World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US airstrike kills Afghan civilians

அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஆப்கானிய குடிமக்களை கொல்கின்றன

By Bill Van Auken
23 February 2010

Back to screen version

ஆப்கானிஸ்தானின் மத்திய உருஸ்கன் மாநிலத்தில் ஞாயிறன்று ஒரு அமெரிக்க வான்வழித் தாக்குதல் டஜன் கணக்கான மக்களை கொன்றது. தெற்கே ஒரு அமெரிக்க தரைவழித் தாக்குதல் ஹெல்மாண்ட் மாநில மர்ஜா நகரில் இரண்டாம் வாரத் தாக்குதலில் கூடிய இறப்புக்களை ஏற்படுத்தி பெரும் மனிதாபிமான பேரழிவிற்கும் வகை செய்துள்ளது.

இந்தப் படுகொலை உருஸ்கன், தய்குன்டி மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லை அருகில் நடைபெற்றது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்தின்படி சிறப்புப் படை துருப்புக்கள் மூன்று மினி பஸ்கள் மீது விமானத் தாக்குதலுக்கு அழைப்புவிட்டன. அவற்றில் ஆயுதமேந்திய எழுச்சியாளர்கள் இருந்ததாக நம்பபப்பட்டதால் இந்த அழைப்பு விடப்பட்டது.முதலில் வந்த தகவல்கள் 33 பேர் இறந்தனர், குறைந்தது 12 பேர் காயமுற்றனர் என்று கூறின. பின்னர் ஆப்கான் அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை 27 என்று திருத்தினர். இறந்தவர்களில் நான்கு பேர் மகளிர், ஒரு குழந்தையும் இருந்தது. செப்டம்பர் 4ல் ஒரு ஜேர்மனிய தளபதி விமானத் தாக்குதலை உள்ளூர் மக்கள் சூழ்ந்திருந்த ஒரு எரிபொருள் டாங்கர்மீது நடத்த உத்தரவிட்டு 142 பேரை கொன்றதை அடுத்து ஆப்கானிய குடிமக்கள்மீது இது மிக மோசமான தாக்குதல் என்று தோன்றுகிறது.

ஆப்கானிய மந்திரி சபை இந்த வான்வழித் தாக்குதலை குறைகூறியது. "நேட்டோப் படைகள் பல முறை பொதுமக்களை கொல்வது நியாயமற்றது" என்று மந்திரி சபைக்குழு அதிக எதிர்ப்பில்லாத ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஆனால் படுகொலையில் இறந்தவர்களின் குடும்பங்களுடைய விடையிறுப்பு வேறுவிதமாகத்தான் உள்ளது. நாட்டை விட்டு வெளிநாட்டு துருப்புக்கள் வேளியேற வேண்டும் என்று அவை கோருகின்றன. "பாதுகாப்பு கொண்டுவருவதாக அவர்கள் இங்கு வந்தனர், ஆனால் நம் குழந்தைகள், சகோதரர்கள், நம் மக்களை கொல்கின்றனர்" என்று ஹாஜி குலாம் ரசெளல் கூறினார்; இவருடைய நெருங்கிய உறவினரும் தாக்குதலில் இறந்துவிட்டார். "நிறைய இழந்துவிட்டோம்" என்றார் அவர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதியாக இருக்கும் ஜேனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் பொதுமக்களின் இறப்புக்கள் அமெரிக்க நாட்டை சமாதானப்படுத்தும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, மக்கள் எதிர்ப்பைத் தூண்டுகின்றன என்று வலியுறுத்தினார். பல முறையும் ஆப்கானிஸ்தானத்தில் போர் நடக்கும் விதிகளை மாற்றினார், காரணம் இத்தகைய இறப்புக்களை குறைப்பதற்காக; ஆயினும்கூட இவை தொடர்கின்றன.

இக்கொலைகளில் பெரும் பங்கை சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்டுள்ளன. இதற்கு முன்பு மக்கிரிஸ்டல்தான் தளபதியாக இருந்தார். இப்பிரிவுகள் தலிபான் மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சக்திகளின் முக்கிய கூறுபாடுகளை தகர்க்கும் படுகொலைத் திட்டத்திற்காக பயன்படுபவை ஆகும். கடந்த டிசம்பர் மாதம் எட்டு மாணவர்களை மரண தண்டனை முறையில் கொன்றதற்கு குறை கூறப்பட்டனர்; குனார் மாநிலத்தில் நடந்த அந்நிகழ்வில் சிலர் 11 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ஞாயிறன்று படுகொலைக்கு ஆதரவாக உட்குறிப்பாக உரை நிகழ்த்தி அத்தகைய கொடூரங்கள் போரின் ஒரு பகுதியாக ஏற்கப்பட வேண்டும் என்றார்.

"நாம் போரில் உள்ளோம் என்பது நினைவில் இருக்க வேண்டும்" என்று பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில் கேட்ஸ் கூறினார். "தளபதி மக்கிரிஸ்டன் பொதுமக்கள் இறப்புக்களை இயன்றவரை தவிர்க்க முயன்று வருகிறார்."

"இதை நான் பாதுகாத்து பேசவில்லை. இத்தகைய நிகழ்வுகள் பல விதங்களில் ஒரு போரில் இயல்பானவை. இதுதான் போரை இழிவாக்குகிறது" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

கேட்ஸுடன் தோன்றிய கூட்டுப்படைகளின் தலைவர் அட்மைரல் மைக் முல்லன் அதே போல் பேசினார். "போர் என்பது குருதி கொட்டும், சீரற்ற செயல். அது குழுப்பங்களை கொடுக்கும், தீயது, நம்ப முடியாத அளவிற்கு வீணானது, அதற்காக அது செய்யப்படக்கூடாது என்று இல்லை." என்றார்.

அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் "பொதுமக்களை மறைப்பாக பயன்படுத்துகின்றனர்" என்று பரந்த முறையில் நியாயப்படுத்திப் பேசுவதுடன் கேட்ஸும் சேர்ந்து கொண்டார். இத்தகைய கூற்றுக்கள் ஒவ்வொரு காலனித்துவ போரிலும் பயன்படுத்தப்பட்டன--இவற்றில் வெளிநாட்டுத் துருப்புக்கள் உள்ளூர் மக்களுக்கு எதிராக போரிடும்; ஆயுதமற்ற ஆண், பெண், குழந்தைகள் கொல்லப்படுவதை இது நியாயப்படுத்த முயலும்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இரண்டும் திங்களன்று இதே அடிப்படை கருத்தில் கட்டுரைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். டைம்ஸின் தலையங்கம் "ஆப்கானியர்கள் போர்த்தாக்குதல்களுக்கு இடையில்" என்று குறிப்பிட்டது, ஜேர்னல் "பொதுமக்கள் போர்த் தாக்குதல்களுக்கு நடுவே" என்று எழுதியது.

உருஸ்கனில் நடந்த கொடூர வான் தாக்குதல் "Operation Moshtarak" பற்றி, அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புத் துருப்புக்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின்மீது படையெடுத்ததில் இருந்து மிகப் பெரிய தாக்குதல் வெற்றி, முன்னேற்றம் என்னும் கூற்றுக்களினால் மங்கியுள்ளது.

இந்நிகழ்வில் 19 சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் 12 பேர் வீட்டில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு எட்டு வயதுப் பெண்ணை தவிர மற்ற அனைவரும் இறந்தனர். ஆனால் உள்ளூர்வாசிகள் இறப்பு எண்ணிக்கையை அதிகமாக கொடுக்கின்றனர்.

International War and Peace Reporting கிற்காக எழுதும் அசிஸ் அஹம்த் தஸ்ஸல் மற்றும் முகமத் எல்யஸ் டேயி, இருவரும்பவர்கள், ராக்கெட் தாக்குதலில் இந்த மாதம் முன்னதாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைப் பேட்டி கண்டனர்.

அவர்களில் ஒருவரான ஹருன் மாநிலத் தலைநகர மருத்துவமனையில் இருந்தார். அங்கு தன்னுடைய காயமுற்ற இரு சகோதரர்களை அழைத்து வந்தார். ஒரு சகோதரரின் மனைவி டாங்கிலிருந்து வந்த குண்டில் கொல்லப்பட்டிருந்தார்.

"என்னுடைய காயமுற்ற சகோதரர் பசல் ஒமர் ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். அவர் காயமுற்றபோது அவருடைய மனைவி வீட்டில் இருந்து தன்னுடைய கணவனை நோக்கி ஓடிவந்தார், ஆனால் அவர்கள் டாங்கில் இருந்து அவரையும் கொன்றுவிட்டனர்" என்று அவர் கூறினார்.

"அந்தக் கணம் எனக்கு மிகக் கடினமாக இருந்தது; ஏனெனில் நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாது. என்னுடைய காயமுற்ற சகோதரர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது. என்னுடைய இறந்த சகோதரர் மனைவியின் சடலத்தையும் வீட்டிற்கு கொண்டுவரமுடியாது." என்று அவர் தொடர்ந்து கூறினார்.

தன்னுடைய இரு இளைய சகோதரிகளின் சடலங்களை லஷ்கர் காவில் உள்ள போஸ்ட் மருத்துவமனைககு கண்டு வந்த குலா ஜானும் பேட்டி காணப்பட்டார். அவர்களுடைய வீடு அமெரிக்கத் தலைமையிலான படைகளால் தாக்கப்பட்டது. "என்னுடைய இரு இளைய சகோதரிகள் வெளிநாட்டினரின் தாக்குதல்களால் தியாகிகளாகிவிட்டனர். என் சகோதரிகள் இறப்பிற்கு பழிதீர்க்கும் வரை இந்த சமயத்துரோகிகளுடன் சமரசத்திற்கு வரமாட்டேன்." என்று அவர் கூறினார்.

அஹ்மதின் தகப்பனார், உணவு வாங்குவதற்கு வீட்டை விட்டு சென்றபோது ஆக்கிரமிப்புத் துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "என்னுடைய தந்தையின் சடலம் எங்கள் வீட்டிற்குள்ளேயே இரு நாட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏனெனில் வெளிநாட்டினர் சடலத்தை மயானத்தில் புதைக்க எங்களை அனுமதிக்கில்லை. நாங்கள் கொல்லப்படுவோம் என்றும் அச்சப்பட்டோம். இவர்கள் கொடூரமானவர்கள், இந்த சமயத் துரோகிகளுக்கு எங்களிடம் பரிவுணர்வு இல்லை." என்றார் அவர்.

இதற்கிடையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மர்ஜா மக்களிடையே துருப்புக்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை உதைப்பது, உள்ளூர் சந்தையை சேதப்படுத்துவது, அவர்கள் கால்நடைகளை கொல்லுவது பற்றி பெருகிய சீற்றம் உள்ளது என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

இராணுவ நடவடிக்கையில் பெரும் மனிதப்பேரழிவு பற்றிய அக்கறைகள் பெருகியுள்ளன. அமெரிக்க தளபதிகள் இது இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்று கூறுகின்றனர். வீட்டிலேயே இருக்கும் பல மக்கள் போரினால் தங்கள் வீடுகளிலையே கைதிகள் போல் உள்ளனர்; உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றைப் பெற முடியவில்லை.

வீடுகளில் இருந்து தப்பிய பல ஆயிரக்கணக்கானவர்கள் இப்பொழுது வீடின்றி உள்ளனர். ஹமித் கர்சாயியின் அரசாங்கம் அல்லது ஆக்கிரமிப்புப் படைகளில் இருந்து அதிக உதவி இவர்களுக்கு இல்லை.

மர்ஜாவில் இருந்து வரும் தகவல்கள் அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டுத் துருப்புக்கள் தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கையில் இடைவிடாத மோதல் நிறைந்த நரகத்தன சூழலைப் பற்றிக் கூறுகின்றன. தலைக்கு மேலே ஹெலிகாப்டர் குண்டு தாக்குதலுக்கு தயாராக செல்கின்றன, விமான ஓட்டிகள் இல்லாத டிரோன்கள் மற்றும் போர் விமானங்களும் பகுதியை வட்டமிடுகின்றன; தாக்குலுக்கு உத்தரவை நாடி நிற்கின்றன.

குறைந்தது 13 அமெரிக்க, பிற துருப்புக்கள் கொல்லப்பட்டன. இராணுவ அதிகாரிகள் 120 "எழுச்சியாளர்கள்" போரில் இறந்துவிட்டதாக கூறுகின்றனர்; ஆனால் இந்த கணக்கு ஒரு மதிப்பீடு என்றுதான் தோன்றுகிறது; சாதாரண மக்களையும் அடக்கியிருக்கலாம்.

அமெரிக்க இராணுவ மற்றும் செய்தி ஊடகங்கள் இராணுவ நடவடிக்கையை நீண்ட போரில் ஒருவித திருப்பு முனை என்று அழைக்கையில் (ஜனாதிபதி பாரக் ஒபாமா "விரிவாக்கத்திற்கு" உத்தரவிட்டபின் பெரிய தாக்குதல்) இது ஒன்றும் அப்படி இல்லை என்றுதான் வெளிப்படையாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 11,000 துருப்புக்கள் வான்வழி ஆதரவைக் கொண்டு மர்ஜாவில் நுழைந்துள்ளன; இது ஒரு ஒதுக்குப்புற, கிராமப்புற பகுதிய, கிட்டத்தட்ட 75,000 மக்கள் வசிக்கின்றனர். ஒரு சில நூறு தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் இருக்கும் படைகள் வெற்றி பெறும் என்பது உறுதியானாலும், பகுதிமீது அதன்கட்டுப்பாடு உறுதியற்றது; ஏனெனில் பல தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றன.

இத்தாக்குதல் பெரிதாக அமெரிக்க சக்தியின் நிரூபணம் ஆகும்; இதில் மூலோபாய முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஆனால் காட்டப்பட்டுள்ள வலிமை அதிக பட்சம் போலித்தனம் என்றுதான் ஆகியுள்ளது.

அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிய தேசிய இராணுவம் போரில் முழுமையாக ஈடுபட தொடங்கியபின் திரும்பப் பெறப்படும் என்ற கூற்று ஆப்கானிய துருப்புக்களின் நடந்து கொள்ளும் முறையால் நிராகரிக்கப்படுகிறது. இதில் ஒருவர்தான் இதுவரை கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க மரைன்கள்தான் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலைமை தாங்கும் கட்டாயத்தில் உள்ளது; ஆப்கானியப்படைகள் சொந்தமாக திறமையை காட்டுவதில்லை.

மேலும் பெரும்பாலான துருப்புக்கள் தாஜிக்குகள் ஆவர். இந்த இனக்குழு வடக்குக் கூட்டணியில் தளமாக இருந்தது; அத்துடன் உள்ளூர் பஷ்டூன்களைத் தளமாகக் கொண்ட தலிபான்கள் நீடித்த உள்நாட்டுப் போரை நடத்தினர். இவர்கள் அமெரிக்க துருப்புக்களைப் போல் பரந்த அளவில் விரோதி ஆக்கிரமிப்புப் படை என்றே கருதப்படுகின்றனர்.

அமெரிக்க தலைமையிலான நடவடிக்கை அமெரிக்க கைப்பாவை கர்சாய் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் ஒரு புதிய மாவட்ட ஆட்சியை நிறுவக்கூடும். இது வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு அடிபணிந்து இருக்கும். இந்த வேலையை செய்வதற்கு தேர்நதெடுக்கப்பட்டவர் ஹாஜி ஜாகிர் ஆவார். இவர் நாட்டில் இருந்து வெளியே ஜேர்மனியில் 15 ஆண்டுகள் இருந்துவிட்டு இருந்து சமீபத்தில்தான் திரும்பியுள்ளார். இப்பகுதியில் இவருக்கு அதிக தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

திங்களன்று முதல் தடவையாக ஜாகிர் மார்ஜாவிற்கு "ஒரு மரைன் எம்.வி.22பி Osprey ஹெலிகாப்படரில் பல மரைன் அதிகாரிகளுடன்" அழைத்துச் செல்லப்பட்டார் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. மேலும், "தரையில் இரண்டு மணி நேரம் இருந்தார், அவருடைய விமானம் இறங்கிய இடத்தில் இருந்து 100 கஜ தூரம் கூட அதிகம் செல்லவில்லை.

மாவட்டத்தின் தலைமைக்கு போட்டியிடுபவர்களில் முன்னாள் பொலிஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஜானும் உள்ளார். போஸ்ட் கூற்றுப்படி இவர் "மிகுந்த ஊழல், இரக்கமற்ற பொலிஸுக்கு தலைமை தாங்கினார். அவர்களுடைய முத்திரையே உடனடி தூக்கிலிடுதல்தான்; பல மக்கள் தலிபானை இன்னும் மனிதாபிமானமுடைய மாற்றீடு என்றுதான் வரவேற்றுள்ளனர்."

2005ல் பிரிட்டிஷ் அதிகாரிகள் கோரியபடி பதவிநீக்கப்பட்ட ஜான் கர்சாய் ஆதரவைப் பெற்றுள்ளார், அல்லது அதனால் போதைப் பொருள் கடத்துபவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளார் என்று போஸ்ட் தகவல் கொடுத்துள்ளது.

மர்ஜாவில் நடக்கும் செயல் "வருங்காலத்திற்கு ஒரு மாதிரி போல் இருக்கும்" என்று மக்கிரிஸ்டல் கூறினார். இன்னும் முக்கியமாக இலக்காக ஆப்கானிஸ்தானத்தின் இரண்டாம் மிகப்பெரிய நகரமான காந்தகார் இருக்கும் என்றார். அதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கட்டுப்பாட்டிற்கு போரட்டம் அங்கு என்பது இறப்பைப் பொறுத்தவரையில் சாதாரண மக்கள், அமெரிக்க துருப்புக்கள் இரண்டிற்கும் அதிகமாக இருக்கும்.

ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி "Meet the Press" க்கு பேட்டி கொடுத்த அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தளபதி டேவிட் பெட்ரீயஸ் வரவிருக்கும் மாதங்களில் உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும், பொறுத்துக் கொள்ளுவது "கடினமாக இருக்கும்" என்றார்.

மர்ஜா தாக்குதல் "இப்பொழுதுதான் தொடக்கத்தில் உள்ளது. 12 முதல் 18 மாத நடவடிக்கையாக இது இருக்கக்கூடும்" என்று பெட்ரீயஸ் கூறினார்.

தளபதியின் கருத்து இன்னும் அதிக 30,000 துருப்புக்களுடன் நடக்கும் விரிவாக்கம் 2011 ஜூலைக்குள் மாற்றப்படும், அமெரிக்கப் படைகள் குறைக்கப்படும் என்ற ஒபாமாவின் கூற்றினை பொய்யாக்குகின்றது. ஒபாமா நிர்வாகம் ஒரு நீடித்த, விரிவாகும் இரத்தம் சிந்தும் போரை நடத்தி வருகிறது. இதற்கு முடிவு தெரியவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved