World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama administration prepares public opinion for attack on Yemen

யேமன் மீதான தாக்குதலுக்கு மக்கள் ஆதரவை ஒபமா நிர்வாகம் திரட்டத் தயாராகிறது

By Patrick Martin
31 December 2009

Back to screen version

ஒரு நைஜீரிய மாணவன் டெட்ரோயிட்டிற்கு செல்லும் பயணிகள் ஜெட் விமானத்தைக் குண்டு வைத்து தகர்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததையடுத்து ஐந்து நாட்களில், அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் யேமனுக்கு எதிராக விரிவான இராணுவ நடவடிக்கைக்கு தயார் செய்வதாக கூறப்படுகிறது; அந்த அரபு நாட்டில்தான் மாணவன் பயங்கரவாத பயிற்சியை பெற்றதாகவும்; அவருக்கு வெடிகுண்டுக் கருவியும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க செய்தி ஊடகத்தில் இருந்துவரும் தொடர் தகவல்கள் யேமனுக்குள் அமெரிக்கா ஆதரவு இராணுவத் தாக்குதல்கள் தவிர்க்க முடியாதவை என்று காட்டுகின்றன. "இரண்டு மூத்த அமெரிக்க அதிகாரிகளை" மேற்கோளிட்டு, CNN கூறுவது: "அமெரிக்காவும் யேமனும் இப்பொழுது பதிலடி கொடுப்பதற்கு திறனுடைய புதிய இலக்குகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன."

அதிகாரிகள் இருவரும் "இந்த முயற்சி ஜனாதிபதி ஒபாமா பதிலடி கொடுக்குமாறு உத்திரவிட்டால் வெள்ளை மாளிகைக்கு விருப்புரிமைகளை தயாரித்துக் கொடுக்கும் நோக்கத்தை உடையவை என்று வலியுறுத்தியதாக" இந்த இணையம் கூறியுள்ளது. CNN தொடர்கிறது: "இலக்குகள் குறிப்பாக விமானச் சம்பவம், அதற்கான திட்டத்துடன் இணைக்கப்பட முடியுமா என்பது பற்றிய முயற்சிகள் உள்ளன. அமெரிக்க சிறப்பு படை மற்றும் உளவுத்துறை அமைப்புகளும் அவற்றுடன் அதே போன்ற யேமனிய பிரிவுகளும் யேமனில் இருக்கும் அல் கெய்டாவின் முக்கிய இலக்குகளை அடையாளம் காணும் செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்."

ஒபாமா நிர்வாகமும் நீண்டகால யேமனிய சர்வாதிகாரி பீல்ட் மார்ஷல் அலி அப்துல்லா சாலேயும் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள், போர் ஜெட்டுக்கள் மற்றும் ஆயுதமேந்திய டிரோன்களை கொண்டு, தொலைக் கட்டுப்பாட்டின் மூலம் யேமனி வான்வழியை உபயோகித்து, படுகொலைகள் நடத்துவதற்கு அனுமதிக்க உடன்பாடு கொள்ளப்பட்டதாக இணையம் கூறியுள்ளது. அமெரிக்க ஹெலிகாப்டர் கொண்டுவரும் சிறப்புப் படைகள் நுழைவதற்கு சாலே அனுமதிப்பாரா என்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

இந்தத் தகவல் ஒபாமா உட்பட பல உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட தொடர்ச்சியான அறிக்கைகளை அடுத்து வந்துள்ளது; "அமெரிக்க சக்தியின் அனைத்துப் பிரிவுகளும்" நோர்த்வெஸ்ட் விமான 253 மீது நடந்த தோல்வியுற்ற தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில் பயன்படுத்தப்படும். வெள்ளை மாளிகை அதன் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்களிடம் இருந்து வெளிப்படையான பாதுகாப்பு தோல்வி பற்றி பெரும் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது; ஒரு இராணுவ நடவடிக்கை எப்படி CIA மற்றும் பிற அமெரிக்க அமைப்புக்கள் வரவிருந்த தாக்குதல் பற்றிய எச்சரிக்கைகளை புறக்கணித்தன என்பது பற்றி வரும் தகவல்களில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும்.

யேமனின் வெளியுறவு மந்திரி அபு பக்கர் அல் குர்பி BBC இடம் தன்னுடைய நாடு கூடுதலான இராணுவ உதவியை நாடுவதாக--, ஒரு தொகுப்பு உடன்பாட்டின் ஒரு பகுதியாக எனலாம்--என்று கூறினார்; இது நாட்டின் பகுதியை அமெரிக்க கொமாண்டோக்கள் ஒரு போர்க்களமாக மாற்றுவதை அனுமதிப்பதற்கு இலஞ்சம் என்று கொள்ளலாம்.

ஒபாமா நிர்வாகம் யேமனுக்கு வரும் ஆண்டுகளில் தன் இராணுவ, பயங்ரவாத எதிர்ப்பு வகையிலான உதவிகளை மும்மடங்காக்குவது பற்றி விவாதித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது. அமெரிக்க நிதி உதவி 2006ல் இருந்து $4.6 மில்லியனில் இருந்து இந்த ஆண்டு $67 மில்லியன் என உயர்ந்தது; இது 2010ல் $190 மில்லியனை அடையக்கூடும் என்று "ஒரு மூத்த இராணுவ அதிகாரி" கூறினார்.

பெயரிடப்படாத "பாதுகாப்புத்துறை, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளை" மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் "ஒபாமா நிர்வாகம் யேமனியப் படைகளுக்கு அமெரிக்க உதவியை விரிவாக்கி, விரைவுபடுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்கிறது, இது அந்நாட்டில் அல் கெய்டா தலைமையை அழிக்க முற்படும், அதே நேரத்தில் அமெரிக்க இராணுவ, உளவுத்துறைகள் களத்தில் பின்புறத்திலிருந்து பங்குபற்றும் சாத்தியம் இருக்கும்" என்றும் அறிவித்துள்ளது.

செய்தி ஸ்தாபனமானது யேமன் பாதுகாப்புப் படைகளுக்கும் அல் கெய்டா போராளிகளுக்கும் இடையே மேற்கு Hudaydah மாநிலத்தில், Deir Jaber நகரத்தை சுற்றி மோதல் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது.

ஒரு யேமனிய பயங்கரவாதம் பற்றிய வல்லுனரை மேற்கோளிட்டு லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அல் கெய்டாவிற்கு "அந்நாட்டில் இருக்கும் பொருளாதார, அரசியல் குழப்பத்தினால் 2,000 போராளிகள் மற்றும் ஆதரவாளர்களை உருவாக்கும் தளம் உள்ளது, பேர்சிய வளைகுடா விளிம்பில் இது ஜிகாத்திற்கு ஒரு தளமாக்கும் வழிவகை உண்டு " என்ற மதிப்பீட்டினை ஆதாரமாகக் கூறியுள்ளது. இது மற்றய செய்தி ஊடகங்களுடையதைவிட எண்ணிக்கையில் பத்து மடங்கு யேமனில் அதிகம் என்று காட்டுகிறது; ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகள் இப்பொழுது இருப்பதாகக் கூறும் அல் கெய்டா எண்ணிக்கையை போல் 20 மடங்கு ஆகும்.

அமெரிக்க செய்தி ஊடகம் யேமனை பயங்கரவாதம் செழிப்பதற்கு ஏற்ற சட்டமற்ற சூடுபிடிக்கும் இடம், அமெரிக்காவிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய இடம் என்று சித்தரிப்பதற்கான முயற்சியில் டைம்ஸ் அறிக்கை ஒரு பகுதியாகும். இதையொட்டி அமெரிக்க தாக்குதல் அல்லது முழு அளவு படையெடுப்பு நடத்தப்படுவதற்கு நியாயப்படுத்தப்படும் நிலைப்பாடு கிடைக்கும்.

"பயங்கரவாதம் பற்றிய வல்லுனர்" ஸ்டீவன் எமெர்சன் இன்னும் பெரும் தத்துவ அளவில் புதனன்று காலை CBS ஆல் "அதிகாலை நிகழ்ச்சிக்கு" பேட்டி காணப்பட்டபோது கூறிய கருத்து இதைத் தொடர்ந்து வந்துள்ளது. பாக்கிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பயங்கரவாத செயலில் "முதலிடத்தில்" இன்னும் இருந்தாலும், ஏடென் வளைகுடா, யேமன், சோமாலியா உட்பட, "ஏணியில் விரைவில் படிகளில் ஏறியுள்ள இடம் ஆகும்" என்றார்.

"அடுத்த ஆண்டு பாக்கிஸ்தானையும் யேமன் கடக்கக்கூடும், அல் கெய்டாவிற்கு அங்கு ஒரு சொர்க்கத்தை கொடுப்பதோடு பயங்கரவாதப் பாதையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார். ஒபாமா நிர்வாகம் 100,000 அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவற்றை ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லையில் திரட்டியிருக்கும் நிலையில், இத்தகைய ஒப்புமை மிகவும் ஆபத்தானது.

"ஏராளமான படிக்கும் அமெரிக்க முஸ்லிம் மாணவர்கள் இன்று யேமனில் பயிற்சி பெறுகின்றனர்....பயங்கரவாதிகளாகும் தொகுப்பிற்கு அங்கு திறன் உள்ளது; அவர்களிடம் மேலைநாட்டு பாஸ்போர்ட்டுக்கள் உள்ளன, விமானங்களில் விசாக்கள் இல்லாமல் ஏறமுடியும்" என்பதை எமர்சன் குறிப்பிட்டு கூறினார்.

இத்தகைய அதிக வாய்ப்பு இல்லாத கூற்றுக்களின் தெளிவான இலக்கு அனைத்து அமெரிக்க இளம் முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறிச் சூழலை ஏற்படுத்துவதாகும்; குறிப்பாக அரபு அல்லது கிழக்கு ஆப்பிரிக்க பின்னணியில் உள்ளவர்கள் மீது.

இத்தகைய கருத்துக்கள் ஒரு சோமாலிய நபர் வெடிமருந்து மற்றும் சிரிஞ்சுடன் தலைநகரமான மோகாதிசுவில் பயணிகள் ஜெட்டில் ஏற முற்பட்டதில் தோல்வி அடைந்தார் என்று கூறப்பட்ட நிகழ்ச்சி செய்தி ஊடகத்தில் வந்த மறுநாள் வெளிப்பட்டுள்ளன. இதே விதத்தில்தான் நைஜீரிய நபர் உமர் பரூக் அல்துல்லமுதல்லப், நோர்த்வெஸ்ட் விமான 253ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று விமானத்தை தகர்க்க கையாண்ட வழிவகை இருந்தது. சோமாலி நபர் ஆபிரிக்க சமாதானப் படைகளால் நவம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார்; விமானத்தில் ஏறும் முயற்சியில் வெற்றிபெறவில்லை.

அமெரிக்க தலைநகரத்தில் முக்கிய செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் புதனன்று ஒரு தலையங்கம் வெளியிட்டு, கிறிஸ்துமஸ் தின வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சியை அடுத்து, யேமனில் அதன் ஆரம்பம் இருந்ததாகக் கூறப்படுவது பற்றி, "அமெரிக்கா அந்த வறிய அரபு நாட்டின்மீது இராணுவத் தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமா எனச் சிலர் கேட்கின்றனர்" தலையங்கம் தொடர்கிறது: "இதற்கு விடை, ஆம், ஏற்கனவே இது ஆரம்பிக்கப்பட்டுவிட்டது."

யேமன் மற்றும் அமெரிக்க படைகள் நடத்தும் தொடர்ச்சியான சோதனைத் தாக்குதல்களை மேற்கோளிட்டு, போஸ்ட் ஒபாமா நிர்வாகத்தை "யேமனில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கணிசமாக முடுக்கிவிட்டதற்கு" பாராட்டியுள்ளது. இதில் CIA, சிறப்புப் படைகளின் உறுப்பினர்கள் அனுப்பப்பட்டதும் அடங்கும். ஆனால் அது எச்சரித்தது: "இருந்தும்கூட, சமீபத்திய ஆண்டுகளில் ஒரு தோல்வியுறும் நாடு என்ற நிலையை நோக்கி யேமன் சரிந்து கொண்டிருப்பது, அருகில் உள்ள சோமாலியா போல், பல ஆண்டுகள் இணைந்து பல்வித அமெரிக்க ஈடுபாடு தொடரும் என்பதைக் காட்டுகிறது. சிறப்புப் படைகள் பிரிவை விட ஏவுகணைத் தாக்குதல்கள் தேவைப்படுகின்றன."

"அமெரிக்க தரைப்படைத் துருப்புக்கள் தற்பொழுது யேமனிலோ, சோமாலியாவிலோ தேவைப்படவில்லை" என்று அறிவிக்கும் செய்தித்தாள், அத்தகைய படைகள் வருங்காலத்தில் தேவைப்படக்கூடும் என்று தெரிவிக்கிறது. "அந்த நாடுகளில், ஆப்கானிஸ்தானில் உள்ளதைப் போல், பயங்கரவாதத்தை எதிர்க்கும் வரம்புடைய மூலோபாயம் மட்டும் அச்சுறுத்தலை அகற்றாது" என்றும் அது கூறியுள்ளது.

மீண்டும், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்தது போல், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு வறுமை மிகுந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல் என்ற போலிக் காரணத்தை பயன்படுத்தி ஒரு இராணுவக் குருதி சிந்துதலுக்கு தயாரிப்பு நடத்துகிறது--இப்பொழுது ஒரு தோல்வியுற்ற முயற்சியை அடுத்து. ஐ.நா. மற்றும் யேமனிய அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி நாட்டின் வயது வந்தவர்களில் 35 சதவிகிதத்தினர் அங்கு வேலையின்மையில் வாடுகின்றனர். அரபு நாடுகளிலேயே யேமன் மிக ஏழ்மையான நாடாகும்; அதன் மிகக்குறைந்த எண்ணெய் ஏற்றுமதித் திறனையும் தீர்த்துவிட்டு, இப்பொழுது கடுமையான நீர்ப் பஞ்சத்தையும் எதிர்கொண்டுள்ளது.

ஆனால் ஆப்கானிஸ்தான், ஈராக்கைப் போல் யேமனும் ஓர் உயர்ந்த மூலோபாய புவியியல் இடத்தைக் கொண்டுள்ளது; உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான செளதி அரேபியாவிற்கும் செங் கடலுக்கும் அண்டை நாடு ஆகும்; சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் பாதையைக் கட்டுப்படுத்த முடியும். ஏடன் வளைகுடா எல்லையிலும் யேமன் உள்ளது; அதுதான் பேர்சிய வளைகுடாவை விட்டு நீங்கும் எண்ணெயின் பெரும்பகுதி கடல்வழியே செல்லும் இடம் ஆகும்.

அமெரிக்க இராணுவப் படைகள் ஏற்கனவே முன்னாள் பிரெஞ்சு சோமாலிலாந்து பகுதியான Djibouti ல் உள்ள Babel Mandep ஜலசந்திக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது இன்னும் கிட்டத்தட்ட ஒரு பிரெஞ்சு காலனியாகத்தான் உள்ளது. ஆயிரக்கணக்கான பிரெஞ்சு மற்றும் அமெரிக்க துருப்புக்கள் Djibouti ல் உள்ளனர்; அவர்கள் விரைவில் பாரிஸ், வாஷிங்டன் உத்தரவின் பேரில் யேமனுக்கு அனுப்பப்பட முடியும். ஒரு பெரிய அமெரிக்க, நேட்டோ போர்க் கப்பல்களின் ரோந்துகள் ஏடென் வளைகுடா மற்றும் தெற்கே சோமாலிய கடலோரப் பகுதி வழியே இந்திய பெருங்கடலுக்கு செல்லும் கப்பல் பாதைகளைக் கண்காணிக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved