World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

US complicit in India’s systematic use of torture in Kashmir

காஷ்மீரில் இந்தியா சித்திரவதையை திட்டமிட்டு பயன்படுத்தியதில் அமெரிக்கா உடந்தை

By Deepal Jayasekera
21 December 2010
Back to screen version

ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சியை எதிர்ப்போருக்கு எதிராக இந்திய அதிகாரிகள் திட்டமிட்டு நிகழ்த்திய சித்திரவதைகள் குறித்து அமெரிக்கா வெகு காலமாகவே ஆதாரங்களை கொண்டிருந்தது எனினும் இந்தியாவின் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டாம் என அது முடிவு செய்தது என்பதை விக்கிலீக்ஸ் மூலம் பெறப்பட்ட அமெரிக்க இராஜதந்திரத் துறை ஆவணங்கள் காட்டுகின்றன. 2005 ஏப்ரலில் அப்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராய் இருந்த டேவிட் முல்ஃபோர்ட் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய அறிக்கை குறித்த ஆவணம் அது. அதில் “2002 மற்றும் 2004க்கு இடையில் காஷ்மீரில் உள்ள இந்திய சிறைகளில் நிகழ்த்தப்பட்ட பரவலான கடும் சித்திரவதைகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குழு (ICRC) தூதரக அதிகாரிகளிடம் ஒருஇரகசிய உரையாடலில் தெரிவித்திருந்ததாக முல்ஃபோர்ட் குறிப்பிட்டிருந்தார்.  

”ICRCக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் வெகுகாலமாய் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்த நிலையிலும் கைதிகளை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், இந்தியா சித்திரவதையைக் கண்டுகொள்ளாதிருக்கிறது என்கிற முடிவுக்கு ICRC வந்ததாக முல்ஃபோர்ட் குறிப்பிட்டிருந்தார். இந்திய அதிகாரிகளால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் பொதுவாக இந்திய-விரோத போராளிகள் அல்ல (ஏனென்றால் கிளர்ச்சியாளர்களாக சந்தேகிப்பவர்களை ஒட்டுமொத்தமாய் இல்லாது செய்து விடுவதை இந்திய பாதுகாப்புப் படைகள் வழமையான நடைமுறையாகக் கொண்டிருந்தன) என்று ICRC அதிகாரிகள் தங்களது உரையாடலில் வலியுறுத்தியிருந்தனர். மாறாக அவர்கள் போரில் ஈடுபடாதவர்களாகவோ, போராளிகளுக்கு உதவி அளித்ததான குற்றம் சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது பயனளிக்கும் தகவல்களைக் கொண்டிருந்தவர்களாகவோ இருந்தனர். “கைதிகள் அபூர்வமாகத் தான் போராளிகளாய் இருந்தனர் (அவர்களைக் கொல்வது தொடர்கதையாக நிகழ்ந்தது), மாறாக கிளர்ச்சிப் போராட்டத்துடன் தொடர்புபட்டவர்களாகவோ அல்லது அது குறித்த விபரங்கள் கொண்டிருந்ததாய் நம்பப்பட்டவர்களாகவோ இருந்தனர்.”

ICRC அதிகாரிகள், சிறைக்கூடங்களுக்கு 177க்கும் அதிகமான தடவை பயணம் செய்து 1,491 கைதிகளை நேர்காணல் செய்திருந்ததாய் தெரிவித்திருந்தனர். இவற்றில் 852, அதாவது பாதிக்கும் மேலானோர், துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியிருந்ததாக அமெரிக்க தூதரகத்திடம் இக்குழுவினர் செய்த விவரிப்பில் கூறியிருந்தனர். 171 பேர் அடிக்கப்பட்டிருந்தனர், 681 பேர்ஆறு விதமான சித்திரவதை வடிவங்களில் ஒன்று அல்லது அதற்குக் கூடுதலான வடிவங்களுக்கு ஆட்படுத்தப்பட்டிருந்தனர். 498 பேருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருந்தது; 381 பேர் உத்தரத்தில் இருந்து தொங்க விடப்பட்டிருந்தனர்; 294 பேர் உருளை கொண்டு கால் தசைகள் நசுக்கப்பட்டிருந்தனர்; 181 பேர் 180 டிகிரி கால்களை விரிக்கச் செய்யப்பட்டிருந்தனர்; 234 பேருக்கு பல்வேறு விதமான தண்ணீர் சித்திரவதைகள் அளிக்கப்பட்டிருந்தன; 302 பேர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆட்படுத்தப்பட்டிருந்தனர்.

"பல கைதிகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட துஷ்பிரயோக வடிவங்களுக்கு ஆட்பட்டவர்களாய் இருப்பதால் இந்த எண்ணிக்கை 681க்கும் கூடுதலாக இருக்கும். பாதுகாப்புப் படைகளின் அனைத்துப் பிரிவுகளுமே இந்த அவமதிப்பு மற்றும் சித்திரவதை வடிவங்களை பயன்படுத்தியதாக ICRC வலியுறுத்துகிறது.”

இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரில் இரண்டு தசாப்த காலமாய் நடந்து வரும் கிளர்ச்சித் தடுப்பு போரில் இந்திய அதிகாரிகளின் படுபயங்கரமான மனித உரிமை துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்துகிற ஏராளமான அறிக்கைகளை இந்திய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வழங்கியிருக்கின்றன.

எப்படியிருப்பினும், ICRC அமெரிக்க தூதரகத்திடம் வழங்கிய சாட்சியம், ICRCக்கு இந்திய சிறைக் கூடங்களுக்கு இருந்த அணுகலைக் கொண்டு பார்த்தால், திடுக்கிடச் செய்வதாகவும் மிக உயர்ந்த முக்கியத்துவம் படைத்ததாகவும் உள்ளது. ஒரு விதியாகவே, ICRC தான் சோதனையிடும் இடங்களுக்கு அதிகாரம் படைத்த அரசாங்கத்திடம் தவிர ஒருவருக்கும் தனது கண்டறிவுகளைக் கூறுவதில்லை. பொதுமக்களுக்கு சார்பான பாத்திரத்தை தான் ஏற்றால், ஒரு நடுநிலை அமைப்பாக தான் செயல்படும் நிலை சங்கடத்துக்குள்ளாகும், அதனால் அரசாங்கங்கள் கைதிகளிடம் செல்ல அனுமதி மறுத்து விடும், இதன்பின் தனது மனிதநேய இலட்சியத்தை நிறைவேற்ற இயலாது போய் விடும் என்று ICRC வாதிடுகிறது.

ஆனால் இந்த சம்பவத்திலோ, இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வெறுப்பும் கோபமும் பெற்றிருந்த ICRC அதிகாரிகள் தங்களது கண்டறிவுகளை அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்ல முடிவு செய்திருக்கின்றனர். அந்த ஆவணம் சொல்கிறது: “பாதுகாப்புப் படைகள் விசாரணை சமயத்தில் துஷ்பிரயோகமும் சித்திரவதையும் செய்வதென்பது பரவலான ஒன்றாகவும் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகவுமே உள்ளது; -இது அதிகாரிகளின் முன்னிலையில் தான் எப்போதும் நடைபெறுகிறது; -இதனை இந்திய அரசாங்கத்திடம் ICRC பத்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு சென்று வந்திருக்கிறது; - இருந்தும் இந்த நடைமுறை தொடர்வதால், இந்திய அரசாங்கம் சித்திரவதையை கண்டுகொள்வதில்லை என்று ICRC முடிவு செய்ய தள்ளப்படுகிறது.”

ICRCன் கண்டறிவுகளைப் போலவே அவர்கள் சொன்ன இன்னொன்றும் பயங்கரமாக இருந்தது. நிலைமைகள் 1990களின் மத்தியில் இருந்து மேம்பட்டிருப்பதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். அச்சமயத்தில் நடுராத்திரியில் கிராமங்களில் ஊடுருவிச் செல்லும் பாதுகாப்புப் படைகள் தன்னிச்சையாகவும் காலவரையன்றியும் அங்கிருக்கும் பல குடியிருப்புவாசிகளை காவலில் கொண்டிருக்கும்.

ஆயினும், ஸ்ரீநகரில் இருக்கும் மிகப் பயங்கரமான” “கார்கோ பில்டிங் சிறைச்சாலைக் கூடத்தில் கைதிகளுடன் பேசுவதற்கு ஒருபோதும் ICRCக்கு அனுமதி கிட்டியதில்லை. அத்துடன் அந்த அமைப்பு தனது கண்டறிவுகளை வெளியில் சொல்வதில்லை என்றாலும் கூட, இந்திய அரசாங்கம் ICRCயின் நடவடிக்கைகளைக் குறைக்க முனைந்தது. 2005 ஏப்ரல் கால கேபிள் ஒன்று கூறுவதன் படி, ICRC அமெரிக்க அதிகாரிகளிடம் பின்வருமாறு கூறியிருந்தது: “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் ICRCயின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் செயல்பாடுகளைமுடித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டது. அதன்மக்கள்தொடர்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது (காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் 2004ல் ICRC ஊழியர்கள் நடத்திய சர்வதேச மனிதநேய சட்டம் குறித்த ஒரு கருத்தரங்கினை இது குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது). அத்துடன்பிரிவினைவாத சக்திகளுடன் முறையற்ற வகையில் தொடர்பு கொள்வதற்கு எதிராக அது எச்சரித்தது.”

2007ல் இருந்து வந்திருந்த இன்னொரு கேபிளில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒரு உறுப்பினரான உஸ்மான் அப்துல் மஸ்ஜித் இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவான போராளிக்குழு ஒன்றின் தலைவர் என்பதையும் அமெரிக்காவின் இந்தியாவிலுள்ள தூதரகம் குறிப்பிட்டுக் காட்டியிருந்தது. இக்குழுபயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக சந்தேகப்படுவோர் மீது சித்திரவதை, சட்டவிரோதக் கொலைகள், கற்பழிப்பு மற்றும் பயமுறுத்தல் ஆகியவற்றைச் செய்வதான அவப்பெயரை சம்பாதித்ததாகும்”. 

ஆனால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள், காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட போராளிக்குழுக்களின் நடத்தை குறித்தும் அதற்கு இந்திய அரசாங்கத்தின் மேலிடங்கள் ஆதரவளிப்பது குறித்தும் தங்களது வெளியுறவுத் துறைக்கு விபரங்களை அனுப்பியிருந்த அதே சமயத்தில், அவர்களோ அல்லது வாஷிங்டனில் இருக்கும் அவர்களது மேலிட மனிதர்களோ வெளியில் இந்திய அதிகாரிகளை இது விடயத்தில் கண்டித்திருக்கவில்லை. இதற்கு நேரெதிராய், புஷ் காலத்திலும் சரி பராக் ஒபாமாவின் கீழும் சரி, இந்தியா தான் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்றும் உலகெங்கிலும்ஜனநாயக மதிப்புகளை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின்இயற்கையான கூட்டாளி என்றும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. சென்ற மாதத்தில் ஒபாமா இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, தனது விருந்துபசரிப்பாளர்களுக்கு மரியாதையளிக்கும் விதத்தில், காஷ்மீர் குறித்த எந்த ஒரு பேச்சையும் கவனத்துடன் தவிர்த்தார்.

காஷ்மீரில் இந்திய அரசின் ஒடுக்குமுறை குறித்து அமெரிக்கா காக்கும் மவுனமானது, குடியரசுக் கட்சி நிர்வாகமானாலும் சரி ஜனநாயகக் கட்சி நிர்வாகமானாலும் சரி ஒன்றுபோல, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சிடுமூஞ்சித்தனத்திற்கும் கபடநாடகத்திற்கும் இன்னுமொரு உதாரணமாக இருக்கிறது. அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுக்கும் கொள்கைகளுக்கும் குறுக்கே நிற்கக் கூடிய அயல் அரசாங்கங்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கண்டனங்களை ஒலிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. சலாம் போடும் ஊடகங்கள் அந்த கண்டனங்களை எடுத்து பின் ஊதிப் பெருக்கும். ஆனால் அமெரிக்காவும் வோல் ஸ்ட்ரீட்டும் இந்தியாவை விடாமுயற்சியுடன் தாஜா செய்கின்றன, ஏனென்றால் இந்தியா எழுச்சியுறும் சீனாவுக்கு எதிர்த்தட்டு எடையாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் காஷ்மீரில் ஒடுக்குமுறை குறித்து அமெரிக்காவின் மௌனம்.

இந்தியாஉலக சக்தியாக ஆவதற்கு உதவி செய்ய அமெரிக்கா விரும்புவதாக அறிவித்த அமெரிக்கா, ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுக்கு உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அரங்கில் ஒரு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதன்மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்திருந்த நிலையிலும் கூட அதற்கு அணுமின்சக்தி உற்பத்திக்கான தொழில்நுட்பமும் எரிபொருளும் வாங்கிக் கொள்வதற்கான உரிமை கிடைத்தது. அத்துடன் சமீபத்தில் இந்திய விஜயம் செய்த ஒபாமாவும் இந்தியாவின் உலக இலட்சியங்களுக்கு அமெரிக்க ஆதரவைப் போற்றி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை அமெரிக்கா ஆதரிப்பதாக அறிவித்தார்.

காஷ்மீர் விடயத்தில் விக்கிலீக்ஸ் கேபிள்களுக்கு இந்திய உயரடுக்கு காட்டும் எதிர்வினை அதிர்ச்சியடையச் செய்கிறது. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்காகப் பேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் ICRC கண்டறிவுகளை உதறித் தள்ளி விட்டு அறிவித்தார்: “இந்தியா சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட ஒரு வெளிப்படையான ஜனநாயக தேசம் ஆகும். ஒரு விலக்கம் நேர்ந்தாலும் நேரும்போதும், இருக்கக் கூடிய சட்ட வகைமுறைகளுக்குள்ளாக திறம்பட்ட வெளிப்படையான வகையில் அது உடனடியாகவும் உறுதியோடும் கையாளப்படும்.”

இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை பயம் இல்லாத நிலை இருப்பதும் தொடர்வதுமே யதார்த்த நிலை ஆகும்.

இந்தியாவின் 1998 முதல் 2004 வரையான அரசாங்கத்தின் தலைமையில் இருந்ததும் காஷ்மீரில் ஒடுக்குமுறையின் பெரும்பகுதிக்கு தலைமை வகித்ததுமான இந்து மேலாதிக்கவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி ICRC கண்டறிவுகள் குறித்து கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இந்திய ஊடகங்களைப் பொருத்தவரை, அவை இந்த விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஹிந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய சில தினசரிகளில், கடமைபோல் வெளியிட்ட செய்திகள் இருந்தனவே தவிர அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் பொறுப்பாக்கக் கோரும் எந்த தலையங்கங்களும் இருக்கவில்லை. இந்திய ஒன்றியத்தை விட்டு அகலும் தெரிவுக்கான உரிமை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று கருத்துக் கூறியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தேசத்துரோக குற்றம் சாட்ட சமீபத்தில் பரவலான அழைப்பு வந்ததைக் கொண்டு காஷ்மீர் விடயத்தில் ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் கொண்டிருக்கக் கூடிய மனோநிலையை விளங்கிக் கொள்ளலாம்.

விக்கிலீக்ஸ் வெளியீடுகளுக்குப் பதில் கூறும்போது, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் (இக்கட்சி தான் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது, அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியாகவும் உள்ளது) தனது அரசியல் எதிரிகள் மீது குற்றத்தைத் திருப்ப முனைந்தார்.

நாங்கள் சித்திரவதைகளைக் கண்டுகொள்ளாது விடுவதுமில்லை, மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகளை உதாசீனப்படுத்துவதும் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா அறிவித்தார். ”மனித உரிமை மீறல்களைக் கண்டு கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளாததொரு கொள்கையை மாநில அரசாங்கம் மட்டுமல்ல, மத்திய அரசாங்கமும் கொண்டிருக்கிறது.”

விக்கிலீக்ஸ் வெளியீட்டிற்கு நேரடியாகக் கருத்து கூற மறுத்து விட்ட அப்துல்லா, “நான் அதில் செல்ல விரும்பவில்லை....அது 2005 ஆம் ஆண்டு விவகாரம்...அப்போது யார் பதவியில் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார். அப்போது மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது (அப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உடனேயே) என்கிற உண்மையையே அப்துல்லா குறிப்பிட்டார்.

அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதாக அப்துல்லா கூறுவது பொய் என்கின்றன. இந்த கோடையில் ஒரு இளைஞர் போலிசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தால் தூண்டப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் அணிதிரண்டதை அடக்கும் ஒரு முயற்சியில் இந்த அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் தான்  நிராயுதபாணியாய் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படைகள் கொன்றிருந்தன.

அப்துல்லாவிற்குப் பதிலளித்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி கூறினார்: “மனித உரிமை மீறல் குறித்து பேசுவதில் ஓமர் அப்துல்லா கடைசியில் தான் நிற்க வேண்டும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக்காலத்தை அனைவரும் கண்டிருக்கிறார்கள், மக்களைத் தவிர வேறொருவரிடம் இருந்தும் எங்களுக்கு சான்றிதழ் அவசியமில்லை.” தேசிய மாநாட்டுக் கட்சியின் பக்கம் மேஜையைத் திருப்பும் விதமாக அவர் மேலும் கூறினார்: “மனித உரிமை மீறல்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியிடம் இருந்து ஆட்சியை நாங்கள் பெற்றோம் (2002ல்).”

விக்கிலீக்ஸ் கேபிள்களில் அம்பலப்பட்டவாறு, அரசியல் கைதிகளை சித்திரவதை செய்வது உட்பட காஷ்மீரில் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுவதில் இந்திய அரசுக்கும் மற்றும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இந்திய முதலாளித்துவத்தின் பிரதான கட்சிகளுக்கும் சிறு கூட்டாளிகளாகத் தான் காஷ்மீரின் இந்த இரண்டு பிராந்தியக் கட்சிகளும் சேவை செய்து வந்திருக்கின்றன.