World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

 

The New York Times and WikiLeaks


 

நியூயோர்க் டைம்ஸும்  விக்கிலீக்ஸும்

Joseph Kishore
16 December 2010

Back to screen version

விக்கிலீக்ஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயை தண்டிப்பதற்கு நடைபெற்று வரும் பிரச்சாரத்தில், அமெரிக்க தாராளவாதத்தின் பிரதானக் குரலான நியூயோர்க் டைம்ஸ் குறிப்பாக ஒரு கீழ்த்தரமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் ஆரம்ப வெளியீடுகளைக் கண்டது முதல், இந்த வெளியீடுகளின் முக்கியத்துவத்தை தணித்துக் காட்ட டைம்ஸ் முனைந்து வந்திருக்கிறது. விக்கிலீக்ஸ் கசிவுகள் குறித்து புதிய கட்டுரைகள் வருவதை பெருமளவு நிறுத்தி விட்டிருக்கிறது என்பதோடு, அளிக்கும் செய்திகளையும் உள்பக்கங்களில் போடுவதோடு மட்டுப்படுத்திக் கொள்கிறது. ஆரம்பத்தில் இருந்தே, இது அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவதற்கே தனது செய்தியளிப்பை வடிவமைத்திருந்தது. அமெரிக்க குற்றத்தன்மையின் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அசாங்கேயை குறிவைத்து சர்வதேசப் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கும் விடயத்தில், டைம்ஸ் திட்டமிட்டு  மவுனம் சாதித்து வந்திருக்கிறது. அசாங்கே கைது குறித்தோ அல்லது அவர் கொல்லப்பட வேண்டும் என்றும் விக்கிலீக்ஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகப் பிரிவுகளில் இருந்து எழுகின்ற கோரிக்கைகள் குறித்தோ ஒரு தலையங்கத்தைக் கூட அது இதுவரை பிரசுரித்திருக்கவில்லை. இது அந்த பிரச்சாரத்திற்கு மவுனமாய் ஒப்புதல் அளிப்பதற்கு ஒப்பானதாகும்.

இரகசிய ஆவணங்கள் குறித்து செய்தி வெளியிட டைம்ஸுக்கு எந்த உரிமையும் இல்லை என்று வாதிடுகிற தொடர்ச்சியான கடிதங்களுக்கு பதிலாக நவம்பர் 29 அன்று நிர்வாக ஆசிரியர் பில் கெல்லர் பதிவிட்ட அசாதாரண கருத்துகளில் அரசின் ஒட்டிணைப்பாக டைம்ஸின் பாத்திரம் மனதை உறைய வைக்கும் வகையில் பிரகடனப்பட்டிருந்தது.

அரசாங்கம் இரகசியமாய் பாதுகாக்க விரும்பும் விபரங்களை வெளியிட டைம்ஸ் ஆசிரியர்கள் முடிவு செய்ய முடியும் என்கிற கருத்தே தன்னைசங்கடத்திற்குள்ளாக்கியதாக அறிவிப்பதுடன் அவர் ஆரம்பித்தார். ஊடகங்களின் மிக அத்தியாவசியமான பாத்திரங்களில் ஒன்றாக காலம்காலமாய் கருதப்பட்டு வந்திருப்பதை செய்வதில் ஆசிரியரின்சங்கடமே நியூயோர்க் டைம்ஸ் போன்ற சாதனங்களின் உண்மையான வேலை குறித்து பக்கம்பக்கமாய் கூறுகிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மற்ற எவரொருவரையும் போலவே எங்களுக்கும் பங்குண்டு என்று கெல்லர் தொடர்ந்தார். “எனவே நாங்கள் வெளியிடும் ஒரு செய்தி நாட்டை எதிர்கொண்ட அபாயங்களை அதிகரிக்கச் செய்யலாம் என்கிற சிந்தனையே மனதை உளைச்சலுறச் செய்வதாக இருக்கிறது....அரசாங்க இரகசியங்கள் எங்கள் கைகளில் கிடைக்கும் சமயத்தில், அதனை வெளியிடலாமா என்பதில் நாங்கள் ரொம்பவும் யோசனை செய்வோம்.”

இங்கே தொடர்ச்சியான குற்றவியல் போர்களுக்கான ஒரு சாக்காக

பயங்கரவாதத்தின் மீதான போர்”  பயன்படுத்தப்பட்டு வருவதை நன்கு அறிந்திருந்தும் கெல்லர் அதற்கான அங்கீகாரத்தை முழுமையாய் ஏற்றுக் கொள்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொய்களை உண்மை போல் தோற்றமளிக்கச் செய்வதில் டைம்ஸ் தானே ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருந்தது. “பயங்கரவாதத்தின் மீதான போர் மீது எவரொருவரையும் போலவே தானும் பங்கு பெற்றுள்ளதாக அறிவிப்பதன் மூலம், கெல்லர் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு டைம்ஸ் வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவையே பிரகடனம் செய்திருக்கிறார்.

விவரங்களை வெளியிடலாமா என்று ஆலோசிக்கையில்அரசாங்கத்துடன் டைம்ஸ் நெடிய தீவிரமான விவாதங்களில் ஈடுபடுவதாய் கெல்லர் எழுதினார். இங்கே ஊடகம் என்பது அரசில் இருந்து சுதந்திரமான ஒரு அமைப்பு என்பதான எந்த கருத்தாக்கத்தையும் அவர் கொண்டுவரவில்லை. அவரைப் பொறுத்தவரை டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியீட்டு முடிவுகளை அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து விவாதித்துக் கொள்வது என்பது இயல்பான விடயமே.

கெல்லர் ஒரு பத்தியில் எழுதினார்: “வெளிப்படைத் தன்மை என்பது முற்றுமுதலான நன்மை அன்று என்பதில் நாங்கள் முழுமனதாய் உடன்படுகிறோம். ஊடகங்களின் சுதந்திரத்தில் வெளியிடாமல் இருப்பதற்கான சுதந்திரமும் உள்ளது, அந்த சுதந்திரத்தையே நாங்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தி வருகிறோம்.” [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது].

கெல்லரைப் பொறுத்தவரை ஊடக சுதந்திரம் என்பது, பொதுமக்கள் ஊடகங்களின் புலன் விசாரணைகள் மூலமாக அரசு இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு கொண்டிருக்கிற உரிமை குறித்த பிரச்சினை அல்ல, மாறாக அரசு, ஊடகங்களில் இருக்கும் தனது தொடர்புகள் மூலமாக அமெரிக்க மக்களிடம் இருந்து தகவல்களைசற்று கட்டுப்பாட்டு இடைவெளியில் பராமரிப்பதற்கு கொண்டுள்ள உரிமை குறித்த பிரச்சினை. அமெரிக்கா உள்நாட்டில் செய்த சட்டவிரோத உளவுவேலைகள் மற்றும் சித்திரவதை சம்பந்தப்பட்ட செய்திகளில் டைம்ஸ் தாமதம் செய்ய முடிவு கொண்டிருந்தது ஏற்கனவே அறிந்த ஒன்றாகும். இன்னும் எத்தனை மற்ற குற்றங்களை மறைக்க இப்பத்திரிகை உதவிக் கொண்டிருக்கிறது?

சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தொடர்பாக கெல்லர் கூறினார்: “இந்த கசிவுகளில், எங்களது சொந்த யோசனையிலும் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடனான ஆலோசனையிலும் பல உயிர்களுக்கு அபாயத்தை தோற்றுவிக்கலாம் அல்லது தேசிய நலனுக்குத் தீங்கிழைக்கலாம் என்று நாங்கள் கருதிய பெருமளவு விவரங்களை நாங்கள் வெளியிடாது நிறுத்தி வைத்திருக்கிறோம்.” “பல உயிர்களுக்கு அபாயத்தை தோற்றுவிக்கலாம் அல்லது தேசிய நலனுக்குத் தீங்கிழைக்கலாம் என்று கருதி அமெரிக்க மக்களிடம் விபரங்கள் சென்று சேராமல் தடுத்து வைப்பதற்கான இந்த நிபந்தனைகள் எதனையும் உள்ளே கொண்டிருக்கும் அளவுக்கு மிகப் பரந்தவையாகும்.

டைம்ஸ் தன்னை தணிக்கை செய்து கொண்டது மட்டுமல்ல, மற்ற செய்தி அமைப்புகளை விக்கிலீக்ஸ் ஆவண விடயத்தில் தன்னைப் பின்பற்றி நடக்கச் செய்ய முயல்வதில் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே அத்தியாவசியமாய் செயல்பட்டது. “குறிப்பிட்ட ஆவணங்களை வெளியிடுவது குறித்த வெளியுறவுத் துறையின் கவலை மற்றும் பதற்றத்திற்குரிய தகவல்களை திருத்தி வெளியிடுவதற்கான எங்களது சொந்த திட்டங்கள் இரண்டையுமே ஆவணங்களைக் கொண்டிருந்த மற்ற செய்தி அமைப்புகளுக்குத் தெரிவிக்க டைம்ஸ் முனைந்தது. “மற்ற செய்தி அமைப்புகளும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தன.”

டைம்ஸைப் பொறுத்தவரை, விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிடுவது துரதிர்ஷ்டமான செயல். இந்த விபரங்களை (அத்துடன் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவின் குற்றவியல் தன்மையை ஆவணப்படுத்துகின்ற மற்ற கசிவுகளையும்) இரகசிமாகவே பாதுகாத்திருக்கவே கெல்லர் விரும்பியிருப்பார். ஆயினும், எப்படியாயினும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கப் போகின்றன எனும்போது, டைம்ஸின் பாத்திரம் அதனை துருவி அரசு இரகசியங்களுக்குவாயிற்காவலனாகவும் பாதுகாவலனாகவும் செயல்படுவது என்றானது.

கெல்லர் எழுதினார்: டைம்ஸ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தன, “இரகசிய ஆவணங்களை புறக்கணித்தாலும், அவை எப்படியும் படிக்கப்படப் போகின்றன, எடுத்துக் கொள்ளப்பட போகின்றன, ஆபத்தான விவரங்களை அகற்றாமலேயே அநேகமாய் வெளியீடு செய்யப்படப் போகின்றன, பல்வேறு திட்டங்களை [அதாவது அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான திட்டங்களை] முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டே அவற்றை புறக்கணிப்பது; அல்லது அவற்றைப் படித்து, சரியான பொருள்பட வைத்து, அவற்றின் அடிப்படையில் உண்மையான ஆவணங்களில் இருந்து கவனமாய் கட்டம்கட்டி எடுக்கப்பட்ட விபரங்களுடன் சேர்த்து கட்டுரைகளை வெளியிடுவது. நாங்கள் இரண்டாவது பாதையை தெரிவு செய்தோம்.”  

நியூயோர்க் டைம்ஸின் வாஷிங்டனுக்கான தலைமைச் செய்தியாளர் டேவிட் சிங்கர் நேஷனல் பப்ளிக் ரேடியோவின்பிரெஷ் ஏர் நிகழ்ச்சியில் அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில் இன்னும் பட்டவர்த்தனமாய் கூறினார்: “தனிநபர்களுக்கும், நடப்பு ஆபரேஷன்களுக்கும் [அதாவது இராணுவ மற்றும் இரகசிய உளவு ஆபரேஷன்கள்] பெரும் தீங்கு விளையாமல் தடுக்க அத்தகவல்களை நாங்கள் வடிகட்டி வெளியிடுகிறோம்....இவை எல்லாம் இணையத்தில் வெளிவரும் வரை நாங்கள் காத்திருக்கச் செய்திருந்தால், எதனைக் கட்டம் கட்டி வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதில் எங்களுக்கு இப்போது கிடைத்திருக்குமளவுக்கு நேரம் கிடைக்காது போயிருக்கும்.”

இதை விடவும் டைம்ஸ் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களையும் பகிரங்கமாக சுயகண்டனம் செய்வதோ அம்பலப்படுத்துவதோ முடியுமா எனச் சிந்திப்பது கடினமே. ஊடகவியல்ரீதியாக சோரம்போகும் இத்தகைய அறிவிப்புகளை கூச்சத்தின் ஒரு சுவடு கூட இல்லாமல் வெளியிடும் மட்டத்திற்கு அமெரிக்க ஊடக ஸ்தாபிப்பிற்குள்ளாக ஜனநாயக நனவின் சிதைவு சென்று விட்டிருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவு எந்திரத்துடன் வெறுமனே போர்க்களத்தில் மட்டுமன்றி எல்லா நேரங்களிலும் எல்லா நிலைமைகளின் கீழும்உடன்செல்வதாய் இருக்கின்றன.

கெல்லர் ஒரு அரசுப் பணியாளர் போலவும் டைம்ஸ் ஒரு அரசு ஸ்தாபனம் போலவும் செயல்படுகிறது. இந்த கருத்துகளைப் படித்தபின்னர், சரியான மூளையுள்ள ஒருவனும் அமெரிக்க அரசாங்கத்திற்கு தீங்கிழைப்பதாய் கருதப்படும் சாத்தியத்தைக் கொண்ட விவரங்களுடன் டைம்ஸ்க்கு செல்ல மாட்டான். அப்படிப் போய் விட்டான் என்றால் அதனைத் தொடர்ந்து கெல்லர் வெளியுறவுத் துறையையும் அமெரிக்க உளவு அமைப்புகளையும் தொலைபேசியில் அழைப்பது சந்தேகமில்லாமல் நிகழும்.

முந்தைய தலைமுறையின் செய்தியாளர்கள் இத்தகைய கருத்துகளை கற்பனையிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். முந்தைய காலங்களில் செய்தித்தாள்கள் அரசாங்கத்துடன் விவாதித்திருந்தால் கூட (அவ்வாறு செய்திருக்கின்றன) அதனை பொதுவில் ஒப்புக் கொள்ள அனுமதிக்கப்பட்டிராது.

கெல்லர் கூறும் ஒவ்வொன்றும் பெண்டகன் ஆவணங்கள் வெளியீட்டு விடயத்தில் டைம்ஸ் எடுத்த நிலைப்பாட்டை மறுதலிப்பதாகும். 1971ல், வியட்நாம் போர் தொடர்பான பொய்கள் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்துகிற ஆவணக் கசிவுகளை வெளிவராமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தான வழக்கை டைம்ஸ் எதிர்கொண்டது. தன்னிடமிருக்கும் ஆவணங்கள் குறித்த விவரங்களை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த டைம்ஸ் மறுத்தது. அத்தகையதொரு நடவடிக்கை ஊடக சுதந்திரத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாய் ஜனநாயகத்திற்கும் மையமாக அமைந்த கோட்பாடுகளை மீறுவதாகும் என்று அது கருதியது.

அரசாங்க சோதனைக்கு டைம்ஸ் ஆவணங்களைத் திறந்து காண்பிப்பது என்பதுமுதலாம் திருத்தம் பாதுகாப்பு வழங்கியிருக்கக் கூடிய ஒரு செய்தித்தாளின் கோப்புகளுக்குள் விபரங்களை முகாந்திரமின்றி தேடுவதற்கு அனுமதிப்பதாகும் என்று இப்பத்திரிகையின் வழக்கறிஞர் பிளாயிட் ஆப்ரம்ஸ் நீதிமன்றத்தில் ஒருமுறை வாதிட்டார்.

உச்சநீதிமன்றம் டைம்ஸ்க்கு சாதகமாக, பெண்டகன் ஆவணங்களை தடையின்றி வெளியிடலாம் என்று அறிவித்த பின்னர், இந்த தீர்ப்பின் தாக்கங்கள் ஊடக சுதந்திரத்தைத் தாண்டியும் செல்லும் என்று அப்பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுதியது. அது அறிவித்தது: “அமெரிக்க மக்கள் தங்களது அரசாங்கத்தின் அரசியல் முடிவுகள் குறித்து அறிந்து கொள்வதற்கான முன்னணுமானமான உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்கிற உள்ளமைந்த ஆயினும் பார்வைக்குத் தப்பாத முடிவில் தான் இதன் ஆழமான முக்கியத்துவம் தங்கியிருப்பதாய் நாங்கள் நம்புகிறோம்.

இந்தமுன்னணுமானமான உரிமை இப்போது இல்லாது போய் விட்டதாய் டைம்ஸ் கருதுகிறது என்பது மட்டுமல்ல, வெகுஜன ஊடகங்களின் பாத்திரமே, விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகள் செய்வதற்கு நேரெதிரான வகையில், அரசாங்க இரகசியத்திற்கு உறுதிசேர்ப்பது தான் என அது காண்கிறது.

ஜனநாயக நனவின் முழுமையான சிதைவினை வெகுகாலமாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் பிரதானமான குரலாக செயல்பட்டு வந்திருக்கிற நியூயோர்க் டைம்ஸ் செயலில் காட்டியிருப்பது அமெரிக்க சமூகத்தின் ஒரு பரந்த உருமாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும். அரசின் கட்டுப்பாட்டிலான ஊடகம் என்பது பெருநிறுவன பிரபுத்துவத்தின் எழுச்சியில் இருந்து தவிர்க்கவியலாமல் உடன்வருகிற பின்விளைவாகும்.