World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

WikiLeaks cable exposes NATO war plan against Russia

விக்கிலீக்ஸ் கசிவுகள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ யுத்த திட்டத்தை அம்பலப்படுத்துகிறது

By Bill Van Auken
9 December 2010

Back to screen version

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை கசிவுகள், பால்டிக் அரசுகளை மையப்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான ஒரு யுத்தத்திற்காக செய்யப்பட்ட, இரகசிய நேட்டோ திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று Guardian தழில் முதலில் வெளியிடப்பட்டு, விக்கிலீக்ஸ் வலைத் தளத்திலும் பதிக்கப்பட்டிருந்த அந்த கசிவுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் அதிகரித்து வரும் புவி-மூலோபாய பதற்றங்களை அடிக்கோடிடுகிறது. ரஷ்யாவுடனான உறவுகளில் ஒரு "புதிய தொடக்கத்தை" ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. இது புஷ் நிர்வாகத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த முரண்பாடுகளைச் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது

முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுக்களுக்குள் ரஷ்யாவினால் ஏதேனும் திடீர் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டால், உடனடியாக அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் போலாந்து துருப்புகளின் ஒன்பது பிரிவுகளைக் களத்தில் இறக்கி, ரஷ்யாவுடனான ஒரு முழு-அளவு யுத்தத்திற்கு செய்யப்பட்டிருந்த தயாரிப்புகளை அந்த இரகசிய திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடற்தாக்குதல் தளவாடங்களைப் பெற ஜேர்மன் மற்றும் போலாந்து துறைமுகங்களைப் பயன்படுத்தவும், ரஷ்ய படைகளுடன் யுத்தம் செய்ய அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் யுத்தக்கப்பல்களை நிலைநிறுத்தவும், அந்த திட்டங்கள் குறிப்பிடுகின்றன.

உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத நாடுகளுக்கு இடையில் ஏற்படும் இதுபோன்ற ஓர் ஆயுதமேந்திய மோதலினால் ஏற்படக்கூடிய பெரும் பேரழிவுமிக்க விளைவுகளைக் குறித்து அந்த கசிவுகளில் ஓர் அறிகுறியும் இல்லை.

மாஸ்கோவிலுள்ள சில வெளியுறவு விவகாரத்துறை ஆய்வாளர்கள், இந்த முன்கூட்டிய திட்டங்கள் குறித்து ரஷ்ய உளவுத்துறை தெரிந்து வைத்திருந்ததாக குறிப்பிட்டனர். விக்கிலீக்ஸ் மூலமாக பொதுப்பார்வைக்கு வெளிவந்திருப்பது, ரஷ்ய அதிகாரிகளின் கண்டன அறிக்கைகளையும், நேட்டோவிடமிருந்து விளக்கத்தைக் கோரும் முறையீடுகளையும் எழுப்பியுள்ளது

ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க துருப்புகளை அனுப்புவதற்கான முன்கூட்டிய திட்டங்கள், 2008 ஆகஸ்டில் நிகழ்ந்த ரஷ்ய-ஜோர்ஜிய மோதலை ஒட்டி உருவாக்கப்பட்டிருந்தது. அந்த மோதலைத் தொடர்ந்து நடந்த, தெற்கு ஒஷிடியாவிலிருந்து பிரிந்துசென்ற பிராந்தியத்தைத் தாக்குவதற்கான ஜோர்ஜியாவின் முயற்சி தோல்வி அடைந்தது.

கசிவுகளில் உள்ளபடி, 2004இல் நேட்டோ கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்ட லாத்வியா, எஸ்தோபியா மற்றும் லித்தூனியா அரசாங்காங்கள், ரஷ்யாவின் ஒரு தாக்குதலுக்கு எதிராக, தங்கள் பிராந்தியங்களைப் பாதுகாக்கும் ஒரு நேட்டோ மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளிடம் மன்றாடத் தொடங்கின.

தெற்கு ஒஷிடியாவில் சண்டை நடந்து கொண்டிருந்த போதே கூட, ரிகாவிலிருந்த அரசாங்கத்தின் கவலைகள் குறித்து லாட்வியாவில் இருந்த அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்குத் தகவல்கள் அளிக்க தொடங்கியது. “இது அவர்களாக தான் இருக்க முடியும்” என்ற உணர்வை வெளிப்படுத்திய லாட்வியா தலைவர்களுடன் நடந்த விவாதங்களை, ஓர் ஆகஸ்ட் 15, 2008 செய்தி மேற்கோளிட்டுக் காட்டியது.“தங்களின் பாதுகாப்பிற்கு நேட்டோ உறுப்புநாடுகள் உத்தரவாதம் அளிக்கும் என்று அவர்கள் நம்பி கொண்டிருந்ததை அவை உறுதிப்படுத்துமா என்பதில் லாட்வியர்கள் கவலைக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று செய்திகள் வெளியாயின.  

இரகசியமானதென்றும், பிரத்யேகமானதென்றும் குறிக்கப்பட்ட அந்த ஆவணங்கள், ரஷ்ய-ஜோர்ஜிய முரண்பாட்டை ஒட்டி, பால்டிக் அரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த முதல் கோரிக்கைகளிலிருந்து, அமெரிக்க கொள்கையின் பரிணாமத்தைக் காட்டுகின்றன. அது ரஷ்யாவுடனான ஓர் இராணுவ மோதலுக்காக, ஜனவரி 2010இல் இரகசியமாக ஏற்கப்பட்ட ஒரு முன்கூட்டிய திட்டத்தின் விரிவாக்கமாக இருந்தது.

பால்டிக் அரசுகளால் கோரப்பட்ட யுத்த திட்டங்களை, அமெரிக்க அதிகாரிகள் கொண்டு வர வேண்டியதிருந்தாலும் கூட, மாஸ்கோவை வெளிப்படையாக ஆத்திரமூட்ட அவர்கள் விரும்பவில்லை என்பதை கசிவுகள் குறிப்பிடுகின்றன. இரகசியமானது என்ற பிரிவின்கீழ், அமெரிக்க தூதரிடமிருந்து நேட்டோவிற்கு அனுப்பப்பட்ட ஓர் அறிக்கை, மூன்று பால்டிக் அரசு தூதர்களுடனான ஒரு சந்திப்பை விளக்குகிறது; மேலும், “நாம் மீண்டும் பனிப்போர் காலத்திற்கு திரும்பவில்லை" என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.   

நேட்டோவும், ரஷ்யாவும் 1997இல் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின்கீழ் உத்தியோகபூர்வ உறவுகளைக் கொண்டிருந்தன. அந்த உடன்படிக்கை, “நேட்டோவும், ரஷ்யாவும் ஒன்றையொன்று எதிரிகளாக கருதாது,” என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டது. மாஸ்கோவுடனான உறவுகளைப் புரட்டி போடாமல், தெளிவாக ரஷ்யாவை ஓர் எதிரியாக கொண்டு வருவதற்கான ஒரு கொள்கையை எவ்வாறு வரைவது என்பது தான் அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்டிருந்த பிரச்சினையாக இருந்தது.     

அக்டோபர் 2009இல் வரையப்பட்ட ஒரு கசிவில், நேட்டோவின் இவோ டால்டருக்கு அமெரிக்க தூதர் பிரச்சினையை எடுத்துரைக்கிறார். “நேட்டோவின் 5ஆம் வரைவின்படி (தாக்குதலின்கீழ் இருக்கும் பிற உறுப்புநாடுகளின் பாதுகாப்பிற்காக, ஏனைய அனைத்து நேட்டோ நாடுகளும் முன்வர வேண்டும் என்று அது கட்டாயப்படுத்துகிறது) பால்டிக் அரசுகளுக்காக முன்கூட்டிய திட்டமிடலைச் செய்ய, எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்தூனியா தலைவர்கள் கடுமையாக அழுத்தம் அளித்து வருகிறார்கள்,” என்று அவர் தொடங்கி இருந்தார். ஜனாதிபதி பராக் ஒபாமாவும், வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்களுக்குத் அவர்களின் ஆதரவைத் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

ரஷ்யா ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அதுபோன்ற திட்டங்களுக்குக் குறிப்பிட்டுக்காட்ட வேண்டிய (இதை ஜேர்மனியும், ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளும் எதிர்த்தன) அவசியம் இருந்தது தான் பிரச்சினையாக இருந்தது,” என்று டால்டர் குறிப்பிட்டுக் காட்டினார். அவர் எழுதியதாவது: “ரஷ்யா-ஜோர்ஜியா யுத்தத்தின் மீதான விவாதங்களின் போது நாம் பார்த்ததைப் போல, நேச நாடுகளும், ரஷ்யாவும் ஒரு புதிய பனிப்போரை நோக்கி செல்கிறார்கள் என்ற கருத்து ஏற்படாமல் தவிர்க்கவும் கூட, பல நேசநாடுகள் பெரும் சிரமத்தை ஏற்க வேண்டி இருக்கும்.” 

பால்டிக் நாடுகளையும் சேர்த்துக் கொள்ள, போலாந்தின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே இருக்கும் ஒரு முன்கூட்டிய திட்டத்தை விரிவாக்குவதன் மூலமாக, வாஷிங்டன் முரண்பாட்டின் வட்டத்திற்குள் வெளிப்படையாகவே நுழைய முடியும் அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளைக் குறிப்பிடாமல், ஆனால் பால்டிக் நாடுகளுக்குப் பொருந்தும் வகையில், ஆக்கிரப்பின்மீது நேட்டோவின் ஒரு பிரதிபலிப்பாக "பொது திட்டங்களைக்" கையாள்வதன் மூலமாக உள்ளே வரமுடியும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ஒரு முன்கூட்டிய திட்டம் இல்லையென்றால், பால்டிக் அரசுகள் அவற்றின் பாதுகாப்பிற்காக நேட்டோவின் மீது நம்பிக்கை இழந்துவிடும்; மேலும் "அவை வெளிநாட்டு இராணுவ திறன்களை நாடாமல், அவற்றின் பிராந்திய பாதுகாப்பிற்கான ஒரு பிரத்யேக படை வடிவத்தை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தக்கூடும்,” என்பது டால்டரினால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்க தூதர் அவர் மனதில் கொண்டிருந்த அந்த குறிப்பிட்ட "வெளிநாட்டு இராணுவ உதவியின்" பாத்திரம் என்பது, லித்தூனியன், லாத்வியன் மற்றும் எஸ்தோனியன் துருப்புகளை அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் நிலைநிறுத்துவதைத் தான் கொண்டிருந்தது.

போலந்திற்கான முன்கூட்டிய திட்டத்தில்—"Eagle Guardian”என்பது இதன் இரகசிய திட்டபெயர்—பால்டிக் அரசுகளையும் சேர்த்துக் கொள்ள, அதை விரிவாக்குவதற்கான யோசனையை முதலில் ஜேர்மனி தான் எழுப்பியது என்பதையும் கசிவு குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த பாதையைத் தான் இறுதியாக வாஷிங்டன் ஆதரித்தது. ஜனவரி 22, 2010இல் நேட்டோ அந்த திட்டத்தை அங்கீகரித்தது, ஆனால் அது எந்த பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நேட்டோ நாடுகளின் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கும், மாஸ்கோவிலிருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கும், ஹிலாரி கிளின்டனால் கையெழுத்திடப்பட்டு வெளியுறவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு ஜனவரி 26 கசிவு, அந்த உடன்படிக்கை மிகவும் இரகசியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியது.

இதுபோன்ற திட்டங்கள் வெளியில் விவாதிக்கப்படக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்த இராணுவ திட்டங்கள் நேட்டோ இரகசிய (NATO SECRET) மட்டத்தில் பிரத்யேகமானவையாக இருக்கின்றன. முன்கூட்டிய திட்டங்கள் மீதான பொதுவிவாதம், நேட்டோவின் திட்டமிடல் நிகழ்முறைகளுக்குள் உட்பார்வையை அளித்து, அவற்றின் இராணுவ மதிப்பை குழிதோண்டி புதைத்துவிடும். இது எல்லா நேசநாடுகளின் பாதுகாப்பையும் பலவீனப்படுத்தும்,” என்றும் அந்த கசிவு குறிப்பிடுகிறது

அந்த ஆவணம் மேலும் குறிப்பிடுவதாவது: “முன்கூட்டிய திட்டமிடல் மீதான ஒரு பொது விவாதம், தேவையில்லாமல் நேட்டோவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கச் செய்யவும் இட்டுச் செல்லக்கூடும். நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பொதுவான நலன்களில் நடைமுறை கூட்டுறவை மேம்படுத்த நாம் வேலை செய்துவரும் நிலையில், இதுபோன்ற ஒன்றை நாம் தவிர்க்க முயல வேண்டும்.”

முன்கூட்டிய திட்டங்கள் மீதான ஊடகத்தின் எந்த விசாரணைகளையும் கையாள்வதற்கான பரிந்துரைகளுடன் அந்த கசிவு முடிகிறது. அது குறிப்பிடுவதாவது: “நேட்டோவில் அதுபோன்ற எந்த திட்டங்களும் விவாதிக்கப்படவில்லை" மற்றும் "நேட்டோ தொடர்ந்து அதன் திட்டங்களை மறுஆய்வு செய்து மாற்றி அமைத்து வருகிறது" என்பன போன்ற அர்த்தமற்ற-பதில்கள் அறிவுறுத்தப்படுகின்றன. "நேட்டோ வேறெந்த நாட்டையும்—குறிப்பாக, இந்த விஷயத்தில் ரஷ்யாவை—'குறி' வைத்து திட்டமிடவில்லை" என்பதை வலியுறுத்த இராஜதந்திரிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது.”   

மேற்கத்திய நேச நாடுகள், முன்கூட்டிய பால்டிக் (contingency plan) திட்டத்தைக் கைவிட மாஸ்கோ வலியுறுத்தும் என்றும் செவ்வாயன்று நேட்டோவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்தார். லிஸ்பனில் சமீபத்தில் நடந்த நேட்டோ மாநாட்டில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுடன் இந்த திட்டம் நேரடியாக முரண்பாட்டில் நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற திட்டங்கள் கைவிடப்படும் என்பதற்கும், ரஷ்யா நேட்டோவின் ஓர் எதிரியல்ல என்பதற்கும் ஏதாவதொரு வகையான உத்தரவாதங்களை நாம் பெற வேண்டும்,” என்று ரஷ்ய தூதர் திமெட்ரி ரோகோஜின் தெரிவித்தார்.“நேட்டோ-ரஷ்ய கவுன்சிலில் இருக்கும் நம்முடைய கூட்டாளிகள், லிஸ்பன் தான் அனைத்து வேறுபாடுகளையும் செய்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.”

முன்கூட்டிய திட்டம் வேறெந்த நாட்டையும் குறிவைக்கவில்லை என்ற நேட்டோவின் முறையீடுகளை ரோகோஜின் நிராகரித்தார். "அப்படியானால் இதுபோன்றவொரு பாதுகாப்பு யாருக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறது? ஸ்வீடன், பின்லாந்து, க்ரீன்லாந்து, ஐஸ்லாந்திற்கு எதிராகவா, துருவ கரடிகளுக்கு எதிராகவா அல்லது ரஷ்ய கரடிக்கு எதிராகவா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ஆவணங்கள் "நிறைய கேள்விகளையும், குழப்பங்களையும்" எழுப்பிவிட்டிருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறியதாக Guardian இதழ் மேற்கோளிட்டிருந்தது.

"ஒன்றுக்கொன்று எதிராக நோக்கம் கொண்ட எந்த இராணுவ திட்டமிடுதலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த பிரச்சினையை, ரஷ்யா தொடர்ந்து எழுப்பி வருகிறது" என்ற நபர் குறிப்பிட்டார்

அணுஆயுத குறைப்பு மீதான ஒரு புதிய START உடன்படிக்கையை அமெரிக்க செனட் ஒப்புக்கொள்ளாதது மற்றும் ஐரோப்பாவில் ஓர் ஏவுகணை-இல்லா வலையமைப்பை (anti-missile network) அமைப்பதில் இருக்கும் வாஷிங்டனின் முரண்பாடுகள் ஆகியவற்றின்மீது வாஷிங்டனுக்கும், மாஸ்கோவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகளின்கீழ், இந்த வெளியீடுகள் வெளியாகியுள்ளன.    

மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கூட்டுறவில் நிலைத்துநிற்காமல், மத்திய ஆசியாவில் அதன் செல்வாக்கை ஸ்திரப்படுத்திக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் செய்யப்படும் மூலோபாய உந்துதலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்தமும் முரண்பாட்டின் உறுதியான ஆதாரமாக உள்ளன.

இத்தகைய அதிகரித்துவரும் பதற்றங்களை அடிக்கோடிட்டு, ஜப்பான் கடலில் இரண்டு ரஷ்ய  Ilyushin-38 நீர்மூழ்கிகப்பல் அழிப்பு விமானங்களைப் பறக்கவிட்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகள் அப்பிராந்தியத்தில் யுத்த விளையாட்டுக்களை கைவிட்டதாக புதனன்று ரஷ்ய கடற்படை அறிவித்தது.

அப்பிராந்தியம் எங்கள் பொறுப்பில் இருக்கும் பகுதியாகும்,” என்று தெரிவித்த ரஷ்ய கடற்படையின் ஒரு செய்திதொடர்பாளர் ரோமன் மார்கோவ், தொடர்ந்து கூறுகையில்,“ரஷ்ய பசிபிக் கடற்படையின் வழக்கமான செயல்பாடுகளுக்கான ஒரு பிராந்தியத்தில் அந்த விமானங்கள் திட்டமிட்டு பறக்கவிடப்பட்டன. எங்களுடைய விமானிகள் எவ்விதமான சர்வதேச விமான எல்லைக்கோட்டையும் மீறவில்லை," என்று தெரிவித்தார்.   

அந்த இராணுவ பயிற்சியில் சுமார் 34,000 ஜப்பானியர்களும், 10,000த்திற்கும் மேலான அமெரிக்க இராணுவ நபர்களும், அவர்களுடன் பல யுத்தக்கப்பல்களும், நூற்றுக்கணக்கான யுத்த விமானங்களும் உள்ளடங்கி இருந்தன. ரஷ்ய விமானம் அமெரிக்கா மற்றும் ஜப்பானிய திறன்களைக் குறித்து இரகசிய தகவல்களைச் சேகரிக்கக்கூடும் என்ற விவகாரத்தால் அவை கைவிடப்பட்டன.

ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தின் தெற்கில் உள்ள தீவுக்கூட்டங்களின் கட்டுப்பாடு விஷயத்தில் மாஸ்கோவிற்கும், டோக்கியோவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளின்மீது, சமீபத்திய வாரங்களில் அவற்றிற்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. ரஷ்யாவில் தெற்கு குரிலெஸ் என்றும், ஜப்பானில் வடக்கு பிராந்தியங்கள் என்றும் அறியப்படும் அவை, இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவியத் படைகளால் கைப்பற்றப்பட்டன.

கடந்த மாதம், ரஷ்யாவின் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வதேவ் இந்த தீவுகளில் ஒன்றிற்கு ஒரு திடீர் பயணம் மேற்கொண்டார். இது ஜப்பானிடமிருந்து கோபமான எதிர்ப்புகளை எழுப்பியது. கடந்த வாரயிறுதியில், ஒரு வெளிப்படையான பிரதிபலிப்பில், ஜப்பானிய வெளியுறவுத்துறை மந்திரி செய்ஜி மேய்ஹாரா ஒரு ஜப்பானிய கடற்படை விமானத்தில் அந்த பழைய தீவுகளின்மீது பறந்து சென்றார். பெயர்குறிப்பிட விரும்பாத ரஷ்ய அதிகாரி ஒருவர் அந்த பயணத்திற்குப் பிரதிபலிப்பாக கூறுகையில்: “ரஷ்யாவின் இயற்கை அழகைப் பார்த்து ரசிக்க, ஜப்பான் உட்பட, யாருக்கும் தடையில்லை" என்றார்

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ஏனைய வெளியீடுகள், நேட்டோ நேசநாடுகளுக்குள் ரஷ்யாவுடனான உறவுகளில் நிலவும் பதற்றங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, பாரிசிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட பெப்ரவரி 2010 கசிவில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ரோபர்ட் கேட்ஸிற்கும், பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி எர்வே மோரனுக்கும் இடையிலான ஒரு மோதலை ஆவணப்படுத்துகிறது. இது மாஸ்கோவிற்கு ஆயுதங்களை விற்பது குறித்த பிரெஞ்சு திட்டங்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது

அந்த கசிவுகளின்படி, “ரஷ்யாவிற்கும், நம்முடைய மத்திய மற்றும் கிழக்கத்திய ஐரோப்பிய நேச நாடுகளுக்கும் ஒரு கூட்டு எச்சரிக்கை அளிக்கும் வகையில், ரஷ்யாவிற்கு ஒரு மிஸ்ட்ரல்-வகை ஹெலிகாப்டர் கேரியரை விற்பதன்மீது, அமெரிக்காவின் கவலைகளை கேட்ஸ் வெளியிட்டார். 2008இல் ரஷ்யாவிற்கும், ஜோர்ஜியாவிற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில், மாஸ்கோ அந்த உடன்பாட்டில் நிற்கவில்லை என்று பெண்டகன் தலைவர் அதை நினைப்பூட்டும் செயலில் இறங்கினார்.  

"நாங்கள் ஒரு கூட்டணியை விரும்புகிறோம், ஆனால் அவர்களை நாங்கள் நம்பவில்லை என்று நாங்கள் எவ்வாறு கூற முடியும்" என்று மோரன் அலங்கார வார்த்தைகளுடன் பதிலளித்தார் என்று கசிவுகள் குறிப்பிடுகின்றன.

கேட்ஸ், "மோரனின் வார்த்தையை ஏற்கவில்லை" என்பதற்கும் மேலாக, ஓர் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறை அர்த்தமற்றதும், தேவையற்றதுமாகும் என்ற கண்ணோட்டத்தை மோரன் வெளிப்படுத்தியதையும் கசிவு மேற்கோளிட்டுக் காட்டி இருந்தது.  

அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு இடையில் நடந்த பின்புல விவாதங்களைக் குறிப்பிடும் ஓர் இணைப்புக் குறிப்பு குறிப்பிடுவதாவது: “சந்திப்புகளுக்குப் பின்னர், ஏவுகணை பாதுகாப்பு குறித்த மொரனின் சிக்கலான கருத்துக்கள் MoD மற்றும் MFAஇன் மூத்த அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது அவரின் சொந்த கண்ணோட்டங்களாகும் என்பதுடன், அவர் என்ன கூறியிருக்கிறாரோ அதை அமெரிக்கா முக்கியமாக 'அழித்துவிட' வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.”