World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US military tightens grip on Haiti

ஹைட்டியின் மீது அமெரிக்க இராணுவம் பிடியை இறுக்குகிறது

By Alex Lantier
18 January 2010

Back to screen version

ஹைட்டியில் ஜனவரி 12ம் தேதி நிலநடுக்கத்தைத் தொடர்ந்த பெரும் மனித சோகத்தில், வாஷிங்டன் அந்நாட்டில் காலவரையற்ற இராணுவக்கட்டுப்பாட்டை நிறுவுவதில் குவிப்புக் காட்டி வருகிறது. திகைப்பிற்குட்பட்டுள்ள ஹைட்டியர்களிடம் இருந்து போதுமானதாக இராமல் உள்ள மீட்பு முயற்சிகள் பற்றி பெரும் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் கலகங்களை எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க இராணுவ ஒழுங்கமைப்பு முயற்சிகள் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்த பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை சேகரிப்பதில் குவிப்பாக உள்ளன.

ABC தொலைக்காட்சியின் "இந்த வாரம்" நிகழ்ச்சியில் நேற்று பேசிய அமெரிக்கத் தளபதி ஹைட்டியில் இராணுவ பிரிவின் கட்டுப்பாட்டுத் தலைவராக இருக்கும் கென் கீன், அமெரிக்கத் துருப்புக்கள் "தேவைப்படும் வரை அங்கு இருக்கும்" என்று கூறினார். கிட்டத்தட்ட 4,200 அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். பெரும்பாலும் கடலோர ரோந்தில் அவை ஈடுபட்டுள்ளன; இன்று கிட்டத்தட்ட 12,000 துருப்புக்கள் அந்நாட்டை அடைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

சனிக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் Port-au-Prince க்கு ஹைட்டிய ஜனாதிபிதி ரேனே ப்ரேவல் அழைப்பின் பேரில் சென்றிருந்தார். ஹைட்டியில் ஒரு நெருக்கடிநிலை ஆணை தேவை என்று அவர் வாதிட்டு, அமெரிக்கத் துருப்புக்கள் மேற்பார்வையில் இராணுவ விதிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இதற்கு விளக்கும் கொடுக்கும் வகையில், "இந்த ஆணை அரசாங்கத்திற்கு பெரும் அதிகாரத்தைக் கொடுக்கும், நடைமுறையில் அது அவற்றை எங்களுக்கு கொடுக்கும்" என்றார் கிளின்டன்.

அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 7,000 பிரேசிலியத் தலைமையிலான ஐ.நா. சமாதானப் படைகளுடனும் இணைந்து செயல்படுகிறது. "எப்படி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றிப் பெரிதும் சிந்தித்து வருகிறோம்" என்றார் கிளின்டன்.

வெகுஜனக் கலவரம் ஹைட்டியில் இருக்கும் சர்வதேச பாதுகாப்புப் படைகளை அடக்கிவிடும் ஆபத்து உள்ளது பற்றி பிரேசிலிய அதிகாரிகள் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தனர். வெள்ளியன்று, பிரேசிலின் பாதுகாப்பு மந்திரி நெல்சன் ஜோபின் சமாதானம் காப்பவர்கள் பெரும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் "போராட வேண்டியிருக்கும்" என்று எச்சரித்தார். "பாதுகாப்பு பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம்." டைம்ஸ் ஆப் லண்டன் இது பற்றிக் கூறியது: "ஹைட்டியின் தலைநகரம் பட்டினி, தாகம் கொண்ட மூன்று மில்லியன்பேர் மற்றும் நில நடுக்க அதிர்ச்சிக்குட்பட்டு தப்பிப்பிழைத்தவர்கள் அவசரகால உதவியைப் பெறவில்லை என்றால் கலகத்திற்கு உட்படக்கூடும்."

ஹைட்டியில் கொள்ளை அடிப்பது பற்றி முரணான தகவல்கள் வந்ததை மேற்கோளிட்டு, அதிக அமெரிக்கத் துருப்புக்களின் தேவையை அமெரிக்க அதிகாரிகள் நியாயப்படுத்தினர். ABC இடம் கீன் கூறினார், "ஒரு பாதுகாப்பான சூழ்நிலையைக் கொள்ளுவது மிகவும் முக்கியமாகும். ,.. ஹைட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதற்கு எங்கள் திறனைத் தடுக்கும் சில வன்முறை நிகழ்வுகளைச் சந்தித்துள்ளோம், அந்நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்கள் எதிர்கொள்ளப்பட வேண்டும்; மக்கள் மகத்தான அளவில் பெரும் சோகத்தை எதிர்கொண்டுள்ளனர்."

ஆனால் (World Food Program - WFP) உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார்: "தற்பொழுது மக்கள் மிகவும் அமைதியாக உள்ளனர். ஆனால் வன்முறை மற்றும் கொள்ளை அடித்தலின் முதல் அடையாளங்களை காண்கிறோம்." இந்த முதல் அடையாளங்களில் உணவு உதவி மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகையில் ஹைட்டியர்களுக்கு இடையே மோதல்கள் இருந்தன; பெடிஷன்வில்லேயில் ஒரு நிகழ்ச்சியில் போலீசார் கொள்ளையன் என்று கூறப்பட்ட ஒருவனை சீற்றமுடைய மக்கள் கூட்டத்தில் தள்ளினர்; அவர்கள் அவனை அடித்துப் பின்னர் எரித்துக் கொன்றனர்.

அமெரிக்க இராணுவம் Port-au-Prince விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளது; அதுதான் அதன் இராணுவ நடவடிக்கையின் முக்கிய பரபரப்பான இடம் ஆகும்; மனிதாபிமான உதவிக்கு வந்த விமானங்கள் தடைக்கு உட்பட்டன. அத்தகைய விமானங்கள் பிரான்ஸ், பிரேசில், இத்தாலியில் இருந்து வந்தன; அவற்றிற்கு கீழிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. செஞ்சிலுவைச் சங்க விமானங்களில் ஒன்று Santo Domingo என்னும் அருகில் உள்ள டோமினிகன் குடியரசுத் தலைநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஹைட்டிக்கு பிரான்ஸின் தூதரான Didier le Bret, ஒரு பிரெஞ்சு விமானம் அவசரக்கால தள மருத்துவமனையை கொண்டுவந்ததை அமெரிக்கா தடுத்துவிட்டது பற்றி, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் அமெரிக்க வெளியுறவு செயலகத்திடம் எதிர்ப்பு ஒன்றை தெரிவித்ததாக கூறினார். Port-au-Prince விமான நிலையம் "சர்வதேச சமூகத்தின் விமான நிலையமாக இல்லை. வாஷிங்டனின் இணைப்பாக உள்ளது....இது ஒரு மிகப் பெரிய நெருக்கடி என்று எங்களுக்குக் கூறப்பட்டது; ஒரு தள மருத்துவமனை தேவைப்பட்டது. சில வேறுபாடுகளை கொண்டுவந்து நாங்கள் அங்கு உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்."

பின்னர் பிரெஞ்சு அதிகாரிகள் இந்த அறிக்கைகளைப் பின் வாங்கிக் கொண்டனர். ஜனாதிபதியின் ஆலோசகர் Claude Gueant, "ஹைட்டிய சமூகத்தினர் நிறைந்திருப்பதால், அமெரிக்கா கணிசமான முயற்சியை எடுத்துவருகிறது...நாடுகளுக்கு இடையே உள்ள போட்டியை வெளியிடும் நேரம் இல்லை இது" என்றார்.

ஆனால் WFP அதிகாரிகள் Port-au-Prince விமான நிலையத்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது உதவி, மீட்பு முயற்சிகளுக்கு நடைமுறையில் பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது என்று உறுதிப்படுத்தினர். WFP யின் Jarry Emmanuel நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: "ஒவ்வொரு நாளும் 200 விமானங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன; ஹைட்டி போன்ற நாட்டில் இது நம்ப முடியாதது. ஆனால் பெரும்பாலான விமானங்கள் அமெரிக்க அரசாங்க இராணுவத்துடையது. ...அவற்றின் முன்னுரிமைகள் நாட்டைக் காப்பதாகும். எங்களுடையது மக்களுக்கு உணவு அளிப்பது. இந்த முன்னுரிமைகள் உரிய முறையில் இணைக்கப்பட வேண்டும்."

அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து ஒரு மைல் தூரத்திற்குள் இருக்கும் Port-au-Prince முனிசிபல் மருத்துவ விடுதியில், 85 வயதான ஹைட்டியர்கள் பட்டினி கிடக்கிறார்கள், எலிகளால் தாக்கப்படுகின்றனர். ஜோசப் ஜூலியன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதிகாரிகள் உணவிற்காக அருகில் இருக்கும் கால்பந்து மைதானத்தில் நடக்கும் பூசல்களை மேற்கோளிட்டு அவர்களுக்கு உணவு அளிப்பது நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்தினர்; ஆனால் அவர்களோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ளனர். மருத்துவமனை நிர்வாகி James Emmanuel அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்" "இப்பொழுது அமைதி உடன்பாடு இருக்கிறது என்பதை உணரவேண்டும் அனைவரையும் என்றுகேட்டுக் கொள்கிறேன். தெருக்கள் சுதந்திரமாக உள்ளன; எங்களுக்கு உதவ நீங்கள் வரலாம்.".

நேற்றுவரை அமெரிக்க தேடுதல், மீட்புக் குழுக்கள் 15 பேரைத்தான் இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.

ஹைட்டியில் அமெரிக்கக் குறுக்கீடு, வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் குற்றம் சார்ந்ததாகும். மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற மறைப்பில், இதன் முக்கிய நோக்கம் தேவையான வலிமையைக் கட்டமைத்து மக்களை எதிர்ப்பு இல்லாமல் அதிர்ச்சி தரும்வகையிலான மருத்துவ சிகிச்சை பற்றாக்குறையை ஏற்க வைப்பது ஆகும். அதன் வழிப்படி விட்டாலும், அமெரிக்கா ஹைட்டியை ஆக்கிரமித்துள்ளமை காயமுற்ற ஹைட்டியர்களுக்கு உதவுவதில் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தவில்லை.

இந்த நடவடிக்கை மார்ச் 1993ல் அமெரிக்கா சோமாலியாவில் குறுக்கிட்டதை நினைவுபடுத்துகிறது. அப்பொழுது அமெரிக்கப் படைகள் மூலோபாயமாக இருக்கும் நாட்டின்மீது படையெடுத்தது; அங்கு பஞ்சத்திற்கு உதவ சென்றதாகக் கூறப்பட்டது. விரைவில் அமெரிக்கப் படைகள் உள்நாட்டுப்போரிலும் ஈடுபட்டு மக்களால் வெறுக்கப்பட்டன; இது அமெரிக்கத் துருப்புக்களுக்கும் மோகதிஷுவில் உள்ள குடிமக்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது. ஹைட்டியில் தற்பொழுதைய அமெரிக்க செயற்பாடுகள் இதேபோன்று மக்களுடன் மோதல் என்பதற்குத்தான் தயாரிப்புக்களை நடத்திவருகின்றன.

ஹைட்டியில் மீட்பு முயற்சிகள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நடைமுறைக்கு உட்பட்டுள்ளன; அதுவோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பரிவுணர்வு பற்றி முற்றிலும் கவலை கொள்ளவில்லை; அமெரிக்கா உட்பட, ஹைட்டியானாலும், வேறு எந்த நாடானாலும் மக்களுக்கு அது விடையிறுக்கவும் தேவையில்லை. மாறாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கையில், பேசப்படாத ஆனால் ஒருமித்த உணர்வு சர்வதேச செய்தி ஊடகத்தில் அமெரிக்க இராணுவம் எப்படி செயற்பாடுகறள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிடுவது முறைதான் என்று இருக்கிறது.

ஹைட்டிய பிரதம மந்திரி Jean-Max Bellerive நேற்று இறப்பு எண்ணிக்கை குறைந்தது 70,000 ஆவது இருக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தினார். ஆனால் இது Port-au-Prince மற்றும் அருகில் உள்ள Leogane நகரம் இரண்டில் மட்டும் உறுதி செய்யப்பட்ட இறப்புக்களாகும்; நில நடுக்கத்தில் 80 சதவிகிதத்திற்கும் மேலான இழப்புக்களை இவை கொண்டிருந்தன. ஹைட்டி முழுவதும் 100,000 இறப்பு எண்ணிக்கை என்பது "குறைந்தபட்சமாக இருக்கும்" என்று Bellerive கூறினார். NBC யின் "Meet the Press" க்கு பேட்டி காணப்பட்ட USAID நிர்வாகி Rajiv Shah, 100,000 முதல் 200,000 வரை இறந்திருக்கக்கூடும் என்ற மதிப்பீட்டை "முரணாக்க தன்னிடம் காரணம் ஏதும் இல்லை" என்றார்.

நிலநடுக்கத்தில் காயமுற்ற ஏராளமான ஹைட்டியர்களை காப்பாற்றவும் நேரம் அவசரமாக கடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் அழிக்கப்பட்டவிட்டன; மருத்துவ ஊழியர்கள் மிக அதிகமான நசுக்கப்பட்ட உறுப்புக்களை கொண்ட நோயாளிகளை எதிர்கொள்ளுகின்றனர்; தொற்றுநோய்கள் விரைவில் பரவிக் கொண்டிருக்கின்றன. தேவையான எதிர்ப்பு சக்தி மருந்துகள், அடிப்படை மருந்து வசதிகள் இல்லாத நிலையில், டாக்டர்கள் உடலுறைப்பை சிதைக்கின்றனர்; மிக மோசமாக காயமுற்றுள்ள நோயாளிகளை கவனிப்பதில்லை; அவர்கள் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை டாக்டர்களுக்கு இல்லை.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸிடம் பேசிய Port-au-Prince ன் பொது மருத்துவமனையின் Dr.Georges Laarre, தன்னுடைய நோயாளிகளில் பெரும்பாலனவர்கள் முதல் நாள் இரவன்று இரத்தம் இழந்தே உயிரிழந்தனர் என்றும் அவர் கைவசம் உயிர்காப்பு மருந்துகளோ இரத்தத் தொகுப்புக்களோ இல்லை என்றார்: "இதுவரை நாங்கள் இன்னும் தொட்டுக்கூட பார்க்காத நோயாளிகள் உள்ளனர்."

பொது மருத்துவமனையில் Yolanda Gehry யும் அவருடைய குழந்தை Ashleigh ம் டாக்டர்கள் ஆஷ்லீயின் தலையை சரிபார்ப்பதற்கு முன் நான்கு நாட்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் இன்னும் ஆஷ்லீயின் சிதைந்துள்ள இடது கைக்கு மருத்துவம் பார்ககவில்லை. கேரி கூறினார்; "ஹைட்டிய டாக்டர்களிடம் எங்களுக்கு உதவ ஏதும் இல்லை; எனவே வெளிநாட்டு டாக்டர்களுக்காகக் காத்திருக்கிறோம்."

அமெரிக்க அதிகாரிகள் நிலநடுக்கத்தில் உள்ள ஹைட்டிய பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை கொடுப்பது அமெரிக்க முன்னுரிமை அல்ல என்று தெளிவாக்கியுள்ளனர். USS Carl Vinson என்னும் விமானத் தளமுடைய அமெரிக்கக் கப்பல், ஹைட்டிய கடல் அருகே நிற்பது, ஹைட்டியர்களுக்கு சிகிச்சை கொடுக்காது. கப்பலில் உள்ள மூத்த மருத்துவ அதிகாரி தளபதி ஆல்பிரெட் ஷ்வேஹாட் வோல்ஸ்ட்ரீட் ஜர்னலிடம் "தேவையானால் 1,000 ஹைட்டியர்களுக்கு சிகிச்சை கொடுக்கும்" திட்டம் அவரிடம் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவர் உத்தரவு ஏதும் பெறவில்லை என்றார். அவர் தொடர்ந்து கூறியதாவது: "கப்பல் தலைவர் இசைவு கொடுத்தால் நான் எவருக்கும் சிகிச்சை கொடுப்பேன்....[வின்சன் வசதிகளில் இருந்து]. சிவிலியப் பிரிவில் இருந்தும் தடுப்பு ஏதும் இராது..."

வின்சன் காப்டனுக்கு செய்தித்தொடர்பாளர், துணை தளபதி Jim Krohne, கப்பலின் பணி "கடலைத் தளமாகக் கொண்டுள்ளது" என்றார். வின்சன் பின்னர் ஹைட்டிய நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய இரு மருத்துவர்களை கரைக்கு அனுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகள் ஹைட்டியர்களை ஹைட்டியில் இருந்து அமெரிக்காவிற்கு தப்பியோட முயற்சித்தால் மீண்டும் ஹைட்டிக்கு அனுப்பப்படுவர் என்று எச்சரித்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலர் ஜேனட் நேபோலிடனோ கூறினார்: "தீவை நீங்கி இங்கு வரலாம் என்ற உந்துதல் இருக்கலாம். ஆனால் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து TPS க்கு நீங்கள் தகுதி பெற முடியாது". இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள், அவர்கள் வந்தால் உடனடியாக மீண்டும் ஹைட்டிக்கு அனுப்பி விடுவர்.

மிக அதிக ஹைட்டிய குடியேறிய மக்கள் இருக்கும் நகரமான மியாமியில் உள்ள அதிகாரிகள் ஹைட்டியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏராளமான மக்கள் வரும் அடையாளத்திற்கு காத்திருக்கின்றனர். ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி Kendrick B. Meek கூறினார்: "முழு சமூகமும் ஹைட்டியுடன் உணர்வுபூர்வமாக நிற்கிறது; கடினமாக உள்ளது." ஹைடிய அமெரிக்கர்கள் அப்பகுதியில் பல முக்கிய முதலாளிகளின் தொழிலாளர் தொகுப்பாக உள்ளனர். ஆனால் அதிகாரிகள் ஹைட்டியில் இருந்து வரும் அகதிகளுக்கு சிறைகளைத்தான் தயாரித்து வருகின்றனர்.

உள்ளநாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அது இன்னும் 400 கைதிகளை Krome தடுப்புக் காவல் நிலையத்தில் இருந்து பெயர் குறிப்பிடா இடத்திற்கு அனுப்பும் என்றும், அது அந்த இடத்தை அமெரிக்காவிற்கு வரும் ஹைட்டியர்கள் பயன்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved