World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Harsh new US penalties against Iran

ஈரானுக்கு எதிராக புதிய கடுமையான அமெரிக்க அபராதங்கள்

By Peter Symonds
5 July 2010

Back to screen version

கடந்த வியாழனன்று ஈரானுக்கு எதிரான காங்கிரஸ் இயற்றிய சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கையெழுத்திட்டார். இச்சட்டம் தெஹ்ரானுடன் மட்டுமின்றி அமெரிக்காவின் ஐரோப்பிய, ஆசிய போட்டி நாடுகளுடனும் அழுத்தங்களை உயர்த்தும் திறன் உடையதாகும்.

பரந்த முறையில் இச் சட்டம் ஈரானில் வணிகம் நடத்தும் பெருநிறுவனங்கள் வங்கிகளை இலக்கு கொண்டு, அமெரிக்க வழியில் நடக்காதவற்றிற்கு ஒருதலைப்பட்ச அபராதங்களை நிர்ணயித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கியை அணுகும் வாய்ப்பு நிறுவனங்களுக்கு மறுக்கப்படலாம். இது அமெரிக்கச் சந்தைக்குள் தங்கள் பொருட்களை விற்கும் திறனைத் தடுத்துவிடும், அதே போல் அமெரிக்க அரசாங்க ஒப்பந்தங்களும் தடைக்கு உட்படும்.

பரந்த ஈரான் பொருளாதாரத் தடைகள், முதலீடுகள் திரும்பப் பெறுதல் சட்டம் என்பதின்படி அமெரிக்கக் கருவூலத்துறை ஐ.நா. அல்லது அமெரிக்க அரசாங்கத்தால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ள ஈரானிய அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளும் எந்த வெளிநாட்டு வங்கி அல்லது அமெரிக்க நிதி முறைக்கும் தொடர்புகொள்ளும் வாய்ப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முக்கிய ஈரானிய வங்கிகள், ஈரானிய எரிசக்தித் தொழில்துறை மற்றும் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் பிரிவுடன் (IRGC) தொர்புடைய நிறுவனங்களும் அடங்கியுள்ளன.

இச்சட்டம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ள பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல், டீசல் போன்றவற்றை ஈரானுக்கு விற்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது ஆத்திரமூட்டும் வகையில் இலக்கு கொண்டுள்ளது. அதில் உற்பத்தியாளர்கள், காப்பீட்டாளர்கள், போக்குவரத்தில் தொடர்பு உடையவர்கள் ஆகியோர் உள்ளனர். எண்ணெய் இருப்புக்கள் அதிகம் இருந்தாலும், ஈரானின் எரிசக்தி உள்கட்டுமானமும், சுத்துகரிப்புத் திறனும் முதலீடு இல்லாத காரணத்தினால் மிகக் குறைவாக இருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

தெஹ்ரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்று வாஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டு நாடுகளும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து, யுரேனிய அடர்த்தி நிலையங்களை மூடாதது மற்றும் கன நீர் ஆய்வு உலைக்கூடக் கட்டமைப்பு நிறுத்தப்படாதது ஆகியவற்றிற்காக தெஹ்ரான் மீது புதிய அபராதங்களைச் சுமத்தின. ஐ.நா. தீர்மானத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளின் முன்னிழலைப் படர விடும் விதத்தில் அதன் எரிசக்தித்துறையில் முதலீடு செய்வது உட்பட பல கடுமையானவற்றைக் கொண்டுவந்துள்ளது.

ஈரானிய ஆட்சி பலமுறையும் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் திட்டம் தன்னிடம் இல்லை என்று மறுத்து, ஐ.நா. மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்றும் கண்டித்துள்ளது. ஈரான் கையெழுத்திட்டுள்ள NPT எனப்படும் அணுவாயுதப் பரவா உடன்படிக்கையின் கீழ், நாடுகள் எரிபொருள் வட்டத்தில் எந்த அணுவாயுதக் கூறுபாட்டையும் சமாதானச் செயல்களுக்காக, வளர்க்கும் உரிமையைக்கொண்டுள்ளன—இதில் யூரேனிய அடர்த்தி, புளோட்டோனிய மறுவழி செலுத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன. நான்டஸ் யுரேனிய அடர்த்தி ஆலை உட்பட ஈரானிய அணுசக்தி நிலையங்கள் வாடிக்கையாக IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வுகளுக்கு உட்பட்டவை. அவற்றில் யுரேனிய அடர்த்தி இருப்புக்கள் கணக்கும் அடங்கும். அதையொட்டி அவை இராணுவ நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட முடியாது என்பது உத்தரவாதம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் மற்றும் ஐ.நா.தீர்மானங்களை விட அமெரிக்கச் சட்டம் கூடுதலாகச் சென்றுள்ளது—ரஷியாவும் சீனாவும் மட்டும் தான் வாஷிங்டன் அழுத்தத்தின் பேரில் இதற்குத் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டன. ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மீதான கணிசமான தடை என்பது அதன் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தெஹ்ரான் அதன் மூலோபாய இருப்புக்களைக் கட்டமைத்துக் கொண்டு, இறக்குமதிகளையும் குறைத்துவந்தாலும், அப்படியும் அது சர்வதேசச் சந்தைகளில் இருந்து அதன் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 25 முதல் 30 சதவிகிதம் நம்பியுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் விளைவுகள் இன்னும் பரந்தவை. ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ரோன் க்ளீன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறினார். “வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: எங்களுடன் வணிகம் செய்ய விரும்புகிறார்களா அல்லது ஈரானியர்களுடனா?” ஐ.நா. தீர்மானங்களால் தடைக்கு உட்படாதவற்றில், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை அச்சுறுத்தியதன் மூலம் புதிய சட்டம் தவிர்க்க முடியாமல் சர்வதேச எதிர்ப்புணர்விற்கு எரியூட்டி பிளவுகளைத் தீவிரப்படுத்தும்.

கடந்த வாரம் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் Total ஈரானுக்கு எரிபொருள் விற்பனைகளை நிறுத்தியது. ஸ்பெயின் நாட்டின் Repsol ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணெய் வயலில் Royal Dutch Shell உடன் கொண்டிருந்த வளர்ச்சி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. Total ன் தலைமை நிர்வாக அதிகாரி Christophe de Margerie ஒரு பொருளாதார அரங்கில் கூறினார்: “பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மீதான தடை அரசியல் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள நல்ல வழி அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்.” “தற்பொழுது பல விஷயங்கள் அரசியல் ஆக்கப்படுகின்றன” என்றும் அவர் புகார் கூறினார்.

அமெரிக்காவில் தேசிய வெளிநாட்டு வணிகக் குழுவும் US Engage என்னும் நிறுவனங்கள், அமைப்புக்களின் கூட்டும் கவலைகளை எழுப்பியுள்ளன, குறிப்பாக அமெரிக்க தலைமை நிறுவனங்கள் அவற்றின் வெளிநாட்டுத் துணை நிறுவனங்களின் மீறல்களுக்கு எதிராக அபராதம் கொடுக்க நேரிடலாம் என்பது பற்றி. ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையில், குழுத் தலைவர் Bill Reinsch எச்சரித்தார்: “இச் சட்டம் வந்துள்ள நேரம் பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், அதேபோல் உலகின் முறையான வணிகத்திற்கு இது கொடுக்கக் கூடியதன் எதிர்பாரா விளைவுகள் பற்றியும் கவலை கொண்டுள்ளோம்.”

ஈரானுக்கு பெட்ரோலிய விற்பனையில் இருந்து விலகிக் கொள்ளும் சமீபத்திய நிறுவனம் Total ஆகும். கடந்த ஆறு மாதங்களில் ரஷ்யாவின் LUKOIL, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மலேசியாவின் பெட்ரோனஸ், ராயல் டச் ஷெல் மற்றும் ஸ்விஸ் நிறுவனமான Clencore ஆகியவை விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் முக்கிய சீன நிறுவனங்கள், அரசாங்க China National Petroleum Corp., China Petroleum & Chemical Corp. உட்பட இந்த ஆண்டு ஈரானுக்கு முன்னதாக விற்றதைவிட அதிகமாக விற்றுள்ளன.

இச்சட்டத்தின் கீழ் அமெரிக்க நிர்வாகம் சீனா போன்ற சில நாடுகள் மீது அபராதம் இல்லை என்று கூறலாம். ஏனெனில் ஈரானுக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை அது ஆதரித்தது. சீன எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் அது வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே உள்ள அழுத்தங்களை அதிகரிக்கும். சமீபத்திய ஐ.நா.பொருளாதாரத் தடைகளை ஈரானின் எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டால் தான் ஆதரிக்கும் என்று சீனா கூறியிருந்தது. ஈரானிடம் இருந்து தனது கச்சா எண்ணெய்த் தேவையை 15 சதவிகிதம் சீனா இறக்குமதி செய்கிறது. மேலும் அங்கு எரிசக்தித் திட்டங்களை வளர்ப்பதற்கும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

புதிய அமெரிக்கத் தடைகள் அடித்தளத்தில் உள்ள வாஷிங்டனின் தொடர்ந்த ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவை பெரிதும் பாதிப்பிற்கு உட்படாது. ஏனெனில் வாஷிங்டன் ஏற்கனவே ஈரானைப் பொருளாதார அளவில் 1979 ஷா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக தடைக்கு உட்படுத்திவிட்டது ஆனால் இந்த அபராதங்கள் அமெரிக்காவின் போட்டி நாடுகளை, ஜேர்மனி, ஜப்பான் போன்று அமெரிக்காவிற்கு நெருக்கமான நாடுகளைப் பாதிக்கும். அவை ஈரானில் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளன.

கடந்த வியாழனன்று, “சட்டச் சவால்கள் மற்றும் அபராதங்களை எதிர்கொள்ளக் கூடியவற்றில் ஜப்பானின் மூன்று பெரும் வங்கிகள்—Mitsubishi UFJ Financial Group Inc., Sumitomo Mitsui Financial Group, Mitzuho Financial Group Inc., ஆகியவையும் Commerzbank Bank AB, Deutsche Bank AG போன்றவையும் உள்ளன. இவை அனைத்தும் ஈரானுக்குள் வணிகம் நடத்துபவை.” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியுள்ளது. ஜப்பானின் எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தி நிறுவனம் Inpex Corp. உம் கணிசமான நலன்களைக் கொண்டுள்ளது. இதில் தென் மேற்கு ஈரானில் உள்ள Azadegan எண்ணெய் வயலில் 10 சதவிகிதப் பங்குகள் உரிமையும் அடங்கும்.

ஈரான் மிகப் பெரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களைக் கொண்டிருப்பதோடு, மூலோபாய வகையில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் முக்கியப் பகுதிகளுக்கு இடையே உள்ளது. அணுசக்திப் பிரச்சினை வாஷிங்டன் அப்பகுதியில் பிராந்திய ஆதிக்கத்திற்கும் அமெரிக்க விளைவுகளுக்கும் தெஹ்ரான் ஆட்சி இன்னும் வளைந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொடுக்கும் அழுத்தத்தின் ஒரு போலிக் காரணம் தான். ஒபாமா நிர்வாகத்தின் ஈரானுக்குள் உள்ளே கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதை அடுத்து எழுந்த எதிர்த்தரப்பு பச்சை இயக்கத்திற்கு வெளிப்படையான ஆதரவு இதே நோக்கத்தைத்தான் கொண்டிருந்தது.

ஈரானுக்கு அனைத்துப் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையும் தடை செய்யும் அமெரிக்க முயற்சிகளில் ஆபத்தான தர்க்கம் உள்ளது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் பல கட்டுரைகள் சுட்டிக்காட்டியுள்ளதுபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் பெட்ரோலியப் பொருட்கள் வணிகத்தில் இருந்து நீங்கினாலும், தெஹ்ரான் அப்படியும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தைப் பெற வாய்ப்புக்கள் உண்டு—கூடுதல் விலைக்கு—பேர்சியன் வளைகுடாவில் நடைபெறும் பல கறுப்புச் சந்தைகள் மூலம். நிதிய அபராதங்கள் பெட்ரோலிய அளிப்புக்களைத் தடுத்து ஈரானியப் பொருளாதாரத்தை மண்டியிடுவதில் தோல்வியுற்றால், அமெரிக்காவில் இராணுவ முற்றுகைக்கான ஆரவாரம் தீவிரமாகும்.

தனக்கு முந்தைய ஜனாதிபதி புஷ் போல், ஜனாதிபதி ஒபாமாவும் பலமுறை ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை விருப்புரிமையை பலமுறை இல்லை என மறுக்க வில்லை; இதில் வான்வழித்தாக்குதல்கள் அதன் அணு நிலையங்கள் மீது என்பதும் அடங்கும் இராணுவ வலிமை மூலம் பொருளாதாரத் தடையை செயல்படுத்த விரும்பும் எந்த முயற்சியும்—சர்வதேச சட்டத்தில் போர்ச்செயல் எனக் கருதப்படுவது— பேர்சிய வளைகுடாப் பகுதியில் ஒரு வெடிப்புத் தன்மை நிறைந்த நிலைமையை ஏற்படுத்தும்.