World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Four weeks after earthquake

Haiti: hunger sparks growing protests

நிலநடுக்கத்தின் நான்கு கிழமைகளின் பின்னர்

ஹைய்ட்டி: பஞ்சமானது அதிகரித்த எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது

By Bill Van Auken
9 February 2010

Back to screen version

ஞாயிறன்று ஜனவரி 12 நிலநடுக்கத்திற்கு பின்னர் மிகப் பெரிய எதிர்ப்புகளில் ஒன்றைக் கண்டது; பேரழிவிற்கு நான்கு வாரங்களுக்கு பின்னர் பெரும் ஏமாற்றங்களையும் தொடரும் பட்டினியையும் வீடற்றநிலையும் பெருகியுள்ளமையினால் இது தோன்றியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பெரும்பாலும் பெண்கள், Petionville என்னும் Port-au-Prince புறநகர்ப் பகுதியின் தெருக்களில் அணிவகுத்துச் சென்று, உள்ளூர் மேயர் Lydie Parent-ஐ உணவைப் பட்டினியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் மறு விற்பனை செய்வதற்கும் பதுக்கி வைத்திருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உதவியாக வந்துள்ள உணவுப் பொருட்களில் கணிசமான அளவு ஹைய்ட்டியில் உள்ள ஒழுங்கமுறையற்ற சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு அதிக விலைகளுக்கு விற்கப்படுகின்றன. பங்கீட்டிற்குப் பொறுப்புடைய அதிகாரிகள் சிலர் இவற்றினால் அதிக இலாபம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நகர சபைக் கட்டிடத்திற்கு முன் கூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் "போலீஸ் எங்களை சுட்டால், நாங்களை அனைத்தையும் எரித்துவிடுவோம்" என்று கோஷமிட்டனர் என ரெய்ட்டர் செய்தி தெரிவித்தது.

அணிவகுத்துச் சென்றவர்களில் ஒருவர் "நான் பட்டினி கிடக்கிறேன், பட்டினியினால் இறந்து கொண்டிருக்கிறேன்." என்று செய்தி நிறுவனத்திடம் கூறினார். "லிடி பேரன்ட் (மேயர்) அரிசியை பதுக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு எதையும் தருவது இல்லை. நாங்கள் வசிக்கும் இடங்களில் அவர்கள் பகிர்ந்து கொடுக்க வரவே இல்லை."

தலைநகருக்கு அருகே, மலையில் உள்ள பெட்டியோன்வில் மரபார்ந்த வகையில் ஹைய்ட்டியின் பொருளாதார உயரடுக்கின் பகுதி ஆகும். ஆனால், நாட்டின் வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் சுற்றுச் சுவர்கள் எழுப்பப்பட்ட மாளிகைகளை சுற்றி சேரிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஜனவரி 12ம் தேதியில் இருந்து செல்வந்தர்களுடைய முக்கிய பயன்பாட்டுப் பகுதியான Petionville Club ஆனது தலைநகரின் மிகப் பெரிய வீடுகள் இழந்தோரின் முகாமாக உள்ளது. இங்கு 40,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்பது தள கோல்ப் மைதானத்தில் புகலிடம் நாடியுள்ளனர்.

இந்த பரந்த சமூகப் பிளவின் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டவர்களில் 82 வது விமானப் பிரிவைச் சேர்ந்த 360 அமெரிக்க போர்த்துருப்புக்கள் உள்ளனர். அவர்களும் கிளப்பின் நீச்சல் குளம் மற்றும் உணவு விடுதியைச் சுற்றி முகாம் அமைத்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் ஹைய்ட்டிக்கு திரும்பி வந்தபோது எதிர்ப்புகளை சந்தித்தார். நீதித்துறை பொலிஸ் தலைமையகம்தான் தற்போதைய ஹைய்ட்டிய அரசாங்கத்தின் தற்காலிக தலைமையிடம் ஆகும். இங்கு கிளின்டன் வருகை தந்து, ஜனாதிபதி ரேனே பிரேவலை அவர் சந்தித்த போது நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே கூடினர்.

"எங்கள் குழந்தை சூரிய வெப்பத்தில் வதைக்கப்படுகின்றனர். இங்கு கூடாரங்கள் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு, தங்குவதற்கு உரிமை உண்டு" என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான 30 வயது, இரு குழந்தைகளுக்கு தாயார் Mentor Natacha, Agence France Press இடம் கூறினார்.

அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

கடந்த மே மாதம், ஐக்கிய நாடுகளின் ஹைய்ட்டிக்கான சிறப்புத் தூதர் என்று பெயரிடப்பட்டுள்ள கிளின்டன், நிலநடுக்கம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஹைய்ட்டிய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு உணவு கொடுப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அவர், "இவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து வருந்துகிறேன், என்ன தடைகள் என்பதைக் கண்டறிய முயல்கிறேன்." என்றார்.

Port-au-Prince ல் உள்ள Gheskio மருத்துவமனைக்கும் கிளின்டன் வருகை புரிந்தார்: தன்னுடைய அறக்கட்டளை பல பொருட்களாக கொடுத்த நன்கொடைகளை அறிவித்தார். ஆனால் மருத்துவமனையின் இயக்குனர் Jean William Pape, AFP இடம் மருத்துவமனையில் பெரும் கூட்டம் இருப்பதாகவும் போதுமான உதவிகள் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

"எங்களுக்கு இது பெரும் சுமை, ஏனெனில் நாங்கள் HIV/AIDS மற்றும் கசநோய் இன்னும் பல தொற்று நோயாளிகளைக் கவனிப்பதைத் தவிர, நாங்கள் கிட்டத்தட்ட 6,000 அகதிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. எங்களுக்கு போதுமான பொருட்கள் வரவில்லை. அவர்களுக்கு கூடாரங்கள் இல்லை, மழை காலம் வேறு வருகிறது, நாங்கள் வெள்ளப்பகுதியில் வசிக்கிறோம்" என்றார் Pepe.

செய்தித் தகவல்களின்படி, ஹைய்ட்டிய அரசாங்கம் கோரியிருந்த 200,000 கூடாரங்களுக்கு பதில் 10,000 மட்டுமே நாட்டிற்கு வந்துள்ளன. மற்றும் 27,000 கூடாரங்கள் அடுத்த வாரம் வரும் என்று கிளின்டன் கூறினார். பெரும் தேவையைப் பூர்த்தி செய்ய இது முற்றிலும் போதாது ஆகும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அழிவில் உள்ள கரிபிய நாட்டிற்கு காலனித்துவ கவர்னர் போல் தான் அனுப்பபட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். "ஹைய்ட்டியின் கவர்னர் என்று ஒரு பொழுதும் நான் இருக்க விரும்பவில்லை. நாட்டின் திறமையை கட்டமைத்து அதன் போக்கில் செலுத்த விரும்புகிறேன். ஒரு புதிய காலனித்துவவாதியாக நான் இருக்கமாட்டேன் என்று அவர்கள் நம்பலாம். எனக்கு வயதாகிவிட்டது" என்றார் அவர்.

தனிப்பட்ட முறையில் கிளின்டனின் பங்கு எதுவாயினும், தன்னை குறைத்துக் கொள்ளும் அவருடைய முயற்சி வாஷிங்டன் ஹைட்டியில் ஒரு புதிய காலனித்துவ பாத்திரத்தை துல்லியமாக ஏற்படுத்த விரும்புவதை மறைக்க முடியாது. நிலநடுக்கம் நடந்த சில மணி நேரத்திற்குள் பென்டகன் இதுவரை 16,000 துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளது மற்றும் நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த விதத்தில் செயற்பாட்டை நடத்தியது. அமெரிக்கப் போர்க்கப்பல்களும் கடலோரப் பாதுகாப்பு கப்பல்களும் ஹைய்ட்டியின் கடற்கரைக்கு வெளியே முற்றுகையை ஏற்படுத்தி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவர நினைப்பவர்கள் விரைவில் மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவதை உறுதிபடுத்திவிடும்.

US Task Force ஹைய்ட்டியின் நடவடிக்கை அலுவலர் கேணல் கிரிகொரி கேன், அமெரிக்கத் துருப்புக்கள் தேவையான வரை ஹைய்ட்டியில் இருக்கும் என்று கூறினார். "நாங்கள் ஹைய்ட்டியில் தேவைப்படும் வரை, ஹைய்ட்டி அரசாங்கம் எங்களை வரவேற்று வைக்கும் வரை இருப்போம்" என்றார்.

உதவிக் குழுக்களும் ஐரோப்பிய, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அரசாங்க அதிகாரிகளும் ஹைய்ட்டிய பேரழிவிற்கு விடையிறுப்பாக அமெரிக்க இராணுவமயமாக்குதல் ஏற்பட்டுள்ளதற்கு தீவிரமாக எதிர்த்துள்ளனர். பெரும் ஆபத்துகளுக்கு தேவைப்படும் உதவியை அளிப்பதற்கு பதிலாக முன்னுரிமையாக அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளது பற்றிய வாஷிங்டனின் முடிவுதான், நிலநடுக்கத்தை தொடர்ந்த முதல் சில முக்கிய நாட்களில் இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாயிற்று என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

உதவி இராணுவமயப்படுத்தல் மூலம் என்பதும், பாதுகாப்பு பற்றிய பெரும் கவலையும்தான் நிலநடுக்கத்திற்கு ஒரு மாதத்திற்கு பின்னரும் தெளிவாக உள்ளது. AFP யில் வந்துள்ள வாராந்திர உணவுப் பங்கீடு பற்றிய அறிக்கை ஒன்றில் இது பிரதிபலிப்பாகிறது: "அதிக ஆயுதமேந்திய படையினரால் சூழப்பட்ட வயதான பெண்களும், இளைஞர்களும் கூட சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தவித்து அரசி மூட்டைகளை எடுத்துச் செல்லத் தவித்தனர்" என்று செய்தி நிறுவனம் கூறியுள்ளது. "நகரத்தின் மற்றொரு பகுதியில் ஆர்ஜென்டினா துருப்புக்களில் ஒரு டஜன் பேர், டரத் துப்பாக்கியை கொண்ட கவச வண்டியில் வந்தவர்கள், உணவுப் பொருட்களைக் கொண்டிருந்த சிறு வாகனத்தை அது செல்லவேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக சேர்ந்து சென்றனர்."

ஹைய்ட்டிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் அதிகம் அதிகாரமற்றுக் காணப்பட்டது. பெருகிய முறையில் ஹைய்ட்டிய மக்களிடையே செல்வாக்கையும் இழந்துள்ளது. ஹைய்ட்டிய ஜனாதிபதி "பிரேவல் வீழ்க" என்று கூறும் கோஷ அட்டைகள் தலைநகரின் சுவர்களில் பெரிதும் எழுதப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின் கிட்டத்தட்ட மக்களால் பார்க்கப்பட முடியாத நிலையில் இருந்த ஜனாதிபதி பிரேவல் வார இறுதியில், அண்டை நாட்டு டொமினிக்கன் குடியரசின் அதிகாரிகளைச் சந்தித்தபோது கொடுத்த அறிக்கையில், நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட மக்களைப் பற்றிய மதிப்பீடு கால் மில்லியனாகிவிட்டது என்றார். 250,000 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் ஒரு மில்லியன் மக்கள் மழைகாலம் விரைவில் வர இருக்கையில் தற்காலிக உறைவிடத்தின் அவசரத் தேவையை எதிர்கொள்ளுகின்றனர் என்றும் கூறினார்.

சனிக்கிழமை செய்தி ஊடகத்திடம் பேசிய அவர், ஹைய்ட்டிய மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "வெளியே படுத்து உறங்கும், வீடுகளற்ற மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நாங்கள் உணர்கிறோம். உணவு, குடிநீர் பங்கீட்டினால் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும் அறிகிறோம்" என்றார் அவர். "ஆனால் கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் தான் நாம் நம்மை எதிர்கொண்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடியும்."

ஹைய்ட்டிய ஆட்சியின் உண்மையான வர்க்க நிலை நாட்டின் பிரதம மந்திரி கொலம்பிய நாளேடான Pais க்கு கொடுத்த பேட்டியில் தெரியவருகிறது. "ஜனவரி 12 அன்று ஹைய்ட்டியில் அதிகம் இழந்தவர்கள் ஏழைகள் அல்ல, மத்தியதர வர்க்கம் என்பதில் எஞ்சியிருந்தவர்கள்தான். ஏழைகளுக்கு முன்னரே வீடுகள் இல்லை, இன்னமும் வீடுகள் இலை. ஹைய்ட்டியில் தங்கியிருந்த மத்தியதர வர்க்கம், சிலர் வீடுகட்டுதல், சிறு வணிகத்தை கட்டமைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டனர்."

ஏழைகள் "வீடுகளைக் கொண்டிருக்கவில்லை" என்ற உண்மை, உதவி அமைப்புக்கள் பலவற்றாலும் தற்பொழுதைய நெருக்கடியில் முக்கிய காரணி என்று மேற்கோளிடப்பட்டுள்ளது. அவர்களிடம் மறு கட்டமைக்கும் வசதியும் இல்லை, எங்கும் செல்லவும் முடியாது. கத்தோலிக்க உதவிக் குழு Caritas Interrnational கருத்தின்படி, தலைநகரில் நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்தவர்களில் 70 சதவிகிதத்தினர் அழிவு தாக்குதவற்கு முன்பே தங்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்கவில்லை.

Port-au-Prince இலிருந்து அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் கிராமப்பகுதிகளுக்கு திரும்புவதற்காக போய் விட்டனர். அப்பகுதிகளில்தான் தலைநகரத்தின் வறிய தட்டுக்கள் பலவும் முன்பு இருந்தன. இப்பொழுது இன்னும் உறவினர்கள் அங்கே உள்ளனர்.

ஆனால் முதலில் தலைநகரத்திற்கு மக்கள் குடிபெயர்ந்த காரணமே விவசாயத்தின்மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாததுதான். இப்பொழுது இப்பகுதிகள் பெரியளவில் பட்டினியில் வாடும் மக்களை அதிகம் கொண்டுள்ளன. உணவு குறைவாக உள்ளது, அல்லது சிறிதும் இல்லை. கிராமப்புறப் பகுதிகளில் உதவிப் பொருட்கள் இன்னமும் வந்து சேரவில்லை. விவசாயிகள் தங்கள் விதை இருப்புக்களை உணவிற்கு பயன்படுத்தக் கூடிய ஆபத்து அதிகரித்துள்ளது. இது அடுத்த ஆண்டு அறுவடையைப் பாதித்து இன்னும் அதிக பட்டினியை ஏற்படுத்தும்.

இதற்கிடையில் Miami Herald சனிக்கிழமை அன்று அதிகம் காயம் அடைந்த ஹைய்ட்டிய குழந்தைகள் அமெரிக்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டுவரும் விமான அவசர மருத்துவப் போக்குவரத்தில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அறிவித்துள்ளது. இதையடுத்து மீண்டும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் பிளோரிடா கவர்னர் சார்லி கிறிஸ்ட் ஒபாமா நிர்வாகத்திற்கு கூட்டாட்சி அரசாங்கம் பெரும்பாலான இளவயது ஹைய்ட்டிய பாதிக்கப்பட்டவர்ளுக்காக அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகளுக்கு பொறுப்பு ஏற்குமா என்று கடிதம் எழுதிய பின்னர் இராணுவம் விமானப் பயணங்களை இரத்து செய்தது.

போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து எழுந்த பொதுக் கூக்குரலை அடுத்து ஒபாமா நிர்வாகம் செலவை அமெரிக்க சுகாதார, மனித சேவைகள் துறை மூலம் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டது.

ஆனால் இப்பொழுது இத்துறை இன்னும் கடுமையான தகுதி நிபந்தனைகளை மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் விமானங்களில் செல்லுவதற்கு சுமத்தியுள்ளது. மிகக் குறைவான நோயாளிகள்தான் தகுதி பெறுவர். தகுதி இல்லாதவர்கள் ஹைய்ட்டியில் இறக்க வேண்டியதுதான்.

"அவர்கள் ஆவணப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்கின்றனர். எங்களிடம் அதற்கான நிலைமைகள் இல்லை" என்று Herald இடம் Miami Children's Hospital இன் மருத்துவர் வில்லியம் மூய்நோஸ் கூறினார். இவர்தான் Port-au-Prince ல் தள மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவிற்கு தலைவராக உள்ளார். "அவர்களிடம் அடையாள அட்டை கிடையாது, அவர்களுக்கு வீடுகள் இல்லை. அவர்களிடம் எதுவும் இல்லை" என்றார்.

Whitney Constant என்னும் 15வயதுப் பெண் நிலையை செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது, அதாவது பிளோரிடாவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவாள் என்று கூறப்பட்டது, பின்னர் அரசாங்கத்தின் தேவைகளை ஒட்டி பயணம் நிறுத்தப்பட்டது. சென்றிருக்க வேண்டிய நாளுக்கு மூன்று தினங்களுக்குப் பின்னர் அப்பெண்ணின் காயங்கள் அழிகிப் போய்விட்டது. மருத்துவர்கள் ஒரு காலின் கீழ்ப்பகுதியையும் மற்றொரு காலின் பாதத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று.

மற்றொரு 14 வயது குழந்தை கடந்த வியாழனன்று நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு நோயால் இறந்து போனது. மருத்துவர்கள் அக்குழந்தை கொண்டுசெல்லப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றனர். "24 மணி நேரத்திற்குள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டது, ஆனால் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை" என்று மருத்துவர் முய்னோஸ் கூறினார்.

"சுகாதார, மனித சேவைகளுக்கான துறையானது விமானப் போக்குவரத்துக்களின் மீது இருந்த தடைகளை அகற்றியது. ஆனால் செல்வதற்கான தகுதி நிபந்தனைகளை கடுமையாக்கிய விதம் எவரும் உள்ளே நுழைய முடியாதபடி போய்விட்டது" என்று தள மருத்துவமனையின் மருத்துவர் Elizabeth Grieg கூறினார். விமானப் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மருத்துவமனைகளில் இருந்து 9 பேர்தான் பயணிக்க முடிந்தது என்றும் அவற்றுள் 6 பேர் கடந்த மாதம் இராணுவம் தற்காலிகமாக நிறுத்த முன்பே சென்றிருக்க வேண்டியவர்கள் என்று Herald ,டம் அவர் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved