World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Bangladesh police shoot striking garment workers

பங்களாதேஷ் பொலிஸ் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை சுட்டது

By Wimal Perera
15 December 2010

Back to screen version

பங்களாதேஷில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவாமி லீக் அரசாங்கத்தால் அணிதிரட்டப்பட்ட பொலிசார், வேலை நிறுத்தம் செய்த ஆடைத்தொழில் தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக ஐந்து துப்பாக்கிக் குண்டுகளை பிரயோகித்து, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதையடுத்து, நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதோடு குறைந்தபட்சம் 150 பேர் காயமடைந்தனர். வறிய மட்டத்திலான சம்பளத்துக்கு எதிராக போராடி, மறியலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, உலகம் பூராவும் தொழிலாளர்களுக்கு எதிராக அரச வன்முறைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படுவது வளர்ச்சிகண்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இரு நாட்களின் பின்னர், குறைந்தபட்சம் 24 உயிர்களைக் காவுகொண்ட நேற்று நடந்த தொழிற்சாலை தீயினால், நாட்டின் ஆடைத்தொழிலின் கடும் உழைப்புத் தளங்களில் உள்ள பெருமளவில் பெண் தொழிலாளர் படை எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலைமைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. வடக்கு டாக்காவில் உள்ள இந்த பத்து மாடிக் கட்டிடத் தொழிற்சாலையில், நிர்வாகம் வெளியேறும் வாசல்களை முடியிருந்ததால், தொழிலாளர்கள் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதிக்கத் தள்ளப்பட்டனர்.

ஜூலை மாதத்தில் அரசாங்கம், முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் உடன்பாடு காணப்பட்ட ஒரு சம்பள உடன்படிக்கையை, பங்களாதேஷின் சுமார் 4,500 ஆடைத் தொழிற்சாலைகள் மதிக்க மறுத்ததால் கடந்த வெள்ளிக் கிழமை தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் வெடித்ததை அடுத்தே இந்த பொலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த உடன்படிக்கையின் கீழ், குறைந்தபட்ச சம்பளம் மாதத்துக்கு சுமார் 43 அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்தப்படவிருந்தது. இந்தத் தொகையும் கூட, வறுமைக் கோட்டுக்கும் தொழிலாளர்கள் கோரிய தொகைக்கும் மிகவும் கீழேயே உள்ளது.

அமைதியான மறியல் போராட்டங்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்திய காரணத்தினாலேயே ஞாயிற்றுக்கிழமை மோதல்கள் வெடித்ததாக ஆடைத்தொழில் தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறினர். சிட்டகோங்கில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான யோங்கோன் தொழிற்சாலைகள் இந்த அமைதியின்மைக்கு ஒரு காரணமாகும். இந்த வார முற்பகுதியில், புதிய சம்பளத் திட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, 250 டகா (3.5 அமெரிக்க சதங்கள்) பகல் உணவு கொடுப்பணவு இரத்துச் செய்யப்பட்டது. அதை தொடர்ந்தும் வழங்கவேண்டுமென கோரி தொழிலாளர்கள் வெளியேறினர்.

தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வந்த போது, 11 யோங்கோன் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் ஆதரவைத் திரட்டத் தொடங்கியதோடு பிரதான பாதைகளை மூடினர். கூட்டத்தினர் மீது சுட்ட பொலிசார் நால்வரைக் கொன்றதோடு குறைந்தபட்சம் 150 பேருக்கு காயமேற்படுத்தினர். டாக்கா மற்றும் நாராயணகஞ் ஆகிய இடங்களில் உள்ள ஏற்றுமதி முன்னெடுப்பு வலயங்களில் பொலிசாருடன் நடந்த ஏனைய மோதல்களில் சுமார் 100 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 65 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் ஷேக் ஹிஸினா வஜிட், தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி பதிலிறுத்தார். ஊடக செய்திகளின்படி, அவர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை அடையாளங் கண்டு அவர்களுக்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். தேசத்தின் உயர்மட்ட வருமானத் துறையில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய சதிகளைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். உள்துறை அமைச்சர் சஹாரா காடுன், தொழிலாளர்கள் குற்றவாளிகள் மற்றும் சூழ்ச்சிக்காரர்கள் என்று கண்டனம் செய்ததோடு அவர்களை பயங்கரவாதிகள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பொலிசார் கொலைகளை செய்திருந்த போதிலும், திங்கள் கிழமையும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்தனர். சுமார் 5,000 ஆடைத் தொழிலாளர்கள் வடக்கு உற்பத்தி மாவட்டமான காஸிபூரில் உள்ளமர்வு போராட்டத்தில் ஈடுபட்ட அதே வேளை, டாகாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அஷூலியா ஏற்றுமதி வலயத்தினுள் ஒரு தொழிற்சாலையில் மேலும் 5,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். புதிய சம்பளத் திட்டங்களை அமுல்படுத்துவதாக முதலாளிமார் வாக்குறுதியளித்ததை அடுத்து, செவ்வாயன்று சில உற்பத்திகள் மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொலிஸ் சுமார் 33,000 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. உலக சோசலிச வலைத் தளத்துக்கு கிடைத்த செய்திகளின்படி, நேற்று நள்ளிரவுக்குப் பின்னர், ஆடைத்தொழில் தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் தலைவர் மொஷ்ரஃபா மிஷூவை டாகாவில் அவரது வீட்டில் வைத்து டசின்கணக்கான பொலிசார் கைது செய்தனர். அதிலிருந்து பொலிசார் அவர் மீது தொழிலாளர்களை வெறித்தனத்துக்குத் தூண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

இந்த பொலிஸ் ஒடுக்குமுறையானது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் வேலை நிறுத்தம் செய்யும் ஆடைத்துறை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் வழிமுறைகள் உக்கிரமடைந்துள்ளதை காட்டுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் முற்பகுதியிலும் பொல்லுகள், கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் குண்டுகளுடன் ஆயுபாணிகளாகியிருந்த, இழிபுகழ்பெற்ற துரித நடவடிக்கை படை என்ற கலகம் அடக்கும் பொலிசாருடன் பத்தாயிரக்கணக்கான ஆடைத்தொழில் தொழிலாளர்கள் களத்தில் போராடினார்கள்.

விலைவாசியும் வாழைக்கைச் செலவும் அதிகரித்து வந்த போதிலும், 2006ல் குறைந்தபட்ச மாத சம்பளம் 23 அமெரிக்க டொலராக (1,662 டகா) தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், ஆடைத்துறை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வே கிடைக்கவில்லை. 73 டொலர் சம்பள உயர்வு கோரி ஐந்து நாட்களாக நடத்திய கசப்பான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து, தொழிற்சங்கங்கள் வெறும் 43 டொலருக்கு உடன்பட்டதோடு எந்தவொரு மேலதிக தொழிற்சங்க நடவடிக்கையையும் எடுக்காமல் விட்டன.

புதிய ஊதிய மட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட உடன், தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்காக கம்பனிகள் ஒரு தரப்படுத்தல் முறைமையை திணித்தன. மொஹாகாலியின் ரஹ்மான் தொழிற்சாலையின் டெல்வார் ஹொசைன் என்ற தொழிலாளி, நியூ ஏஜ் பத்திரிகைக்கு விளக்குகையில், இயந்திர இயக்குனராக தனக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் இருந்த போதிலும், தன்னை ஐந்தாவது தரத்தில் தள்ள, தனது சம்பளத்தை வெட்டிவிட்டதாக தெரிவித்தார். புதிய சம்பளத் திட்டம் சில பகுதி தொழிலாளர்களுக்கு மொத்த சம்பளப் பொதியில் உண்மையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என திங்களன்று டெயிலி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அரசாங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்பட்ட வேலை நிறுத்த மற்றும் போராட்ட அலைகளை நசுக்குவதற்கு தயாராகி வருகின்றது. அக்டோபரில், அது ஏற்றுமதி முன்னெடுப்பு வலயங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக ஒரு தொழிற்துறை பொலிஸை ஸ்தாபித்தது. அது ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் மென்மையான மற்றும் தடைகளற்ற உற்பத்திகளை பேணுவதற்கு உதவும் என ஹஸீனா பிரகடனம் செய்தார்.

அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக சம்பளத்தை குறைந்த மட்டத்தில் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளது. ஜூலை மற்றும் நவம்பருக்கு இடையில், ஆடைத்துறை ஏற்றுமதி வருமானம் 6.4 பில்லியன் டொலர்கள் வரை 36 சதவீத அதிகரிப்பை எட்டியது. கடந்த ஆண்டு நாட்டின் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை ஆடைத்தொழிற்சாலைகள் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாறாக, அரசாங்கம் கூறிக்கொள்வது போல், இந்த பொருளாதார வளர்ச்சியானது பங்களாதேஷ் நிறுவன உரிமையாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மட்டுமே இலாபத்தை கொடுக்கின்றது.

பல சம்பவங்களில் புதியதாக நேற்று இடம்பெற்ற மரணத் தீ, ஆடைத்துறை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரமின்மை மற்றும் ஆபத்து நிலைமைகளை கோடிட்டுக் காட்டுகிறது. தலைநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷுலியா தொழிற்துறை பிரதேசத்தில் உள்ள ஹா-மீன் குழு தொழிற்சாலையில் பகல் உணவு வேளையிலேயே தீ ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் சுமார் 5,000 பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக காற்சட்டைகளை உற்பத்தி செய்யும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு வரை தீயணைப்புப் படையினர் நெருப்புடன் போராடிக்கொண்டிருந்தனர். தீ கடைசி மாடியில் உள்ள உணவு மண்டபத்துக்குப் பரவியிருந்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

1990களில் இருந்தே குறைந்தபட்சம் 240 ஆடைத்துறை தொழிலாளர்கள், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆயினும், முதலாளிமாரின் அக்கறை, சாத்தியமானளவு விரைவில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதிலேயே உள்ளது. கட்டிடத்தின் முதல் எட்டு மாடிகளில் உற்பத்தியை கூடுமானவரை இன்றே ஆரம்பிக்க கம்பனி நிர்வாகம் எதிர்பார்ப்பதாக ஹா-மீன் தொழிற்சாலையின் முகாமையாளர் நிருபர்களுக்குத் தெரிவித்தார். இடை நிறுத்தப்பட்டுள்ள சகல வேலைகளையும் முடிக்க கம்பனி முயற்சிக்கும் என்றார். இந்தக் கம்பனியும் பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியினதும் குடும்பத்துக்கு 100,000 டகா (சுமார் 1,400 டொலர்) நட்ட ஈடாக கொடுப்பதாக தெரிவித்தது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதலுக்கு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனம் ஆதரவளிக்கின்றது. நவம்பர் 27 அன்று ஒரு வர்த்தகர்கள் ஒன்றுகூடலில் பேசிய, எதிர்க் கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவர் கலிடா ஸியா, “பிரதான பொருளாதார துறைகளில் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சிகளைக் தடுக்குமாறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டெயிலி ஸ்டார் பத்திரிகையின் நேற்றைய ஆசிரியர் தலைப்பு, “நாம் ஆர்.எம்.ஜி. இல் (ரெடி-மேட் ஆடை தொழிற்சாலை) போதுமானளவு கிளர்ச்சிகளை பார்த்துவிட்டோம்என அறிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் ஜூலையில் செய்தது போல், சிறந்த சம்பளத்துக்கான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, திடீர் போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முதலாளிமாருக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கின்றது. பங்களாதேஷ் நெசவு மற்றும் ஆடை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹ்புபுர் ரஹ்மான் இஸ்மாயில், இன்னுமொரு பிரமாண்டமான வெடிப்பு ஏற்படலாம் என எச்சரித்து, புதிய சம்பள திட்டங்களை அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். பங்களாதேஷ் சொமிலிடோ ஆடைத்தொழில் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நஹிதுல் இஸ்லாம் நயன், தொழில் நீதிமன்றங்களில் பொருத்தமற்ற தரப்படுத்தலுக்கு எதிராக தொழிலாளர்கள் முறைப்பாடு செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்தார். இந்தப் பிரேரணை எதிர்ப்பு போராட்டங்களுக்கு முடிவுகட்டவும் தொழிலாளர்களை போலி சட்ட மோதல்களுக்குள் இழுத்துத் தள்ளவும் திட்டமிடப்பட்டதாகும்.

இந்தக் கசப்பான அனுபவங்களில் இருந்து ஆடைத்தொழில் தொழிலாளர்களும் ஏனைய சகல தொழிலாளர்களும் படிப்பினைகளைப் பெற வேண்டும். இத்தகைய தொழிற்சங்க அதிகாரத்துவ வாதிகளும் மற்றும் உலகம் பூராவும் உள்ள அவர்களது சமதரப்பினரும், தமது முதலாளிமார் மற்றும் அரசாங்கங்களின் இலாப நலன்களுக்காக செயற்படுவதோடு, தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர், நாட்டுக்கு நாடு எதிரிகளாக இருத்துகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொடங்கி இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா வரை, பூகோளம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் குவிகின்ற நிலையில், உழைக்கும் மக்கள் தேசிய வரம்புகளை மீறி தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த புதிய அமைப்புக்களை கட்டியெழுப்ப வேண்டும். இதன் அர்த்தம், ஒரு சில செல்வந்த தட்டுக்களின் இலாப தேவைகளுக்கு மாறாக, தொழிலாள வர்க்கத்தின், பெரும்பான்மை வெகுஜனங்களின் தேவைகளை இட்டு நிரப்புவதற்காக சமுதாயத்தை முழுமையாக மறு ஒழுங்கு செய்வதன் பேரில் ஒரு அனைத்துலகவாத சோசலிச முன்நோக்கின் பக்கம் திரும்புவதேயாகும்.