World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Christmas in America

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்

Jerry White
24 December 2010
Back to screen version

அமெரிக்காவில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் இரண்டு முழுக்க வெவ்வேறான சமூக யதார்த்தங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

2007 டிசம்பரில் மந்தநிலை உதயம் கண்டு மூன்று வருடங்களாகியிருக்கும் நிலையில், அமெரிக்க மக்களின் பெரும்பான்மையினர் திகைப்பூட்டும் வேலைவாய்ப்பின்மை அளவுகளுக்கும், வீட்டு ஏல நிலைகளுக்கும், பட்டினி மற்றும் வறுமைக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மில்லியன்கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களை பொறுத்தவரை, இந்த ஆண்டு பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் எஞ்சிய சில டாலர்களை யோசனையுடன் தேட வேண்டிய நிலையோ, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கடன்வாங்கும் நிலையோ அல்லது ஏற்கனவே பெரும்சுமையுற்றுள்ள கடன் அட்டைகளுக்கு மேலும் கடன் சேர்க்கும் நிலையோ தான் காணப்பட்டது.

சமூகத்தின் இன்னொரு முனையில், இந்த பொருளாதாரப் பெருங்கேட்டிற்கு முன்நின்று அழைத்துச் சென்ற அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கோ தனது நல்ல மகசூலைக் கொண்டாடுகிறது. சாதனை அளவான பெருநிறுவன இலாபங்களையும் S&P 500 பங்குச்சந்தைக் குறியீட்டில் 85 சதவீத எழுச்சியையும் கண்ட ஆண்டிற்கு முத்தாய்ப்பாக மக்களில் இரண்டு சதவீதம் இருக்கும் பெரும்பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகளை நீட்டித்து ஜனாதிபதி ஒபாமா மற்றும் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினர் சமீபத்தில் செய்திருக்கும் ஒப்பந்தம் அமைந்திருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட மிக இலாபகரமான ஆண்டுகளில் 2010 இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஜேபிமோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, மோர்கான் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாச் மற்றும் சிட்டிகுரூப் ஆகிய ஐந்து மிகப்பெரும் வங்கிகள் வருட இறுதி போனசுக்காக குறைந்தபட்சம் 90 பில்லியன் டாலர்களை ஒதுக்கி வைத்துள்ளன. இது சென்ற ஆண்டினை விடவும் அதிகமாகும்.

பிணையெடுக்கப்பட்ட வங்கிகளில் சில, வேண்டாத விளம்பரத்தை விரும்பாமல் தங்களது வருடாந்திர கிறிஸ்துமஸ் விருந்துநிகழ்ச்சிகளை இரத்து செய்து விட்டன. அதே சமயத்தில் தனியார் பங்கு பரிவர்த்தனை நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம் தனது கொள்முதல் நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு என ஒரு ஆடம்பரமான விடுமுறை நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்வதற்கு நியூயோர்க்கின் ஒட்டுமொத்த பெருநகரக் கலை அருங்காட்சியகத்தையும் வாடகைக்கு அமர்த்தியது. இதனிடையே, 2011 முழுவதுமான காலத்திற்கும் மற்றும் அதனைத் தாண்டியும் புதிதான வேலைவாய்ப்பு குறைவாகவே உருவாகும் என்றும், வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை தொடர்ந்து ஒன்பது சதவீதத்திலோ அல்லது அதற்கு அதிகமாகவோ தான் இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மந்தநிலை தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோர் (55 சதவீதம்) “வேலைவாய்ப்பற்ற காலத்தையும், ஊதிய வெட்டையும், வேலை ஒதுக்கீட்டு நேரத்திலான குறைப்பையும் அனுபவித்துள்ளனர் அல்லது நிர்ப்பந்தமாக பகுதி நேரத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்று பியூ ஆய்வு மையம் (Pew Research Center) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

மொத்த உழைக்கும் குடும்பங்களில்  சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது இதன்கீழ்  சுமார் 45 மில்லியன் மக்கள் வருகிறார்கள், குறைந்த வருவாய் பிரிவினராய் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு அளவின் இருமடங்குக்கும் குறைவான வருமானத்தையே ஈட்டுகின்றனர். தசாப்தத்தின் ஆரம்பத்தில் வறுமையில் இருந்து மீண்டிருந்த மில்லியன்கணக்கான மலிவூதியத் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் பாதாளத்திற்குள் சரிந்திருக்கிறார்கள்.

அமெரிக்க மேயர்களின் கருத்தரங்கு ஒன்று 27 முக்கிய நகரங்களில் பட்டினி மற்றும் வீடின்மை குறித்து மேற்கொண்ட புதியதொரு ஆய்வில் 2009 ஆம் ஆண்டில் உணவு உதவிக்கான கோரிக்கை திகைப்பூட்டும் வகையில் 24 சதவீத அதிகரிப்பைக் கண்டிருந்தது கண்டறியப்பட்டது. வேலைவாய்ப்பின்மை தான் மக்களை அவசர உதவி நாடச் செலுத்தும் முதற் காரணியாக மேற்கோள் காட்டப்பட்டது. வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் உயர்ந்தது, ஏற்பாட்டு இருப்பிடங்களில் கூட்டம் மிகுந்த காரணத்தால் மக்களில் பலரை திருப்பி அனுப்ப நேர்ந்ததாக நகரங்களில் மூன்றில் இரண்டு கூறின. தெருக்களில் வாழும் மக்களில் 2009ல் குறைந்தது 2,600 இறப்புகள் நேர்ந்ததாக தேசிய வீடற்றோருக்கான கூட்டணி தகவல் தெரிவிக்கிறது.

வறுமை அமெரிக்காவெங்கிலும் அதிகரித்திருக்கிறது என்றாலும் தென்மேற்கு மற்றும் தெற்கு மற்றும் மிச்சிகன் மற்றும் ஓஹியோ போன்ற மந்தநிலை கண்ட தொழிற்துறை மாநிலங்களில் மிகவும் கூர்மையான அதிகரிப்பைக் கண்டது. மிகக் கடுமையான அதிகரிப்பு என்றால் அரிசோனாவின் மரிகோபா கவுண்டியில் (பீனிக்ஸ், கிளெண்டேல், ஸ்காட்ஸ்டேல்) ஏற்பட்டிருக்கிறது. இங்கே 2006க்கும் 2009க்கும் இடையில் 135,000 பேர் வறுமைப் பதிவேடுகளில் கூடுதலாய் சேர்ந்துள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ளது மிச்சிகனின் வேய்ன் கவுண்டி (டெட்ராயிட் மற்றும் டியர்பார்ன்) ஆகும். இங்கே வறுமை திகைக்க வைக்கும் 19.7 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதோடு 2009ல் 458,000 பேரை பாதித்துள்ளது.

கடந்த தசாப்தத்தில், ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்தொகை 10 சதவீத அதிகரிப்பைக் கண்டிருந்த அதே சமயத்தில், மிச்சிகன் மட்டுமே அமெரிக்காவில் மக்கள்தொகையில் சரிவைச் சந்தித்த ஒரே மாநிலம் என்பதை அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கண்டறிந்தது. மிச்சிகனில் இருந்து தொழிலாளர்களும் கல்லூரிப் பட்டதாரிகளும் கூட்டம் கூட்டமாய் வெளியேறியதானது அமெரிக்க சமூகத்தின் வரலாற்று மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில், மிச்சிகனின் மக்கள்தொகை பெருகிக் கொண்டே போனது. தெற்கு மற்றும் அபலாசியன் புலம்பெயர்வுவாசிகளும், அத்துடன் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், மாநிலத்தின் வாகனத் துறை தொழிற்சாலைகளில் வெள்ளமெனப் பாய்ந்திருந்தனர். 1900 முதல் 1950 வரையான காலத்தில் டெட்ராயிட்டின் மக்கள்தொகை ஆறு மடங்காக வளர்ந்து சுமார் இரண்டு மில்லியனை எட்டியிருந்தது.

ஆயினும் அடுத்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இந்த வாகன நகரத்தின் மக்கள்தொகை பாதியாய்ச் சரிந்து 2009ல் 951,000 என இருந்தது. கடந்த தசாப்தத்தில் இந்த மாநிலம் எதிர்குடியேற்ற நிலையைக் கண்டது. 600,000க்கும் அதிகமான வேலைகள் தொலைந்து போயிருந்த நிலையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் சமாளிக்க முடியாமல் பிற மாநிலங்களுக்கு ஓடத் துவங்கினர். 1920கள் மற்றும் 1930களில் எந்த அநாதரவான சமூகப் பேரழிவான நிலை அவர்களது முன்னோர்களை மிச்சிகனுக்கு அழைத்து வந்திருந்ததோ அதனை விடவும் மோசமான நிலைகளை இப்போது இவர்கள் இங்கே கண்டு ஓடினர்.

மிச்சிகனின் எழுச்சியும் வீழ்ச்சியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியுடன் இணைந்து நடந்ததாய் இருக்கிறது. 1950ல் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு பங்களிப்பு செய்து உலகின் சவால் விட முடியாத தொழிற்துறை சக்தியாக விளங்கியதில் இருந்து இப்போது சிதைந்து போன தொழிற்சாலைகளையும், உடைந்து போன உள்கட்டமைப்பையும் மற்றும் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் மில்லியன்கணக்கான மக்களையும் கொண்ட ஆழமான சரிவில் இருக்கும் ஒரு சமுதாயமாக அமெரிக்க முதலாளித்துவம் வீழ்ச்சி கண்டுள்ளது.

1970கள் மற்றும் 1980களில் பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகம், அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதற்கும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த போட்டியாளர்கள் அதிகரித்ததற்கும் பதிலிறுப்பாக, தான் இலாபகரமற்றதாய் கருதும் தொழிற்சாலைகளை கொஞ்சம் கொஞ்சமாய் பிரித்தெறியவும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கும் சமூக நிலைமைக்கும் எதிராக ஒரு வர்க்கப் போரைக் கட்டவிழ்த்து விடவும் செய்தது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா தொழிற்துறைமய நிலையிலிருந்து விலகிக் கொண்டிருந்த அதே சமயத்தில் சக்தி வாய்ந்த நிதிப் பிரபுத்துவத்தின் எழுச்சியும் அமைந்தது. இத்தட்டு பணத்தைக் குவித்ததற்கும் உற்பத்திக்கும் அதிக சம்பந்தம் இருக்கவில்லை, மாறாக நிதிச் சுருட்டல்கள் மற்றும் ஊக வணிகத்திற்குத் தான் அதிக சம்பந்தம் இருந்தது. இது வீட்டுஅடமானக் கடன் குமிழியின் உடைவுக்கும் 2008 ஆம் ஆண்டின் நிதிப் பொறிவுக்கும் (இது பெரு மந்த காலத்திற்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஆகும்) அழைத்துச் சென்ற பிறகு, இந்த பெரும் செல்வந்தர்கள் தங்களது சூதாட்ட இழப்புகளை மீட்பதற்கு சாவிகளை அமெரிக்க கருவூலத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டனர்.

இப்போது, மெடிக்கேர் (ஆரோக்கியப் பாதுகாப்பு) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் துவங்கி, பொதுப் பள்ளிகள் மற்றும் நகரச் சேவைகள் வரையான சமூகச் செலவினத்திற்கான அனைத்து வடிவங்களும் ஒட்ட வெட்டப்பட்டு முதுகொடியச் செய்யும் நிதிப் பற்றாக்குறைகளுக்கு செலுத்தப்பட்டாக வேண்டும் என்று ஒபாமா நிர்வாகமும் மற்றும் இரண்டு பெரு வணிகக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையையும் நிதி உயரடுக்கு தான் கட்டுப்படுத்துகிறது, தொழிலாளர் வர்க்கத்திற்கு நடப்பு அரசியல் அமைவின் ஊடாக தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான எந்த வழியும் இல்லை என்கிற உண்மையையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பணக்காரர்களை பிணையெடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற ஒரே பல்லவி தான் உலகெங்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒலிக்கிறது. இது தான் முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாக்கிற ஒவ்வொரு அரசியல் கட்சியின் மற்றும் தொழிற்சங்கத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரிட்டனில் நடந்த பெருந்திரள் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் துவங்கி, சீனா, பங்களாதேஷ், மற்றும் ஆசியா முழுவதும் தொழிலாளர்களிடையே பெருகி வரும் போர்க்குணம் வரை வர்க்கப் போராட்டம் சர்வதேச அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வரும் வருடத்தில், அமெரிக்காவில் ஊதிய வெட்டுகளுக்கும் சமூக நலன்களை வெட்டுவதற்குமான கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க தொழிலாள வர்க்கமும் வெகுஜன யுத்தங்களுக்குள் நுழையும்.

இந்த போராட்டங்கள் தொழிலாளர்களை ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகவும், செல்வம் படைத்த உயரடுக்கை மனக்கிலேசமின்றிப் பாதுகாப்பதில் குடியரசுக் கட்சிக்கு சளைத்தவர்களல்ல என்று விளங்கப்படுத்தி வந்திருக்கும் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் நேரடியாக நிறுத்தும்.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கும், நல்ல ஊதியத்துடனான வேலைகள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றுக்கான தனது அடிப்படையான சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அதன் சொந்த வெகுஜன அரசியல் கட்சியை வார்த்தெடுப்பது அவசியமாகும். வெகுஜன உழைக்கும் மக்களின் நலன்களைக் காவு கொடுத்து செல்வந்தர்களுக்கு ஆதாயமளிக்கின்ற ஒரு அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், அதனை சோசலிசத்தைக் கொண்டு இடம்பெயர்த்துவதற்குமான போராட்டத்தையே அது குறித்து நிற்கிறது.

தொழிலாளர்கள் எங்களது வேலைத்திட்டத்தைப் படிப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையும் முடிவினை மேற்கொள்வதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.