World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan authorities ban student group from Jaffna campus

இலங்கை அதிகாரிகள் மாணவர் குழுவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் நுழையவிடாது தடுத்தனர்

By Subash Somachandran
29 June 2010

Back to screen version

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு யூன் 12ம் திகதி சென்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தை (ஐ.யூ.எஸ்.எஃவ்) சேர்ந்த மாணவர் தலைவர்களை உள்ளே நுழைவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. ஐ.யூ.எஸ்.எஃவ் ஒரு உடனடி இலக்காக இருந்த போதிலும், இந்த தடையின் பின்னணியில் உள்ள பரந்த குறிக்கோள் பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்வதே ஆகும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன், ஐ.யூ.எஸ்.எஃவ். இன் வருகை பற்றிக் கேள்விப்பட்டவுடன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அழைத்து அவர்களை சந்திக்கக் கூடாது என்று அறிவித்ததோடு அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைவதற்கும் அனுமதி மறுத்தார். ஒரு தொகை பொலிஸ் காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டவுடன், பல்கலைக்கழகத்தில் ஒரு பதட்ட சூழ்நிலை உருவானது. இராணுவப் புலனாய்வாளர்களும் பல்கலைக்கழக சூழலில் சுற்றித் திரிந்தனர் என மாணவர்கள் தெரிவித்தனர்.

தான் மேலிடத்து உத்தரவின்படியே செயற்படுவதாக சண்முகலிங்கன் ஊடக்களுக்குத் தெரிவித்த போதிலும், அவர் அதை தெளிவுபடுத்தவில்லை. அவர் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், "எமது மாணவர்களுடன் அரசியல் நடத்துவதற்கு எந்தவிதமான அமைப்புக்கும் நாங்கள் அனுமதி வழங்க முடியாது" என்று அறிவித்திருந்தார்.

ஐ.யூ.எஸ்.எஃவ் குழுவினர் தங்கியிருந்த விடுதிக்குக்குச் சென்ற அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்று, அவர்களை உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கூறியது. கொழும்பில் உள்ள அரசாங்க சார்பு ஊடகம், ஐ.யூ.எஸ்.எஃவ் குழுவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய மாணவர்கள், இக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதில் இராணுவம் அல்லது அதனுடன் இணைந்த துணைப் படை சம்பந்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகக் கூறினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாக, யாழ்ப்பாணம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றது. கொழும்பு கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அங்கமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி.) போன்ற துணைப்படைக் குழுக்களுடனும் இராணுவம் நெருக்கமாக செயற்படுகின்றது.

ஐ.யூ.எஸ்.எஃவ் இன் அரசியலை சமரசமற்று எதிர்க்கும் அதே வேளை, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அதிகாரிகளின் தடையானது மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று கண்டனம் செய்கின்றன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனமானது, சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மாணவர் அமைப்பாகும். அது புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்து வந்ததுடன், இராணுவத்தின் சகல குற்றங்களையும் பாதுகாத்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இறுதி மாதங்களில் இடம்பெற்ற மோதல்களின்போது, இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களினால் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜே.வி.பி., ஐ.யூ.எஃவ் தலைவர்கள் எப்போதாவது சோசலிஸ்ட்டுக்களாகப் பாசாங்கு செய்கின்றனர். ஆனால் அவர்களின் அரசியல் தேசியவாதம் மற்றும் இனவாதத்தில் மூழ்கிப் போனதாகும். ஐ.யூ.எஸ்.எஃவ். அரசியல் எதிரிகள் மீது குண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பேர் போனதாகும். இந்த நடவடிக்கைகள், கொழும்பிலும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பொலிசாரின் தலையீட்டுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் சாக்குப் போக்கை வழங்குகிறது.

தனது அரசியலை மறைப்பதற்காகவே, ஐ.யூ.எஸ்.எவ். குழு, யுத்தத்தின்போது தமது கை கால்களை இழந்த மாணவர்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் ஏனைய உபகரணங்களை எடுத்துக்கொண்டு மனிதாபிமான தூதுக்குழு என்ற போலி வேடத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சென்றது. ஐ.யூ.எஸ்.எவ். தலைவர் உத்துல் பிரேமரத்ன யாழ்ப்பாண ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், "உண்மையிலேயே இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இனப் பிரச்சினை இல்லை. இது அரசியல்வாதிகளாலேயே உருவாக்கப்பட்டதோடு, அவர்கள் தங்களின் வாழ்க்கை நடத்துவதற்கு மேலும் அதற்கு எண்ணை வார்த்து வருகிறார்கள்," என்றார்.

எவ்வாறாயினும், உயிரிழப்புக்களுக்கும் உடலுறுப்பு இழப்புக்களுக்கும் வழிவகுத்த யுத்தத்தை ஐ.யூ.எஸ்.எஃவ் மற்றும் ஜே.வி.பி. ஆதரித்தன என்ற உண்மையை மறைக்க எதனாலும் முடியாது. ஜே.வி.பி. 2005 தேர்தலில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்ததுடன், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டு, மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்தது. யுத்தத்துக்கு வழிவகுத்த "இனப்பிரச்சினை" என சொல்லப்படுவது, தசாப்த காலங்களாக மேற்கொள்ளப்பட்ட தமிழர் எதிர்ப்புப் பாகுபாட்டின் உற்பத்தியே ஆகும். இதை ஜே.வி.பி. ஆதரித்ததோடு தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றது.

பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் மற்றும் "உயர் மட்டத்தினருக்கும்" உடனடிக் கவலையாக இருப்பது ஐ.எஸ்.யூ.எஃவ். அல்ல, மாறாக யாழ்ப்பாணத்திலும் மற்றும் இலங்கையின் மற்றைய இடங்களிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பரந்தளவில் அரசியல் மயப்படுத்தப்படுவார்கள் என்பதே. இராஜபக்ஷ அரசாங்கம் ஐ.யூ.எஸ்.எஃவ். இன் வன்முறையைப் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்களின் நீண்ட காலப் போராட்ட வழிமுறைகளான மறியல், ஊர்வலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ளமர்தல் போன்ற போராட்ட வழிமுறைகளை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை கடந்த மார்ச்சில் புதுப்பித்துள்ளது. இந்த விதிகள் அரசியல் கூட்டங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் எனபவற்றைத் தடை செய்வதற்கு கட்டாயப்படுத்தும் பொறிமுறையை வழங்குகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயாராகின்ற நிலையிலேயே இந்த ஜனநாயக விரோத சட்டங்களை மீளவும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஏப்பிரலில் பாராளுமன்றத் தேர்தலில் வென்ற பின்னர், இராஜபக்ஷ உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்கவுக்கு மேலும் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான அதிகாரங்களை வழங்க பச்சைக்கொடியைக் காட்டினார். இந்த மாத முற்பகுதியில் உத்தேச வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டபோது, அரசாங்கம் பொதுக் கல்வியை மேலும் வெட்டி தள்ளுவதற்கு இலக்கு வைத்தது.

யுத்தம் நடைபெற்ற போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்புப் படைகளின் ஒடுக்கு முறையால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். 2006 நடுப்பகுதியில் இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் மூழ்கடித்த பின்னர், அரசாங்க சார்பு கொலைப்படைகளால் "காணாமல் ஆக்கப்பட்ட" அல்லது படுகொலை செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான மக்கள் மத்தியில் மாணவர்களும் இருந்தார்கள்.

யுத்தத்தில் அகப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னியில் இருந்த மக்கள் மத்தியில் பல மாணவர்களும் இருந்தனர். புலிகளின் தோல்விக்குப் பின்னர், இராணுவத்தால் நடத்தப்பட்ட பிரமாண்டமான தடுப்பு முகாம்களில் 250,000 மக்களுடன் இவர்களும் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர் மீளக் குடியமர்த¢தபட்டிருந்தாலும் உலக சோசலிச வலைத் தளத்துக்கு ஒரு மாணவன¢ கூறியது போல், "எங்களிடம் சரியான விபரங்கள் கிடையாது. பல மாணவர்கள் மற்றைய கைதிகளுடன் தடுப்பு முகாம்களில் இருக்கலாம் அல்லது 'புலி சந்தேக நபர்களாக' வேறு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்."

"யுத்தம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளும் மற்றும் அரச ஆதரவுக் குழுக்களும் தங்களின் ஒற்றர்களை மாணவர்களாக எம்மை உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அதை நாங்கள் அறிவோம். அரசாங்கத்தின் அல்லது அதன் ஆதரவாளர்களின் அரசியலை விட, வேறு அரசியலில் மாணவர்கள் அல்லது விரிவுரையாளர்கள் ஈடுபடுகிறார்களா என்று கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாகும். இது நடக்கும் அதே வேளை, அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அதேபோல் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல், மற்றும் கல்வி மற்றும் தொழில் வசதிகள் குறைவாக உள்ளமை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பரந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பலர் புலிகளையும் ஏனைய கட்சிகளையும் விமர்சிக்கின்றனர். "எல்லாத் தமிழ்க் கட்சிகளும் விதிவிலக்கின்றி கொழும்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறன அல்லது அதன் ஆதரவுக்காக முயற்சி செய்கின்றன. நாங்கள் அவர்களை நம்பவில்லை," என்று ஒரு மாணவர் கூறினார்.

இன்னொரு மாணவன் விளக்கியதாவது: "பல்கலைக்கழகத்திற்குள் எமக்கு ஜனநாயக உரிமைகள் கிடையாது. நாங்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி எமது உரிமைகளை அல்லது அரசியல் விடயங்களை பற்றிக் கதைப்பதற்கும் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் நாங்கள் அனுமதி கேட்டால் அது நிராகரிக்கப்படும். முன்னர் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாங்கள் உங்களுடன் கதைப்பது நிர்வாகத்துக்குத் தெரிந்தால், நாங்கள் தண்டிக்கப்படுவோம். எங்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை பலதடவை துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை."

"நாங்கள் 2006ல் இருந்து கடுமையான ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து வருகிறோம். துணை இராணுவக் குழுக்கள் எமது சக மாணவர்களின் ஒரு தொகை பெயர்பட்டியலை ஒட்டி மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தன. அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலர் காணாமால் ஆக்கப்பட்டார்கள். எமது மக்கள் முல்லைத் தீவில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஐ.யூ.எஸ்.எஃவ். குழுவின் வருகையை நிர்வாகம் தடுத்தமைக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். ஆனால் ஐ.யூ.எஸ்.எஃவ். எங்களைப் பாதுகாக்கவில்லை. மாறாக இந்த அமைப்பு மௌனமாக யுத்தத்துக்கு ஆதரவளித்தது. அவர்கள் இனவாத மனப்பாங்கில் இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் அமைதிக்கான பிரதான காரணம்," என்று இன்னொரு மாணவன் கூறினார்.