில் அப்பாவிகளுக்கு எதிரான படுகொலைகளும் ஈராக் கைதிகளுக்கு எதிரான சித்திரவதையின் கொடூர வடிவங்களில் அமெரிக்க இராணுவம் துணைபோயிருந்ததும் ஆவணப்பட்டிருந்தன.

அரசாங்கம், சுயதணிக்கை செய்து கொள்ளும் ஊடகங்களின் உதவியுடன் (இந்த ஊடகங்களுக்குஉடன் இயைந்து செல்வது என்பது நிரந்தரமான வழமையாகி விட்டது), திட்டமிட்டு மறைத்திருந்த விவரங்களை இந்த ஆவணங்கள் பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்டின. புஷ் நிர்வாகம் மற்றும் ஒபாமா நிர்வாகம் ஆகிய இரண்டு நிர்வாகங்களுமே நிகழ்த்தியிருக்கக் கூடிய போர்க் குற்றங்களுக்கான ஒரு வலிமையான சாட்சியை அவை வழங்குகின்றன.

சென்ற மாதத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இராஜதந்திரத் துறை ஆவணங்களும் (இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் 250,000 ஆவணங்களில் 1,000க்கும் குறைவானவை) இதேபோன்ற வகையிலேயே குற்றங்கள் மற்றும் சதிகளுக்கான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. சென்ற டிசம்பரில் ஏமனைச் சேர்ந்த 50 அப்பாவி மக்கள் ஒரு அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம், சட்டவிரோத கடத்தல் மற்றும் சித்திரவதைக்காக அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்குள்ளாவதை தடுத்து நிறுத்த நெருக்குதல் பிரச்சாரங்கள் செய்யப்பட்ட விவகாரம், ஐக்கிய நாடுகள் மற்றும் அயல் அரசாங்கங்களின் அலுவலர்கள் குறித்த தனிநபர் விவரங்களை (மரபணு விவரங்கள் உட்பட) உளவு சேகரிக்க அமெரிக்க இராஜதந்திரதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டது என பல விடயங்களுக்கு இந்த ஆவணங்கள் சாட்சியமளித்தன.

அசாங்கேயின் நடவடிக்கைகள் குற்றத்தன்மை படைத்தவை என்று கூறி அவரது இரத்தத்தை கோரி ஊளையிடுவோர் தான் உண்மையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள். இவர்களால் களவாடப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை மில்லியன்களில், இல்லையென்றால் குறைந்தபட்சம் நூறாயிரக்கணக்கில், செல்லும்.

குடியரசுக் கட்சியின் வலது பிரிவினர் மட்டுமல்லாது, “தாராளவாத ஜனநாயகக் கட்சியினரும் கூட இந்த பரப்புரையில் சேர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டரான டியானே ஃபெயின்ஸ்டீனும் ஒருவர். அசாங்கேயை 1917 ஆம் ஆண்டின் ஒற்றுவேலைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில் எழுதிய பத்தியில் இவர் கூறியிருக்கிறார்.  

தேசியப் பாதுகாப்பு மற்றும்நமது முக்கியமான தேசிய நலன்களை”, அதாவது ஒரு அமெரிக்க செனட்டரும், பலமில்லியன் சொத்துடையவரும் மற்றும் செல்வம் படைத்த பெண்டகன் ஒப்பந்ததாரர் ஒருவரின் மனைவியுமான தான் குறிப்பாக மதித்துப் போற்றும் நலன்களை, குறித்து ஆஸ்திரேலியக் குடிமகனான அசாங்கே அலட்சியத்துடன் நடந்து கொண்டிருப்பதாய் ஃபெயின்ஸ்டீன் குற்றம்சாட்டுகிறார்.

திரு. அசாங்கே தான் ஒரு செய்தியாளர் எனக் கூறிக் கொள்கிறார். இதன்மூலம் தனது செயல்களில் இருந்து காத்துக் கொள்ள முதலாம் திருத்தத்தை அவர் நம்பியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஒரு செய்தியாளர் அல்ல. அவர், யார் காயப்பட்டால் நமக்கென்ன என்று, தனக்கு உடன்பாடில்லாத கொள்கைகளைக் கொண்டிருக்கும் நமது அரசாங்கத்தை சேதாரப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு கிளர்ச்சியாளர் என்றார் ஃபெயின்ஸ்டீன். 

முதலாம் திருத்தம் வழங்கக் கூடிய பேச்சு சுதந்திர உத்தரவாதம் விக்கிலீக்ஸ்க்கு பாதுகாப்பளிக்க முடியும் என்பதான கூற்றுகளை நிராகரிக்கும் ஃபெயின்ஸ்டீன், “எப்படி ஒரு கூட்டம் மிகுந்த திரையரங்கில்நெருப்பு என்று கூறி கூச்சலிடுவதற்கான உரிமத்தை முதலாம் திருத்தம் வழங்கவில்லையோ அதேபோல் அது தேசிய பாதுகாப்பை சங்கடத்தில் ஆழ்த்துவதற்கான உரிமமும் அல்ல என்று கூறினார்.

ஃபெயின்ஸ்டீன் கூறுகின்ற ஒற்றுச் சட்டம் என்பது ஒரு நீண்ட பிற்போக்கான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 1918ல் பிரபலமான தொழிலாளர் தலைவர் யூஜென் வி.டெப்ஸ் மற்றும் அவருடன் ஆயிரக்கணக்கான உலக சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பின் (International Workers of the World) அங்கத்தவர்களையும் மற்றும் பிற தொழிலாள வர்க்க போராளிகளையும் கைது செய்ய இச்சட்டம் பயன்பட்டிருந்தது.  

அடக்குமுறை அலையை சித்திரப்படுத்திய அதே போலிஸ்-அரசின், அடித்துக் கொல்லும் வெறிக்கூட்டத்தின் வகையைத் தான் இந்த செனட்டர் வார்த்தைஜாலத்தில் கூறுகிறார். நடப்பு வஞ்சம்தீர்ப்பின் ஓர்வெல்லிய தர்க்கத்தின் படி, ஆயுதமேந்தி வன்முறையிலும் சித்திரவதையிலும் ஈடுபட்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தும்கிளர்ச்சியாளர் ஒரு குற்றவாளி. அத்துடன் வெறுமனேதேசியப் பாதுகாப்பு என்னும் புனிதத்தைக் கூறி பேச்சு சுதந்திர உரிமையை தடை செய்து விடலாம்.

இது அசாங்கே மற்றும் விக்கிலீக்ஸ் உடன் முடிந்து விடுவதில்லை. அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரும் தாக்குதலுக்கு, மக்களைக் கண்டு அஞ்சி வாழும் ஒரு ஆளும் உயரடுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. அது தனது நோக்கங்களையும் செயல்களையும் மறைக்கிறது, ஏனென்றால் தாயகத்தில் சமூக பிற்போக்குவாதத்தையும் வெளியில் போரையும் பேசுகிற தனது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பது அதற்குத் தெரியும்.   

விக்கிலீக்ஸ் மீதான தாக்குதலுக்கு கோழைத்தனமான ஊடகங்களும் அமேசான் முதல் மாஸ்டர்கார்டு, விசா மற்றும் பேபால் வரையான பெருநிறுவனங்களும் உதவி செய்தன, துணைபோயின. அரசாங்க மிரட்டலின் முதல் அறிகுறியிலேயே ஒரே வரிசையில் நின்று கொண்ட இவை, விக்கிலீக்ஸ் இணைய அமைப்பின் வாயை மூடுவதற்கும் அதன் நிதியாதாரத்தைத் துண்டிப்பதற்குமான பரப்புரையில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

அரச அடக்குமுறையின் இந்த நடவடிக்கையில் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்தமாக இணையத்தின் சுதந்திரத்தையே ஒடுக்குவதற்கும், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் மற்ற வலைத் தளங்களை மூடச் செய்வதற்கும், அத்துடன் சிஐஏ, பெண்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள் மீது இன்னும் உறுதியான இரகசியத் திரையைப் போட்டு மூடுவதற்கும் மிக தொலைநோக்கிலான நடவடிக்கைக்கு மேடையமைத்துக் கொடுக்கும்.

தகவல்கள் வெளிப்படுவதன் மீது ஒரு கழுத்துப்பிடியை திணிப்பதற்கு அவசரத் தேவை தோன்றியுள்ளதாய் நிதிப் பிரபுத்துவமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் உணர்கின்றனர். அவர்களது பொருளாதார அமைப்புமுறையின் நெருக்கடியும், அதன் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கான அவர்களது முயற்சிகளும், தாயகத்திலும் சரி வெளியிலும் சரி, வர்க்கப் போராட்டங்களின் வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். இத்தகையதொரு இயக்கத்திற்கு சுதந்திரமான தகவல்களும் அரசியல் முன்னோக்கும் இல்லாது செய்வதை ஆளும் உயரடுக்கு மிக முக்கியமான பணியாகக் காண்கிறது.

இதுதான், விக்கிலீக்ஸை பாதுகாத்து ஒரு சர்வதேச பிரச்சாரத்தை துவக்குவதென்பதை, ஒவ்வொரு நாட்டிலிருக்கும் உழைக்கும் மக்களுக்கும் வாழ்வா-சாவா என்கின்ற பிரச்சினையாக ஆக்குகிறது. ஜூலியன் அசாங்கேயும் மற்றும் பிராட்லி மேனிங்கும் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கும் அத்துடன் விக்கிலீக்ஸ்க்கு எதிரான மிரட்டல் மற்றும் அடக்குமுறைப் பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களும் ஆதரவு இயக்கங்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.